Thursday 30 September 2021

ஏழு சகோதரிகள் - 2 - அசாம்

 ஏழு சகோதரிகள் - 2 - அசாம்  

வெங்கட் நாகராஜன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 70

பக்கங்கள்  


ஏழு சகோதரிகள் -2, என்ற இந்த பயண கட்டுரையில் அசாம்  மாநிலத்தில் நண்பர் வெங்கட் நாகராஜன் அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் போது ஏற்பட்ட  பயண அனுபவங்களை மிகவும் அழகாகவும் எளிமையாகவும் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.

நான், நண்பரின் அசாம் அதிகளவில் வாசித்திருக்கிறேன். காமாக்யா மொழிநடையும், சுற்றுலா செல்லும் இடம் மற்றும் காசிரங்கா கிடைத்த சுவாரஸ்யமான சொல்லுகிற விதம் நாமும் அவர்களில் ஒருவராக அந்த பகிர்ந்துள்ளார் சென்று வந்த ஒரு உணர்வினை கொடுக்கும் விதமாகவே இருக்கும்.

அசாம் மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இடம் என்றால் அது கௌஹாத்தியில் இருக்கும் "மா காமாக்யா தேவி கோவில்" மற்றும் காசிரங்கா வனமும் தான். இந்த இரண்டு இடங்களும் அங்கே கிடைத்த அனுபவங்கள் மிகவும் சுவாரஷ்யமான போக்கில் நம்மிடம்    பகிர்ந்துள்ளார்.

வாருங்கள் நாமும் நண்பருடன் கைகோர்த்து  "மா காமாக்யா தேவி கோவில்" மற்றும் "காசிரங்கா வனம்" வரை ஒரு அழகான பயணம் சென்று வருவோம்.

மா காமாக்யா தேவி கோவில்:

கௌஹாத்தி நகரில் இருக்கும் "மா காமாக்யா தேவி கோவில்"  நீலாச்சல் என்ற குன்றின் மீது அம்சமாக அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு வருடம் முழுவதும் பக்தர்கள் வருவது வழக்கமாக இருக்கிறது என்றும் மற்றும் இந்த கோவிலின் வரலாறும் அதாவது இந்த கோவில் 51 சக்தி பீடங்களாக அமைந்திருக்கிறது என்றும் மேலும் இந்த கோவிலில் என்ன என்ன விதமான பூஜைகள் செய்யவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.வழக்கம்  போல எல்லா கோவில்களில் வெளியே இருக்கும் தரகர்கள் போலவே இங்கேயும் இருக்கிறார்கள், அவர்கள் விரைவில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துகொடுக்கிறோம் என்று அதற்காகத் தொகையும் பேசுவது இந்த கோவிலும் இல்லாமல் இல்லை என்கிறார் ஆனாலும் நாம் நேரடியாகப் போவதே சிறந்தது என்று குறிப்பிடுகிறார். கோவிலின் தரிசனம் முடிந்த பிறகு வெளியில் அமைந்திருக்கும் பல்வேறு விதமான கடைகள் மற்றும் அங்கே இருக்கும் மக்கள் என ஒவ்வொன்றையும் நிழற்படங்கள் வழியே நம் கண்களுக்கு விருந்தாகக் கொடுத்திருக்கிறார்.


சாராய்  காட் பாலம்:

அசாம்  மாநிலத்தில் இருக்கும் பிரம்ம புத்திரா நதியில் வடக்கு கரையில் இருக்கும் ஒரு ஊர்ப் பெயர் சராய். இந்த ஊரில் இருக்கிறது புகழ்பெற்ற ஒரு பாலம். இந்த பாலம் 1958 ல் ஆரம்பித்து 1963 ல் பயன்பாட்டுக்கு வந்தது என்றும் இந்த பாலத்தில் இருக்கும் சிறப்பு என்னவென்றால் மேல் பகுதியில் சாலை போக்குவரத்தும் கீழே ரயில் போக்குவரத்தும் என மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த பாலம் தான்    இந்தியாவின் மற்ற பகுதிகளை வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கிறது என்றும் மேலும் அங்கே நிழல் படம் எடுத்ததற்காகப் போலீசிடம் மாட்டிக்கொண்டது என பெரும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். 


காசிரங்கா வனம் பூங்கா:   

இந்த பூங்கா,  கௌஹாத்தியிலிருந்து சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கொஹ்ரா கேட் என்ற இடத்தில் அமைத்துள்ளது. இந்த பூங்கா அமைந்திருக்கும் வனத்தின் பரப்பளவு சுமார் 429 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு அமைந்திருக்கிறது. மேலும் இந்த பூங்கா பிரம்ம புத்திரா, மோரா திப்லு மற்றும் மோரா தன்சிரி போன்ற நதிகளால் சூழ்ந்துள்ளது மேலும் பூங்காவின் நடு நடுவே 49 முதல் 800 மீட்டர் வரையிலான சிறு சிறு குன்றுகள் இருக்கிறது. இந்த குன்றுகள் மழைக்காலங்களில் விலங்குகள் எல்லாம் குன்றின் மீது தங்கிடும்அதுபோக இந்த பூங்கா வருடத்தில் ஏழு மாதங்கள் மட்டும் அதாவது நவம்பர் முதல் மே மாதம் வரை மட்டுமே திறந்திருக்கும் மற்ற மாதங்கள் மழை என்பதால் மூடியிருக்கும் என காசிரங்கா வனப்பூங்காவினை பற்றிய தகவல்கள் கொடுத்திருக்கிறார்.

இந்த பூங்காவிற்கு வருவதற்கு எத்தனை விதமான போக்குவரத்துக்கு வசதிகள் இருக்கிறது என்றும் அங்கே தங்குவதற்கு இருக்கும் வசதிகள் என    இங்கே வர விரும்போவருக்கு தேவையான தகவல்கள் தெளிவாக இருக்கிறது            

இந்த பூங்காவில் கட்டாயம் அனுபவிக்க வேண்டிய ஒன்று என்று "யானைச் சவாரி" யினை குறிப்பிடுகிறார். சில இடங்களுக்கு யானையின் மீது நான்கு இந்து நபர்கள் அமர்ந்து வனத்தில் இருக்கும் பெரும்பாலான உயிரினங்களைப் பார்வையிட முடிகிறது அதுவும் யானையின் மீது அமர்ந்து உயரமான இடத்தில் இருந்து பார்க்கும் போது வேறுவிதமான அனுபவம் என்கிறார். இவ்வாறு அழைத்துப் போகும் யானைகள் நன்று பழக்கிய யானைகள் மட்டுமல்லாமல் போகும் வழியெல்லாம் இருக்கும் யானை புல்லினை மேய்ந்துகொண்டே அது பயணிக்குமாம்

இந்த வனத்தில் மிகவும் அதிகளவு இருப்பது காண்டாமிருகம் தான் என்றும் எந்த பக்கம் திரும்பினாலும் காண்டாமிருகம் கண்ணில் படாமல் இருக்காது எனவும் அடுத்துப் பயணப்பட்ட ஜீப் சவாரியும், இந்த சவாரியின் போது கடந்து சென்ற மரப்பாலாம், அந்த பாலத்தில் ஜீப் ஏறும் போது எப்படியும் இது கீழே விழும் என்ற பயத்துடன் பயணித்த அனுபவமும்    அதில் ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் கண்டு ரசித்த காண்டா மிருகம், காட்டுச் சேவல்,  மான்கள், காட்டெருமைகள் மற்றும் பல்வேறு விதமான பறவைகள்  என ஏராளம்.

