Saturday, 24 September 2022

விண்வெளி (வியப்பு - விநோதம் - விசித்திரம்)

 விண்வெளி 

(வியப்பு - விநோதம் - விசித்திரம்)

ஆசிரியர் : என். ராமதுரை 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 105

பக்கங்கள் 216 


விண்வெளி - என்ற தலைப்புடன் இருக்கும் இந்த புத்தகம் அநேகமான விண்வெளி விவரங்களை அள்ளி கொடுத்துள்ளது. இந்த நூலின் ஆசிரியர் பத்திரிகைகளில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக பணிபுரிந்தவர். ஆதலால் இவர் அறிவியல் சார்ந்த பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். இதன் காரணமாகத் தான் தெரிந்துகொண்ட விவரங்களை  அருமையாகத் தொகுத்து ஒரு நூலாக நமக்குக் கொடுத்திருக்கிறார். 

இந்த நூல் விண்வெளி பற்றிய அபூர்வமான தகவல்கள், ராக்கெட்  மற்றும்  செயற்கைக்கோள்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை மிக எளிமையான மொழி நடையில் கொண்டுள்ளது.

செயற்கைக்கோள்களின் தேவை என்ன என்பதிலிருந்து அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது முதல் அவைகள் எந்த வழிகளில் நமக்குப் பயன் கொடுக்கிறது என்றும் மேலும் நமது அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும் பல்வேறு விதமான வசதிகளுக்கு  பின்னால் இருந்து இயங்குவது இந்த செயற்கைக்கோள்கள் தான் என்ற அருமையான தகவலும் வாசிக்கும் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

உலக நாடுகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு செயற்கைக் கோள்களைத் தயாரித்து விண்ணுக்கு அனுப்புகிறது. அவற்றில் எந்த நாடுகள் தன்னிறைவு அடைந்துள்ளது என்றும் மேலும் எந்த நாடுகள் பிற நாடுகளைச் சார்ந்துள்ளது என்றும்  அவ்வாறு செலுத்தும் செயற்கைக் கோள்களில் எந்த விதமான பயன்பாடுகளுக்காகத் தயாரிக்கப்படுகிறது போன்ற விவரங்கள் மிக நேர்த்தியான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த நூல் மேலும் ராக்கெட் பற்றிய பல்வேறு தகவல்களைச் சொல்கிறது. மேலும் ராக்கெட் எப்படித் தயாரிக்கின்றனர், அவைகள் எவ்வாறு செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்கிறது என்பதிலிருந்து ஒவ்வொரு படியாக மிக அருமையாக விளக்குகிறார்.

முதலில் ராக்கெட் கண்டுபிடித்தவர்கள் மற்றும் மென் மேலும் ரொக்கெட்டினை செம்மைப் படுத்தியவர்கள் என பல்வேறு மேதைகளைப் பற்றிய குறிப்புகளும் இந்த நூலில் சொல்லப்படுகிறது.

செயற்கைக்கோள்களை விண்ணுக்குச் செலுத்த ஏன் ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது என்பதினையும் அதற்க்கான ஆதாரமான பல்வேறு கூற்றுகளையும் சொல்கிறார். ராக்கெட் தொலைதூரம் வரை மிகத் துல்லியமாகவும் விரைவாகவும் செல்லும் வல்லமை கொண்டுள்ளதால் செயற்கைக் கோள்களை மற்ற கோள்களுக்குச் செலுத்துவதற்கு உகந்தது ராக்கெட் என்பதால் தான் ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்.

ராக்கெட்டின் துணையுடன் விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் எவ்வாறு பறக்கிறது என்பது பற்றியும் மேலும் விண்ணுக்குச் சென்ற பிறகு ராக்கெட் எவ்வாறு செயற்கைக்கோள்களைத் தனியாக விடுவிப்பது என்பதும், அவ்வாறு விடுவித்த செயற்கைக்கோள்கள் எவ்வாறு தனியாகப் பயணிக்கும் என்றும் மேலும் அவைகள் தனக்குக் கொடுத்தும் வேலையினை எவ்வாறு செய்கிறது என்பது வரை மிகத் தெளிவாகவும் எளியமுறையில் கொடுத்துள்ளார்.

நாம் பயன்படுத்தும் தொலைப்பேசி முதல் தொலைக்காட்சி, வானிலை சார்ந்த முன்னறிவிப்புகள் என பல்வேறு வகையில் செயற்கைக் கோள்கள் நமக்குத் தகவல்களை மிகத் துல்லியமாகத் தருகிறது. இவை இன்றைய வாழ்வியலில் மிக அத்தியாவசியமாகிப்போன பல்வேறு தேவைகளை நமக்குக் கொடுக்கிறது என்பதில் வியப்பேதுமில்லை.

பொதுவாக இந்த நூல் விண்வெளியில் ஏற்படும் வியப்பான காரியங்கள், விசித்திரமான பல்வேறு விஷயங்கள் மற்றும் வினோதமான நிகழ்வுகள் என வாசிக்கும் நமக்குத் தொய்வில்லாமல் இருக்கம் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு ஒவ்வொரு நாடும் தனது அண்டை நாடுகளையும் எதிரி நாடுகளையும் கண்காணிக்கிறது அதற்கு எவ்வாறு இந்த ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்கள் உறுதுணையாக உள்ளது என்பது பற்றிய     விரிவான விவரங்களைச் சொல்கிறது.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

23 செப்டெம்பர் 2022

Friday, 23 September 2022

மான்ஹாட்டன் ரகசிய திட்டம்

மான்ஹாட்டன் ரகசிய திட்டம்  

ஆசிரியர் : ஜெயராஜ் முத்துவேல் 

கிண்டில் பதிப்பு

விலை ரூபாய் 49 

பக்கங்கள் 58


அறிவியல் வளர்ச்சி நமக்கு பெரும்பாலான வகையில் நன்மைகளைச் செய்திருந்தாலும் அதன் மற்றொரு பக்கம் ஈடு செய்ய முடியாத பல்வேறு தீமைகளைத் தரக்கூடிய வகையில் தான் இருக்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மைதான். 

அந்த வகையில் இந்த சிறிய நூலின் வழியே ஆசிரியர் மிகவும் தெளிவாகவும் எளிய முறையிலும் நாம் தெரிந்து கொள்ளக் கூடிய வழியில் "மான்ஹாட்டன் திட்டத்தின்" ரகசியத்தினை விவரிக்கிறார்.

முதலில் எல்லோரும் அறிவியல் பற்றித் தெரிந்து கொள்வது கொஞ்சம் கடினமானது தான் என்பதைத் தெரிந்துகொண்ட ஆசிரியர் (ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் என்பது கூடுதல் தகவல்) எப்படி தனது  மாணவர்களுக்கு ஒரு கருத்தினை சொல்லிக்கொடுக்க முடியுமோ அதுபோலவே இந்த புத்தகத்தின் வழியே,  வாசிக்கும் நமக்கெல்லாம் அறிவியலின் பல்வேறு வார்த்தைகளை மிகச் சாதாரணமான உதாரணங்களுடன் சொல்கிறார்.

