Wednesday 21 October 2020

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை - ராஜம் கிருஷ்ணன்

 பெண்ணியம் சார்ந்ந நூல்கள்

நூல்.              : இந்திய சமுதாய வரலாற்றில்  பெண்மை

ஆசிரியர்   :  ராஜம் கிருஷ்ணன்




ராஜம் கிருஷ்ணன் மூத்த தமிழக எழுத்தாளர். சென்ற தலைமுறை எழுத்தாளரான ராஜம் கிருஷ்ணன், தன் கதை, கட்டுரைகளால் அன்றைய வாசகர் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர். பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்த போராளி.

   திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். ஒரு நாவலுக்கான பொருளை முன்பே திட்டமிட்டு, சம்பந்தப்பட்ட இடங்களில் பிரயாணம் செய்து, மக்களின் வாழ்வைக் கண்டறிய அங்கேயே தங்கி உய்த்துணர்ந்த பின்னரே நாவலை எழுதுவார். இதுவே இவரது தனிச் சிறப்பாகும்.

இத்தனை படைப்புகளை கொடுத்த அம்மையார் இப்போது நம்மோடு இல்லை என்ற வருத்ததுடன் அவர்களின் உணர்ச்சி பூர்வமாண எழுத்துக்கள் இன்றளவும் உயிரோடு உளாவுகின்றன.

இனி இந்த “இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை” என்ற நூலினைபற்றி பார்பபோம்.

இந்த நூல் பதினோறு அத்தியாயங்களில் 'இந்திய சமுதாயத்தில் பெண்மை' வளர்ந்துள்ள/அல்லது வீழ்ந்துள்ள விதத்தை ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளார்-முற்றிலும் புதிய கோணத்தில் எழுதப்பட்டுள்ள நூல்

ஆதியில் பெண் ‘தாய்’ என்று அறியப்பெற்றாள். ‘ஜனி’ உயிரைப் பிறப்பிப்பவள் என்ற மாண்புடையவளானாள். இவள் பிறப்பித்த உயிர்கள் ‘ஜனம்’ என்று அறியப்படலாயினர். ‘ஜனம்’ என்ற குழுவின் தலைவியாக தாய் விளங்கினாள். இவள் பேராற்றல் மிகுந்தவள். இவள் தலைமையில் மக்கள் வேட்டைக்குச் சென்றனர். குழுவில் இவளே மக்களைப் பெறும் ஆற்றலைப் பெற்றிருந்த காரணத்தினால், ஆண் தலைமைத் தகுதிக்கு உரியவனாக வரவில்லை. குழுக்கள் பெண்களால் தாய்த்தலைவிகளாலேயே அறியப்பட்டனர். தாய்-மக்கள் இந்த உறவுகளைத் தவிர வேறு உறவுகள் இந்தக் குழுக் காலத்தில் தோன்றியிருக்கவில்லை எனலாம். இந்தக் குழுக்களே, தாயாண்மைச் சமுதாயமாக வளர்ச்சி கண்டன.

காந்தாரி ஏன் கண்களைக் கட்டிக் கொண்டாள்? தனக்கு வாய்த்த குருடனான கணவனைக் காணவேண்டாம் என்றா? அல்லது, கணவனால் பார்க்கமுடியாதவற்றைத் தானும் பார்க்கவேண்டாம் என்ற பதிவிரதநெறி காக்கவா? என்ற ஆசிரியரின் கேள்வியில் பெண்களின் நிலை என்ன. 

பெண்ணின் தாய்மை, ஓர் ஆணுக்கு அவள் உரியவளாகாத நிலையில், சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதன்று என்ற நீதி அறிவுறுத்தப்படுகிறது. பெண்ணின் கருப்பை இயக்கம்-தாய்மைக்கூறு, அவருடைய உரிமையில் இருந்து பிரிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படும் முதல் அடி இது. தான் தன் உடலின் ஒரு பகுதியாக வயிற்றில் வைத்து உருவாக்கிய சேயை, மார்போடு அனைத்துப் பாலூட்டிச் சீராட்டும் உரிமை, பச்சை இரணமாகப் பிரித்து எறியப்படும் இந்தக் கொடுமை, இன்றளவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குந்தியே முதல் அடி பெற்ற ஆதித்தாய்.

