Wednesday, 28 September 2022

இன்ப நினைவு - அகிலன்

இன்ப நினைவு  

ஆசிரியர் : அகிலன் 

தாகம் பதிப்பகம் - கிண்டில் 

பக்கங்கள் 67

விலை ரூபாய் 99


தமிழின்  தவிர்க்கமுடியாத ஒரு எழுத்தாளரான அகிலன், 1922 ஆம் ஆண்டு ஜூன் 27 ல், புதுக்கோட்டை அருகே உள்ள பெருங்களூர்  என்ற ஊரில் பிறந்து 1988ல் தனது 65வது வயதில் நம்மைவிட்டுப் பிரிந்தார்.  எதார்த்தமான மற்றும்  ஆக்கபூர்வமான எழுத்துக்களுக்கு பெயர் பெற்ற இவரின் பெரும்பாலான  எழுத்துக்கள் நாட்டின் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்தது என்றே சொல்லவேண்டும். இவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகியாகவும் இருந்திருக்கிறார். பல்வேறு புதினங்கள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், சிறுவர் நூல்கள், வரலாற்று நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள்  மற்றும் பல்வேறு கட்டுரைகள் என இவரின் எழுத்து பல்வேறு தடம் பதித்திருக்கிறது.

1963ல் இவர் எழுதிய "வேங்கையின் மைந்தன்" என்ற வரலாற்று நாவலுக்குச் சாகித்ய அகாடமி  விருது கிடைத்தது. மற்றொரு நூலான   "சித்திரப் பாவை" என்ற வரலாற்று நாவல் 1975 ஆம் ஆண்டிற்கான "ஞானபீட விருதை வென்றது இது மட்டுமல்லாமல் இந்த நாவல்  பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் இவரின் மற்றொரு நூலான "எங்கே போகிறோம்" என்ற சமூக அரசியல் நூல் 1975ல் "ராசா சர் அண்ணாமலை" என்ற விருதினை பெற்றுத் தந்தது.            

இவர் பிறந்து 100 ஆண்டுகள் என்பதால் "2022" ஆம் ஆண்டை  "அகிலன் நூற்றாண்டு" என்று கொண்டாடப்படுகிறது. நாமும் அதைக்  கொண்டாடும் விதமாக நமது குழுமத்தில் இவரின் எழுத்துக்களை வாசித்து அவரை போற்றவேண்டும் என்ற நோக்கத்தினால் இந்த ஆண்டு விழா போட்டியில் ஒரு வாரத்தினை இவரின் படைப்புக்களுக்காக ஒதுக்கி அவரின் பெருமையினை  அனைவருக்கும் அறியப் படுத்துகிறோம்.

இந்த கொண்டாட்டத்தில் பங்குபெற நான் தேர்வு செய்த நூல், "இன்ப நினைவு". இந்த நூல் - ஒரு புறம் அருமையான மற்றும் இளமையான காதல் கதை ஆனால் அதே சமயம் மற்றொரு  பக்கம் ஆசிரியர் சமூகத்தின் மீது கொண்ட அக்கரையினையும் கூடவே காந்தியின் மீதுள்ள ஈர்ப்பினையும் அதன் காரணமாகக் காந்திய கொள்கையினை ஏற்றுக்கொண்டு தனது வாழ்க்கையினையே மாற்றிக் கொள்ளும் வகையில் இந்த கதையின் நாயகனை அமைத்துள்ளார்.  

கதையின் நாயகன் ராமநாதன், கமலம் மற்றும் சுப்பையா என இந்த மூன்று கதாபாத்திரங்கள் மட்டுமே முக்கியமாக வாழும் இந்த நாவலில்  ஒவ்வொருவரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் சந்திக்கின்றனர். ஆனால் இவர்கள் மூவரும் மற்றொரு தருணத்தில் சந்திக்கும் பொழுதில் கதை முடிகிறது. 

ராமநாதன் தனது கல்லூரி படிப்பின் போது கிடைக்கும் விடுமுறைக்குத் தனது மாமாவின் கிராமத்திற்குச் செல்கிறார்.  அந்த கிராமத்தில் தனது மாமாவின் வீட்டிற்குப் பக்கத்துக்கு வீட்டு  இளம் பெண்ணாக இருக்கிறாள் நாயகி கமலம். கமலம் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் அழகான  சுட்டி பெண்.  எதிர்பாராத நேரத்தில் இவர்களிடையே ஏற்படும் ஒரு சில சந்திப்புகள் இவர்களைக் காதல் பந்தத்தில் கொண்டு சேர்க்கிறது.

இந்த கதையின் கால கட்டம்  சுதந்திரத்திற்கு முன்பான காலம் என்பதால், கதை முழுவதும் சுதந்திர தாகம் கதையின் கூடவே வலுவாகப் பயணம் செய்கிறது.  

விடுமுறைக்குச் சென்று வந்த ராமநாதன் தனக்கு ஏற்பட்ட  காதல் மயக்கத்திலிருந்து சற்றே மீண்டெழுந்து  மீண்டும் கல்லூரி செல்கிறார். அங்கே  காந்தியைச் சந்திக்கிறார். ஆசிரியர் காந்தியத்தின் மீது கொண்டிருந்த தனது ஈடுபாட்டினை இந்த கதையின் நாயகனின் வழியே மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.  காந்தியின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறார் ராமநாதன். ஆனால் சுதந்திரத்திற்காகவும், பொதுமக்கள்  மீது அக்கறை காட்டவும், பொதுவாழ்க்கை தேவைதான் ஆனால் அதற்காக தனக்கென ஒரு சுயமான வாழ்க்கையினை வாழ வேண்டாம் என்பது ஏன் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது.