அணு என்றால் என்ன என்பதில் இருந்து, அணுக்கரு, துகள்கள், கதிரியக்கம், கதிர்வீச்சு, அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு ஆற்றல் என ஒவ்வொன்றாய் தெளிவாக விவரிப்பதுடன்       அணு - வினை கண்டு பிடித்தவர் யார், ஏன் கண்டுபிடித்தனர், அதனால் என்ன விதமான பயன்கள் என பல்வேறு வகையானமிகவும் சுவாரஸ்யமான விவரங்களை நமக்குத் தெரியப்படுத்துகிறார்.

உலகின்முதலில் அணுகுண்டு கண்டுபிடித்தது முதல் அதனைக் கண்டுபிடிக்கக் காரணமானவர்கள் யாரென்றும், ஏன் அவர்கள் அதனை ரகசியமாக கண்டுபிடித்தனர் என்பதும் மற்றும் அந்த ரகசியமாகக் கண்டுபிடித்த  முதல் அணுகுண்டுவினை எங்கே சோதனை செய்தார்கள், சோதனை செய்த  இடத்தின் தகவல்கள் என பல்வேறு விவரங்களைத் தெரியப்படுத்துகிறார். 

வெளி உலகிற்கே தெரியாமல் முதல் முதலில் கண்டுபிடித்த அணுகுண்டு அதனை வெற்றிகரமாகச் சோதனை செய்தது மட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நாட்டின் மீது இந்த அணுகுண்டுகளை வீசியது வரை என அணைத்து விவரங்களும் இந்த சிறிய புத்தகத்தின் வழியே ஆசிரியர் தெரியப்படுகிறார்.   

மொத்தத்தில் இந்த சிறிய புத்தகம் மிக அருமையான தகவல்களை கொண்டிக்கிறது. இது போன்ற தகவல்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கிய ஆசிரியருக்கு நன்றி.


அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

22 செப்டம்பர் 2022 

Sunday, 21 August 2022

ஒற்றை வைக்கோல் புரட்சி - வாசிப்பனுபவம்

ஒற்றை வைக்கோல் புரட்சி - வாசிப்பனுபவம்  

ஆசிரியர் : மசானபு ஃபுகோகோ 

தமிழில் பூவுலகின் நண்பர்கள்


இந்த புத்தகம் ஒரு இயற்கை விவசாயியான நூலாசிரியர் ஃபுகோகாவின் வாழ்வியல் தத்துவம் குறித்தும் மேலும் தனது நீண்ட கால சொந்த  அனுபவங்களிலிருந்து வெளிவந்து அற்புதமான கருத்துக்களையும் அதில் இருக்கும் உண்மையினையும் உள்ளடக்கி இருக்கிறது.  இந்த நூலின் ஆசிரியர் 95 வயது வரை வாழ்ந்து தன்னால் முடிந்தவரை இயற்கை விவசாயத்தின் பெருமைகளையும் மேலும் மக்களிடம் அவற்றை ஊக்குவித்துக்கொண்டே தான் இருந்தார். ஜப்பான் நாட்டைச் சார்ந்த இவர் தனது தத்துவ ஆராய்ச்சியின் விளைவுகள் , காரணிகள் , செயல் முறைகள் என ஒவ்வொன்றையும் உரையாடுதலே இப்புத்தகம் . இந்த புத்தகத்தினை 
தமிழில் பூவுலகின் நண்பர்கள்  மிக தெளிவாகவும் நேர்த்தியாகவும் மொழிபெயர்த்துள்ளனர்.

"ஒற்றை வைக்கோல் புரட்சி" நீண்ட நாட்களாக வாசிக்கவேண்டும் என்று வைத்திருந்த புத்தகம். இந்த வருடம் வாசிப்பு போட்டிக்கு வாசித்த ஆக வேண்டும் என்று வாசிக்க ஆரம்பித்தேன், இதென்ன  ஒரு வைக்கோலை வைத்துக்கொண்டு ஒரு புரட்சி என்று எதோ வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆரம்பத்தில் தோன்றியது  ஆனால் வாசிக்க வாசிக்க  இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் நாம் தொலைத்து விட்ட இயற்கையினையும், இயற்கை சார்ந்த உணவுகள் மற்றும் வழக்கை முறையினை நாம் திரும்பிப் பார்க்கும் விதமாக இருக்கிறது.  ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம் என்று தான் சொல்லவேண்டும்.

தலைப்பு தான் ஒரே வைக்கோல் ஆனால் புத்தகத்தின் உள்ளே வைக்கோல் போர் எப்படி இருக்கிறதோ அதைப்போலவே தான் பல்வேறு விதமான கருத்துக்களையும் மற்றும் இயற்கை பற்றிய எண்ணற்ற உண்மைகளையும் ஒவ்வொரு வைக்கோலுக்குள்ளும் வைத்துச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

ஆரம்பத்தில் அரசாங்க பணியிலிருந்த ஆசிரியர், தனது அரசாங்க பணியினை விட்டுவிட்டு, இயற்கை விவசாயத்தின் மீதுள்ள ஒரு ஈர்ப்பினால் தனது சொந்தமான நிலத்தினுள் இயற்கை விவசாயம் மேற்கொள்கிறார். அவ்வாறாக அவர் ஆரம்பித்த இயற்கை விவசாயம் இன்று அவரின் பெயரினை உலகுக்குக் கொண்டுசென்றுள்ளது. 

இவர் இயற்கை விவசாயம் பற்றி நான்கு முக்கியமான விவரங்களைப் பகிர்ந்துகொள்கிறார். 

1. நிலத்தினை உழவே  தேவையில்லை 

2. வேதியியல் செயற்கை உரங்கள் தேவையில்லை 

3. தழையுரம் போடத் தேவையில்லை 

4. பூச்சிக்கொல்லி தெளிக்கத் தேவையில்லை 

என்ற இந்த நான்கும் இயற்கை விவசாயத்திற்கு எதிரானது என்கிறார். கொஞ்சம் நாமும் யோசித்துப் பார்த்தால் இதில் மறைந்திருக்கும் உண்மையும் பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் வணிகமும் புரிந்த கொள்ள முடியும் மேலும் இன்று நம் கையில் இருக்கும் நிலங்கள் எல்லாமே செயற்கையான மண்ணாகத் தான் இருக்கிறது.

பொதுவாக எங்கள் கிராமத்தில் இருக்கும் ஆற்றங்கரையில் தப்பி விழுந்த ஒரு நெல் முளைத்து மிகவும் செழிப்பாகக் கதிர் விட்டு அதிகமான நெல்மணிகளைக் கொண்டிருக்கும். மிகவும் வீரியமானதாகவே இருக்கும். ஆனால் அது வளர்ந்த இடத்தில் இருக்கும்  மண் உழவில்லை, அதில் ரசாயனம் உரமில்லை, பூச்சிக்கொல்லி இல்லை ஏன் யாரும் அதை வளர்க்கக்கூட இல்லை ஆனால் அது தானாகவே இயற்கையின் கொடையினால் குதுகுலமாக வளர்ந்து நிற்கிறது. இதுதான் ஆசிரியர் சொல்லவரும் இயற்கை நிலம் பற்றிய பேருண்மை.  

அதனடிப்படையில் தான் ஆசிரியர் சொல்கிறார் நிலத்தினை உழுவதால் நிலத்திற்கும் அடியில் இருக்கும் வெகுநாட்களாக இருக்கும் களையின் விதை மேலே வருகிறது பிறகு அது  முளைத்து நாம் பயிரிடும் பயிருக்கும் இடையூறாக வந்துவிடுகிறது. அதனால் வளர்க்கும் விவசாயம் பாதிக்கிறது. 