தந்தையாதிக்கம் நிலைப்படுவதற்கு ஆண்-பெண் உழைப்பு பிரிவினை அடித்தளம் அமைத்தது. ஆடவர் வெளியே சென்று வேட்டையாடினர்; விலங்குகளை உயிருடன் பிடித்துப் பழக்கினர். கொட்டிலில் கொண்டு வந்து கட்டினர். காடுகளை அழித்து நிலம் சீராக்கி, விளை நிலமாக்கியும், நீர் பாய்ச்சியும் தானிய உற்பத்தியிலும் ஈடுபட்டனர். பெண் ஓரிடத்தில் நிலையாகத் தங்கி நெருப்பைக் காத்தாள். கன்று காலிகளைப் பேணினாள். நீர் கொண்டு வந்து உணவு தயாரிக்கும் பொறுப்பை ஏற்றாள். கன்னிப் பெண்டிர் பால்கறந்து தயிர் மோர் தயாரித்தனர். குழுவினருக்கான தோல், கம்பளி ஆடைகளைத் தயாரித்தனர். இந்தத் துவக்கம், பின்னர் பருத்தி பட்டு நெசவு வேலையே பெண்களுக்குரியதாக ஆயிற்று எனலாம். அடுப்பும், பாண்டங்களும் இவள் கைகளினால் உருவாயின. இல்லத்தில் இருந்தபடி செய்யும் பணிகளனைத்தும் இவள் செய்தாள். தந்தையாண் சமுதாயம், பெண்ணைத் தாய் மக்களிடம் இருந்து பிரித்து, தங்களிடையே ஊன்றச் செய்வதையே திருமண சடங்காக உறுதிப்படுத்தியது. பலவந்தமாகப்பற்றிக் கொண்டுவராமல், அன்போடு அணி கலன்களும், பரிசில்களும் வழங்கி, மகளுக்குப் பிரியா விடை கொடுத்துத் தாய்வீட்டு மக்கள் அனுப்ப, மணமகன் தன் இல்லம் கூட்டி வந்தான்.

தந்தையாதிக்கம், துவக்க காலங்களில் பெண்ணைச் சுதந்தரம் உடையவளாகவே வைத்திருக்கிறது. என்றாலும், பெண் மனையறம் பேணி மக்களைப் பெற்றுச் சமுதாய உற்பத்திக்கு இன்றியாமையாதவளாக இருந்ததால், விருந்தினருக்கும் வேண்டப்பட்டவருக்கும் இவள் சந்ததிக்காக வழங்கப்பட்டாள். தாய்மை நோக்கம், மனித வாழ்க்கையில் சாதனங்களும் பயன்படு பொருட்களும் கூடிய பிறகு, இழிந்து போய், போகம் என்று கூறு தலை தூக்கியது. இந்த நிலையை மகாபாரத இதிகாசத்தில் வரும் பல வரலாறுகள் விளக்குகின்றன.