இந்த நூலின் வழியே அசாம் மாநிலத்தின் சுற்றுலா பகுதிகளுக்கு சென்று வந்த ஒரு உணர்வுடன் பகிர்கிறேன்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

30 செப்டெம்பர் 2021

Wednesday 29 September 2021

ஏழு சகோதரிகள் - 1- மணிப்பூர் மற்றும் நாகாலாந்து

ஏழு சகோதரிகள் - 1

மணிப்பூர் மற்றும் நாகாலாந்து

வெங்கட் நாகராஜன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 

பக்கங்கள்  


ஏழு சகோதரிகள் -1, என்ற இந்த பயண கட்டுரையில் மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் நண்பர் வெங்கட் நாகராஜன் அவர்களின் பயண அனுபவங்களை மிகவும் அழகாகவும் எளிமையாகவும் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.

நான், நண்பரின் பயணக்கட்டுரைகள் அதிகளவில் வாசித்திருக்கிறேன். இவரின் மொழிநடையும், இடம் மற்றும் அங்குக் கிடைத்த அனுபவங்களைச் சொல்லுகிற விதம் நாமும் அவர்களில் ஒருவராக அந்த இடத்திற்குச் சென்று வந்த ஒரு உணர்வினை கொடுக்கும் விதமாகவே இருக்கும்.

இந்த நூலின் இரண்டு மாநிலங்களுக்குள் பயணப்படப் போகிறோம்.

வாருங்களேன் பயணித்து பார்ப்போம் .

மணிப்பூர்:

இந்தியாவின் வடகிழக்கில் இருக்கும் ஏழு மாநிலங்களை ஏழு சகோதரி மாநிலங்கள் என அழைக்கிறார்கள். அந்த மாநிலங்கள், அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகியவை. இவற்றுள் ஒரு மாநிலமான மணிப்பூரைத் தான்  நாம் இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.

மணிப்பூரின் சுற்றுலா மற்றுமல்லாமல் அந்த இடத்தின் வரலாறும் மிகச் சிறப்பாகச் சொல்லிச்செல்வார். கங்க்லா என்ற நகர் மணிப்பூரின் புராதனமான நகரம். இந்த நகரத்தினை தலைமையிடமாகக் கொண்டு பல ராஜாக்கள் ஆண்டு வந்தார்கள் என்ற வரலாற்றுத் தகவலுடன் அங்கு இருக்கும் பழங்குடியினரின் அடையாளங்கள் மற்றும் கோட்டை பகுதியில் இருக்கும் ஒரு வழிபாட்டுத்  தலம் என அந்நகரத்தினை பற்றித் தெரிந்து கொள்ளவேண்டிய தேவியான தகவல் கள் இருக்கிறது.

ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தா ஜி கோவில், இந்த கோவில் மணிப்பூரில் இருக்கும் கங்க்லா பகுதியில் இருக்கிறது.இந்த கோவில் உருவான வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வெளி கோபுரம் என அந்த கோவிலின் அழகை நம் கண் முன்னே காட்டுகிறார் நண்பர். 

ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணசந்தரா கோவில், இந்த கோவிலின் வெளி கோபுரம் மூன்று அழகிய கோபுரங்களாகத் தோற்றமளிக்கிறது என்றும், தூண்கள் எல்லாம் சிங்கத்தின் மேல் இருக்கிறது என்றும் இந்த கோவில்களின் வழிபாட்டு நேரம் மற்றும் முறைகள் என பல்வேறு விதமான தகவல்கள் நிறைந்து இருக்கிறது இந்த நூல்.

மணிப்பூரில் பிறந்த விளையாட்டு வீராங்கனை "மேரி கோம்" அவர்கள் பிறந்த இடம் மற்றும் அவர் விளையாடும் மற்றும் பயிற்சி கொடுக்கும் விளையாட்டு மைதானம் பற்றிய முக்கிய தகவல்கள் அருமையாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.

ஏரியின் நடுவில் மிதக்கும் தீவு, அந்த தீவுகளில் இடம்பெற்றிருக்கும் வீடுகள், அவர்களின் தொழிலான மீன்பிடித்தல் மற்றும் பயணிக்கும் வழிகளில் பார்க்கும் சின்ன சின்ன விஷயங்கள் கூடச் சொல்லாமல் இருக்கமாட்டார். இந்த சிறிய தகவல்கள் வாசிக்கும் நமக்கு ஒரு ஆர்வத்தினையும் அந்த இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்ற ஆர்வத்தினை தூண்டுவது நிச்சயம்.

தங்குமிடம் பற்றிய தகவல்கள், கிடைக்கும் உணவுகள், போக்குவரத்து விவரங்கள், மக்கள் பேசும் மொழி என ஏராளமான தகவல்கள் அதிலும் குரங்கு அரிசியும் யோங்க்சா சட்னியும் கொடுக்கும் அற்புதமான சுவை என நம்மை அந்த சுவையினை ரசிக்க செய்திடுவார்.

பிஷ்ணுபூர் - விஷ்ணு கோவில், மணிப்பூர் தேவாலயம், அருங்காட்சியகம்,  மகளிர் மட்டும் நடத்தும் அங்காடி என பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள்.  போரில் வீரமரணம் புரிந்த வீரர்களின் கல்லறை அதாவது 1600 வீரர்களின் கல்லறைகள் மற்றும் அவர்களுக்கான நினைவிடமும் அவற்றின் சிறப்பும் என இந்த பகுதியில் தகவல்கள் அருமையாக இருக்கிறது.

மணிப்பூரின் எல்லையில் இருக்கும் தமிழர்கள், அவர்களின் அடையாளம் மற்றும் பண்டிகைகள், வாழ்க்கை முறை என மொத்த மணிப்பூர் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு நம்மை அழைத்துச் சென்றுவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

நாகாலாந்து:         

இனி நாம் பார்க்கப்போவது நாகாலாந்து, மணிப்பூரில் எல்லையிலிருந்து சாலை வழியாகவே பயணிக்கலாம் என்று சொல்கிறார். 

நாகாலாந்தில் கிடைக்கும் உணவு முறைகள், மக்கள் மற்றும் அவர்களின் நடைமுறைகளையும் சிறப்பாகச் சொல்கிறார். பொதுவாக இங்குத் தேவாலயங்கள் அதிகமாக இருப்பதாகவும் அந்த தேவாலயத்தின் வரலாறும் யாரால் கட்டப்பெற்றது என்கிற செய்திகளும் பயனுள்ளதாக இருக்கிறது.

இங்கு விற்கப்படும் மற்றும் சாப்பிடுவதுமான பல்வேறு மாமிசம், ஊர்வன, பறக்கும் எல்லாவிதமான பறவைகளும், ஆடு மாடு பன்றி என நடக்கும் எல்லாமும் கூடுதலாகக் குரைக்கும் நாயும் விட்டுவைக்கவில்லை என்கிறார். அதுவும் இங்கே புகழ்பெற்ற உணவு நாய் கறி தானாம். புழு பூச்சி கூட விட்டுவைக்க விலை என மென்மையாகச் சொல்கிறார். தவளை, நத்தை மற்றும் வெள்ளெலி என வியாபாரம் மும்மரமாக நடக்கும் அங்காடியின் நிலத்தையும் கொஞ்சம் மனத்தின் கலவரத்துடன் ஆவணப்படுத்தியிடுகிறார்

இங்கேயும் ஒரு பெரிய கல்லறை இருக்கிறது இங்கேயும் வீர மரணம் புரிந்த போர்வீரர்கள் உறங்குகிறார்கள். அங்கே பொறிக்கப்பட்ட ஒரு வாசகம் 

" வீடு சென்றதும் உங்களவர்களிடம் எங்களைப் பற்றிச் சொல்லுங்கள்    

உங்களுடைய நாளைக்காக 

எங்களுடைய இன்றை இழந்திருக்கிறோம் என்று"      

அங்கு வாழ்ந்த பழங்குடியினரின் வரலாறு மற்றும் உணவு முறை, வாழ்க்கை முறை என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் விதமாக அமைந்திருக்கும் அருமையான அருங்காட்சியகம், அங்கே கிடைத்த அனுபவங்கள் மற்றும் படங்கள் எனச் சிறப்பாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.

