Thursday 27 January 2022

ஹிட்லர் - ஆசிரியர் பா.ரா



இந்த வருடத்தின் முதல் பதிவாக ஆசிரியர் பா.ரா. அவர்களின் "ஹிட்லர்" புத்தகத்தின் வாசிப்பனுபவத்தினை பகிர்ந்துகொள்கிறேன்.

ஹிட்லர் - உலகமே  அறிந்த ஒரு கொடுங்கோலன் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவரை பற்றிய முழு விவரங்களும் அடங்கிய ஒரு புத்தகம் தான் இது.

ஆசிரியர் இந்த புத்தகத்தின் முதல் அத்தியாத்தில் ஹிட்லரின் கடைசி நாட்களை அறிமுகப்படுத்தி நம்மை அதே விறுவிறுப்புடன் ஹிட்லரின் வாழ்க்கைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார். 

ஹிட்லர் குழந்தைப் பருவம் முதல் அவர் அலைந்து திரிந்த தெருக்கள் மற்றும் அவர் உணவிற்காகப் பட்ட துயரங்கள் என அவரின் இளைமை பருவத்தில் எதிர்கொண்ட பல்வேறு நிகழ்வுகளை மிகவும் சுவாரசியமாகக் கொடுத்துள்ளார். 

ஹிட்லரின் தந்தை பெயர் "அலாய்ஸ் ஷிக்கெல்கிரபர் " என்பதும் அவரின் வாழ்க்கை முறையினால் தனது இளமைப் பருவத்தில் பட்ட பெரும் துயரமே இவரின் வயதில் ஒரு பெரிய சர்வாதிகாரியாக மாற்றியது என்றால் பெரும்பாலும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது.

ஹிட்லர் முதலில் ராணுவத்தில் ஒரு சாதாரண வீரராகத் தான் சேர்ந்தார் அதுவும் அவர் நேரடியாகப் போரிடவில்லை.  பணியில் சேர்ந்து புதிது என்பதால் இவரைத் தகவல் தொடர்பின் பணியினை கொடுத்தார்கள் ஆனால் அந்த பனியின் போது ஒருமுறை காலில் குண்டு பட்டுவிட்டது.

இப்படி எளிமையான ஒரு சிப்பாயாகச் சேர்ந்த இவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒரு தேசத்தின் அதிகாரத்திற்கு வருவது என்பது சாதாரண காரியமாகாது அதுவும் உலகமே பார்த்துப் பயந்து போகும் ஒரு சர்வாதிகாரியாக உருவெடுப்பது என்பது நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு பெரிய காரியம் அதைச் சாதித்தார் பிறகே அதுவே அவருக்குச் சாவு மணியினை கொண்டுவந்தது.

நாஜி என்ற ஒரு கட்சியில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த கட்சியின் முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்டு தனக்கு எதிராக இருந்தவர்கள் அனைவரையும் முறியடித்து ஒரு புதிய புரட்சியினை மக்களிடம் எடுத்துச் சென்று கொஞ்சமாக ஆட்சி பீடத்தில் அமரும் அளவிற்கு எவ்வாறு வளர்ந்தார் என்பது பற்றிய முழுமையும் இந்த புத்தகத்தில் இருக்கிறது.

ஒரு இனத்தின் மீது இருக்கும் வெறுப்பானது எந்த அளவிற்கு கொடூரமாக இருக்கும் என்பதற்கு இவர் மட்டும் தான் இதுவரை உலகில் உதாரணமாக இருப்பார் என்றே தோன்றுகிறது. யூதர்களின் வாழ்வில் இவர் நடத்திய இனவெறி தாக்குதல் கொடூரத்தின் உச்சம் ஆனால் எப்படி ஒரு மனிதருக்குள் அத்தனை வன்மம் . ஏன் என்பதற்கு விடையே இல்லை. யூதர்களை வதைமுகாம்களில் இப்படி பல்வேறு பட்ட கொடுமைகளுக்கு இவர் எப்படி நினைத்திருப்பர்.         

ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணமும் அதனால் அவர் புரிந்த போர்களும் என ஒவ்வொரு வரியும் ஹிட்லரின் உண்மையான வாழ்க்கையினை தெரிவிக்கிறது.

ஹிட்லர், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சோவியத் யூனியன் என பல்வேறு பட்ட பெரிய நாடுகளுடன் தனது எதிர்ப்பை கொண்டு அவர்களை எதிர்த்துப் போரிட முயன்றார் ஆனால் இந்த நாடுகளுடனான போர் தோல்வியில் முடிந்தது இது அவர் ஐரோப்பா கண்டத்தில் செய்த போர்த் தந்திரம் எல்லாம் பலன் கொடுக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.  