இந்திய சமுதாயக் கலாசார வரலாறு, எத்தனையோ முரண்பாடுகளைச் சீரணம் செய்திருக்கிறது. ஆனால் பரசுராமன் செய்த தாய்க்கொலை இந்திய மண்ணில், இன்றளவும் சீரணம் செய்யப்பட்டிருக்கவில்லை. புராணங்கள் வாயிலாகவும், நாடோடிக்கதைகள், இலக்கியங்கள் வாயிலாகவும், தொன்னாடெங்கும் குடி கொண்டுள்ள கிராம தேவதைகளின் வாயிலாகவும் நிலை நிறுத்தப்பட்ட பரசுராமர்-ஜமதக்கினி-ரேணுகா வரலாறு, இந்தியப் பெண் தொடர்பான சமூக வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக நிலை பெறுகிறது.  கர்நூல் மாவட்டத்து ஊர்களின் மாதங்கி வழிபாட்டில் பிரதிபலிக்கிறது. ‘மாதம்ம’ வழிபாடு என்றும் இது வழங்கப் பெறுகிறது. தாழ்ந்த குலப் பெண்களின் பிரதிநிதியான ஒரு பெண், ‘மாதங்கி’யாக வரிக்கப் பெறுகிறாள். இவள் ‘சாமி’ வந்து ஆடுகிறாள். ஏனைய நாட்களில், இந்தத் தாழ்ந்த குலத்தினர் உயர் குலத்தோர் அருகில் வந்து நின்றாலே சுட்டெரிக்கப் படும் கொடுமைக்குள்ளாவார்கள். ஆனால், இந்த வழிபாட்டு நாட்களில், பிராம்மணர் முதலிய உயர்குலத்தார், அன்று ‘மாதம்ம’ ஆவி வந்த பெண்ணின் வாயிலிருந்து துப்பப்படும் எச்சிலுக்காக வரிசை நிற்கிறார்கள்; அவர்கள் பாடும் பழி வசைப்பாடல்களை ஆசிகளாக ஏற்கிறார்கள். உயர்குல ஆண்கள் தம் முப்புரி நூலைக் கழற்றிக் கொடுக்கிறார்கள்; பெண்கள் தம் சேலை-ரவிக்கைகளை அவிழ்த்துக் கொடுக்கிறார்கள்.

திராவிட மக்களின் வெற்றித் தெய்வமாகக் ‘கொற்றவை’ என்னும் தாய்த் தெய்வம் கொண்டாடப் பெற்றிருக்கிறாள். 

தமிழ்நாட்டுக் கூத்துக்களிலும், நாடகங்களிலும் துரெளபதையைத் துகிலுரியும் வரலாறு மேடையேற்றப்படுவது வழக்கமாக இருந்தது. அமரகவி பாரதி இதையே அவள் ஆங்காரியாகக் கூந்தலை அவிழ்த்துவிட்டு, பாவித்துச்சாதனன் செந்நீரும் பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தமும் கலந்து குழலில் பூசிக்குளிப்பேன் என்று சூளுரைக்கும் காட்சியை முதன்மைப்படுத்தி, பாஞ்சாலி சபதம் என்ற ஒப்பற்ற காவியமாக்கினார். இந்தத் துரௌபதை, பஞ்சகன்னியரில் ஒருத்தியாகவும், இந்ததியக் கிராம தேவதையாகவும் வழிபடப் பெறுகிறாள். பாண்டவர் துணையில்லாத, தாய்த் தேவதையாக இவள் பாமரமக்கள் வழிபடும் தெய்வமாக விளங்குகிறாள். இவள் வழிபாட்டில், மக்கள் யாரோ செய்த கொடுமைக்குத் தாங்கள் பிராயச்சித்தம் செய்து கொள்வதுபோல் உடலை வருத்திக்கொள்ளும் நேர்ச்சைகளை மேற்கொள்கிறார்கள். இந்த வழிபாட்டில் முக்கியமானது தீமிதித்தல். அநியாய ஆணாதிக்கத் தருமங்களை எதிர்த்துக் குரலெழுப்பிய சக்தி-எழுச்சித் தெய்வமாக இன்னமும் பாமர மக்களின் துரௌபதையம்மன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

இராமாயண இதிகாசம், இந்த நாகரிக மேம்பாட்டை அடிப்படையாக்கி, சீதையை நாயகியாக்கிப் புதிய மானிட தருமங்களை நிலைநிறுத்துகின்றது. இந்தத் தருமம், நிலவுடைமைச் சமுதாயத்தின் ஆணாதிக்க நீதியாகி பெண்ணின் அடிப்படை மனித உரிமைகளைக் கட்டுப்படுத்துகின்றது. அக்காலத்தில், ஷத்திரியரும், பிராம்மணரும் மாமிசம் புசிக்காதவர்களல்ல; மதுவருந்தாதவர்களல்ல. ஏன்? வரலாற்றுத் துவக்கக் காலத்தில், அகத்திய முனிவர். ‘வாதாபி’ என்ற அரக்கனைப் புசித்துச் சீரணம் செய்த வரலாறும் நரமாமிசம் விலக்கல்ல என்பதையே காட்டுகிறது. சமணசமயம் தலைதூக்கிய காலத்தில்தான் துறவும், புலாலுண்ணாமையும் இந்திய சமுதாயத்தில் இசைந்தன எனலாம்.