என இரண்டு மாநிலத்திலும் கிடைத்த பல்வேறு அனுபவங்களைத் தொகுத்து வண்ணமயமான படங்களுடன் கதைகளாகச் சொல்லி நமக்கும் அந்த இடத்திற்குச் செல்ல வேண்டிய ஒரு ஆர்வத்தினை நம் ஆழ்மனதில் அடித்துச்செல்கிறார்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

29 செப்டெம்பர் 2021 

Saturday 25 September 2021

மகளிர் மட்டும் - வாசிப்பனுபவம்

மகளிர் மட்டும் 

ஆசிரியர் : பா. ராகவன் 

கிண்டில் பதிப்பு 

விலை   ரூபாய் 199

பக்கங்கள் 192 


"மகளிர் மட்டும்" என்ற இந்த புத்தகம் தினகரன் நாளிதழில் தொடராக வெளிவந்து, இந்த தொடர் அனைத்தும் ஒரு சேர ஒரு புத்தகமாக முதலில் "24 கேரட்" என்று தலைப்பில் வந்தது பிறகு இந்த புத்தகம் "மகளிர் மட்டும்" என்ற புதிய தலைப்பில் வெளிவந்தது. 

உலக அளவில் சாதனைகள் நிகழ்த்திய 24 பெண் மணிகளைப் பற்றியது என்பதால் 24 கேரட் பெயர் வைத்திருக்கலாம் ஆனால் மக்களிடம் 24 கேரட் என்றால் தங்கம் தானே நினைவுக்கு வரும் அதனால் தான் என்னமோ "மகளை மட்டும்" என்ற சிறப்பான தலைப்பினை கொடுத்திருக்கிறார் ஆசிரியர் என்று நினைக்கிறேன்.

அகிலத்தின் முதல் பெண் ஏவாள் முதல் அமெரிக்காவின்  முதல் பெண்மணி ஹிலாரி,  உலகின் உச்சம் தோட்ட அழகிகள் மர்லின் மன்ரோ, ஐஸ்வர்யா ராய், உலக இலக்கியத்தின் இடத்திலிருந்து என்றும் விடை பெறாத தாஸ்தாவெஸ்கியின் துணைவியான அன்னா, தங்கள் எழுத்து மூலம் புரட்சியும் அடிமைப்பட்ட மக்களுக்கு விடுதலையும் வேண்டும் என்று எழுத்துக்கள் மூலம் போராடிய அருந்ததி ராய், நதீன் கோர்டிமர்,இசபெல் அலண்டே, சரோஜினி நாயுடு, அரசியலில் தங்களது உச்சத்தினை அடைந்த இரும்புப்பெண் இந்திரா, பேனசிர் புட்டோ, சோனியா மற்றும் விளையாட்டில் வீரம் பதித்த மார்ட்டினா,ஆன்மிகத்தின் ஆன்மாவினை அடைந்த ஆண்டாள், அமிர்தானதாயிஸ்ரீ அன்னை, இளவரசி டயானா, மேலும்     இவர்களில் ஒரு படி மேலாக விண்ணைத்தொட்ட கல்பனா சாவ்லா என பல்வேறு வெற்றிப்படிகளை தங்கள் வசமாக்கிக்கொண்ட பெண்மணிகளைப் பற்றிய அறியத் தகவல்களை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த புத்தகம் கட்டாயம் ஒவ்வொருவரும் வாசித்து அறிந்து கொள்ளவேண்டிய புத்தகமாகும்.

பா. ராகவன் அவர்கள் எழுத்து ஒரு தனித்துவம் வாய்ந்தது அதுபோலவே இந்த பெண்மணிகளின் வாழ்க்கை வரலாற்றை ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்கும் மிக நுட்பமாகத் தொகுத்து எல்லா விவரங்களும் கொண்டதாகக் கொடுத்திருப்பது வாசிக்கும் நமக்கு ஒரு முழு வரலாறும் தெரிந்துகொள்ள முடிகிறது.

ஏவாள் - அகிலத்தின் முதல் பெண்மணி என்றும் அவரே முதலில் சிந்தித்து நன்மை எது தீமை எது என்று பகுத்தாய்ந்து பார்க்கத் தொடங்கியவர்,  அதே சமயத்தில் தான் செய்யாத அந்த சிந்தனையின் விளைவாகத் துன்பங்களையும் அனுபவிக்கவேண்டியிருந்தது. கடவுளால் படைக்கப்பட்ட ஏவாள் மானுட குளத்தின் அறிவுக்கண்ணைத் திறந்துவைத்த மாபெரும் பெண் ஆவாள் என்கிறார். 

ஆண்டாள் - பெருமாளுக்காகப் பாடல்கள் பாடி தனது காதலினை வெளிப்படுத்தி, தனது ஒரே நோக்கமான பெருமாளையே அடைந்து இன்று ஆண்டாள் கடவுளாக இருக்கிறார்.

மர்லின் மன்ரோ -  நார்மா ஜீன் என்ற இயற்பெயருடன் மனநலம் பாதிக்கப்பட்ட தாயிக்கு மகளாகப் பிறந்த இவர் தந்தை பெயர் தெரியாமலே அனாதை ஆசிரமங்களிலும் தாயின் நண்பருடனும் வாழ்ந்த தனது இளமைக் காலத்தினை கடத்திய இவர் தனது அழகாலும் திறமையாலும் உலகின் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன்னகத்தே கட்டி போட்ட கனவுக்கன்னியாகத் திகழ்ந்தார் என்றால் அது வியப்பானதாக இருக்கிறது. ஆம் அனைத்தும்  உண்மையே.

அன்னா தாஸ்தயேவ்ஸ்கி -   உலக புகழ்பெற்ற எழுத்தாளரும் இலக்கியவாதியுமான   தாஸ்தயேவ்ஸ்கியின் கடினமான நேரத்தில் அவருக்கு உதவியாளராக வந்து தனது கடமைகளைச் சிறப்பாகச் செய்து அவரை சரிவிலும் சூழ்ச்சியிலும் இருந்து மீட்டெடுத்து அவருக்கே வாழ்க்கைத் துணையாக வந்து அவரின் புகழினை உலகறிய செய்தவர் தான் "அன்னா".

இந்திரா காந்தி - இந்தியாவின் இரும்பு பெண்மணி,    இந்தியாவின் பெரிய குடும்பத்தில் பிறந்து அரசியல் தெரியாமல் அயல் நாட்டில் படித்து பிறகு அரசியல் பிரவேசம் செய்து தனது ஆளுமையினை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் தீர்க்கமான முடிவெடுப்பதில் அவருக்கு நிகர் அவரே என்று ஒரு தனிப் பெயரினை நிலைநாட்டிச் சென்றார் என்றால் அது இன்றளவும் நீடித்துக்கொண்டே தான் இருக்கிறது.