காந்தியைச் சந்தித்த பிறகு ராமநாதன் தனது காதலுக்கு முழுவதும் முழுக்கு போட்டுவிட்டு சமுதாயத்தின் மீது காதல் கொள்கிறார்.  பிறகு ஒரு  நாடோடி போல வாழ  ஆரம்பிக்கிறார்.  அதே சமயம் அவரின் வருகைக்காக ஒவ்வொரு மணித்துளியும் காத்துக் கிடக்கும் கமலத்தின் மீது இவர் கொண்டிருந்த காதல் எங்கே போனதென்றே தெரியவில்லை. 

தான் மீண்டும் கமலத்தினை சந்திக்கவே கூடாது என்று தனது வாழ்க்கை முழுவதும் பொதுநலம் என்று கருதி வந்த ராமநாதனுக்கு விதி மீண்டும் ஒரு புதிய ரூபத்தில் கமலத்திடம் கொண்டு சேர்க்கிறது.  போலீசாரால் சிறைபிடிக்கப்பட்ட ராமநாதன், போலீசாரால் நாடு காட்டில் கண்ணைக் கட்டி விட்டுவிடுகின்றனர். தனக்கு இனிமேல் உயிர் பிழைக்க வழியில்லை என்று கருதுகிறார்.  ஆனால் கமலத்தின் தந்தையர் வழியிலே அவரை கண்டுகொண்டு தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார்.   உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில்  கமலத்தின் வீட்டிற்கு வருகிறார். எதிர்பாராத இந்த வருகையினை கமலம் தனது பக்குவமான மனநிலையினால் சமாளித்து ராமநாதனுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்கிறாள்.

மீண்டும் நடந்த இந்த சந்திப்பின் காரணமாக இருவீட்டாரும் இவர்களின் திருமணத்தினை நடத்த ஏற்பாடுகள் செய்கின்றனர். ஆனால் தனது காதலியிடம், தான் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்று எடுத்த தீர்மானத்தினை எப்படிச் சொல்வதென்று தெரியாமல் போராடுகிறார்.   ஆனால் இறுதியில் ஒரு வழியாகத் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்று தனது முடிவினை தனது உறவினர்களிடம் சொல்லிவிட்டு, தனது சமுதாய சேவை செய்ய ஆரம்பித்துவிடுகிறார்.

அப்படி அவர் எடுத்துக்கொள்ளும் புதிய அவதாரம் அவரை சிறையில் கொண்டு சேர்க்கிறது. தனது சிறைவாசத்தில் அவ்வப்போது கமலத்தின்  நினைவு வராமலிருக்குமா என்ன. சில வருடங்களுக்குப் பிறகு கமலம் கல்யாணம் செய்துகொண்டாள் எனக் கேள்விப்பட்டு நிம்மதியடைகிறார். தனது மனதில் இருக்கும் நினைவுகளையும் பெண்கள் மீது அவர் கொண்ட மரியாதையினையும் கலந்து "பெண் தெய்வம்" என்று புத்தகத்தினை எழுதுகிறார். அந்த புத்தகத்தினை சிறையில் வந்து சேரும் சுப்பையாவிடம் கொடுத்து கருத்து பரிமாறிக்கொள்கிறார். இவர்கள் இருவரும் இரு வேறு விதமான அனுபவங்களைக் கொண்ட கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். அதே சமயம் இவர்கள் சந்தித்த பெண்கள் இருவேறுவிதமானவள் என்ற கருத்தினையும் வாசகர்கள் புரிந்துகொள்ளும் விதமாகச் செல்கிறது இவர்களின் உரையாடல்கள்.  ஆனால் இவர்கள் இருவரும் தங்களது வாழ்வில் சந்தித்தது ஒரே பெண் தான் என்ற முடிச்சியினை கதையின் இறுதியில் வைத்திருக்கிறார் ஆசிரியர்.

அருமையான கதை, இளைஞர்களிடையே சுதந்திரத்தின் தாகத்தினையும் அதே நேரத்தில் காந்தியின் கொள்கைகளையும் கொண்டு செல்வதற்கு  இந்த காதல் கதையினை கதையின்  தளமாக எடுத்துச் சிறப்பாக முடித்திருக்கிறார். 


அன்புடன்,

தேவேந்திரன்  ராமையன் 

28 செப்டெம்பர் 2022

Sunday, 25 September 2022

மறக்கமுடியாத கடிதங்கள்

 மறக்கமுடியாத கடிதங்கள் 

ஆசிரியர் : எம். ஞானசேகரன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 72


இந்த நவீனக்காலத்தில் சில தலைமுறைகள் கண்டிராத ஒரு பொக்கிஷம் தான் கடிதங்கள். இது இவர்களின் வரமா? அல்லது சாபமா? என்ற கேள்விக்கு விடையேதும் தெரியாது ஆனால் இன்னும் சில தலைமுறைகள் சென்ற பிறகு  கடிதம் என்ற ஒன்று இருந்ததா என்றே தெரியாமல் போகும் என்ற அபாய குரலுடன் நான் இந்த பதிவினை பகிர்ந்துகொள்கிறேன்.

"ஒரு கடிதம்", தன்னை எழுதுபவரின் எண்ணத்தினை மட்டும் சுமந்து வருவதில்லை, கூடவே விலைமதிப்பில்லா பல்வேறு விஷயங்களைக் கூட்டிவருகிறது. எழுதுபவரின் கைகள் பதிந்த தடத்தின் வாசனையும் அவரின் கைப்பட்ட மையின் மனமும் கூடவே அவர் எழுதிய இடத்தில்  இருந்த நறுமணத்தினையும் நயம்பட தன்னுள்ளே தத்ரூபமாகத் தாங்கி வருவதே கடிதம் என்றால் அது மிகையாகாதே.  

கடிதம் என்பது உலகில் அழிக்க முடியாத ஒரு பொக்கிஷம். கடிதம் ஒருவரின் மனதில் ஏற்படும் உள்ளார்ந்த எண்ணங்களை அழிக்க முடியாத ஓவியமாகத் தீட்டிவைத்துக்கொள்ளக் கிடைத்த ஒரு பெரிய வரப்பிரசாதம் தான் கடிதம் என்றே சொல்ல வேண்டும்.