சீதை, இராவணனின் எல்லைக்குள் அசோக வனத்தில் சிறை இருக்கும் நாட்களில், இராமன் வருவான், தன்னை மீட்டுச் செல்வான் என்று உயிரை வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள். இத்தகைய நாயகியை இராமன் சந்தேகப்பட்டானே? அப்போதைய சீதையின் மனோ நிலையாது? அது சோக சிகரமில்லையா? அக்கினியில் புகுந்து தன் தூய்மையை நிரூபித்த பின்னரும், குடிமக்கள் சந்தேகப்படுகிறார்கள் என்று, பூரண கருப்பிணியான மனைவியைக் கானகத்துக்கு அனுப்பித் தன் அரச குல நியாயத்தை நிலை நாட்டிக் கொள்கிறானே, அது சோகத்தின் நெடு முடியல்லவோ? இராம கதை உண்மையில் வரலாற்று நிகழ்ச்சியா, கற்பனையா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும், நடைபெற்ற சில கூறுகள் இதற்கு ஆதாரங்களாக உதவியிருக்கலாம். இந்த மூல இராமாயணக் கதையைப் பின்பற்றி, பல மொழிகளில், பல பிரதேசங்களில் காலந்தோறும் இராம கதைகள் புனையப் பெற்றிருக்கின்றன.

இப்படிச் சபிக்கப்பட்ட ஒரு குலம் இந்திய மரபில், ஆணாதிக்க சமுதாயத்தில் நியாயப்படுத்தப்பட்டு மீள முடியாத தளைகளுக்குட்படுத்தப்பட்டது. ஆணாதிக்கத்துடன் போர் தொடுத்த தாய்ச் சமுதாயத்தினர், தாசிகளாக்கப்பட்டனர். பண்டைய தமிழ்ச் சமுதாயம் கண்டிருந்த விறலியர், பாணர் மரபினர் இப்படி ஒரு நாகரிகத்துக்குள் நெறிப்படுத்தப்பட்டனர்.