உலகப் போர்க் காலத்தில் போர்களுக்காகத் தயாரித்த ரசாயனத்தினை போருக்குப் பின் எப்படி சந்தை படுத்துவது என்ற தேடிக்கொண்டிருந்த வளர்ந்த நாடுகள் அந்த ரசாயனத்தினை வளரும் நாடுகளில் விவசாயத்திற்கு உரமாகப் பயன்படுத்தலாம் என்ற ஒரு குறுக்கு வழியினை கண்டுபிடித்து அதன் அடிப்படையில் உலகத்தினையே இன்று ரசாயன கலந்த மண்ணாக மாற்றிய ஒரு கொடூரமான இயற்கையின் மீதானதொரு வன்முறையினை நிகழ்த்தியிருக்கிறது இன்றும் நிகழ்த்திக்கொண்டேதான் இருக்கிறது. இன்றைய விவசாயம் ரசாயனம் இல்லாமல் விவசாயம் இல்லை என்ற ஒரு பரிதாபகரமான நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இயற்கை நமக்குக் கொடுத்த நிலத்தினை நம் சுயநலத்திற்காக நாம் அனைவருமே அந்நிலத்தினை  மாசுபடுத்தவிடுகிறோம். உணவு உற்பத்தி தேவைதான் ஆனால் அதற்காக விஷத்தினை உணவாக நாம் பயிரிடுகிறோம்.  

நானும் ஒரு விவசாயிதான், ஒவ்வொரு நாளும் விதைத்த நெல் மீண்டும் பன்மடங்காகத் திரும்பி வருவதற்குள் எத்தனை எத்தனை இடையூறுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. எங்கள் பாட்டி காலத்திலிருந்த அதே நிலம் தான் இன்றைக்கும் இருக்கிறது. ஆனால் அதே மண் இப்போது இல்லை. ரசாயனம் கலந்துபோய் இப்போது சக்தியில்லாத ஒரு மண்ணாகத் தான் இருக்கிறது.

நாம் ஒவ்வொரு முறையும் இடும் ரசாயனம் உரம் முழுவதும் செரிப்பதற்குள் கடலுக்குள் போய்ச் சேர்ந்துவிடுகிறது. கடலில் சேர்ந்த இந்த ரசாயனம், கடலில் இருக்கும் கடற்பாசி மற்றும் பிளாங்டன் போன்ற நுண்ணுயிர்களுக்கு  உணவாக மாறுகிறது. இப்படியாக ஜப்பானின் நீர் மாசுபடுவதைச் சுட்டிக் காட்டுகிறார். இது ஜப்பான் மட்டுமில்லை உலகெங்கிலும் நீராதாரங்கள் இப்படித்தான் மாசுபட்டுக் கிடக்கிறது.  

ஜப்பான் நாட்டில் எவ்வாறு இயற்கை விவசாயம் செயற்கை விவசாயமாகக் காலப்போக்கில் மாறிப்போனது என்பதைப் பற்றியும், மீண்டும் எப்படி மக்களிடம் இயற்கை விவசாயத்திற்குப் பற்றிய நன்மைகளைச் சொல்லி  மாற்ற முற்பட்டார் என்பதையும் மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.

இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப் படும் காய்கறிகள் மற்றும் பழங்களை   மக்கள் வாங்கும்போது  அது கண்ணிற்கு அழகாகவும் மேலும் பெரியதாகவும்  இருக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள் ஆனால் இயற்கை விவசாயத்தில் விளைவிப்பது பளபளப்பாக இருக்காது. அதனால் பெரும்பாலும் மக்கள் விரும்புவதில்லை என்பதைப் பற்றி அவர்    ஆதங்கப்படுகிறார்.

மேலும் இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்கள் என்று சொல்லி அதிக விலைக்கு மக்களிடம் விற்பது குறித்து வேதனைப்படுவதுமட்டுமின்றி அவர் வாடிக்கையாகக் கொடுத்துவந்த ஒரு வியாபாரிக்குத் தனது விளைபொருள்களைக் கொடுப்பதை நிறுத்திவிட்டார்.

நாம் எப்போதுமே இருப்பதைத் தொலைத்து விட்டு இல்லாத ஒன்றுக்கு விலை கொடுத்து வாங்க முற்படும் முற்போக்கு கூட்டம் என்று சொல்லிக்கொண்டு திரிவதில் தான் பெரும்பாலும் நமது கௌரவமும் மேன்மையும் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக இந்த புத்தகத்தினை ஒரு முறை வாசித்துப்பார்த்தால் புரிந்துவிடும் நாம் எங்கே இன்று நிற்கிறோம் மேலும் எங்கோ போய் நிற்கப்போகிறோம் என்பதைப் பற்றித் தெளிவா உணர்ந்துகொள்ள முடியும்.  

பொதுவாக விவசாயம் என்பது ஒரு தொழில் அல்ல, அது மக்களோடு ஒன்றிய அவர்களின் வாழ்வியலில் ஒன்று என்ற இயற்கைத் தத்துவத்தை தனது சொந்த வாழ்க்கை முறையின் ஊடாக அவருக்கு நிகழ்ந்தேறிய பல்வேறு  நிகழ்வுகளையும், அன்றாடப் பணிகள் வழியே நமக்கு சொல்லிச்செல்கிறார் ஃபுகோகா. 

நமது நாட்டில் எவ்வாறு காந்தியம் பின்பற்றப்படுகிறதோ அதைப்போல தான் ஃபுகோகாவின் வாழ்வியல் தத்துவமும்.  ஃபுகோகாவைப் பின்பற்றும் பல்வேறு மாணவர்கள் அவருடனே அவரின் தோட்டப் பகுதியில் தங்கி அவர் வாழும் அதே இயற்கை வேளாண்மையில் ஈடுபடுவது மட்டுமின்றி அவர்களும் அவரை போலதொரு வாழ்வியல் முறையினை பின்பற்றுகின்றனர். 

மேலும்  பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இவரது பண்ணைகளைப் பார்வையிடவும், ஆய்வு செய்யவும்  வரும் ஆராய்ச்சி மாணவர்கள் , ஆசிரியர்கள் , கல்லூரிப் பேராசிரியர்கள் என பல அனுபவங்களை ஃபுகோகா நம்முடன் தனது இந்த புத்தகத்தின் வழியே பகிர்ந்துகொள்கிறார்.

மொத்தத்தில்  உழவு உழுவது தான்  விவசாயத்தின் முதல் மற்றும் அடிப்படை என எண்ணி அதற்க்காக டிராக்டர் வாங்கி வைத்திருக்கும்  நமக்கெல்லாம் உழவு என்பதே வீணற்ற வேலை அல்லாமல் ஏன் இயற்கை மண்ணை புண்ணாக்க வேண்டும் என்று கேள்வியினையும் நிலத்தினை புண்படுத்ததே என்றும் சொல்லிச்செல்கிறார் ஃபுகோகா.

இந்த நூலை வாசித்து முடிக்கும்  நாம் முடிவாக ஒன்றை தெரிந்து கொள்ளலாம். நமக்கு கண்முன்னே தோன்றுவது "மாடு கட்டி ஏறு பூட்டி உழவு செய்வதும் இப்போது டிராக்டர் வைத்து ஆழ உழவு செய்வதும்" எந்த விதத்தில் நன்மை பயக்கும் என்பதை உணர்ந்து கொள்ளமுடிகிறது.