கடிதம் வெறும் நலம் விசாரிக்கும் ஒரு சாதனமாக மட்டும் இல்லை. எண்ணங்களின் பரிமாற்றம், சுயமாகச் சிந்திக்கும் ஒவ்வொரு கருத்துக்களை எழுத்து வடிவில் ஆவணப்படுத்தும் அழகிய சாதனம் தான் கடிதம்.

எனக்கு இன்றளவும் நினைவில் இருக்கிறது, நான் முதல் முதலாக வீட்டை விட்டு வேலை நிமித்தமாக வெளியூர் சென்ற போது தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் தங்கவேண்டிய சூழல் வந்த போது நான் முதலாவது என் அம்மாவிற்குக் கடிதம் எழுதியது இன்றளவும் என்னுள் இருக்கிறது.

பிறகு 1999 ல் வெளிநாட்டிற்கு வந்த பிறகு ஒவ்வொரு வாரமும் விடாமல் நான் கடிதம் எழுதியவன். சமீபத்தில் நான் விடுமுறைக்கு வீட்டிற்குச் சென்ற போது எனது எண்ணங்களை எழுத்தாகத் தாங்கி நிற்கும் கடிதங்கள் இன்றளவும் என் அம்மாவின் அலமாரியில் அலங்கரித்துக் கொண்டே இருக்கிறது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அந்த வழியில் நண்பரும் இந்த நூலின் ஆசிரியருமான   எம். ஞானசேகரன் அவர்கள் தனது உறவுகளும் நபர்களும் தனக்கு எழுதிய கடிதங்களை ஒரு அற்புதமான பொக்கிஷமாக வெளியிட்டிருக்கிறார்.

பொதுவாகக் கடிதங்களை வெளியிடுவார்கள் புகழ்பெற்றவர்கள் மட்டும் என்று ஒரு திரையினை விளக்கி  சாமானியரும் தங்களின் கடிதங்களை ஆவணப்படுத்தி வைத்துக்கொள்ள வசதியாக ஒரு முன்னோட்டமாக இந்த நூல் இருக்கிறது .

கடிதங்கள் தான் எத்தனை எத்தனை உள்ளுணர்வுகளையும், மனதில் புதையுண்டு கிடக்கும் பொக்கிஷங்களைப் புதுப்பொலிவுடன் எந்நாளும் கண்குளிர வாசிக்க கிடைக்கும் வசதியான ஒரு சிறப்பானது தான் கடிதம்.

இந்த நூலின் இடம்பெற்றுள்ள பல்வேறு கடிதங்கள் ஒவ்வொன்றும்  நட்புகளுக்கும், உறவுகளுக்கும் இடையே நடந்த ஒவ்வொரு எண்ணங்களின் பரிமாற்றம் மிக அழகா பதிய வைத்திருக்கிறார்.

சகோதரி செல்வியின் கடிதம் - இந்த கடிதங்கள் வாசிக்கும் போது அக்கா தம்பிகளுக்கு இடையே ஏற்படும் உரையாடல்கள் மட்டுமல்லாமல் இந்த உடன்பிறவா உறவுகளுக்கு இடையே இருக்கும் ஒவ்வொருவரின் மனதிலிருந்த உறவுகளின் மீதான பரிவு, பாசம், பங்களிப்பு மற்றும் கொண்டுள்ள ஈடுபாடுகள் என எல்லாவற்றையும் வார்த்தைகளால் வரையப்பட்ட ஒளிவீசும் ஓவியமாகத் திகழ்கிறது.

மற்றொன்று கடிதம் - நண்பர்கள் இடையே ஏற்பட்ட பல்வேறு உரையாடல்கள். இந்த கடிதங்களில் வெறும் நலம் மட்டும் விசாரிக்கவில்லை. இவர்களின் கருத்து பரிமாற்றங்கள் நலம் விசாரிப்பு முதல் நாட்டு நடப்பு, அரசியல் அக்கரை, பொருளாதார வளம் மற்றும் புதைந்து போகும் மக்கள் நலன் என விசாலமாக விரிந்து கிடக்கும் விவரங்களை விளக்கமாகப் பகிர்ந்துகொண்டுள்ளனர். இந்த கடிதங்கள் உண்மையாகவே ஒரு சமுதாய நோக்கில் வரையப்பட்ட அழகான மடல்கள். 

பேனா நட்பு: இது நானறிந்திராத ஒரு வகையான நட்பு.   இந்த நட்பின் வழியாக உண்மையான உணர்வுகளுக்கு இடங்கொடுக்கும் நண்பர்கள் கிடைப்பது ஒரு வரப்பிரசாதம் தான். அப்படியாக ஆசிரியருக்குக் கிடைத்த பல நண்பர்களின் கடிதங்கள் பகிர்ந்திருக்கிறார். அப்படியாக ஈழத்திலிருந்து வந்த யாழினி மற்றும் நந்தினி கடிதங்கள்.

சிங்கப்பூர் தோழியின் உறவு மற்றும் மற்றொரு சகோதரியின் கடிதங்கள் மற்றும் அந்த சகோதரியின் கைவண்ணத்தில் வரைந்த ஒதுக்கிப் போட்ட ஓவியத்தினை புத்துயிர் கொடுத்து அவருக்கே புத்தாண்டு வாழ்த்து மாதிரியாக அனுப்பியது என இன்றளவும் உயிர்ப்புடன் கடிதங்கள் இருக்கும் வகையில் இந்த கடிதங்களை ஒரு நூலாக  வெளியிட்ட நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.

முடிந்த வரையில் நமக்கு கிடைத்த கடிதங்களை பொக்கிஷங்களாக பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் அவ்வப்போது ஒரு கடிதம் எழுதி தான் பாருங்களேன். கடிதம் எழுதும் பொது கிடைக்கும் உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து தன்னை தானே செதுக்கி கொள்ளும் ஒவ்வொரு கடிதமும் - இவைகள் காலத்தால் அழிக்க முடியாத அற்புத படைப்பாக மாற்றிவைக்க வேண்டும்.