எத்தனையோ உயிர்களைச் சித்திரவதை செய்து கொன்று குவித்த ஒரு கொடுங்கோலன், அவர் வளர்ந்துவந்த முழு வாழ்வையும் நமக்கு இந்த புத்தகம் அறிமுகப்படுகிறது என்பது உறுதியாகச் சொல்லலாம்.


ஆனால் உலகில் கொடுங்கோல் தொடர்ந்து  நிலையில்லாமல் போகும் என்பது உண்மையானதுதான்.  அன்று ஏப்ரல் 30, 1945 ஹிட்லர் தனது சாவின் கடைசி தருணத்தில் பகைவரின் நிலையினை எண்ணி அஞ்சி பதுங்கி காதலி ஈவாவுடன் பதுங்குகுழியில்  தற்கொலை செய்துகொண்டார் ஹிட்லர். 


        

மாதொருபாகன்

மாதொருபாகன்  

பெருமாள் முருகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 115/50

பக்கங்கள் 285


பெருமாள் முருகனின் மாதொருபாகன், குழந்தை இல்லாமல் இருக்கும் ஒரு தம்பதியினரைப் பற்றிய மிக அருமையான நாவல் இது. ஆரம்பத்தில் இந்த நாவலுக்கு பெரும்பான்மையான மக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. காரணம் இந்த நாவலில் இவர் சொல்லும் ஒரு தெய்வ நம்பிக்கையின் ஆதாரமாக குழந்தை பேரு இல்லாத பெண்கள் பெருநோம்பிக்கு போவதைப் பற்றிப் பேசும் கதைதான் இந்த மாதொருபாகன்.

மாமனார் வீட்டில் காளி வைத்துக் கிளப்பிய பூவரச மரத்தின் நிழலில் உட்கார்ந்திருக்கும் காளியின் இயல்பான வாழ்க்கையில் ஆரம்பித்து தனது வீட்டுத் தொண்டியில் வளர்த்த பூவரச மரத்தின் கிளையில் கயிறு போட்டு தற்கொலை முயற்சிசெய்வது வரை இந்த மாதொருபாகன் பயணிக்கிறான். 


காளி மற்றும் பொன்னா புதிதாகக் கல்யாணம் ஆன தம்பதிகள். சீராயின் ஒரே மகனான காளி, சிறுவயது முதல் அம்மாவோடு மட்டும் தான் வளர்ந்தான் அப்பா இளம் வயதிலே இறந்து போனதால் தனியாகவே வாழ்ந்த குடும்பம் சீராயின் குடும்பம். தனது பிள்ளையினை நல்ல குணத்தோடு வளர்த்தால் சீராயி.

முத்து, காளியின் உயிர் கூட்டாளி, இவர்களின் நெருங்கிய நட்பால் முத்துவின் தங்கையான பொன்னாவை காளி கட்டிக்கொண்டான்இளமைப் பருவத்தில் அப்படி இப்படி இருந்த காளி பொன்னாவை கட்டிய பிறகு அவன் அவளே கதி என்று இருந்தேவிட்டான்.

இந்த கதையில் வரும் சொல்லாடல்கள் எல்லாம் அந்த புவிப்பரப்பையும் அங்கே வாழும் மனிதர்களின் இயல்பான உரையாடல்கள் அப்படியே உயிரோட்டத்துடன் செல்கிறது. இதுவே இந்த கதையின் பலமாகவே இருக்கிறது.

குழந்தை இல்லாமல் போகவே, காலப்போக்கில் காளியின் முக்கியமான இடமாக அவனது  "தொண்டு பட்டி" மாறிப் போனது. அவன் உறங்குவதும் பகல் பொழுதினை கழிப்பதும் அந்த தொண்டு பட்டியில் தான்.

"கள்ளும், சாராயமும் இவர்களின் வாழ்வில் கூடவே வருகிறது. மாமனும் மச்சானும் சேர்ந்து சாராயமும் கள்ளும் குடிக்கும் பழக்கம் காளியும் முத்துவும் சேர்ந்து செய்யும் பொது தெரிகிறது.

ஒவ்வொரு வரியிலும் அந்த மண்ணின் வாசமும் அங்கே விளையும் விவசாயமும் அதை அனுபவிக்கும் மனிதர்களும், ஆடுகளும், மாடுகளும் அவர்களின் கூடவே ஓடி விளையாடிச் செல்லும் பறவைகளும் என எல்லாவற்றையும் அருமையாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். 