நதீன் கோர்டிமர் யூத இனத்தில் பிறந்து, தனது இளம் வயது முதல் ஆப்பிரிக்கர்களை அவர்கள் வாழும்  அடிமை வாழ்க்கையில் இருந்து  மீட்டெடுக்கத் தனது எழுத்தின் மூலம் ஒரு மாபெரும் சமூக சீர்திருத்தத்தினை கொண்டுவந்தார் என்றால் அதுவும் தனது சிறிய வயது முதலே அவரின் எழுத்துக்கள் எல்லாம் சமுதாய சிந்தனைகளை கொண்டதாகவே இருந்திருக்கிறது. புக்கர் பரிசு, ஸ்மித் பரிசு, ஜேம்ஸ் டாயிட் பரிசு என இலக்கியத்தில் நோபல் பரிசு வரை எல்லா பரிசுகளும் பெற்ற இவர் எல்லா நேரங்களிலும் ஒரே சிந்தனை அது அடிமைப்பட்ட மக்களின் விடுதலை தான். 

மார்ட்டினா நவ்ரத்திலோவா - உலகின் எங்கோ ஒரு மூலையில் பிறந்து தனது தொடர் முயற்சியாலும் கடின உழைப்பாலும் உலகின் உச்சபட்ச  டென்னிஸ் நட்சத்திரமாக  ஜொலித்து  முன்னணி வீராங்கனையாகத் திகழ்ந்தவர்.

ஐஸ்வர்யா ராய் -  தனது அழகாலும், அறிவாலும், திறமையாலும் , தன்னிடம் இருந்த மற்றும் கற்றுத் தெரிந்து கொண்ட புத்திசாலித்தனம் தன்னை ஓர் உலக அழகியாக மாற்றிக்கொண்டதும் அதுமட்டுமல்லாமல் அந்த நிலையிலிருந்து கீழே இறங்காமல் இன்றளவும் தனக்கென ஒரு தனி இடத்தினை தக்க வைத்துக்கொண்டிருக்கும் அழகான ஆச்சரிய  பெண் தான் இவர். 

கிளியோபாட்ரா - எகிப்து மன்னனின் எட்டாவது கிளியோபாட்ராவாக பிறந்து தனக்கு முன்னர் பிறந்த ஏழு கிளியோபாட்ராவை விட உலகில் இன்றளவும் நிலைத்துத் தான் ஓர் அழகி என்று எல்லோர் மனதிலும் நிற்கிறார் என்றால் அது அவரின் அழகுமட்டுமல்ல அவருடைய அறிவும் புத்திசாலித்தனமும் தான் என்பது மறுக்க முடியாத ஒரு காரணம் என்றுதான் சொல்லவேண்டும். தன்னை விட்டுப் போன ஆட்சி அதிகாரத்தை தன்னோடு புத்திசாலித்தனத்தால் மீட்டெடுத்தவர்.

பேனசிர் புட்டோ -  பாகிஸ்தான் அரசியலிலிருந்து தன் தந்தையைக் கொலை செய்த துரோகிகளை அழிக்க வேண்டுமாம் என்ற ஆவேசத்து அரசியல் களத்தில் குதித்து இருமுறை ஆட்சியில் அமர்ந்தார் இருந்தாலும் அவரின் உறவினர்களும் உடன் இருந்த அமைச்சர்கள் என இவரின் பெயரைக் கலங்கப் படுத்தினார்கள். இருந்தாலும் பாகிஸ்தான் அரசியலில் ஒரு தனி இடம் பிடித்தவர் இந்த பெண்மணி.

இசபெல் அலண்டே -  லத்தீன் அமெரிக்காவிலிருந்து வந்த மிகவும்    புகழ் பெற்ற எழுத்தாளர்களில் இவரளவுக்கு கொண்டாடப்பட்டவர்கள் யாரும் இல்லை.       இவரும் தனது எழுத்து என்ற ஆயுதத்தைக் கொண்டு தனது தேசத்து  மக்கள் சமூகத்தில் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளார். பெரு நாட்டில் பிறந்து சிலி நாட்டில் குடியேறினார். ஒரு மனிதாபிமானமுள்ள எழுத்தாளராக இசபெல்  தனது தேச மக்களின் வளர்ச்சிக்காக வாழ்ந்த பெண்மணி ஆவார்.

ஹிலாரி கிளின்டன் - அமெரிக்காவின் அரசியலில் மிகவும் முக்கியமான இடத்தை பிடித்த இவர் முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவி என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த செய்தியே ஆனால் இவரின் பல்வேறு பரிமாணங்களை அவரின் வாழ்வில் நடந்த வெவ்வேறான சுவாரஸ்யமான விவரங்களைத் தெரிந்து கொள்ளமுடிகிறது. 

சோனியா காந்தி  - இவர் பிறந்தது என்னவோ இத்தாலி ஆனால் இன்று இவர் இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒரு பெண்மணி என்று தான் சொல்லவேண்டும். இவரின் மீது எத்தனையோ வார்த்தை தாக்குதல்கள் நடந்தது  ஆனால் எதற்கும் மனம் தளராமல் தனக்குக் கிடைத்த அரியாசனத்தினை மிகவும் நேர்த்தியாக ஒருவரிடம் ஒப்படைத்து இருந்து கட்சியினை மட்டும் காத்துக்கொண்டு வந்தவர். இந்திய அரசியலிலிருந்து இவரின் பெயர் நீக்காத இடத்தில் இவர் அமர்ந்து விட்டார்.

ஸ்ரீ அன்னை  - பாண்டிச்சேரி என்றாலே நினைவுக்கு வருவது இவரது ஆசரமும்  மற்றும்  அங்கே அமைந்திருக்கும் தியான மண்டபம் தான். அரவிந்தர் அவர்கள் வ.உ. யின்   பாரதியாரும் நானும் என்ற புத்தகத்தில் அரவிந்தரைப் பற்றிய நிறைய விவரம் படித்திருக்கிறேன். ஆனால் அவருடன் சேர்ந்து இந்த ஆசிரமத்தில் இன்று ஸ்ரீ அன்னை அவர்களின் பெயரும் புகழும் ஒரு பெரிய இடத்தில் இருக்கிறது என்பதையும் எவ்வாறு ஸ்ரீ அன்னை இங்கு வந்து சேர்ந்தார் என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

சாரதா தேவி  - இவர் தனது கணவர் இவரை சிறுவயதிலே திருமணம் செய்தார். ஆனால் அவர் முழு நேரமும் ஆன்மீகத்தின் மீதே ஈடுபடுகொண்டிருந்தார்.  ராமகிருஷ்ண பரமஹம்சரின் மீது கொண்டுள்ள ஆன்மிகத்தின் மீது மிகுதியான ஈடுபாடு கொண்டு அவருடன் சேர்ந்து ஆன்மிக வாழ்வினை நடந்தவர்.     எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தந்து குழந்தைகளாக அனைவரையும் பாவித்து  அவர்கள்  நலமோடு வாழவேண்டும் என்று தனது வாழ்நாளை வாழ்ந்தவர்.

மடோனா - இயற்கையாகவே தான் கொண்டிருந்த அழகும், இளமை வயதில் அவள் கொண்டிருந்த பட்டு ஞானமும் அவள் தன் மீது கொண்டிருந்த அலாதி நம்பிக்கையும், தாயில்லாமல் வாழ்வதும் மட்டுமல்லாமல்   தனது உடன் பிறந்தோர்களைக் கவனிக்க வேண்டிய ஒரு பொறுப்பிலிருந்த இவள் எதோ ஒரு நம்பிக்கையில் வீட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவின் ஒரு சேரிப் பகுதியில் வந்து அங்கிருந்து தனக்கு வாய்ப்பு தேடி அதன் வழியே வாழிவின் உச்சத்தினை தொட்டவர். ஆம் ஒருகாலத்தில் இவரின் பாடல்களைக் கேட்காதே காதே இருந்திருக்காது என்று தான் சொல்லவேண்டும்.