என்றும் அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

25 செப்டம்பர் 2022

                                         


Saturday, 24 September 2022

பர்மா வழிநடைப் பயணம்

எனது பர்மா நடைவழிப் பயணம் 

ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 120

பக்கங்கள் 248


எனது பர்மா நடைவழிப் பயணம்  - இது ஒரு பயண கட்டுரை நூல். இது சாதாரணமான சுற்றுலா பயணமோ  அல்லது துணிந்து செய்யும் சாகச பயணமோ இல்லை. தாய் நாட்டை விட்டு வேறொரு நாட்டில் வாழுபவர்களுக்கு அந்த நாட்டில் திடீரென ஏற்படும் ஒரு போர் அந்த போரின் காரணமாக வெளியேற வேண்டும் என்று ஒரு நிலைமையில் அனுபவிக்கும் அணைத்து விதமான இன்னல்கள் மற்றும் இடையூறுகள் என தனக்குத் தனது 47வது வயதில் ஏற்பட்ட   அனுபவத்தினை ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா மிக எளிய நடையில் மிக அருமையாகக் கொடுத்திருக்கிறார்.

இந்த புத்தகம் நடைவழிப் பயணம் பற்றியது என்று இருந்தாலும் முதலில் கார் பயணம் அடுத்து  ரயில் பயணம் அதற்கடுத்து படகு பயணம் பிறகு லாரி பிறகு டோலி கூடவே நடைப் பயணம் பிறகு லாரி மற்றும் இறுதியில் ரயில் பயணம் என இவர்களின் (பர்மாவிலிருந்து அகதிகளாகத் தனது தாய் நாட்டிற்கு வந்த ஆயிரக்கணக்கான மக்கள்) பயணம் சிரமங்களும் சங்கடங்களும் இடையூறுகளும் எதிர்பார்ப்புகளும் எதிர்பாராத திருப்பங்களும் கூடவே சந்தித்த பல்வேறு விதமான மனிதர்களும் என இந்த பயணத்தின் ஒவ்வொரு நாளும் ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லும்போது தனது எழுத்தாளரான வே. சாமிநாத சர்மா நயத்துடன் கூடிய உவமைகளுடன் அருமையாகச் சொல்லியிருக்கிறார்.

அமைதியும் ரம்மியமும் ஒருசேர இருந்த ரங்கூனில் இரண்டாம் உலகப்போரின் போது திடீரென ஜப்பான் ராணுவத்தால் ஆரம்பித்த குண்டு மழையினால் நிலை குலைந்து போனது முதல் அங்கே ஏற்பட்ட அசாதாரண நிலையினையும் அதுவரை அமைதியாக வாழ்ந்து வந்த வெளிநாட்டவர்கள் திடீரென ஏற்பட்ட நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிர்ப்பந்தம். அந்த நிலையில் ஒவ்வொருவரின் மனநிலையும் அவற்றை எப்படி எதிர்கொண்டார்கள்  என்பதையும் கூடவே ஆசிரியரும் எவ்வாறு இந்த அசாதாரண  சூழ்நிலையினை கையாண்டார் என்பதே இந்த நூலின் முழுவதும் இருக்கிறது.

ஆரம்பத்தில் ரங்கூன் இருந்து கார் வழியே மாந்தளை பிறகு அங்கிருந்து  ரயில் மூலம் மொனீவாவிற்கு  பிறகு அங்கிருந்து படகு வழியே கலேவாவிற்கு வந்த பயணத்தில் இங்கிருந்து இண்டாஞ்சிக்கு லாரி வழிப் பயணம் மீண்டும் இங்கிருந்து லாரி வழியில் டாமு வந்து சேருகின்றனர். டாமுவில் இருந்து நடைப்பயணம் ஆனால் பலருக்கு டோலி வசதியும் கொடுக்கப்பள்ளது.

டாமுவிலிருந்து வான்சிங் முகாம் வரை செல்லும் பயணம் ஆரம்பத்தில் மாட்டு வண்டிகள் மூலம் தொடங்கி அடுத்த இருந்த வக்க்ஷு முகாம் வரை மாட்டுவண்டியில் வந்தனர்.    பிறகு வக்க்ஷு முகாமிலிருந்து லும்மிங் முகாம் பிறகு சிட்டா முகாம் வான்சிங் முகாம் வரை டோலி மற்றும் நடைப் பயணம்.

வான்சிங் முகாமிலிருந்து இம்பால் நகரில் இருக்கும் முகாமிற்கு வந்து பிறகு அங்கிருந்து டிமாபூர் ரயில்வே நிலையம் வரை மீண்டும் லாரி  பயணம். இறுதியில் ரயில் பயணம் சென்னை வரை இடையில் கல்கத்தாவில் ஏற்பட்ட சில நாட்கள் தங்கிய அனுபவத்தையும் மிக அருமையாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.  

வழியில் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட இன்னல்கள், இடை இடையே பலர் தங்களது இறுதி மூச்சை விட்டதும், நடக்க முடியாமலும், உணவில்லாமலும், பிற பல்வேறு சூழ்நிலைகளாலும் இவர்களுக்கு ஏற்பட்ட திடீர் மரணம் அவ்வப்போது அவர்களுடன் வருவோர்கள் அவர்களை அடக்கம் கூடச் செய்யமுடியாமல் ஓரங்களில் வீசி எரிந்து விட்டு தங்களது உயிர் பிழைத்தால் போதும் என்று மனதைக் கல்லாக்கிக்கொண்டு வந்ததும் என பல்வேறு விதமான மனதை உருக்கும் நிகழ்வுகளையும்  சொல்லியிருக்கிறார்.