ஒற்றை வைக்கோல் வைத்து  இந்த உலகுக்கு ஃபுகோகா விட்ட சவாலை நாம் எல்லோரும் நம் கையில் எடுத்துக்கொண்டால் அவரின் இலக்கான "இயற்கை வேளாண்மை" செய்தால் மீண்டும் ஒரு  "வைக்கோல் புரட்சியையினை" செய்யலாம்.

முடிவாக நாம்  தெரிந்து கொள்ளவேண்டியது, நாம் இன்று செய்யும் விவசாயம் வெறும் ரசாயனம் கலந்த உணவு உற்பத்தியே தவிர வேறென்ன என்று சொல்ல தோன்றுகிறது.  இதுதான் நிதர்சனமான உண்மையும் கூட.


அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

 20 ஆகஸ்ட் 2020

Saturday, 13 August 2022

குருதி ஆட்டம் - வாசிப்பனுபவம்

குருதி ஆட்டம் - வாசிப்பனுபவம்  

ஆசிரியர் : வேல ராமமூர்த்தி 

டிஸ்கவரி புக் பேலஸ் 

பக்கங்கள் 88

விலை ரூபாய் 100


அய்யா வேலராமமூர்த்தி அவர்களின் எழுத்து எப்போதும் குருதியினை மையாகக் கொண்டு எழுதியதாகத்தான் இருக்கும். அப்படித்தான் இந்த குருதி ஆட்டமும் அருமையாகவே அமைந்திருக்கிறது.

ஒரு கதையினை சொல்லும் போது, வாசிப்பவர்களுக்கு தாங்கள் வாசிக்கும் பொழுது எந்த ஒரு தொய்வும் வராமல் வாசிக்க வைக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியருக்கு இருக்கிறது. அந்த வகையில் அய்யாவின் எழுத்து நடை கொஞ்சம் கூட குறைவே இல்லாமல் இருக்கிறது விறுவிறுப்புடன் இருக்கிறது.

ஆப்பநாடும், பெருநாழியும் கொண்டுள்ள மண்ணின் வாசனையும்  கூடவே அரியநாச்சியும்  இல்லாமல் இருக்காது இவரின் கதைகள்.

ஒரு பக்கம் பதினேழு வருடமாக நின்றுபோன இருளப்பசாமி கோவிலின் திருவிழா ஏற்பாடுகள் நடக்கிறது.

மற்றொரு பக்கம், வெள்ளையர்களின் வெறியால் நாடுகடத்தப்பட்டு மலேயா காட்டுக்குள்  வந்து சேர்ந்த  அரியநாச்சி. தனது  வனவாசத்தில் ஒவ்வொரு நாழியினையும் தனது குடும்பத்திற்கு நேர்ந்த அநீதிக்குப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது சகோதரரின் மகனை வளர்த்துக்கொண்டு கூடவே அவனுக்குப் பழிவாங்கும் வன்மத்தினையும் ஊட்டி வளர்கிறாள்.

மற்றொரு பக்கம், தனது நண்பனைக் கொன்றவர்களைப் பழிவாங்கத் தக்க சமயத்திற்கு எதிர்பார்த்துக்கொண்டு காட்டுக்குள் தனது மகளுடன் வனவாசம் செய்யும் இருளப்பசாமி கோவிலின் பூசாரி தவசிப்பாண்டி.

வெள்ளையம்மா கிழவி தனது மகளைப் பறிகொடுத்துவிட்ட பிறகு மகளின் கொலைக்குக் காரணமாக இருந்த இந்த மண்ணிலே அவளின் குழந்தை இருக்கக்கூடாதென்ற வைராக்கியத்துடன் சென்னைக்கு வந்தவள் தான் ஊர்ப்பக்கம் திரும்பவேயில்லை.

அந்நிய காற்று உள்ளே புகாமல் அரண்போல இருக்கும் அரண்மனையின் உள்ளே இத்தனைக்கும் காரணமான  உடையப்பன் உல்லாசமாக வளம் வருகிறான்.

அத்தனை பேரையும் காவுவாங்கிய உடையப்பனின் தலையை  காவுவாங்க பதுங்கியிருக்கும் புலிகள் எல்லாம் ஒன்றுகூடி ஒரே இடத்திற்கு வந்துசேரும் ஒரு நிகழ்வாக அமைந்துவிடுகிறது இருளப்பசாமி கோவிலின் திருவிழா.

ஆப்ப நாட்டின் மண் வாசனையும் அதனிலே உறங்கிக்கொண்டும் இறுக்கிக்கொண்டு இருக்கும் குருதியின் வாசனையும் கொஞ்சம் குறையாமல் அய்யாவின் எழுத்து விரிந்து செல்கிறது.

மலேயாவில் இருந்து கப்பல் வழியாக ஆப்ப நாட்டுக்கு வரும் அரியநாச்சி வரும் வழியிலே தந்து சகோதரனைக் கொலைசெய்த வெள்ளைக்கார ஸ்காட்டை கொலை செய்து தனது பழியினை தீர்த்துக்கொள்ளும் விதம் அரியநாச்சியின் வீரத்தினை அருமையாகச் சொல்லிச்செல்கிறது.

திருவிழா என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்து விடலை பசங்களுக்கும் இளவட்ட குமாரிகளுக்கும் புதிதாக நடைபெறுகிற திருவிழா கொடுக்கும் கொண்டாட்டம், கூடவே குழந்தைகள் பெரும் குதுகுலம் என ஆப்ப நாட்டின் தெருக்களில் அரங்கேறும் திருவிழா தோரணைகள் அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இருளப்பசாமிக்கு நேர்ந்துகொண்ட நேர்த்திக்கடனை இதைவிட வேறெப்படி சொல்லுவது. "சாதாரண தலைவலி, காய்ச்சலுக்கு 'ஒத்த பொங்கல்'. கனத்த நோவுக்கு 'ரெட்டை பொங்கல்'. வெட்டுக்குத்து கேஸு விடுதலைக்கு ஒன்று கொலை வழக்கு ரெட்டை கிடாய் என நீண்டுகொண்டே செல்லும் நேர்த்திக்கடன்களைக் கொடுக்கவே இந்த திருவிழா நடைபெறுகிறது.

வீதியெங்கும் வண்ணக் கோலங்களால் அலங்கரித்த குமரிப்பெண்கள் ஒருபக்கம் நீண்டநாட்களுக்குப் பிறகு நடக்கும் திருவிழாவின் வைக்கோல் பிரி விளையாட்டு தயாராகிக்கொண்டிருக்கும் இளவட்ட பசங்கள் ஒருபக்கம் என ஆப்ப நாடே திருவிழா கோலமிட்டு குதுகுலமாய் இருக்கிறது ஒருபக்கம்.

இருளப்பசாமிக்கு பலியாக போவும் 21 கிடாய்கள் மாலையும் கழுத்துமாகத் தேவரின் அருவாளைப் பார்த்துக்கொண்டிருக்கிறது கூடவே உடையப்பனும் அவனின் கூட்டாளி பெருநாழியின் முதலாளியும் தங்கள் தலையும் ஆடுதலைகளுடன் உருளப்போவது தெரியாமல் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

அனைவரையும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கொண்டுவந்துவிடுகிறார் ஆசிரியர்.  அனைத்து நிகழ்வுகளையும் ஒருசேர ஒரே நேர்கோட்டில் கொண்டுவருவது மட்டுமல்லாமல் இறுதியில் நடக்கும் திருவிழாவில் இவர்களையெல்லாம் கொண்டுவந்துவிடுகிறார் அய்யா. 