ஜோன் ஆஃப் ஆர்க - பிரான்சில் இருக்கும் ஒரு எல்லையோர சிறிய கிராமத்தில் ஆடு மேய்க்கும் ஏழை பெற்றோருக்குப் பிறந்து, சிறுவயதிலே தியானமும் இறையருளும் கொண்டிருந்தார். அப்போது நடைபெற்ற போரில் பிரான்ஸ் தோற்றுக்கொண்டே இருந்தது அதற்கு இவளிடம் இறையருள் கொடுத்தது. இதன்படி இவள் நடக்கும் போரில் கலந்துகொள்ள வேண்டி பல்வேறு முறை முக்கியமானவர்களைச் சந்தித்தாள் ஆனால் யாரும் இவளின் உருவத்தினை கண்டு  யாருமே அவளை பொருட்படுத்தவில்லை. ஆனாலும் அவள் தயங்கவேயில்லை இவளின் தீராத வேட்கையினை பார்த்த அதிகாரிகள் இறுதியில் இவளை நம்ப ஆரம்பத்தினது, அதன்படி அவளும் போர்தொடுத்து இறுதியில் எதிரியின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டாள். தனது பதின்பருவத்தில் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து இன்றளவும் அந்நாட்டின் காவல் தேவதையாக இருக்கிறாள்.

டயானா - உலகெங்கிலும் இருக்கும் இளவரசியில் டயானா ஒரு தனிப் பெயர் பெற்றிருந்தார். இவரின் இரக்கக் குணம் அவளின் பல்வேறு தொண்டன் செயல்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம் அதுவும்  விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்காகவே இவர் பல்வேறு விதமான உதவிகள் செய்தார். இவர் கிசு கிசு விற்கு பெயர்போனவர் ஆனால் அவர் எதற்குக் கண்டுகொள்ளாமல் தனக்கென ஒரு பாதையினை வகுத்துக்கொண்டு அதன் படியே நடந்தார் ஆனால் சமுதாயத்தின் நெருக்கடியும் தொடர்ந்து வந்த வதந்திகளும் அவரின் இறுதி நாட்களை நிச்சயப்படுத்திவிட்டன.  

அயன்ராண்ட் - ரஷ்யாவின் ஒரு பெரிய செல்வந்தருக்குப் பெண் குழந்தையாகப் பிறந்தார். ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியில் ஒரே இரவில் அனைத்தையும் இழந்து ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டது அவரின் குடும்பம். தனது சிறுவயதிலே நான் ஒரு எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணுகிறேன் என்று அவளின் பெற்றோர்களிடம் சொன்னதும் அவர்கள் மறுப்பு தெரிவிக்காமல் ஆதரவு கொடுத்தனர். மிகவும் கடினப்பட்டு அமெரிக்காவிற்குச் சென்றார் அங்குச் சென்றதும் அவர் தனது எழுத்துக்களைத் தொடர ஆரம்பித்தார். திரைப்படம், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் சில நாடகங்கள் என எல்லாவற்றிலும் பங்குபெற்றார் ஆனால் அவர் உலகளவில் பெயர்பெற்றது அவரின் ஒரு நாவல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அருந்ததி ராய் - கேரளத்தில் பிறந்த இவர் தனது முதல் நாவலிலே உலகப் புகழ் பெற்றார் என்பது ஒரு பெரிய சாதனையே. ஆனால் இவர் எழுத்துக்களைவிடத் தனது தாய் மேற்கொண்ட சமூக சேவையின் மீதே அதிக நாட்டம் கொண்டிருந்தார் அதன் படியே அவர் பல்வேறு சமூக தொண்டுகளைச் செய்தார். உலகம் முழுவதும் இவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. எத்தனை புகழுக்கு சொந்தக்காரரானாலும் அவர் இன்றளவும் தனது சிறுவயது கேரளா பெண்ணாகவே தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறார்.

கல்பனா சாவ்லா - இந்தியாவில் பிறந்து இந்தியர்களின் கனவினை நினைவாக்கிய ஒரு அறியப் பெண்மணி. இரண்டாவது முறை விண்வெளிக்குச் சென்று திரும்பிய கடைசி நேரத்தில், கோடான கோடி மக்கள் முகத்தினை காணக் காத்துக்கொண்டிருந்தனர் ஆனால் காலன் அவரை மண்ணில் கால்வைக்க விடாமல் கோடான கோடி மக்களைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு  விண்ணுலகிற்கே எடுத்துச் சென்றுவிட்டது.

சரோஜினி நாயுடு - இவர் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத காலத்தில், தனியாகச் சென்று தன்னை அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டார் மட்டுமல்லாமல் கவிதைகளை எழுதினார், அதே நேரத்தில்  காந்தி போகவேண்டி இருந்த தென்னாப்பிரிக்காவிற்கு அவர் சார்பாக இவர் சென்றார்.சென்றதுமட்டுமல்லாமல் அங்கு அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் இன்றளவும் பேசப்படுகிறது. கலப்பு திருமணம் செய்து கொண்டவர் என பல்வேறு விதமாக தனக்கென ஒரு தனி இடத்தினை ஏற்படுத்திக்கொண்டவர்.

அமிர்தானந்தமயி - கேரளாவின் ஒரு கடலோர கிராமத்தில் ஒரு மீனவ குடும்பத்தில் சுதா ராணியாகப் பிறந்த இவர் தனது இளைய பருவத்திலிருந்தே இறையருள் பெற்றார். கிருஷ்ணன் மீது அதீத ஈடுபாடு கொண்டு இருந்த இவர் ஒரு காலத்தில் இவர் சக்தியின் சித்தி பெற்று அதன் பிறகு இவரின் உலகெங்கும் சென்று மக்கள் மீது அன்பு செலுத்துங்கள் என்ற ஒரே மந்திரம் மட்டும் தான் அவர் எப்போதும் கடைப்பிடித்தது.                      

அன்னை தெரஸா - யூகோஸ்லாவில் பிறந்து உலகெங்கும் அவர் ஒரு இந்தியர் என்றே அறியப்படுகிறார். ஏனெனில் அவர் தனது முழு வாழ்க்கையையும் இந்திய மக்களின் துயரங்களுக்காகவே ஈடுபடுத்திக்கொண்டார். கல்கத்தாவிலிருந்த எல்லா சேரிகளுக்கும் சென்று தனது ஊழியத்தினை செய்ய ஆரம்பித்தார் அதற்காகச் செவிலியர் வேலையினை கற்றுக்கொண்டார். கடைசி வரைக்கும் தான் எடுத்துக்கொண்ட இந்த பொறுப்பிலிருந்து பின்வாங்காமல் முன்னேறியவர். உலகளவில் தொண்டுகள் புரிந்த எத்தனையோ கிருத்துவ புனிதர்களில் இவர் மட்டும் தான் இறந்த மிகச் சில வருடங்களுக்குள்ளேயே இந்த புனிதர் பட்டம் கிடைத்தது அவரின் தொண்டுக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரம் என்றே சொல்லவேண்டும்.

இது போன்ற சாதனை படைத்த பெண்மணிகளைப் பற்றிய அருமையான தகவல்களைத் தெரிந்து கொண்டதை இங்கே மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன்.  


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

25 செப்டெம்பர் 2021

Wednesday 22 September 2021

கருக்கு

 கருக்கு

ஆசிரியர் : பாமா 

காலச்சுவடு பதிப்பகம்  

விலை  ரூபாய் 140

பக்கங்கள் 118



வாழ்வில்  அனுபவித்த வலிகளை,  நம்மிடம், தனது இயல்பான பேச்சு வழக்கிலேயே அருமையான வரிகளாக தொடுத்து கொடுத்திருக்கிறார்.

