Tuesday 26 July 2022

ரசவாதி (Alchemist) - வாசிப்பனுபவம்

 ரசவாதி (Alchemist)

பாலோ கொயலோ 

தமிழில் - நாகலட்சுமி சண்முகம் 

உலகப் புகழ் பெற்ற நூலாசிரியர் "பாலோ கொயலோவின்" முதல் புத்தகம் ரசவாதி. இந்த புத்தகம் எழுதிய ஆரம்பக் காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாகாமலிருந்தது ஆனால் ஆசிரியர் பாலோ கொயலோ இதனை ஒரு தோல்வியாக எடுத்துக்கொள்ளாமல் அதனை உலகின் புகழ்பெற்ற மற்றும் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்த நூலாக மாற்றிய பெருமைக்குரியவர். இதனுடன் தன்னுடைய பயணத்தினை விட்டுவிடாமல் பல்வேறு புத்தகத்தினை நமக்காகக் கொடுத்திருக்கிறார்.

உலகப் புகழ் பெற்ற இந்த புத்தகத்தினை வாசிக்கத் தொடங்கிய தொடக்கத்தில் ஒரு ஆடுமேய்க்கும் சிறுவனும்  அவனது  ஆடுகளும் என ஆரம்பிக்கிறது இந்த சிறுவன் எவ்வாறு பயணிக்கப்போகிறான் என்ற ஆவல் தூண்டுகிறது. அந்த ஆவலும் அதனால் ஏற்பட்ட எதிர்பார்ப்பும் வாசிக்கும் நம்மைக்  கதையின் உச்சம் வரை நிறுத்தாமல் வாசிக்க வைக்கிறது. இதற்கு முதல் காரணமாக இருக்கிறது தமிழில்  மொழிபெயர்த்துள்ள "நாகலட்சுமி சண்முகம்" அவர்களின் அசாத்தியமான மற்றும் மிக இலகுவான எழுத்தின் போக்கும் மேலும் அதற்கு ஈடாகச் செல்லும் அருமையான மொழிநடையும் நம்மை சில மணிநேரம் கட்டி போட்டுவிடுகிறது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. 

இந்த கதையின் நாயகன் "இளைஞன் சாண்டியாகோதான் பிறவியிலேயே  இடையனாகப் பிறக்காத இவன் தான் தேர்ந்தெடுக்கும் தொழில் ஆடு மேய்க்கும் தொழில். இவற்றைத் தொழிலாக  எடுத்துக்கொண்ட  சாண்டியாகோ, தனது ஆடுகளை மேய்த்துக்கொண்டு போகும் வழியில் சிதிலமடைந்த போன ஒரு  தேவாலயத்தின் உள்ளே இரவில் உறங்குகிறான்.  தனது உறக்கத்தின் போது காண்கின்றான். அவனுக்கு அந்த கனவு மீண்டும் மீண்டும் வருகிறது, அவன் எப்போதும் அந்த கனவினை குறித்தும், கூடவே தன்னுடனே இருக்கும் தனது செம்மறியாடுகளைப் பற்றியும்  யோசித்துக் கொண்டு தனது பயணத்தினை தொடர்கிறான்.

அந்த கனவில் வரும் "ஓர் அதிர்ஷ்டத்தினை" நம்பிக்கொண்டு  அதுவும் அந்த அதிர்ஷ்டம்  அவனுக்காகவேக் காத்துக்கொண்டிருப்பதாக எண்ணி அங்கிருந்து துவங்குகிறான் அவன் தனது பயணத்தினை.

அவன், தனது பயணத்தின் வழியில் தான் சந்திக்கும் ஒவ்வொருவரும்  எதோ ஒரு விதத்தில் அவனுக்கான அதிர்ஷ்டம் இருக்கும் இடத்தினை ஒரு குறிப்பாகச் சொல்கின்றனர்.  அவனும் ஆர்வமாகத் தான் கண்ட கனவின் திசையினை நோக்கிச் செல்கின்றான்.  வழியில் அவன் சந்திக்கும் பல்வேறு சோதனைகள் அவற்றையெல்லாம் அவன் எவ்வாறு எதிர்கொண்டு தனது இலக்கினை நோக்கி முன்னேறுகிறான் என்பதை மிகவும் சுவாரசியமாகவும் கூடவே உணர்ச்சிப்பூர்வமான கதாபாத்திரங்களுடனும் இடையே கொஞ்சம் காதலும் அதனுடன் கூடிய வீரமும் என அவனின் பயணம் நம்மையும் அவன்கூடவே அழைத்துச் செல்கிறது.

ஒவ்வொருவருக்கும் ஒரு வயதில் ஏற்படும் காதல், அதுவும் இங்கே சாண்டியாகோவின் கண்ணெதிர்க்கொள்ளும் அழகியின் மீது அவனுக்கு ஏற்படும் காதல் மிகவும் அருமையாகவும் அதேசமயத்தில் அவர்களின்மறைமுகமான  சந்திப்புகளும் அவனை அந்த புள்ளியிலிருந்து தனது இலக்கினை நோக்கி நகரவிடாமல் தடுக்கிறது. இது இயல்பாக எல்லா இளைஞர்களிடமும் இருக்கும் ஒரு ஈர்ப்புதானே அதிலென்ன ஆச்சரியம் என்று கூட தோன்றுகிறது ஆனால் அவன் இதுவரை கடந்து வந்தது இவளைக் கானவா அல்லது அவனின் லட்சியத்தினை கானவா என்ற கேள்விக்கு மிக எதார்த்தமாகப் பதில் கிடைக்கிறது. ஆமாம் அவனோ தான் முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் "லட்சியமா அல்லது காதலா" என்ற நிலையில் தனது முடிவின் முதலாவதாகத்  தனது  லட்சியம் தான் என்று அவன் செல்லும் விதமாகச் செல்கிறது கதை.