          

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

13 ஆகஸ்ட் 2022

Tuesday, 26 July 2022

ரசவாதி (Alchemist) - வாசிப்பனுபவம்

 ரசவாதி (Alchemist)

பாலோ கொயலோ 

தமிழில் - நாகலட்சுமி சண்முகம் 

உலகப் புகழ் பெற்ற நூலாசிரியர் "பாலோ கொயலோவின்" முதல் புத்தகம் ரசவாதி. இந்த புத்தகம் எழுதிய ஆரம்பக் காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாகாமலிருந்தது ஆனால் ஆசிரியர் பாலோ கொயலோ இதனை ஒரு தோல்வியாக எடுத்துக்கொள்ளாமல் அதனை உலகின் புகழ்பெற்ற மற்றும் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்த நூலாக மாற்றிய பெருமைக்குரியவர். இதனுடன் தன்னுடைய பயணத்தினை விட்டுவிடாமல் பல்வேறு புத்தகத்தினை நமக்காகக் கொடுத்திருக்கிறார்.

உலகப் புகழ் பெற்ற இந்த புத்தகத்தினை வாசிக்கத் தொடங்கிய தொடக்கத்தில் ஒரு ஆடுமேய்க்கும் சிறுவனும்  அவனது  ஆடுகளும் என ஆரம்பிக்கிறது இந்த சிறுவன் எவ்வாறு பயணிக்கப்போகிறான் என்ற ஆவல் தூண்டுகிறது. அந்த ஆவலும் அதனால் ஏற்பட்ட எதிர்பார்ப்பும் வாசிக்கும் நம்மைக்  கதையின் உச்சம் வரை நிறுத்தாமல் வாசிக்க வைக்கிறது. இதற்கு முதல் காரணமாக இருக்கிறது தமிழில்  மொழிபெயர்த்துள்ள "நாகலட்சுமி சண்முகம்" அவர்களின் அசாத்தியமான மற்றும் மிக இலகுவான எழுத்தின் போக்கும் மேலும் அதற்கு ஈடாகச் செல்லும் அருமையான மொழிநடையும் நம்மை சில மணிநேரம் கட்டி போட்டுவிடுகிறது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. 

இந்த கதையின் நாயகன் "இளைஞன் சாண்டியாகோதான் பிறவியிலேயே  இடையனாகப் பிறக்காத இவன் தான் தேர்ந்தெடுக்கும் தொழில் ஆடு மேய்க்கும் தொழில். இவற்றைத் தொழிலாக  எடுத்துக்கொண்ட  சாண்டியாகோ, தனது ஆடுகளை மேய்த்துக்கொண்டு போகும் வழியில் சிதிலமடைந்த போன ஒரு  தேவாலயத்தின் உள்ளே இரவில் உறங்குகிறான்.  தனது உறக்கத்தின் போது காண்கின்றான். அவனுக்கு அந்த கனவு மீண்டும் மீண்டும் வருகிறது, அவன் எப்போதும் அந்த கனவினை குறித்தும், கூடவே தன்னுடனே இருக்கும் தனது செம்மறியாடுகளைப் பற்றியும்  யோசித்துக் கொண்டு தனது பயணத்தினை தொடர்கிறான்.

அந்த கனவில் வரும் "ஓர் அதிர்ஷ்டத்தினை" நம்பிக்கொண்டு  அதுவும் அந்த அதிர்ஷ்டம்  அவனுக்காகவேக் காத்துக்கொண்டிருப்பதாக எண்ணி அங்கிருந்து துவங்குகிறான் அவன் தனது பயணத்தினை.

அவன், தனது பயணத்தின் வழியில் தான் சந்திக்கும் ஒவ்வொருவரும்  எதோ ஒரு விதத்தில் அவனுக்கான அதிர்ஷ்டம் இருக்கும் இடத்தினை ஒரு குறிப்பாகச் சொல்கின்றனர்.  அவனும் ஆர்வமாகத் தான் கண்ட கனவின் திசையினை நோக்கிச் செல்கின்றான்.  வழியில் அவன் சந்திக்கும் பல்வேறு சோதனைகள் அவற்றையெல்லாம் அவன் எவ்வாறு எதிர்கொண்டு தனது இலக்கினை நோக்கி முன்னேறுகிறான் என்பதை மிகவும் சுவாரசியமாகவும் கூடவே உணர்ச்சிப்பூர்வமான கதாபாத்திரங்களுடனும் இடையே கொஞ்சம் காதலும் அதனுடன் கூடிய வீரமும் என அவனின் பயணம் நம்மையும் அவன்கூடவே அழைத்துச் செல்கிறது.

ஒவ்வொருவருக்கும் ஒரு வயதில் ஏற்படும் காதல், அதுவும் இங்கே சாண்டியாகோவின் கண்ணெதிர்க்கொள்ளும் அழகியின் மீது அவனுக்கு ஏற்படும் காதல் மிகவும் அருமையாகவும் அதேசமயத்தில் அவர்களின்மறைமுகமான  சந்திப்புகளும் அவனை அந்த புள்ளியிலிருந்து தனது இலக்கினை நோக்கி நகரவிடாமல் தடுக்கிறது. இது இயல்பாக எல்லா இளைஞர்களிடமும் இருக்கும் ஒரு ஈர்ப்புதானே அதிலென்ன ஆச்சரியம் என்று கூட தோன்றுகிறது ஆனால் அவன் இதுவரை கடந்து வந்தது இவளைக் கானவா அல்லது அவனின் லட்சியத்தினை கானவா என்ற கேள்விக்கு மிக எதார்த்தமாகப் பதில் கிடைக்கிறது. ஆமாம் அவனோ தான் முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் "லட்சியமா அல்லது காதலா" என்ற நிலையில் தனது முடிவின் முதலாவதாகத்  தனது  லட்சியம் தான் என்று அவன் செல்லும் விதமாகச் செல்கிறது கதை.

நாயகன் சாண்டியாகோ, இயற்கையாகவே சகுனங்களைத் தெரிந்து கொள்ளும் ஒரு தனித்திறமையினை கொண்டவனாகவும் மேலும் அதன் துணையுடன் அவன் பயணிக்கும் போது, தான் பயணிக்க வேண்டிய திசையினையும் அங்கே எதிர்ப்படும் இன்னல்களையும் இயல்புகளையும் முன்கூட்டியே  அவன் தெரிந்து கொள்வதால், அவன் எவ்வாறு தனது பயணத்தில் முன்னேற வேண்டும் என்ற முடிவினை எடுத்து அதற்கான வழியில் முன்னேற முடிகிறது ஆனால் அதே சமயத்தில் தனது பலமாக இருக்கும், அவன் தெரிந்து கொண்டுள்ள  சகுனத்தால் அவனுக்கு பல்வேறு இடையூறுகளும் ஏற்படுகிறது. இயற்கையினை எவ்வாறு ஒரு சாதாரண மனிதனால் யூகிக்க முடியும் அது இயலாத காரியம் என்ற தோரணையில் அவன் ஒரு சில இன்னல்களைச் சந்திக்கிறான். 