கருக்கு வாசித்து முடிப்பதற்குள் மனதில் எத்தனையோ விதமான இனம் தெரியாத வலிகள். தேக்கி வைத்த நீர் எவ்வாறு மடை திறந்தவுடன் வேகமெடுத்து ஓடுமோ அதுபோலவே தனது மனதில் தேங்கிக் கிடந்த குமுறல்களைச் சொல்லிச்செல்கிறார் ஆசிரியர் பாமா.


மிகவும் முக்கியமான ஒரு படி மதிப்பு உயருகிறது ஏனெனில் கருக்கு சொல்லும் விதமே தனது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் இயல்பான பேச்சின் பிரதிபலிப்பே மொத்த பக்கத்திலும் பார்க்கமுடிகிறது.

ஒரு தலித் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்து வறுமையில் வளர்ந்து நன்றாகப் படித்து ஒரு வேலைக்கும் போனபிறகு அந்த வேலையினை விட்டுவிட்டு கன்னியாஸ்திரீ ஆகி நாம்போல ஏழை மக்களுக்குப் பணி செய்யவேண்டும் என்ற கனவுகள் ஒரு பகல் கனவாகிப் போனதால் எல்லாத்தையும் விட்டு தோப்பிலிருந்து எடுத்து வந்து நட்ட தனிமரம் போல ஆனால் ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த வழிகளும் வலிகளும் எனக் கருக்கு நமக்குக் கொஞ்சம் சுருக்கு என்று சமுதாயத்தின் அவலத்தினை அருமையாகச் சொல்லியிருக்கிறார்.

ராணுவத்தில் அப்பா வேலைசெய்கிறார் ஆனால் அவர் குடும்பம் வறுமையில் வாழ்கிறது அப்படிப்பட்ட ஒரு தேசத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று நிலைக்கு போது யார் மீது குறைபட்டுக்கொள்வது!!

ஒவ்வொருவரும் நாம் பிறந்து தவழ்ந்து வாழ்ந்த ஊர்களைச் சொல்லும் போது மனதில் வரும் ஒரு விதமான ஊற்றுபோன்ற வர்ணனைகள் சொல்லவே வேண்டாம் இவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் நம்மை அந்த ஊருக்குள் ஒரு உலா அழைத்துச் சென்றேவிட்டது. கம்மாக்கரையில் கரைபுரண்டோடிய தண்ணீர் அதிலே துள்ளி குதித்தோடும் மீன்கள், காடுகளில் சுள்ளி பொறுக்கி வந்து விற்கிற அனுபவம். கிராமத்தில் வெள்ளந்தியாக வேலை செய்யும் விலைமதிப்பில்லா ஆட்கள் அவர்களைச் சுரண்டும் நிலக்கிழார்கள். வெளியுலகம் தெரியாத மனிதர்களின் மாசற்ற பிரதேசம்.   

சிறுவயதில் ஏன் கடவுளை வணங்குகிறோம் என்று தெரியாத வேளையில் கூட விடிய விடிய விதவிதமான ஜெபங்கள் செய்த அனுபவங்கள் ஆனால் வாழ்வில் ஒரு முதிர் நிலைக்கு வந்த பிறகு அப்போது செய்தது எல்லாம் ஒரு விதமான அடிமைத்தனம் என்ற ஆணித்தரமான பார்வை உண்மையினை உரக்கச் சொல்கிறது.

சாதி என்ற ஒரு கொடிய நோய் பின்தொடரும் இடங்கள் ஒன்றா இரண்டா இல்லை அது பின்தொடராத இடமே இல்லையென்றே சொல்லவேண்டும்.

பள்ளிக்கூடத்தில் ஆரம்பித்து, கிராமம், கடைத் தெரு, சுடுகாடு, போக்குவரத்து, உழைப்பு, உணவு, மனநிறைவுக்காகப் போகும் தேவாலயங்கள் என எல்லா இடத்திலும் கூடவே கொடுமை செய்யும் ஒரு மிகப் பெரிய தீய சக்தியாக வருவது மனதை வருடத்தான் செய்கிறது.

கிராமத்தில் ஏற்பட்ட சாதிய வன்முறைகள் அவற்றிலும் கொடுமைக்குள்ளாவது ஒடுக்கப்பட்ட சாதியினர்தான் என்பது தொன்றுதொட்டு வரும் ஒரு வலியே. 

தனது மதத்தில் அங்கீகாரம் இல்லையென்றுதான் வேறொரு மதத்தினை நாடிச்செல்கின்றனர் ஆனால் அங்கேயும் இதே  சாதிய பாகுபாடு இருக்கிறதென்றால் வேறெங்குதான் போவார்கள் இவர்கள்.  

கல்லூரி காலத்தில் பெற்ற பல்வேறு அனுபவங்களைச் சொல்லும் விதம் நம்மையெல்லாம் கொஞ்சம் சிந்திக்கவே செய்கிறது. ஒரே உடையுடன் ஒரு வாரக் காலம் கடத்தியது பிறகு படிப்பில் காட்டிய விவேகத்தில் விலகியவர்களும் வந்து உறவாடியது தருணங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது இப்படியும் இந்த சமுதாயம் இருக்கிறது என்ற ஒரு பெரிய கேள்விக்குப் பதில் இல்லாமலே இருக்கிறது.

கன்னியாஸ்திரீ ஆகி சேவை செய்யலாம் என்று அங்கே போனாலும் அதற்குள்ளேயும் சாதியும் சதியும் சேர்ந்து வந்து ஆட்டம் போடுகிறது பாவம் என்ன செய்வது தனித்து வருவதைவிட வேரென்ன செய்யமுடியும் இந்த சமூகத்தில்.  இந்த மடத்தில் சேரும் போது இருந்த திடம் வெளியில் வரும்போது இல்லை என்று சொல்லும்போது எத்தனை சோகங்கள் கடந்து வரவேண்டியிருக்கிறது.

வாழ்வில் விசாலமான வழியென்று வீரநடை போட்டுச் சென்ற பிறகுதான் தெரிகிறது வந்த வழி நமது வழியில்லை என்று. தவறான இடத்தில் இருந்து வெளியே வருவது எளிதான செயலல்ல, அப்படியும் தீர்மானமாக வெளியேறியதும் வந்து அனுபவிக்கும் துயரங்கள் ஏன் என்றே தெரியாத ஒரு விதமான சாபம் என்று கூடச் சொல்லலாம்.

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

22 செப்டெம்பர் 2021               

Saturday 18 September 2021

தமிழர் திருமணம் - வாசிப்பனுபவம்

தமிழர் திருமணம்

ஆசிரியர் : ஞா. தேவநேயப் பாவாணர் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 120


ஒவ்வொரு மனிதரின் வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வாக  திருமணம் இருக்கிறது. அன்று தொற்று, இன்றுவரை ஏன் இன்னும் வரும் சங்கதிகள் என நம் தமிழர்களின் வாழ்வில் பெறப்படும் ஒரு பெரிய மாற்றமும் சடங்கும் எனச் சொன்னால் அது திருமணம் தான்.

இரண்டு வெவ்வேறு இடங்களில் வாழ்ந்த இரண்டு மனங்கள் இணையும் ஒரு விழாதான் திருமணம். இந்த புத்தகம் நம் பாரம்பரியத்தின் திருமணம் எவ்வாறு நிகழ்ந்தது, காலப்போக்கில் அது எவ்வாறெல்லாம் மாற்றத்திற்கு உள்ளானது என்பதை மிகச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார்.

பண்டையத் தமிழ்த்  திருமணம்    கொண்டிருந்த சடங்கு, தமிழ் முறையில் செய்த திருமணம், காலப்போக்கில் பிராமணர்கள் வந்த போது முதலில் அரச குடும்பத்தில் இவர்கள் திருமணம் சடங்கினை செய்தனர் பிறகு பெரு நிலக்கிழார்கள் பிறகு சாதாரண குடிமக்கள் என இவர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. தமிழ் முறை மாறி வடக்கு மொழியுடன் இவர்களின் திருமண சடங்குகள் நிறைவேறின.