இப்படி விலைமகளிருக்கான வாழ்வின் தோற்றுவாய், அன்றைய புராணங்களில் இருந்து இன்றைய பாலியல் வன்முறை அநீதிகள் வரையிலும் ஒரேவிதமாக நியாயப் படுத்தப்பட்டிருக்கிறது. இவள் நித்ய சுமங்கலி. இவள் இருப்பிடமே மங்களமானது. இறைவனுக்கு ஆடிப்பாடி, மங்கள ஆரத்தி எடுத்து ஊழியம் செய்வது போல், இவளை ஆதரிக்கும் பெருங்குடி மக்களுக்கும் இவள் இதே ஊழியங்களைச் செய்ய வேண்டும். ஏனெனில், ‘கல்லாகிய தெய்வம் இவளுக்குப் பொன்னும் பொருளும் தருமா? அப்படி இவளை ஆதரிப்பவர்கள் இவளுக்குத் தெய்வம் போன்றவர். அவர்கள் இல்லங்களில் இவள் எல்லா மங்கள நிகழ்ச்சிகளுக்கும் ‘நித்ய சுமங்கலி’யாக இருந்து வாழ்த்து வசனங்களைச் சொல்வாள். தன் உடல் பொதுச் சொத்து என்பதை விளம்பரப்படுத்தும் வகையில் அவர்கள் அந்த ஆண்கள் தங்கள் பொருள் ஆடம்பர அதிகாரங்களை அவள் மீது செலுத்தத் தலை வணங்கி உடன் படுவாள். இதுவே தாசியின் தருமமாக இருந்தது. அமரகவி பாரதியின் காலத்தில் வாழ்ந்த எட்டயபுரம் அரண்மனைத் தேவதாசி, வள்ளிக் கண்ணம்மாளின் மகள் கூறினாள்- முப்பத்தைந்து வயசுக்குப் பிறகு, பாரதி சொன்னார்களென்று, என் அம்மா ஈசுவரனுக்கு வரித்துக் கட்டிக் கொண்ட பொட்டுத் தாலியை அவிழ்ந்து விட்டுக் கல்யாணம் செய்து கொண்டார்... 'ஆனால் கடைசியில் சந்ததி வறுமையினால் கஷ்டப்படுவதைப் பார்த்துச் சங்கடப்பட்டார். நூறு வருசம் இதைப் பார்க்கவா வாழுகிறேன்-ஈசுவரனுக்குக் கட்டிக் கொண்ட தாலியை எடுத்துவிட்டு மனிதனுக்கு மனைவியானது பாவமோ’ என்று சங்கடப்பட்டார். இறைவனுக்கு நாயகி நான். கடவுளைத் தொட்டுப் பூசை செய்யும் நீயும் என்னைப்போல் ஒருவன். நீயே கடவுளாக முடியுமா?’ என்று எந்த ஒரு தேவதாசிப் பெண்ணும் இரவில் அதே மலர்மாலையுடன் மஞ்சத்துக்கு வரும் பூசாரிப் பிராம்மணனையும் ஒதுக்கியதாக வரலாறே இல்லை. அவன்தான் முதல் உரிமைக்காரன். உயர்வருணம் குருசுவாமி ‘ஓ, இவன் உறவு கடவுள் உறவே போன்றது; கடவுளின் பிரதிநிதி’ என்று தேவதாசியானவள் உருவேற்றப் பட்டிருக்கிறாள். இந்தத் தேசியத் தலைவர்கள் எதிர்த்தார்கள். திலகர் தம் மகளுக்குச் சட்டத்துக்கு உட்பட்ட இளம் வயதில் திருமணம் செய்தார். ‘தேவதாசி ஒழிப்பு’ வரக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அந்நாள் சட்டசபையில் பல தேசியவாதிகள் - குறிப்பாகச் சத்தியமூர்த்தி, சீனிவாச சாஸ்திரி - ஆகியோர் கூச்சல் போட்டதாக, மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் தம் ‘தாசிகள் மோச வலை’ என்ற நாவலில் எழுதியுள்ளார். இது உண்மையே. இந்த ஆசிரியை, தன் நாவலின் வாயிலாக, ஆங்காங்கு பொட்டறுப்புச் சங்கங்களை ஏற்படுத்திப் பிரசாரம் செய்ததாகத் தகவல் தெரிகிறது. எதிர்ப்பு இல்லாமலிருக்குமா? எட்டயபுரத்து வள்ளிக்கண்ணம்மாள், 1930களில் முத்துலட்சுமி அம்மையும், மூவலூர் அம்மையும் செயல்படு முன்பே, பாரதியார் அறிவுரையின்படி பொட்டறுத்துத் திருமணம் செய்து கொண்டாராம். ஆனால் மரபுப் பிடிகள் பதித்த குற்ற உணர்வுகள் கடைசி வரையிலும் அப்பெருமாட்டியை விடவில்லை.

தாயநாயகச் சமுதாயமாக தமிழ்ச் சங்ககால சமுதாயத்தைக் குறிப்பிடவில்லை என்பதே உண்மை. பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு ஒடுக்குதற்குரிய நெறிகளாக, ஒரு பக்கக் கற்பு நெறியும், கைம்மை நெறியுமே, தீவிரமாக்கப்பட்ட நிலையைக் காணமுடிகிறது.