அவனது பயணத்தில் சந்தித்த மனிதர்களால் தெரியப்படுத்திய தரவுகளை வைத்துக்கொண்டு முன்னேறுகிறான். அவ்வாறு முன்னேறும் வழியில் தனக்குத் தேவையான பொருள்களைச் சம்பாதித்து அவற்றைத் தனது பயணத்திற்குப் பயன்படுத்திக்கொள்கிறான். ஆனால் பல்வேறு நேரங்களில் புது இடமும் மனிதர்களும் அந்நியமாகவே படுவார்கள் அல்லவே அதைப்போலவே தான் அவனும் ஒரு சிலரை நம்பி  தனது கையில் இருக்கும் பொருளை இழந்துவிடுகிறான். ஆனால் பொருள் போய்விட்டதே என்று கவலைகொண்டு தான் சோர்வடைந்து திரும்பாமல், தனக்கே உறிய மனோபலத்துடன்  மீண்டும்  மீண்டும் தனியாகவே எழுந்து அவன் தனது இலக்கினை நோக்கிப் பயணிக்கிறான். இந்த அருமையான குணம் வாசிக்கும் நமக்கும் தோல்வி என்பது நிரந்தரமல்ல என்றும் எப்போதும் நமது இலக்கினை நோக்கிப் பயணிக்க வேறொரு வழி கட்டாயம் இருக்கும் என்பதைச் சொல்கிறது.

தனக்கென ஒரு சிறப்பான வழியினை கொண்டு பயணிக்கும்  சாண்டியாகோ, தனது பயணத்தின் முடிவாக அவன் தனது அதிர்ஷ்டம் இருக்கும் இடமாகத் தெரிந்துகொண்ட எகிப்தின் பிரமிடுகளைச் சென்றடைகிறான். இடையூறுகளைச் சந்தித்தால் தான் ஒருவன் எப்போதும் சாதனைகளை நிகழ்த்தக் கூடும் என்பதுபோல இங்கேயும் அவனுக்கு ஒரு சிலரால், பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது.  மேலும் அவர்களின் தலைவன் சாண்டியாகோவை நோக்கி நீ ஒரு முட்டாள் என்றும் தனது கனவில் தோன்றிய ஒரு புதையலைத் தேடி எவனாவது இவ்வளவு பெரிய பாலைவனத்தினை கடந்து வருவானா என்று சொல்லிவிட்டு அவனிடம் இருந்த பொருள்களை எடுத்துக்கொண்டு அவனை நிர்கதியாக விட்டுவிடுகிறான். 

ஆனாலும் இத்தனையும் நடந்தேறிய பிறகும் அவன் சோர்வடையாமல் தன்னை தாக்கிவிட்டு பொருள்களை அபகரித்துச் சென்றவன் சொல்லிச்சென்ற ஒரு வார்த்தை தான் இவனுக்குக் கடைசியாகக் கிடைத்த குறிப்பு. மீண்டும் அவன் தனது இலக்கினை நோக்கிச் செல்கிறான். 

அவனுக்கான அதிர்ஷ்டம் இருக்கும் இடம் அவன் முதல் முதலில் தனது பயணத்தினை ஆரம்பித்த அதே சிதிலமடைந்த அந்த பழைய தேவாலயம் என்பது தான் சிறப்பானது. 

அங்கே வரும் அவன் தனது புதையலைக் கண்டெடுக்கிறான். 

இது நமக்கெல்லாம் சொல்லிக்கொடுக்கும் ஒரு அருமையான பாடம். அதாவது நமக்கு அருகிலே இருப்பதை விட்டுவிட்டு எங்கோ தூரத்தில் இருக்கும் ஒன்றுக்காக ஏங்கவும் அதனைத் தேடிச் செல்லவும் நாம் நினைப்போம் தவிர அருகில் இருக்கும் ஒரு பொருளை நாம் பார்க்கமாட்டோம். என்ற எதார்த்தமான ஒரு கருத்தினை மிகவும் அருமையாகச் சொல்லியிருக்கிறார்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

26 ஜூலை 2022.      

           

Saturday, 23 July 2022

தண்ணீர்

தண்ணீர் 

அசோகமித்திரன் 

ஒலி புத்தகம் 

லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலியின் குரலில்

ஸ்டோரி டெல் தளத்தில்.

ஒரு புத்தகத்தினை வாசித்து உணரும் அனுபவம் தனிதான் என்று இருந்த நேரத்தில் வாகனத்தில் பயணிக்கும் வேளைகளில் ஒலி புத்தகமாக மற்றொருவர் வாசிக்க அதை நேசித்து கேட்கும் அனுபவம் கூட ஒரு வகையில் கதையின்களத்திற்குள் நம்மை பயணிக்க வைக்கின்றது. அதுவும் வாசிப்பவரின் வசீகரமான குரல் நம்மை அந்த கதைக்குள்ளே கட்டிபோட்டுவிடுகிறது.

அப்படிதான் நான் இந்த தண்ணீருக்குள் முழ்கி கிடந்தேன். அந்த அனுபவத்தினை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.    

தண்ணீர்.....  மூன்று மணி நேரத்தில் பெரும்பாலும் வந்து போகும் வார்த்தை தண்ணீர் ..  தண்ணீர்.. தண்ணீர்.. 

மேலும் ஜமுனா, சாயா கூடவே டீச்சர் அம்மா அவர்களுடன் தண்ணீர் இல்லாததால் வரும் கடினம், அந்த பகுதியில் ஏற்படும் சிரமங்கள், முனிசிபாலிட்டி ஆட்களால் தோண்டப்பட்ட குழியும் அதனால் தெருவிளக்கு இல்லாமல் போவதும், பல்வேறு இடங்களில் கழிவு நீர் குழாய் உடைந்து தண்ணீரில் கலந்து வரும் வழக்கம் போல இருக்கும் பல்வேறு விதமான அதே சமயத்தில் சமுதாயத்தில் இருக்கும் முக்கியமான பிரச்சினைகளை மிக நேர்த்தியாகப் பேசும் நாவல் தான் இது.       

அசோகமித்திரனின் எழுத்து நடை வாசிக்கும் நம்மைப் பிரமிக்க வைக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த கதையில் வரும் பெரும்பாலான இடங்களில், மிகவும்  நுட்பமாக வரும் உரையாடல்கள், மேலும் அந்த இடத்தையும் அங்கு இருக்கும் ஆட்களையும் பற்றி விவரிக்கும் பொழுது கொடுக்கப்படும் மிகவும் நுட்பமான விவரங்கள் என வாசிக்கும் நம்மையும் அந்த கதையின் களத்திற்குக் கையை பிடித்து அழைத்துச் செல்கிறார்.    

தண்ணீர் இல்லாததால் படும் அவதியும் அதனால் ஏற்படும் பல்வேறு சிரமங்களையும், சிக்கல்களையும் சிலந்தி வலைபோல பின்னி அந்த வலைக்குள் மாட்டிக்கொண்டு தவிக்கும் ஜமுனா என்று ஒரு பெண்ணையும் ஒரே நேர்கோட்டில் தன் முழு பலத்தையும் கொண்டு இழுத்துச் செல்கிறது இந்த தண்ணீர்.      