வழியில் ஒரு அரசாங்க அதிகாரி கொடுத்த 100 ரூபாய் அப்படியே வைத்திருந்து சென்னைக்கு வந்த பிறகு திரும்ப அவரின் மனைவிக்கு மணி ஆர்டர் செய்ததும் அதுபோலவே கல்கத்தா வந்தவுடன் தன்னிடம் ஒரு அதிகாரி  கொடுத்த கடிதத்தினை அஞ்சல் செய்ததும் எனச் சொல்லும்போது தனக்கு ஏற்பட்ட இதனைக் கடினமான பயணத்திலும் இடை இடையே பல்வேறு மனிதர்கள் கடவுள் போல வந்து உதவிசெய்தார்கள் என்று மிகப் பெருமிதத்துடன் சொல்கிறார்.

இவ்வளவும் ரங்கூனில் ஜோதி என்ற ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த வெ. சாமிநாத சர்மாவின் அனுபவங்கள் என்றால் அவர் வந்த பாதையில் அவருக்கு பல்வேறு விதமான உபகாரங்கள் மற்றும்  உதவிகளும் கிடைத்தது ஆனால் ஒரு சாமானியனின் பயணம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ளமுடியும்.

இது போர்க்காலத்தில், போர் நடக்கும் நாட்டிலிருந்து தனது தாய் நாட்டிற்கு அகதிகளாக வரும்போது ஏற்படும் அணைத்து விதமான அனுபவங்களையும் ஒவ்வொன்றாய் பட்டியலிட்டுச் சொல்லியிருக்கிறார். கூடவே அவர் வழியில் சந்தித்த பல்வேறு விதமான மனிதர்கள், பல்வேறு விதமான சூழல்கள், இயற்கை சார்ந்த நிலப்பரப்புகள் அங்கே விளைந்த காய்கறிகள் அவர்களின் உணவுப் பழக்கங்கள் கூடவே அப்பகுதியில் சந்தித்தவர்களின் விருந்தோம்பல் என பல்வேறு விதமான சுவாரஸ்யமான தகவல்களை அற்புதமாக அடுக்கடுக்காய் ஒவ்வொருகட்டுரைக்குள்ளும் பக்குவமாகக் கொடுத்திருக்கிறார்.     

உடல்நிலையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் கூடவே காலநிலையினால் ஏற்பட்ட இன்னல்கள் கூடவே   பயணத்தின் பொது ஏற்பட்ட பல்வேறு இன்னல்கள் என ஒவ்வொன்றாய் சொல்லும்போது அந்த கடினத்தினை குறிப்பிடும்போது அவ்வப்போது நடந்து பல்வேறு இனிமையான சம்பவங்களைச் சொல்லி அந்த கடினத்தினை மறக்க வகையில் ஒவ்வொரு கட்டுரையும் இருக்கிறது.          

டோலி பயணத்தினை இறுதி பயணத்துடன் ஒப்பிட்டது. வரும் வழிகளில் இயற்கையின் கொடையாக இருந்த அருவிகளிலிருந்து வரும் நுரை நிறைந்த நீரை தங்களை (பாவப்பட்ட அகதிகளை) பார்த்து கண்ணீர் விடுகிறது என்பதெல்லாம் வாசிக்கும் நமக்குத் தொய்வில்லாமல் அழைத்துச் செல்கிறது.


அன்புடன்.

தேவேந்திரன் ராமையன் 

24 செப்டெம்பர் 2022 

 

                         

விண்வெளி (வியப்பு - விநோதம் - விசித்திரம்)

 விண்வெளி 

(வியப்பு - விநோதம் - விசித்திரம்)

ஆசிரியர் : என். ராமதுரை 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 105

பக்கங்கள் 216 


விண்வெளி - என்ற தலைப்புடன் இருக்கும் இந்த புத்தகம் அநேகமான விண்வெளி விவரங்களை அள்ளி கொடுத்துள்ளது. இந்த நூலின் ஆசிரியர் பத்திரிகைகளில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக பணிபுரிந்தவர். ஆதலால் இவர் அறிவியல் சார்ந்த பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். இதன் காரணமாகத் தான் தெரிந்துகொண்ட விவரங்களை  அருமையாகத் தொகுத்து ஒரு நூலாக நமக்குக் கொடுத்திருக்கிறார். 

இந்த நூல் விண்வெளி பற்றிய அபூர்வமான தகவல்கள், ராக்கெட்  மற்றும்  செயற்கைக்கோள்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை மிக எளிமையான மொழி நடையில் கொண்டுள்ளது.

செயற்கைக்கோள்களின் தேவை என்ன என்பதிலிருந்து அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது முதல் அவைகள் எந்த வழிகளில் நமக்குப் பயன் கொடுக்கிறது என்றும் மேலும் நமது அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும் பல்வேறு விதமான வசதிகளுக்கு  பின்னால் இருந்து இயங்குவது இந்த செயற்கைக்கோள்கள் தான் என்ற அருமையான தகவலும் வாசிக்கும் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

உலக நாடுகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு செயற்கைக் கோள்களைத் தயாரித்து விண்ணுக்கு அனுப்புகிறது. அவற்றில் எந்த நாடுகள் தன்னிறைவு அடைந்துள்ளது என்றும் மேலும் எந்த நாடுகள் பிற நாடுகளைச் சார்ந்துள்ளது என்றும்  அவ்வாறு செலுத்தும் செயற்கைக் கோள்களில் எந்த விதமான பயன்பாடுகளுக்காகத் தயாரிக்கப்படுகிறது போன்ற விவரங்கள் மிக நேர்த்தியான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த நூல் மேலும் ராக்கெட் பற்றிய பல்வேறு தகவல்களைச் சொல்கிறது. மேலும் ராக்கெட் எப்படித் தயாரிக்கின்றனர், அவைகள் எவ்வாறு செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்கிறது என்பதிலிருந்து ஒவ்வொரு படியாக மிக அருமையாக விளக்குகிறார்.

முதலில் ராக்கெட் கண்டுபிடித்தவர்கள் மற்றும் மென் மேலும் ரொக்கெட்டினை செம்மைப் படுத்தியவர்கள் என பல்வேறு மேதைகளைப் பற்றிய குறிப்புகளும் இந்த நூலில் சொல்லப்படுகிறது.