நாயகன் சாண்டியாகோ, இயற்கையாகவே சகுனங்களைத் தெரிந்து கொள்ளும் ஒரு தனித்திறமையினை கொண்டவனாகவும் மேலும் அதன் துணையுடன் அவன் பயணிக்கும் போது, தான் பயணிக்க வேண்டிய திசையினையும் அங்கே எதிர்ப்படும் இன்னல்களையும் இயல்புகளையும் முன்கூட்டியே  அவன் தெரிந்து கொள்வதால், அவன் எவ்வாறு தனது பயணத்தில் முன்னேற வேண்டும் என்ற முடிவினை எடுத்து அதற்கான வழியில் முன்னேற முடிகிறது ஆனால் அதே சமயத்தில் தனது பலமாக இருக்கும், அவன் தெரிந்து கொண்டுள்ள  சகுனத்தால் அவனுக்கு பல்வேறு இடையூறுகளும் ஏற்படுகிறது. இயற்கையினை எவ்வாறு ஒரு சாதாரண மனிதனால் யூகிக்க முடியும் அது இயலாத காரியம் என்ற தோரணையில் அவன் ஒரு சில இன்னல்களைச் சந்திக்கிறான். 

அவனது பயணத்தில் சந்தித்த மனிதர்களால் தெரியப்படுத்திய தரவுகளை வைத்துக்கொண்டு முன்னேறுகிறான். அவ்வாறு முன்னேறும் வழியில் தனக்குத் தேவையான பொருள்களைச் சம்பாதித்து அவற்றைத் தனது பயணத்திற்குப் பயன்படுத்திக்கொள்கிறான். ஆனால் பல்வேறு நேரங்களில் புது இடமும் மனிதர்களும் அந்நியமாகவே படுவார்கள் அல்லவே அதைப்போலவே தான் அவனும் ஒரு சிலரை நம்பி  தனது கையில் இருக்கும் பொருளை இழந்துவிடுகிறான். ஆனால் பொருள் போய்விட்டதே என்று கவலைகொண்டு தான் சோர்வடைந்து திரும்பாமல், தனக்கே உறிய மனோபலத்துடன்  மீண்டும்  மீண்டும் தனியாகவே எழுந்து அவன் தனது இலக்கினை நோக்கிப் பயணிக்கிறான். இந்த அருமையான குணம் வாசிக்கும் நமக்கும் தோல்வி என்பது நிரந்தரமல்ல என்றும் எப்போதும் நமது இலக்கினை நோக்கிப் பயணிக்க வேறொரு வழி கட்டாயம் இருக்கும் என்பதைச் சொல்கிறது.

தனக்கென ஒரு சிறப்பான வழியினை கொண்டு பயணிக்கும்  சாண்டியாகோ, தனது பயணத்தின் முடிவாக அவன் தனது அதிர்ஷ்டம் இருக்கும் இடமாகத் தெரிந்துகொண்ட எகிப்தின் பிரமிடுகளைச் சென்றடைகிறான். இடையூறுகளைச் சந்தித்தால் தான் ஒருவன் எப்போதும் சாதனைகளை நிகழ்த்தக் கூடும் என்பதுபோல இங்கேயும் அவனுக்கு ஒரு சிலரால், பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது.  மேலும் அவர்களின் தலைவன் சாண்டியாகோவை நோக்கி நீ ஒரு முட்டாள் என்றும் தனது கனவில் தோன்றிய ஒரு புதையலைத் தேடி எவனாவது இவ்வளவு பெரிய பாலைவனத்தினை கடந்து வருவானா என்று சொல்லிவிட்டு அவனிடம் இருந்த பொருள்களை எடுத்துக்கொண்டு அவனை நிர்கதியாக விட்டுவிடுகிறான். 

ஆனாலும் இத்தனையும் நடந்தேறிய பிறகும் அவன் சோர்வடையாமல் தன்னை தாக்கிவிட்டு பொருள்களை அபகரித்துச் சென்றவன் சொல்லிச்சென்ற ஒரு வார்த்தை தான் இவனுக்குக் கடைசியாகக் கிடைத்த குறிப்பு. மீண்டும் அவன் தனது இலக்கினை நோக்கிச் செல்கிறான். 

அவனுக்கான அதிர்ஷ்டம் இருக்கும் இடம் அவன் முதல் முதலில் தனது பயணத்தினை ஆரம்பித்த அதே சிதிலமடைந்த அந்த பழைய தேவாலயம் என்பது தான் சிறப்பானது. 

அங்கே வரும் அவன் தனது புதையலைக் கண்டெடுக்கிறான். 

இது நமக்கெல்லாம் சொல்லிக்கொடுக்கும் ஒரு அருமையான பாடம். அதாவது நமக்கு அருகிலே இருப்பதை விட்டுவிட்டு எங்கோ தூரத்தில் இருக்கும் ஒன்றுக்காக ஏங்கவும் அதனைத் தேடிச் செல்லவும் நாம் நினைப்போம் தவிர அருகில் இருக்கும் ஒரு பொருளை நாம் பார்க்கமாட்டோம். என்ற எதார்த்தமான ஒரு கருத்தினை மிகவும் அருமையாகச் சொல்லியிருக்கிறார்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

26 ஜூலை 2022.      

           

No comments:

Post a Comment