பொன்னாவுக்கு, குழந்தை இல்லை என்பதால்,   அவளின் கிராமத்தில் மற்றும் உறவினர்கள் வீட்டில் நடக்கும் எல்லா சுப காரியத்திலும் அவளை ஒதுக்கி வைக்கிறார்கள். அதனால் அவள் அடையும் வேதனை வலி அளவிட முடியாதது தான். இந்த சமூகத்தில் குழந்தைப் பேறு இல்லாவிட்டால் பெறப்படும் அவமானம் அதனால் அந்த பெண் படும் துயரம், வலி, வேதனை என ஒரு பெண் எதிர்கொள்ளும் எல்லாவிதமான சமுதாய சீண்டல்களையெல்லாம் பட்டியலிட்டுச் சொல்கிறார் கதையின் போக்கில் பொன்னாவின் ஒவ்வொரு நாளும் ஏற்படும் நிகழ்வுகளில் விளக்குகிறார் ஆசிரியர்.

காளியும், பொன்னாவும் வாழும் வாழ்க்கையில் குழந்தை இல்லையென்பதைத் தவிர வேறேதும் குறையில்லாமல் வாழும் வாழ்க்கை, தொண்டு பட்டி, அங்கே இருக்கும் கட்டுத்தரையும் ஆடுகளும், மாடுகளும், கோழிகளும் அங்கிருக்கும் மரங்களில் வாழும் பறைவைகளும் எனத் தொண்டு பாட்டியில்  காளி அருமையாக வாழ்கிறான்.

கரட்டூர் தேவாத்தா மாசாமியின் திருவிழாவான  "பெரு நோன்பி திருவிழா" கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த பகுதி மக்களுக்குக் குழந்தை இல்லையெனில், பெண்கள் பெரு நோன்பியன்று இரவு சாமி வரம் தேடிச் செல்வது வழக்கம் என்றும் அதற்காகக் கடந்த இரண்டு வருடமாகக் காளியின் அம்மா சீராயி பொன்னாவை போகச் சொல்கிறாள் ஆனால் காளியின் மனம் வேதனை படும் என்று பொன்னா போக மறுத்துவிட்டாள். இப்படியே காலம் உருண்டோடிக்கொண்டேயிருந்தது ஆனால் இந்த வருடம் சீராயி மற்றும் பொன்னாவின் வீட்டில் அனைவரும் சேர்ந்து மச்சான் முத்துவிடம் சொல்லி காலியிடம் பேசச் சொல்லி அவன் சம்மதித்துவிட்டான் என்று பொன்னாவிடம் பொய்  சொல்லவிட்டு அவளை பெரு நோன்பிற்குப் போகச் சம்மதித்து அவளை அழைத்துச் செல்கிறார்கள் பொன்னாவின் பெற்றோர்.

நாடு இரவில் இந்த தகவல் தெரிந்து கொண்ட காளியின் மனம் படும் வேதனை கொஞ்சமல்ல. இந்த பெருத்த மனவேதனையினால் அவன் தனது தொண்டு பட்டியில் இருக்கும் பூவரசு கிளையில் மாட்டிக்கொள்ளப்போகிறான். அப்போது சீராயி வந்து காப்பாற்றிவிடுகிறாள். இப்படியே செல்கிறது இந்த மாதொருபாகன்.

ஆசிரியரின் இந்த கதையின் முடிவை மக்கள் எதிர்த்ததின் விளைவாக இந்த கதையின் தொடர்ச்சியாக "அர்த்தநாரி" மற்றும் "ஆலவாயன்" என தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார்.     


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

26 ஜனவரி 2022

Tuesday 25 January 2022

ஹிட்லரின் - வதைமுகாம்கள்  

ஆசிரியர் மருதன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 210

பக்கங்கள் 232 



இந்த வருடத்தின் முதல் வாசிப்பாக பா.ரா. அவர்களின் "ஹிட்லர் வாழ்க்கை வரலாறு" வாசித்ததிலிருந்து, ஹிட்லரால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி வாசிக்கவேண்டும் என்று ஆரம்பித்த  தேடலில் கிடைத்தது தான் ஆசிரியர் மருதனின் " ஹிட்லரின் - வதைமுகாம்கள்".

உலகிலேயே ஹிட்லர் எடுத்த கொடுங்கோலன் என்ற பெயருக்கு  இணையாக வேறு யாரும் எடுத்து இருக்க மாட்டார்கள்  என்று தான் நினைக்கிறேன். இந்த புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு வரியும், வாசிக்கும் போது வாசிக்கும் நமக்குக் கிடைக்கும் வலியே இவ்வளவு கொடுமை என்றால் இந்த கொடூரத்தை அனுபவித்த மக்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.