செயற்கைக்கோள்களை விண்ணுக்குச் செலுத்த ஏன் ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது என்பதினையும் அதற்க்கான ஆதாரமான பல்வேறு கூற்றுகளையும் சொல்கிறார். ராக்கெட் தொலைதூரம் வரை மிகத் துல்லியமாகவும் விரைவாகவும் செல்லும் வல்லமை கொண்டுள்ளதால் செயற்கைக் கோள்களை மற்ற கோள்களுக்குச் செலுத்துவதற்கு உகந்தது ராக்கெட் என்பதால் தான் ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்.

ராக்கெட்டின் துணையுடன் விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் எவ்வாறு பறக்கிறது என்பது பற்றியும் மேலும் விண்ணுக்குச் சென்ற பிறகு ராக்கெட் எவ்வாறு செயற்கைக்கோள்களைத் தனியாக விடுவிப்பது என்பதும், அவ்வாறு விடுவித்த செயற்கைக்கோள்கள் எவ்வாறு தனியாகப் பயணிக்கும் என்றும் மேலும் அவைகள் தனக்குக் கொடுத்தும் வேலையினை எவ்வாறு செய்கிறது என்பது வரை மிகத் தெளிவாகவும் எளியமுறையில் கொடுத்துள்ளார்.

நாம் பயன்படுத்தும் தொலைப்பேசி முதல் தொலைக்காட்சி, வானிலை சார்ந்த முன்னறிவிப்புகள் என பல்வேறு வகையில் செயற்கைக் கோள்கள் நமக்குத் தகவல்களை மிகத் துல்லியமாகத் தருகிறது. இவை இன்றைய வாழ்வியலில் மிக அத்தியாவசியமாகிப்போன பல்வேறு தேவைகளை நமக்குக் கொடுக்கிறது என்பதில் வியப்பேதுமில்லை.

பொதுவாக இந்த நூல் விண்வெளியில் ஏற்படும் வியப்பான காரியங்கள், விசித்திரமான பல்வேறு விஷயங்கள் மற்றும் வினோதமான நிகழ்வுகள் என வாசிக்கும் நமக்குத் தொய்வில்லாமல் இருக்கம் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு ஒவ்வொரு நாடும் தனது அண்டை நாடுகளையும் எதிரி நாடுகளையும் கண்காணிக்கிறது அதற்கு எவ்வாறு இந்த ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்கள் உறுதுணையாக உள்ளது என்பது பற்றிய     விரிவான விவரங்களைச் சொல்கிறது.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

23 செப்டெம்பர் 2022

Friday, 23 September 2022

மான்ஹாட்டன் ரகசிய திட்டம்

மான்ஹாட்டன் ரகசிய திட்டம்  

ஆசிரியர் : ஜெயராஜ் முத்துவேல் 

கிண்டில் பதிப்பு

விலை ரூபாய் 49 

பக்கங்கள் 58


அறிவியல் வளர்ச்சி நமக்கு பெரும்பாலான வகையில் நன்மைகளைச் செய்திருந்தாலும் அதன் மற்றொரு பக்கம் ஈடு செய்ய முடியாத பல்வேறு தீமைகளைத் தரக்கூடிய வகையில் தான் இருக்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மைதான். 

அந்த வகையில் இந்த சிறிய நூலின் வழியே ஆசிரியர் மிகவும் தெளிவாகவும் எளிய முறையிலும் நாம் தெரிந்து கொள்ளக் கூடிய வழியில் "மான்ஹாட்டன் திட்டத்தின்" ரகசியத்தினை விவரிக்கிறார்.

முதலில் எல்லோரும் அறிவியல் பற்றித் தெரிந்து கொள்வது கொஞ்சம் கடினமானது தான் என்பதைத் தெரிந்துகொண்ட ஆசிரியர் (ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் என்பது கூடுதல் தகவல்) எப்படி தனது  மாணவர்களுக்கு ஒரு கருத்தினை சொல்லிக்கொடுக்க முடியுமோ அதுபோலவே இந்த புத்தகத்தின் வழியே,  வாசிக்கும் நமக்கெல்லாம் அறிவியலின் பல்வேறு வார்த்தைகளை மிகச் சாதாரணமான உதாரணங்களுடன் சொல்கிறார்.

அணு என்றால் என்ன என்பதில் இருந்து, அணுக்கரு, துகள்கள், கதிரியக்கம், கதிர்வீச்சு, அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு ஆற்றல் என ஒவ்வொன்றாய் தெளிவாக விவரிப்பதுடன்       அணு - வினை கண்டு பிடித்தவர் யார், ஏன் கண்டுபிடித்தனர், அதனால் என்ன விதமான பயன்கள் என பல்வேறு வகையானமிகவும் சுவாரஸ்யமான விவரங்களை நமக்குத் தெரியப்படுத்துகிறார்.

உலகின்முதலில் அணுகுண்டு கண்டுபிடித்தது முதல் அதனைக் கண்டுபிடிக்கக் காரணமானவர்கள் யாரென்றும், ஏன் அவர்கள் அதனை ரகசியமாக கண்டுபிடித்தனர் என்பதும் மற்றும் அந்த ரகசியமாகக் கண்டுபிடித்த  முதல் அணுகுண்டுவினை எங்கே சோதனை செய்தார்கள், சோதனை செய்த  இடத்தின் தகவல்கள் என பல்வேறு விவரங்களைத் தெரியப்படுத்துகிறார். 

வெளி உலகிற்கே தெரியாமல் முதல் முதலில் கண்டுபிடித்த அணுகுண்டு அதனை வெற்றிகரமாகச் சோதனை செய்தது மட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நாட்டின் மீது இந்த அணுகுண்டுகளை வீசியது வரை என அணைத்து விவரங்களும் இந்த சிறிய புத்தகத்தின் வழியே ஆசிரியர் தெரியப்படுகிறார்.   