சங்க இலக்கியங்களில் பல பெண்பாற்புலவர்கள் காணப்படுகிறார்கள். அள்ளூர் நன்முல்லையார்; இளவையினார், ஒக்கூர் மாசாத்தியார், ஔவையார், காக்கை பாடினியார், நச்செள்ளையார், காவற்பெண்டு, பாரிமகளிர், பூங்கண் உத்திரையார், பூதப்பாண்டியன் தேவி, பெருங்கோப்பெண்டு, பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார், பேய்மகள் இளவெயினியார், மாறோக் கத்து நப்பசலையார், வெண்ணிக் குயத்தியார், வெறிபாடிய காமக்கண்ணியார்... என்று பட்டியல் நீண்டு செல்கிறது. இப்பட்டியலில் காணப்படும் பெண்கள் அனைவரும் உயர் குடியைச் சேர்ந்தவரல்லர்- வேட்டுவர் குலம், குயவர் குலம் ஆகிய குடிகளில் பிறந்த பெண்களும் புலமை பெற்றிருக்கின்றனர் என்ற செய்தி நம்மைக் கவர்வதாக இருக்கிறது. ஆவியர் குடித் தலைவன் பேகன் என்பவன் தன் மனைவி கண்ணகியைத் துறந்து, ஒரு பரத்தையுடன் வாழ்ந்ததும் (புறம் 143-147) சிலப்பதிகாரம் உருவாகச் செய்திகளாக உதவியிருக்கின்றன என்று அவர் குறிப்பிடுகிறார். கட்டியவளுக்கு அநீதி செய்வது கணவனின் உரிமை; ஆனால் கணவனுக்கு அநீதி என்று வரும்போது, அவள் இயற்கையின் சீற்றத்தையே எழுப்பி விடுமளவுக்குப் பொங்கெழுச்சி கொள்கிறாள். இந்தக் கற்பு வழிபாட்டுக்குரியது. கற்பு நெறி என்பது, நூற்றாண்டுகள் மனித சமுதாயத்தின் உயிரோட்டமான இழைகளை ஊடுருவி மகளிரின் மனித உரிமைகளைப் பிணிப்பது தெரியாமல் பிணிக்கச் செய்த வரலாறுகள் இவை.

பெண், மாண்ட கணவனுடன் சிதையில் எரிக்கப்பட்டாள்; முண்டிதம் செய்யப்பட்டுக் கட்டாயத் துறவில் ஒடுக்கப் பட்டாள். இல்லையேல் அவள் பொது மகளாகச் சீரழிக்கப் பட்டாள். இந்த இரண்டாம் நிலையில் அவளுக்கு அறிவுக் கண் சிறிது திறக்கப்பட்டதால் ஓர் ஆசுவாசம் கிடைத்தது. தன் துயரங்களை வெளியிட்டுக் கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகள் ஏற்பட்டன. ஆனால் முதல் நிலைக் குடும்பக் கூடும்-இரண்டாம் நிலை பொது மகள் அறிவு பெறும் வாய்ப்பும் ஒரு நாளும் இசைந்து விடாதபடி சமூகம் விழிப்புடன் இருந்தது.

பெண்கல்வி நாட்டு விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் இன்றியமையாதது என்று அறிவுறுத்தியவர் சுவாமி விவேகானந்தர். இவரைக் குருவாக ஏற்று, இந்தியாவுக்கு வந்து தொண்டாற்ற விழைந்த மார்கரெட் நோபிள் என்ற ஆங்கிலப் பெண்மணிக்கு, சகோதரி நிவேதிதா என்று பெயரைச் சூட்டி, இந்தியப் பெண்களின் கல்வித் தொண்டுக்கு உரித்தாக்கினார். ‘இந்நாட்டில் எல்லா உயிர்களிடத்தும் மேலாம் ஆன்மிகம் இயங்குகிறது என்ற கருத்து நிலவிய போதும்’ ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எத்துணை வேற்றுமை? ஆண்கள் பெண்களை வெறும் இயந்திரங்களாக, உழைக்கும் உயிர்களாக மாற்றியிருக்கின்றனர்.

எத்தனை சுதந்திரம் இன்று கிடைத்திருந்தாலும் அது எல்லோருக்கமானதாக கருத முடியாத சூழலில் தான் நாம் இன்றளவும் இருக்கிறோம் என்பது மனதில் ஒரு சிறிய வருடலாகவே தான் உள்ளது. 

பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்பதையும் இன்றைய நாளில் அனுபவங்களில்—பெண் அதிகாரியின் கீழ் பணி புரியும் பெண்கள் தங்கள் அதிகாரி தங்களுக்கு வீட்டுக்கு சீக்கிரம் போக அனுமதி தராதபோது வசைபாடும் விதத்தையும் நகைச் சுவையோடு எடுத்துக் கூறியுள்ளது யதார்த்தமாக உள்ளது.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் படிக்க வேண்டிய நூல்.

நன்றி

ரா. தேவேந்திரன்

No comments:

Post a Comment