கொடை மணம், காதல் மணம் மற்றும் கவர்வு மணம் என்ற  மூன்று வகையான திருமணம் நடந்ததாகக் குறிப்பிடுகிறார்.  மேலும் குலமுறையின் வழியே அகமனம் அதாவது ஒரே குலத்தில் பெண்கொடுத்து பெண் எடுப்பது  மற்றும் புறமணம் என்பது வேறு குலத்திலிருந்து பெண் எடுப்பது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒரு மனையும்பல்மனையம் மற்றும் பல்கணவம் மூன்று வகையாக மணமக்கள் வாழ்வியல் முறைகள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

கன்னி மணம் (முதல் திருமணம்), கட்டுப்பட்டவள் மணம் (இரண்டாவது மணம்) மற்றும் கைம்பெண் மணம் என மூன்றுவகையான திருமணம்.   

திருமண வயது பொதுவாகப் பெண்ணிற்கு 12 ம் ஆணுக்கு மணமகனுக்கு 16ம் எனக் குறிப்புகள் கூறுகிறது என்கிறார்.  மணப்பேச்சு என்பது பெண் பார்க்கச் செல்வதும் பிறகு பொருத்தம் பார்த்த பிறகு திருமண உறுதி (நிச்சயதார்த்தம்)  செய்துகொள்வதும் எனத் திருமண நிகழ்வுகள் ஆரம்பிக்கின்றன. திருமண ஆசிரியரின் எல்லா சடங்குகளைச் செய்து தாலி எடுத்து மணமகன் கையில் கொடுத்து பெண்ணின் கழுத்தில் கட்டச்சொல்வர். பிறகு பெரும்பாலான பின் நிகழ்வுகள் நடைபெறும்.

இடைக்காலத்தில் இவ்வாறாக இருந்துவந்த பெரும்பாலான சடங்குகள் மாற்றங்களுக்கு இடையில் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாகப் பழமை இழந்து புதிய வழக்கங்கள் புகுந்துவிட்டன. முதலில் வடமொழியினை கொண்டு செய்ய ஆரம்பித்த ஆரியக்காரணத்தால் தமிழுக்கு ஏற்பட்ட பல்வேறு தாழ்வுகளைக் குறிப்பிடுகிறார்.

பிறகு சீர்திருத்தத் திருமணம் பற்றி பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்களைக் குறிப்பிடுகிறார். சித்தூர் மார்க்க சகாய ஆச்சர்யார், மறைமலையடிகள், திரு.வி. கலியாணசுந்தரர் மற்றும் ஈ.வே. இராமசாமிப் பெரியார் என இவர்கள் கொண்டுவந்த சீர்திருத்தத் திருமண சடங்குகள் பற்றி விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்க நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் கருத்தில் கொள்ளவேண்டிய பல்வேறு குறிப்புகள் மற்றும் பார்க்கவேண்டிய பன்னிரண்டு பொருத்தம் என மிகவும் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

குலவெறி கொல்லாமை, பரிசம் வாங்காமை,நாளும் வேளையும் பாராமைபிறப்பியம் பாராமை, மணம் பற்றிய செய்திகளைத் திட்டமாய் முடிவுசெய்தல், தாய்மொழி கரணம் செய்வித்தல், வீண் சடங்குகளை விலக்கல், செல்வ நிலைக்கேற்ப செலவு செய்தல், மணநாளன்றோ மணமக்கள் கூட்டுதல், மணமக்களின் நல்வாழ்வை விரும்பல் என பல்வேறு சிறப்பான குறிப்புகளை மணமக்களின் பெற்றோர்களின் கவனத்திற்குக் கொடுத்திருக்கிறார்.

மணமக்கள் கவனிக்க வேண்டியவை, உற்றார் உறவினர் கவனிக்கவேண்டியவை மற்றும் சமூகம் அல்லது அரசியலாளர் போன்றோர் கவனிக்கக்கூடிய குறிப்புகள் என பல்வேறு விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

பின்னிணைப்பாக பல்வேறு திருமண அழைப்பிதழ் மாதிரிகள், வாழ்த்து மடல்கள் மற்றும் திருமண நிகழ்ச்சி நிரல் என நம் தாய் மொழியில் மிகவும் சிறப்பாகக்  கொடுத்திருக்கிறார்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

18 செப்டெம்பர் 2021

வா தமிழா ! பொருளாதாரம் பயில்வோம்

 வா தமிழா ! பொருளாதாரம் பயில்வோம்

ஆசிரியர்: பா.ச. பாலசிங் சந்திரசேகர்

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 52


இந்த புத்தகம் எளிமையான முறையில் பொருளாதாரத்தினை கற்றுத்தருகிறது. அடிப்படை பொருளாதாரம் பற்றியும்,   பொருளாதாரம் எவ்வாறு மக்களின் வாழ்நிலையினை சேர்த்து மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார். 

ஒவ்வொரு மனிதனும் தெரிந்துகொள்ள வேண்டியது ஏனெனில் நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கையுடன் ஒன்றற கலந்து தான் பொருளாதாரம். நாம் வாழத் தேவையான ஆதாரமே பொருள் தான் அதைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்த புத்தகம் எளிமையாக இருக்கிறது.

ஆசிரியர், நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள் மற்றும் கேட்கும் கேள்விகள், அரசியல் களத்தில் பேசப்படும் வார்த்தைகள் என ஒவ்வொரு பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு மிக நேர்த்தியாக இந்த புத்தகம் விவரிக்கிறது.

அடிப்படையில் பொருளாதாரம் நான்கு வகையாகப் பிரிக்கலாம் அவைகள் 

1. பாரம்பரியப் பொருளாதாரம் 

பாரம்பரிய பொருளாதாரம் என்பது நாம் பண்டைய காலத்தில் வாழ்ந்த மற்றும் பழகிவந்த ஒரு பொருளாதார முறையே இந்த முறை. இங்கே பெரும்பாலும் தன்னிறைவு பொருளாதாரம் இருந்துவந்தது ஆனால் காலப்போக்கில் இந்த முறை மேன்மேலும் மாறிவருகிறது. இந்த முறையில் பெரும்பாலும் கூட்டு குடும்பாகவே வாழ்ந்து வந்தனர். இயற்கை விவசாயம், மீன்பிடிப்பது போன்ற வகையான வாழ்க்கையினை இவர்கள் பின்பற்றினார்கள். இதனால் இவர்கள் எப்போதும் தங்களுக்குத் தேவையான தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வார்கள்.  இன்றைய சூழ்நிலையில் இந்த வகையான பொருளாதாரம் முற்றிலும் வழக்கொழிந்து போய்விட்டது என்றே சொல்லலாலாம்.              

2. கட்டளைப்  பொருளாதாரம் 

இந்த பொருளாதாரம், அரசாங்கம் எடுக்கும் முடிவை பொறுத்தே இருக்கும். வெவ்வேறு நேரங்களில் மாற்று அரசியல் பேசுபவர்கள் இந்த பொருளாதாரத்தினை பற்றிப் பேசுவார்கள்.  உதாரணத்திற்குச் சொல்லலாம் என்றால் நம் நாட்டில் பயன்பாட்டிலிருக்கும் ஐந்தாண்டு திட்டம். அரசாங்கம் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட எல்லா கொள்கைகளை உருவாக்கும் அதன்படி பல்வேறு புதிய முடிவுகள் எடுக்க நேரிடும். இந்த முறையில் அரசாங்கம் எடுக்கும் முடிவு தான் இறுதி. இந்த முடிவுகள் சில நேரத்தில் மக்களின் நிறை குறைகளைப் பார்ப்பது கிடையாது, தேவைக்கு போதுமான உற்பத்தி இருக்காது ஏனெனில் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டி இருப்பதால்  இவற்றில் பெரும் தடைகள் இருக்கும் .     