மொத்தத்தில் இந்த சிறிய புத்தகம் மிக அருமையான தகவல்களை கொண்டிக்கிறது. இது போன்ற தகவல்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கிய ஆசிரியருக்கு நன்றி.


அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

22 செப்டம்பர் 2022 

Sunday, 21 August 2022

ஒற்றை வைக்கோல் புரட்சி - வாசிப்பனுபவம்

ஒற்றை வைக்கோல் புரட்சி - வாசிப்பனுபவம்  

ஆசிரியர் : மசானபு ஃபுகோகோ 

தமிழில் பூவுலகின் நண்பர்கள்


இந்த புத்தகம் ஒரு இயற்கை விவசாயியான நூலாசிரியர் ஃபுகோகாவின் வாழ்வியல் தத்துவம் குறித்தும் மேலும் தனது நீண்ட கால சொந்த  அனுபவங்களிலிருந்து வெளிவந்து அற்புதமான கருத்துக்களையும் அதில் இருக்கும் உண்மையினையும் உள்ளடக்கி இருக்கிறது.  இந்த நூலின் ஆசிரியர் 95 வயது வரை வாழ்ந்து தன்னால் முடிந்தவரை இயற்கை விவசாயத்தின் பெருமைகளையும் மேலும் மக்களிடம் அவற்றை ஊக்குவித்துக்கொண்டே தான் இருந்தார். ஜப்பான் நாட்டைச் சார்ந்த இவர் தனது தத்துவ ஆராய்ச்சியின் விளைவுகள் , காரணிகள் , செயல் முறைகள் என ஒவ்வொன்றையும் உரையாடுதலே இப்புத்தகம் . இந்த புத்தகத்தினை 
தமிழில் பூவுலகின் நண்பர்கள்  மிக தெளிவாகவும் நேர்த்தியாகவும் மொழிபெயர்த்துள்ளனர்.

"ஒற்றை வைக்கோல் புரட்சி" நீண்ட நாட்களாக வாசிக்கவேண்டும் என்று வைத்திருந்த புத்தகம். இந்த வருடம் வாசிப்பு போட்டிக்கு வாசித்த ஆக வேண்டும் என்று வாசிக்க ஆரம்பித்தேன், இதென்ன  ஒரு வைக்கோலை வைத்துக்கொண்டு ஒரு புரட்சி என்று எதோ வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆரம்பத்தில் தோன்றியது  ஆனால் வாசிக்க வாசிக்க  இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் நாம் தொலைத்து விட்ட இயற்கையினையும், இயற்கை சார்ந்த உணவுகள் மற்றும் வழக்கை முறையினை நாம் திரும்பிப் பார்க்கும் விதமாக இருக்கிறது.  ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம் என்று தான் சொல்லவேண்டும்.

தலைப்பு தான் ஒரே வைக்கோல் ஆனால் புத்தகத்தின் உள்ளே வைக்கோல் போர் எப்படி இருக்கிறதோ அதைப்போலவே தான் பல்வேறு விதமான கருத்துக்களையும் மற்றும் இயற்கை பற்றிய எண்ணற்ற உண்மைகளையும் ஒவ்வொரு வைக்கோலுக்குள்ளும் வைத்துச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

ஆரம்பத்தில் அரசாங்க பணியிலிருந்த ஆசிரியர், தனது அரசாங்க பணியினை விட்டுவிட்டு, இயற்கை விவசாயத்தின் மீதுள்ள ஒரு ஈர்ப்பினால் தனது சொந்தமான நிலத்தினுள் இயற்கை விவசாயம் மேற்கொள்கிறார். அவ்வாறாக அவர் ஆரம்பித்த இயற்கை விவசாயம் இன்று அவரின் பெயரினை உலகுக்குக் கொண்டுசென்றுள்ளது. 

இவர் இயற்கை விவசாயம் பற்றி நான்கு முக்கியமான விவரங்களைப் பகிர்ந்துகொள்கிறார். 

1. நிலத்தினை உழவே  தேவையில்லை 

2. வேதியியல் செயற்கை உரங்கள் தேவையில்லை 

3. தழையுரம் போடத் தேவையில்லை 

4. பூச்சிக்கொல்லி தெளிக்கத் தேவையில்லை 

என்ற இந்த நான்கும் இயற்கை விவசாயத்திற்கு எதிரானது என்கிறார். கொஞ்சம் நாமும் யோசித்துப் பார்த்தால் இதில் மறைந்திருக்கும் உண்மையும் பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் வணிகமும் புரிந்த கொள்ள முடியும் மேலும் இன்று நம் கையில் இருக்கும் நிலங்கள் எல்லாமே செயற்கையான மண்ணாகத் தான் இருக்கிறது.

பொதுவாக எங்கள் கிராமத்தில் இருக்கும் ஆற்றங்கரையில் தப்பி விழுந்த ஒரு நெல் முளைத்து மிகவும் செழிப்பாகக் கதிர் விட்டு அதிகமான நெல்மணிகளைக் கொண்டிருக்கும். மிகவும் வீரியமானதாகவே இருக்கும். ஆனால் அது வளர்ந்த இடத்தில் இருக்கும்  மண் உழவில்லை, அதில் ரசாயனம் உரமில்லை, பூச்சிக்கொல்லி இல்லை ஏன் யாரும் அதை வளர்க்கக்கூட இல்லை ஆனால் அது தானாகவே இயற்கையின் கொடையினால் குதுகுலமாக வளர்ந்து நிற்கிறது. இதுதான் ஆசிரியர் சொல்லவரும் இயற்கை நிலம் பற்றிய பேருண்மை.  

அதனடிப்படையில் தான் ஆசிரியர் சொல்கிறார் நிலத்தினை உழுவதால் நிலத்திற்கும் அடியில் இருக்கும் வெகுநாட்களாக இருக்கும் களையின் விதை மேலே வருகிறது பிறகு அது  முளைத்து நாம் பயிரிடும் பயிருக்கும் இடையூறாக வந்துவிடுகிறது. அதனால் வளர்க்கும் விவசாயம் பாதிக்கிறது. 