இந்த கதையில் வரும் பம்ப அடிக்கும் ஓசை ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுது எனது சிறுவயதில் எங்கள் கிராமத்தில் அதிகாலையில் ஆரம்பிக்கும் பம்ப அடிக்கும் ஓசையினை சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு உணர (கேட்க) முடிந்தது. 

தண்ணீருடன் சேர்ந்து பயணிக்கு ஜமுனா, அவளின் தங்கை சாயா, கூடவே பலம் கொடுக்கும் டீச்சர் அம்மா என இவர்களின் வாழக்கையில் வரும் வெறுமையும் அந்த வெறுமையினை எவ்வாறு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இவர்கள் தங்கள் ஒருவருக்கொருவர் கொடுக்கும் மனத் தையிரியம் என மிக இயல்பான சொல்லாடல்களுடன் நம்மையும் அந்த தண்ணீர் இல்லாத தெருவிற்கே அழைத்துச் செல்கிறது.

ஜமுனாவிற்கும் சயாவிற்கும் இடையே ஏற்படும் பந்தமும் இடையில் ஏற்படும் மனவிரிசல்களும் இதற்குக் காரணமாக இருக்கும் பாஸ்கர் ராவும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் வரும் உரையாடல்களில் அக்காவிற்கும் தங்கைக்கும் இடையே இருக்கும் உறவின் பொறுப்பிற்கும் அதனால் எடுத்துக் கொள்ளும் அக்கறையும் கதையின் பலமாக இருக்கிறது.

ஒரு வீட்டில் பல்வேறு குடித்தனங்கள் வாடகைக்கு இருக்கும் இடத்தில் ஏற்படும் கருத்து பரிமாற்றங்கள் அதற்கு ஏற்ப ஒவ்வொருவரும் தங்களைக் காத்துக்கொள்ளும் பக்குவம் என வந்து போகும் ஒவ்வொரு பாத்திரமும் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.

டீச்சர் அம்மா, ஜமுனாவிற்குக் கொடுக்கும் அறிவுரையும் அதன் கூடவே அவளும் வெந்தும் நொந்தும் வாழும் வாழ்க்கையினை சொல்லும் விதமும் அந்த வாழ்க்கையில் அவள் எதிர்கொண்ட கரடுமுரடான பாதையும் அதே பாதையில் கவனமாகப் பயணிக்க கற்றுக் கொண்டு பயணிக்கும் விதத்தையும் சொல்லி வாழ்க்கையினை முடித்துக் கொள்ள முடிவெடுக்கும் ஜமுனாவிற்கு ஒரு புதிய வாழ்க்கையினை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் வருகிறது.

இந்த நாவலுக்கு உயிரோட்டமாகக் குரல் கொடுத்து இருக்கும்     லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலியின் அவர்கள் பல்வேறு கதாபாத்திரங்களின்  குரல்களை அந்த அந்த பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் மிகவும் அழகாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் உயிர்  கொடுத்து இருக்கிறார்

 அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

23 ஜூலை 2022. 



Monday, 18 July 2022

ரெயினீஸ் ஐயர் தெரு - வாசிப்பனுபவம்

ரெயினீஸ் ஐயர் தெரு

ஆசிரியர் : வண்ணநிலவன்  

நற்றிணை பதிப்பகம் 

பக்கங்கள் 80

விலை ரூபாய் 70


ரெயினீஸ் ஐயர் தெருவில் இருப்பதோ ஆறு வீடுதான் ஆனால் இந்த ஆறு வீட்டிலும் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் நம் கண் முன்னே நடப்பது போன்ற ஒரு அற்புதமான உணர்வினை கட்டாயம் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுத்துச் செல்கிறது வண்ணநிலவனின் ஆழமான எழுத்துக்கள்.

எத்தனை மனிதர்கள், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு அக வாழ்க்கை ஒளிந்துகொண்டிருக்கிறது. அந்த வாழ்வியலையும் அவர்களின் அன்றாட நிகழ்வுகளையும் அவர்களின் மனதில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பல்வேறுவிதமான விருப்புவெறுப்புகளையும்  மிக நேர்த்தியாகவும் துல்லியமாக விவரித்துச் செல்கிறார். 

இருதயம் டீச்சர்  - சேசய்யா, இவர்களின் வாழ்க்கை ஆரம்பம் முதல் இன்று சேசய்யாவின் உயிரைக் குடித்துக்கொண்டிருக்கும் நோய் வரையும். இருதயத்தின் மாமியார் இடிந்தகரையாள், மாமியாருக்கும் இருதயத்திற்கு இடையே இருக்கும் சின்ன சின்ன உரசல்கள் என இருதயத்தின் வாழ்வியலின் அத்தனை நிகழ்வுகளையும் மிக ஆழமாகச் சொல்லிச் செல்கிறார். இருதயம் டீச்சர் தனது கணவன் சேசய்யாவிற்கு தேவையான முட்டைக்காகத் தனது வீட்டில் வளர்க்கும் கோழிகளாகட்டும் அந்த கோழிகள் எங்கெல்லாம் சென்று இறை தேடுகிறது என்பதாகட்டும், மழைக்காலங்களில் கோழிகள் செய்யும் அசுத்தம் அதனால் ஏற்படும் வாடை, கோழிகளின் இறகுகள் அதைக் காது குடையப் பயன்படுத்தும் விதமும் அதிலே ஏற்படும் சுகமும் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.   

ஆசீர்வாதம் பிள்ளை - ரெபேக்கா,  ஒவ்வொரு ஊரிலும் வாழ்ந்து முடிந்த ஒருசில தம்பதிகள் இருப்பார்கள் அதுபோலவே இந்த தெருவிலும் ஆசீர்வாதம் பிள்ளை - ரெபேக்கா தம்பதியர் வாழ்கிறார்கள். இவர்களின் வீடு எந்த அளவிற்குப் பழுதடைந்து இருக்கிறது. மழை பெய்யும் நேரம் அவர்களின் வீடு எவ்வாறு இருக்கும் என்பதும் ஒரு நேரத்தில் அடுப்படியின் சுவர் இடிந்து விழுந்ததும், அந்த வீட்டின் தாமரை பதித்த கல்படி அந்த படியில் பழகி வாழ்ந்து இளம் வயதிலே இறந்து போன  இவர்களின் மகள் என இவர்களின் வீட்டில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் இவர்களுக்கு உதவிய தியோடர் எனச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.

அன்னமேரி டீச்சர் வீடும் மற்றும் இவரின் மகன் தியோடர் என இவர்களின் வாழ்க்கையும். தியோடர் எவ்வாறு அவனின் மனைவியினை இழந்து தனது வாழ்வின் தற்காலத்தில் படும் அவலங்கள் மற்றும் குடிபோதைக்கு அடிமையாகி அல்லல் படுவது என எல்லா நிகழ்வுகளும் சொல்லாமல் இல்லை. 