3. சந்தைப் பொருளாதாரம் 

பொருளின் விலையினை சந்தையே நிர்ணயிக்கிறது. இந்த முறை பொருளாதாரம் பொருளின் உற்பத்தி மற்றும் அதற்கான தேவையினை பொறுத்துத் தான் விலை நிர்ணயமாகும் அதாவது உற்பத்தி கூடுதலாக இருந்து அதன் தேவை இல்லாமல் இருந்தால் விலை குறைவாகத்தான் இருக்கும் அதே வேளையில் உற்பத்தி குறைவாகவும் தேவை அதிகமாகவும் இருந்தால் விலை அதிகமாக இருக்கும். இந்த முறையில் விலை ஏறும்போது அதிக உற்பத்தியாளர்கள் உள்ளே வருவார்கள் உற்பத்தி அதிகரிக்கும் பொருளாதாரமும் மேம்படும் இறுதியில் இங்கே அரசாங்கமும், வலிமை மிகுந்த முதலாளிகளும் மட்டுமே பங்குபெறுவார்கள்.  சில பொருள்கள் விலை குறைவாகவும், தரமாகவும் வரும் அதே சமயத்தில் முதலாளிகளின் லாப நோக்கம் கூடவே பயணிக்கும். போகப் போக விலையேற்றம் ஏற்படும்.  

4. கலப்புப் பொருளாதாரம்  

இந்த பொருளாதார முறை மேற்சொன்ன மூன்று முறையிலும் இருக்கும் சில நல்ல காரணிகளை மட்டும் எடுத்து எல்லாம் கலந்த ஒரு பொருளாதார முறையினை பின்பற்றுவது. பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் இந்த முறைகளே பின்பற்றப்படுகின்றன.  இங்கேயும் முதலிகள் காக்கப்படுவது உறுதியாக்கப்படும். 

மேலும் இந்த புத்தகம், நம் நாட்டின் முக்கிய தொழிலான விவசாய உற்பத்தியின் லாபங்களை எவ்வாறு வணிக நிறுவனங்கள் சுரண்டு செல்கிறது என்பதையும், விவசாயிகள் தங்கள் பொருளின் முழு பயனையும் பெற்றுக்கொள்வது வேறொருவரே.

தமிழ் மண்ணின் பணிகள் பெரும்பாலும் தமிழர்களுக்கே கொடுக்கப்படவேண்டும் என்றும் அதனால் எவ்வாறு நமது மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்பதைப் பற்றியும் அதில் குறிப்பாகத் தனியார் வேலைவாய்ப்பு, அரசாங்க வேலைவாய்ப்பு மற்றும் ஒன்றிய அரசின் வேலை வாய்ப்பு எனப் பிரித்து அந்தந்த வேலைவாய்ப்பில் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச வாய்பினையாவது வழங்கினால் தான் நமது தன்னிறைவு பொருளாதாரம் மிகச் சிறப்பாக இயங்கும்.

மேலும் பொருளாதாரத்தில் எவ்வாறு மற்ற மொழிகள் ஆதிக்கத்தினால் சில  இடையூறு வருகிறது என்கிறார். என் மொழி என் உரிமை என்று முழங்கினால் நமது மொழியின் சார்ந்த பொருளாதாரம் செல்வனே செயல்படும் என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். அதாவது நம் மீது திணிக்கப்படும் ஒரு மொழியின் ஊடாக நமது வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது சில இடங்களில் சொல்லும் கருத்துக்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

எல்லோரும் வாசித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய மிகவும்  அடிப்படையான பொருளாதாரம் பற்றிய மிக எளிமையான புத்தகம்.

ஆசிரியருக்கு நன்றி.

அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

18 செப்டெம்பர் 2021       

Friday 17 September 2021

பாரதியின் கட்டுரைகள் - தத்துவங்கள் - வாசிப்பனுபவம்

பாரதியின் கட்டுரைகள் - தத்துவங்கள் 

ஆசிரியர் : பாரதியார் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 41


பாரதியாரின்  சில கட்டுரைகளின் தொகுப்பே இந்த புத்தகம், கடவுள் என்ற பெயரில் நடக்கும் சில அநீதிகளையும், பெண்களுக்கு இழைக்கப்படும் சில கட்டுப்பாடுகளையும் பற்றிய சிந்தனையின் வெளிப்பாடாக வந்த சில கட்டுரைகள்.

இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் பத்திரிகைகளில் அவ்வப்போது வெளியிடப்பட்டது. தெய்வ நம்பிக்கை முதல் யாரைத்தொழுவது வேண்டும் என்றும், நம் மக்களிடையே பழகிப்போன பல்வேறு மூட நம்பிக்கையைப் பற்றிய சிந்தனைகளும், அறிவியல் பூர்வமான கருத்துக்களும், மேலைநாட்டுப் படிப்பான ஆங்கிலம் படித்தும் ஏன் பெரும்பாலோனோர்கள் பழைய பழக்கத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர் என்றும் பாரதியின் மொழியும், கேள்விகளும் அபாரமானது

கும்பிடுவோர்கள் நித்திய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லது என்று பூசாரி யோசனை பண்ணுகிறான் மேலும் பிறரை அடிமை நிலையில் வைக்கவேண்டும் என்று நினைக்கிறன என்கிறார். மேலும் கோவிலுக்குப் போனாலும் போகாவிட்டாலும் சரி தெய்வத்தைக் கும்பிட்டாலும் அல்லது கும்பிடவிட்டாலும் பரவாயில்லை ஆனால் பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால் தெய்வம் அருள் தானாகவே கிடைக்கும் என்கிறார்.

நல்ல தியானம் உணவைக் காட்டிலும் இன்றியமையாதது, ஒரு தனியிடத்தில் இருந்து செய்யப்படும் தியானம் உயர்ந்த சிந்தனைகளையும், அமைதியையும், மனோபலமும், துணிவும் மற்றும் உறுதியும் கொடுக்கக் கூடியது என்கிறார். தெய்வபக்தியுடையவர்கள் தங்களது இஷ்ட தெய்வத்தினை மனதில் வைத்துக்கொண்டு இந்த தியானத்தினை மேற்கொள்ளலாம் என்கிறார்.

நம் மக்களிடையே இருக்கும் ஏராளமான மூட நம்பிக்கையினை பற்றிக் கூறும்போது, மக்கள் ஒவ்வொரு காரியத்திற்கும் நேரம் காலம் பார்ப்பது அதனால் ஏற்படும் இழப்பு, அதாவது நேரத்திற்கு இருக்கும் விலையினையும் அதற்கான மதிப்பையும் பார்ப்பது இல்லை என்கிறார்.

இன்னும் சில கட்டுரைகள், சிதம்பரம் நடராஜரைப் பற்றியும், நவராத்திரி கொண்டாடும் முறைகளைப்பற்றியும் விவரமாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த புத்தகம், பாரதியாரின் தத்துவங்கள் எனக் குறிப்பிடலாம், இறை நம்பிக்கையும், அந்த நம்பிக்கையினால் ஏற்பட்ட நன்மைகளும், பிறருக்கு ஏற்பட்ட இன்னல்கள் மற்றும் அடிமைத்தனம், மூட நம்பிக்கை என பல்வேறு விதமான கோணத்தில் குறிப்பிடுகிறார்.      


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

17 செப்டெம்பர் 2021