நேற்றுவரை பக்கத்துக்கு வீட்டில் வசித்தவர்கள் இன்று ஒரு இனத்தின் அடையாளமாக மாறி அழிக்கப்பட வேண்டியவர்களாக எப்படி நினைக்கமுடிந்தது என்று பார்க்கும் போதும் மனிதம் எங்கே சென்றது என்ற கேள்வி எழாமல் இல்லை ஆனால் நாம் என்ன செய்யமுடியும். 

இந்த ஒட்டுமொத்த இன அழிப்பு என்பது ஹிட்லர் என்ற ஒற்றை ஆளால் மட்டுமே நிகழ்த்தப்பட்டது என்றால் அது சாத்தியமாகாது தான். என்னதான் ஹிட்லர் என்ற ஓர் சர்வாதிகாரியாக இருந்தாலும் அவர் கூட இருந்த பெரும்பாலான விசுவாசிகளின் ஒத்துழைப்பது இல்லாமல் இது நிறைவேற்றியிருக்க முடியாது தான். இத்தனை பெரிய இனப் படுகொலைக்குப் பின்னால் ஒரு சமூகமே இருந்திருக்கிறது என்று பார்க்கும் போது அவர்களுக்கு எவ்வாறு இந்த நஞ்சினை விதைத்தார்கள் இந்த நாஜிகள்.

யூதர்கள் இருந்தால் நாம் வாழமுடியாது, நமக்குச் சேரவேண்டியது எல்லாம் அவர்கள் இருப்பதால் கிடைக்காமல் போகிறது ஆகவே அவர்களை அழித்தொழிக்கவேண்டும் என்ற எண்ணத்தினை ஜெர்மனியின் மக்களிடம் புகுத்தியது தான் நாஜிகளின் பெரிய வெற்றியே. 

யூதர்களைத் தேடித் தேடி அழித்தார்கள். ஜெர்மனியில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தம் ஐரோப்ப்பிவில் இருக்கும் அணைத்து யூதர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கென அடையாளங்களை வெளிப்படையாக காட்டச்சொன்னதும், அதன் அடிப்படையில் அவர்களைக் கைது செய்ததும், அவர்களின் உடைமைகளைச் சூறையாடி மட்டுமல்லாமல் அவர்களை வதை முகாம்களுக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தனர்.

எத்தனைவதைமுகாம்கள், ஆஷ்விட்ஸ்,பெல்செக்செம்னோபுச்சன்வால்ட்,  டாச்சவ்ரேவன்ஸ்ப்ருக்ஸ்டுட்டாப்தெரெசின்ஸ்டாட்கெய்ஸ்ர்வால்ட்கெம்னாட்ரெப்ளின்காமஜ்டானெக்மாத்தாசென்சாஷ்சென்ஹாசென் என பல்வேறு வதைமுகாம்களை ஏற்படுத்தி ஒட்டுமொத்த யூதர்களைக் கைதிகளாக இந்த முகாம்களில் அடைத்து வைத்து அவர்களின் உழைப்பினை சுரண்டிக்கொண்டது மட்டுமல்லாமல் உழைக்க முடியாதவர்களை கொன்று குவித்ததும் அப்படி கொல்லப்பட்டவர்களை அள்ளிக்கொட்டுவதற்கும் யூதர்களையே பயன்படுத்தினார்கள் என்றால் அது கொடூரத்தின் உச்சம் என்றே தான் சொல்லவேண்டும்.

இவர்களைக் கைதிகளாகச் சிறைபிடித்து ரயிலில் ஏற்றியதும், அந்த ரயில் பயணத்தில் மூச்சுக் காற்று கூட விட இடமில்லாமல் மக்களை அடைத்துவைத்து கதவை மூடி செய்யாத ரயில் பயணத்தினை அவர்கள் சொல்லும்போது உலகில் இதைவிட வேறொரு கொடுமை இல்லை என்கிறார்கள்.

கைது செய்த இவர்களுக்கு இருந்த அணைத்து அடையாளங்களை அழித்துவிட்டு அவர்களுக்கு எண்கள் மட்டுமே அடையாளமாகக் கொடுத்தனர். இவர்களில் உயிர்பிழைத்து வந்தவர்கள் சொல்வது எங்களின் ஒட்டுமொத்த அடையாளத்தினையும் அழித்து விட்டு ஒரு நரகத்தில் வாழ்ந்தோம் என்கிறார்கள்.