ஹென்றி மதுர நாயகம்,  இவரின் மகன் சாம்சன் மற்றும் இவர்களுடன் வாழும் அற்புதமேரி, அவ்வப்போது வந்துபோகும் எஸ்தர் சித்தி என இவர்களுக்குள் நடக்கும் வாழ்வின் எல்லா நிகழ்வுகளையும் சொல்லியிருக்கிறார். இந்த வீட்டில் நடக்கும் உறவுகளின் அத்துமீறல்கள் அவற்றைத் தனது சிறுவயதிலே அற்புதமேரி பார்க்கிறாள். பிறகு அற்புதமேரிக்கு தனது அண்ணன் சாம்சன் மீதும் சித்தி எஸ்தர் மீது ஏற்படும் உறவின் வலிமையையும் இந்த நிகழ்வால் சிறுவயதிலே அவளுக்கு ஏற்படும் சகிப்புத்தன்மை என உறவின் மீது ஏற்படும் வலிமையான நெருக்கத்தினை சொல்கிறார்.    தனது அம்மாவின் வயதினை உடைய அன்னமேரிடீச்சரின் உடல்பால் ஏற்படும் ஈர்ப்பினை மறைக்க முடியாமல், தனது மனதின் தாகத்திற்கு ஏற்றாற்போல  அவன்  தனது வீட்டின் ஜன்னலோரம் அமர்ந்து அன்னமேரி டீச்சரினை  பார்ப்பதும் அதற்காக அன்னமேரி டீச்சரிடம் ஏற்படும் வெறுப்பு என இயல்பான வாழ்க்கையின் தடங்களைத் தவறாமல் பதியவைத்திருக்கிறார்.     

ஒவ்வொரு மழைக்காலங்களிலும் தெருவில் இருக்கும் பழைய மணல் அடித்து போகப்படுகிறித்து அங்கே புதிய மணல்களை மழை கொண்டுவருகிறது. இது இயல்பாக எல்லா இடங்களிலும் நடக்கும் ஒரு நிகழ்வுதான் ஆனால் இங்கே சிறிய பெண் டாரதிக்கு ஏற்படும் சந்தேகம் அதாவது எப்படி இந்த மணல் வருகிறது இவற்றை யார் கொண்டுவருகிறார்கள் என்ற கேள்விக்கு அவளின் அம்மா சொல்லும் பதில் இறைவனைத் தவிர வேறு யாராயிருக்கும்.

இந்த ரெயினீஸ் ஐயர் தெருவில் வசிக்கும் சொற்பமான  மக்களின் உணவுப் பழக்கம், உடைகள் மற்றும் அவற்றின் வண்ணங்களும் அவற்றை அவர்கள் தேர்வுசெய்யும் விதங்களும், நுகர்ந்து பார்க்கும் வாசனை, மற்றவர்கள் மீது ஏற்படும்   ஆசைகள், விருப்பங்கள்,வெறுப்புகள்,  ஏற்படும் காழ்ப்புணர்ச்சி, அடக்கமுடியாத காமம், பரிதாபம், பிரியமும் காதலும், பாசமும் எனச் சொல்லிக்கொண்டே செல்லலாம். இவற்றையெல்லாம் ஒரு குறுநாவலுக்குள் அடக்கி வாசிப்பவர்களின் மனதிற்குக் கடத்திச்செல்வது அவ்வளவான சுலபமான காரியமில்லைதான் ஆனால் இவற்றை மிக எளிதாகவும் சாதாரணமாகவும் வண்ணநிலவன் தனது எளிய எழுத்துக்களின் மூலம் நிறைவேற்றியிருக்கிறார்.  

குறிப்பாக ஒவ்வொரு மனிதன் மேலும் ஏற்படும் வாசனை அது எவ்வாறெல்லாம் வேறுபடுகிறது என்றும் ஆசீர்வாதம் பிள்ளை ஆசிரியராக பணிபுரியும் பொழுது அவர்மீது இருந்து வரும் சாக்பீஸ் மற்றும் பேப்பர் கலந்த வாசனை அதை நுகர்ந்து பார்க்கும் அவரின் மனைவி ரெபேக்கா அதுபோலவே ரெபேக்கா மீது வரும் காய்ச்சிய பாலின் வாடையும் அடுப்படியில் சமைத்துக்கொண்டிருப்பதால் அதனால் ஏற்படும் வாசனையும், கல்யாணி அண்ணன், சாம்சன் அண்ணன் என இவர்களைப் பற்றிப் பேசும் போதும் இவர்களின் மீதிருந்து வரும் வாசனை பற்றிப் பேசிச்செல்லும் ஜீனோ மற்றும் டாரதி கூடவே பள்ளித் தோழியின் பட்டுப்பாவாடையின் வாசம் என இவர்களின் நுகர்வின் நுணுக்கங்களை ரசனையுடன் சொல்லியிருக்கிறார்.

அக்காவிற்குத் திருமண ஆன பிறகு அவள் மீது கோபம் கொள்ளும் தங்கைகள், சிறுபெண்கள் தங்கள் வயதில், தான் பருவம் அடைந்த நேரத்தில் ஏற்படும் மனமற்றதாக எல்லோரையும் எதிரியாகப் பார்க்கும்  பெண்குழந்தைகள் என இந்த தெருவில் வசிக்கும் பெண்பிள்ளைகளின் மனதையும் எதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார்.                     

ரோஸம்மாள், தனது கணவன் தன்னை விட்டு வேறொருவாளிடம் வாழ்கிறான். தனது பிறந்த வீட்டிற்கே அழைத்து வருகிறார்கள். அதுதான் ஜாஸ்லின் பிள்ளை வீடு அதுவும் இந்த தெருவின் முதல் வீடு. இந்த வீட்டின் மனிதர்கள் நன்றா வாழ்ந்தவர்கள் ஆனால் இப்போது யாருமற்று கிடக்கிறது. தனது வாழ்வினை தொலைத்து விட்டு வந்த ரோஸம்மாள், தன்னை விட்டுச்சென்ற கணவன் இறந்துவிட்டான் என்றதும் அவனைப் பார்க்கச் சென்றவள் அங்கே அவன்மீது வேறொரு பெண்ணும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் விழுந்து அழும்போது மணம் தாங்காமல் அவர்களைத் தனது பிள்ளைபோலவே பாவித்தது மட்டுமல்லாமல்  எல்லோர் மீது பாசம் வைத்து ஒரு தாயைப் போலவே இருந்தாள் என்பதே அவளின் குணநலன்களைப் பார்க்கும்போது தோன்றுகிறது.

மொத்தத்தில் இந்த ரெயினீஸ் ஐயர் தெருவில் வாழ்ந்த மனிதர்கள் பற்றி மட்டும் இங்குப் பேசவில்லை, அவர்களின் வீடு அந்த வீடுகளின் வரலாறு மேலும் அந்த வீடுகளுக்கு மட்டுமிருக்கும் சில உணர்வுகள், இந்த தெருவில் வாழ்ந்து இறந்து போன தியோடரின் மனைவி,  சிறுப்பென் அலீஸ் மற்றும் இந்த தெருவிற்கு விருந்தாளிகளாக வந்துபோகும் மனிதர்கள் மற்றும் தெருவின் பண்டிகை காலத்தில் ஏற்படும் கொண்டாட்டங்கள் அந்த கொண்டதின் போது வந்து போகும் குளிர்ச்சியான மழை முக்கியமாக அதே தெருவில்  இரைதேடி அலையும் கோழிகள், அந்த கோழிகள் உதிரும் இறகுகள் மற்றும் முட்டைகள் என எல்லாவற்றின் பயன்பாடுகள் என மிக அடர்த்தியாகவும்  ஆழமாகவும் ரெயினீஸ் ஐயர் தெருவின் வாழ்வியல் பதியப்பட்டுள்ளது.  


அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

18 ஜூலை 2022