Wednesday 15 September 2021

முத்துப்பட்டன் கதை - வாசிப்பனுபவம்

முத்துப்பட்டன் கதை 

ஆசிரியர்: நா. வானமாமலை 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 56


முகத்துப்பட்டன் கதை நாட்டார் கதைகளில் ஒரு கதையாக வாசித்தது. இந்த புத்தகம் முழுவதும் இந்த ஒரு கதையினை பற்றியே பேசுகிறது. ஆசிரியர் நா.வானமாமலை அவர்களின் ஆராய்ச்சி நூலான இந்த நூல் இந்த கதையின் எல்லா கோணத்தையும் பரிசீலித்துத் தொகுத்துள்ளார்.

சாதி என்ற ஒன்று அன்று தொட்டு இன்று வரை நம்மில் புரையோடிக்கிடக்கும் ஒரு நோய்தான். இதற்காகப் பலியானவர்கள் ஏராளம் இன்னும் பலியாகப்போகிறவர்கள் ஏராளம் என்றே சொல்லத்தோன்றுகிறது. நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் தெரிந்துகொள்ளமுடிகிறது.

அப்படிப்பட்ட சாதியின் வன்மையால் வந்ததுதான் இந்த "முகத்துப்பட்டன் கதை".  ஒரு பிராமண குடும்பத்தில் ஏழு சகோதரர்கள் பிறக்கின்றனர். இவர்களில் இளையவன் தான் முகத்துப்பட்டன். தனது வாலிப வயதில் மூத்தோர்களிடம் இருந்து பிரிந்து வெளியில் வருகின்றான் அவ்வாறு வரும் அவன், ராமராஜன் என்ற சிற்றரசனிடம் பணிக்குச் சேர்கிறான். 

பிறகு வெகுநாட்கள் கழித்து அவனது சகோதரர்கள் தேடிவருகிறார்கள் அப்போது அவன் ராஜாவிடம் பணியில் இருப்பது தெரிந்து கொண்டு அவனிடம் வேண்டுகின்றனர். எங்கள் கூடவே வந்துவிடு உனக்குப் பெண்பார்த்து வைத்திருக்கிறோம் கல்யாணம் செய்துவைக்க என்று கூறி அழைக்கின்றனர்.

ராஜாவிடம் அனுமதி பெற்று அவனை அழைத்துச் செல்கின்றனர் கூடவே பொன்னும் பொருளும் வெகுமதியாக அரசனிடம் இருந்து கிடைத்ததையும் எடுத்துச் செல்கின்றனர்.

வழியில் இளைப்பாறுவதற்காக ஒரு இடத்தில் அமர்கின்றனர், பிறகு அங்கிருந்து புறப்பட்டனர் அந்த சமயம் பட்டனுக்குத் தாகம் எடுத்து தண்ணீர் குடிக்க இறங்கினான், அப்போது அவன் காதுகளில் ஒரு இனிமையான கீதம் கேட்டது அதில் லயித்துப்போனவன் அவர்களை நோக்கி என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கேட்கிறான். 

ஆனால் அக்காவும் தங்கையும் நமது திருமணம் நடக்காது ஏனெனில் நீங்கள் வேறுசாதி நாங்களோ சக்கிலியன் சாதி என்றனர். அதே வேகத்தில் அவர்கள் குடிசையில்லை நோக்கி ஓடிவிட்டனர். பின்தொடர்ந்த பட்டதன் களைப்பில் கேழே விழுந்துவிட்டான்.

தகவலறிந்த பெண்களில் தகப்பன் வாளுடன் வருகிறான் அவனை நான் வெட்டி செய்கிறேன் என்று ஆனால் அவன் வந்ததும் மயங்கிக் கிடைக்கும் பட்டனை எழுப்பிவிடுகிறான், இவன் தான் தேடிவந்தவன் என்று தெரியாமல் அவன் வந்த காரணத்தைச் சொல்கிறான். அதற்குப் பட்டன் நான் தான் அந்த பிராமணன் ஆனால் நீங்கள் என்னைக் கொள்ளவேண்டாம் உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்துவையுங்கள் தூவும் ஊரறிய என்று சொல்கிறான்.