கொலை செய்யப்பட்டவர்கள் அல்லாமல் பெரும்பாலோனோர் தற்கொலையும் செய்து கொண்டார்கள் என்பது இன்னும் பெரிய கொடூரம் தான்.  இவர்களைக் கொன்று குவித்த விதம் ஒவ்வொருவரின் மனதில் எத்தனை விதமான வன்மம். ஒரு சக மனிதன், எப்படி ஒரு மனிதனைக் கூட்டமாக வைத்துக் கொல்ல முடியும்? அப்படித்தான் செய்திருக்கிறார்கள் நாஜிகள்

யூதர்களைக் கைது செய்து, வதை முகாம்களுக்கு அழைத்து வந்து அவர்களின் அடையாளத்தினை அழித்து, உடல் முழுவதும் முடியினை மழித்து, ஆடைகளை அகற்றி, அவர்களுக்கு என ஒரு எண்ணைக் கொடுத்து கூட்டம் கூட்டமாக அடைத்து வைத்து அவர்களின் உடலில் பலம் இருக்கும் வரை அவர்களின் உழைப்பினை சுரண்டி பிறகு கொன்றதும் அப்பப்பா நெஞ்சம் பத பதைக்கிறது.            

வதை முகாம்களுக்கு வரும் பெரும்பாலோனோர் காஸ் சாம்பருக்குள் செல்வதும்,  அவர்களுக்கு நாம் எங்கே செல்கின்றோம் என்று தெரியாமலே செல்வார்கள். குளிக்கச் செல்லுங்கள் என்று உள்ளே அனுப்புவார்களாம் அதுதான் அவர்களின் கடைசி தருணம் எனத் தெரியாமல் சென்றவர்கள் எத்தனை பேர்கள்.

குழந்தைகள் கூட விட்டுவைக்க வில்லை இவர்கள். இவர்களின் மனதில்  எப்போதும் யூதர்கள் அழியவேண்டும் என்ற ஒற்றை சிந்தனைதான் இருந்திருக்கிறது போலும்.

தங்கள் உழைப்பினை சுரண்டிக் கொண்டு நம்மால் உழைக்க முடியாத தருணம் வரும் போது எப்படிய கொல்லப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்ட சில யூதர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். அதைத் தெரிந்து கொண்ட நாஜிகள் தற்கொலை நடக்காமலும் பார்த்துக்கொண்டார்கள்.  யூதர்களை வேலை வாங்குவதற்காக ஒரு யூதரைத் தான் தலைவனாக நியமித்து அவர்கள் கைக்கொண்டே அவர்களை அடிக்க வைத்து வேடிக்கை பார்த்தார்கள். அது நிகழவும் செய்தது யார்தான் ஒரு பதவி கொடுத்தால் அந்த போதையிலிருந்து விலகுவார்கள். அப்படி அவர்களில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவன் என நியமித்தனர்.

லட்சக் கணக்கில் தமது இனம் அழிந்து போன போதும் எஞ்சி உயிர்வாழ்ந்த சிலர் விடுதலைக்குப் பிறகு அனுபவித்த துயரம் ஒன்றல்ல இரண்டல்ல என்று தான் சொல்லவேண்டும். தனது உறவினர்கள் தேடி அலைந்தவர்கள் வெகு வானவர்கள். வயிறு காய்ந்து ஒட்டிப் போன பிறகு அவர்களால் உணவினை உட்கொள்ள முடியாமல் இறந்து போனவர்கள் ஏராளம். மனநிலை சோர்ந்து போனவர்கள் ஏராளம்.    


வதைமுகாம்கள் நாஜிகள் ஆரம்பித்தது இல்லை என்றும் இது பல ஆண்டுகளுக்கு முன்னரே பிரிட்டனால் ஆரம்பிக்கப்பட்டது என்றும் பிறகு பல்வேறு நாடுகளில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த புத்தகம் வதைமுகாம்களின் முழு விவரத்தினையும் மிக எளிமையாக விவரிக்கிறது. மேலும் பல்வேறுபட்ட நபர்கள் இந்த முகாம்களிலிருந்து விடுதலை பெற்ற பிறகு வெளியிட்ட கருத்துக்களையும் விவரமாக விளக்குகிறது.

வரலாற்றில் கரை படிந்த அந்த கொடூர முகத்தின் ஒவ்வொரு சம்பவங்களும் தெளிவாகச் சொல்கிறது இந்த புத்தகம்.

இத்தனை விதமான கொடூரத்தின் மையமாக இருந்த ஹிட்லர் தனது காதலியுடன் ரகசிய அறையில் தற்கொலை செய்துகொண்டார். உலக ஜனநாயகத்தின் குரல்வளையினை நெரித்த கொடுங்கோலன் இறுதியில் உயிருக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்டது வரலாற்றில் அவர் பதித்து போன தடம்.