நடக்காது என்று சொல்லும் வாலப்பகடை, இது நடக்கவேண்டும் என்றால் நீ சாதி துறந்து பூனுலினை அறுத்து எங்களைப் போல உடையணிந்து இருக்கவேண்டும் என்று சொல்கிறான் அதற்குச் சம்மதம் சொல்லி அண்ணன்களிடம் சொல்வதற்குச் செல்கிறான் ஆனால் அவர்கள் சம்மதிக்காமல் அவனை கல்லறையில் வைத்துப் பூட்டிவிடுகின்றனர் ஆனால் அங்கிருந்து தப்பிவிடுகிறான். பிறகு கல்யாணமும் நடக்கிறது.

அன்றொரு நாள் இரவு அவர்களின் கிடைகளை வன்னியர்கள் வந்து அபகரித்துச் செல்கின்றனர் என்றதும் உடனே விரைந்து சென்று கிடைகளை மீட்டெடுக்கிறான் பிறகு உடலினை கழுவச் சுனையில் வந்து குனிந்து நீரெடுக்கிறான் அப்போது பின்னனிருந்து சப்பாணி அவனைக் குத்திக் கொள்கிறான். அவன் கூடவே சென்ற நாய்கள் விரைந்து வீடு வந்து தகவலைத் தெரிவிக்கின்றது. கணவன் கொலையுண்டதைக் கேட்ட மனைவிகள் அரசனிடம் முறையிட்டு உடன்கட்டை ஏறுகின்றனர். 

அப்படியாக நடந்த இந்த கொடூரத்தின் வழியே இவர்கள் மூவரும் அவர்களின் இரண்டு நாய்களும் தெய்வமாக "சொரிமுத்து அய்யனார்" என்று இன்றளவும் வழிபடுகின்றனர்.  

ஆசிரியர் நா.வானமாமலை அவர்கள் இந்த கதையினை பற்றிய தனது ஆய்வில் கதையின் காலம் எந்த காலத்தினை சார்ந்தது என்றும் அதற்காக அவர் கொடுக்கும் காரணங்கள் என அற்புதமாக ஆராய்ச்சி செய்துள்ளார். அதாவது கி. பி. 400 ஆண்டுகளுக்கு பிறகும் 300 ஆண்டுகளுக்கும் முன்னரும் என்று சொல்கிறார். 

கதையின் உண்மைத்தன்மையினை ஆராய்ந்து இது உண்மையில் நடந்ததா அல்லது கற்பனையா என பல்வேறு சான்றுகளுடன் சொல்லியிருக்கிறார். பொதிகை மலையில் இருக்கும் பட்டவராயின் கோவில் அங்கே வீற்றிருக்கும் முகத்துப்பட்டன் மற்றும் அவனது மனைவிகள் கூடவே அவர்களின் நாய்கள் என அந்த சிற்பம் தத்ரூபமாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

இதில் வரும் கதாபாத்திரங்கள் எனவும் அவர்களின் நிலைகளை எவ்வாறு கதையில் சொல்லியிருக்கிறார்கள் எனவும் எவரையும் இழிவுபடுத்திக் குறிப்பிடாமல் கதை நகர்ந்திருப்பதாவதும் குறிப்பிடுகிறார். முத்துப்பட்டன் படித்தவனும், சாதியினால் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளைக் கண்டு சரிசெய்ய நினைத்தவன் என்றும் சொல்கிறது என்கிறார்.

அச்சுப்பிரதிக்கும் இன்றையளவில் பாடப்படும் வில்லுப்பாட்டுக்கும் சில வேறுபாடுகள் இருப்பதாகவும் அவர்கள் காலத்திற்கேற்றாப்போல மாற்றியிருக்கலாம் என்கிறார்.

மொத்தத்தில் இந்த புத்தகம், ஆசிரியரின் ஒரு விசாலமான பார்வையினை "முகத்துப்பட்டன் கதையின்" மேல் வைத்து ஆராய்ச்சி செய்ததின் விளைவாக நமக்கு ஏராளமான தகவல்கள் கிடைக்கச் செய்துள்ளது. 


ஆசிரியருக்கு நன்றி.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

15 செப்டெம்பர் 2021 

 

   

No comments:

Post a Comment