உலகப் போர்க் காலத்தில் போர்களுக்காகத் தயாரித்த ரசாயனத்தினை போருக்குப் பின் எப்படி சந்தை படுத்துவது என்ற தேடிக்கொண்டிருந்த வளர்ந்த நாடுகள் அந்த ரசாயனத்தினை வளரும் நாடுகளில் விவசாயத்திற்கு உரமாகப் பயன்படுத்தலாம் என்ற ஒரு குறுக்கு வழியினை கண்டுபிடித்து அதன் அடிப்படையில் உலகத்தினையே இன்று ரசாயன கலந்த மண்ணாக மாற்றிய ஒரு கொடூரமான இயற்கையின் மீதானதொரு வன்முறையினை நிகழ்த்தியிருக்கிறது இன்றும் நிகழ்த்திக்கொண்டேதான் இருக்கிறது. இன்றைய விவசாயம் ரசாயனம் இல்லாமல் விவசாயம் இல்லை என்ற ஒரு பரிதாபகரமான நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இயற்கை நமக்குக் கொடுத்த நிலத்தினை நம் சுயநலத்திற்காக நாம் அனைவருமே அந்நிலத்தினை  மாசுபடுத்தவிடுகிறோம். உணவு உற்பத்தி தேவைதான் ஆனால் அதற்காக விஷத்தினை உணவாக நாம் பயிரிடுகிறோம்.  

நானும் ஒரு விவசாயிதான், ஒவ்வொரு நாளும் விதைத்த நெல் மீண்டும் பன்மடங்காகத் திரும்பி வருவதற்குள் எத்தனை எத்தனை இடையூறுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. எங்கள் பாட்டி காலத்திலிருந்த அதே நிலம் தான் இன்றைக்கும் இருக்கிறது. ஆனால் அதே மண் இப்போது இல்லை. ரசாயனம் கலந்துபோய் இப்போது சக்தியில்லாத ஒரு மண்ணாகத் தான் இருக்கிறது.

நாம் ஒவ்வொரு முறையும் இடும் ரசாயனம் உரம் முழுவதும் செரிப்பதற்குள் கடலுக்குள் போய்ச் சேர்ந்துவிடுகிறது. கடலில் சேர்ந்த இந்த ரசாயனம், கடலில் இருக்கும் கடற்பாசி மற்றும் பிளாங்டன் போன்ற நுண்ணுயிர்களுக்கு  உணவாக மாறுகிறது. இப்படியாக ஜப்பானின் நீர் மாசுபடுவதைச் சுட்டிக் காட்டுகிறார். இது ஜப்பான் மட்டுமில்லை உலகெங்கிலும் நீராதாரங்கள் இப்படித்தான் மாசுபட்டுக் கிடக்கிறது.  

ஜப்பான் நாட்டில் எவ்வாறு இயற்கை விவசாயம் செயற்கை விவசாயமாகக் காலப்போக்கில் மாறிப்போனது என்பதைப் பற்றியும், மீண்டும் எப்படி மக்களிடம் இயற்கை விவசாயத்திற்குப் பற்றிய நன்மைகளைச் சொல்லி  மாற்ற முற்பட்டார் என்பதையும் மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.

இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப் படும் காய்கறிகள் மற்றும் பழங்களை   மக்கள் வாங்கும்போது  அது கண்ணிற்கு அழகாகவும் மேலும் பெரியதாகவும்  இருக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள் ஆனால் இயற்கை விவசாயத்தில் விளைவிப்பது பளபளப்பாக இருக்காது. அதனால் பெரும்பாலும் மக்கள் விரும்புவதில்லை என்பதைப் பற்றி அவர்    ஆதங்கப்படுகிறார்.

மேலும் இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்கள் என்று சொல்லி அதிக விலைக்கு மக்களிடம் விற்பது குறித்து வேதனைப்படுவதுமட்டுமின்றி அவர் வாடிக்கையாகக் கொடுத்துவந்த ஒரு வியாபாரிக்குத் தனது விளைபொருள்களைக் கொடுப்பதை நிறுத்திவிட்டார்.

நாம் எப்போதுமே இருப்பதைத் தொலைத்து விட்டு இல்லாத ஒன்றுக்கு விலை கொடுத்து வாங்க முற்படும் முற்போக்கு கூட்டம் என்று சொல்லிக்கொண்டு திரிவதில் தான் பெரும்பாலும் நமது கௌரவமும் மேன்மையும் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக இந்த புத்தகத்தினை ஒரு முறை வாசித்துப்பார்த்தால் புரிந்துவிடும் நாம் எங்கே இன்று நிற்கிறோம் மேலும் எங்கோ போய் நிற்கப்போகிறோம் என்பதைப் பற்றித் தெளிவா உணர்ந்துகொள்ள முடியும்.  

பொதுவாக விவசாயம் என்பது ஒரு தொழில் அல்ல, அது மக்களோடு ஒன்றிய அவர்களின் வாழ்வியலில் ஒன்று என்ற இயற்கைத் தத்துவத்தை தனது சொந்த வாழ்க்கை முறையின் ஊடாக அவருக்கு நிகழ்ந்தேறிய பல்வேறு  நிகழ்வுகளையும், அன்றாடப் பணிகள் வழியே நமக்கு சொல்லிச்செல்கிறார் ஃபுகோகா. 

நமது நாட்டில் எவ்வாறு காந்தியம் பின்பற்றப்படுகிறதோ அதைப்போல தான் ஃபுகோகாவின் வாழ்வியல் தத்துவமும்.  ஃபுகோகாவைப் பின்பற்றும் பல்வேறு மாணவர்கள் அவருடனே அவரின் தோட்டப் பகுதியில் தங்கி அவர் வாழும் அதே இயற்கை வேளாண்மையில் ஈடுபடுவது மட்டுமின்றி அவர்களும் அவரை போலதொரு வாழ்வியல் முறையினை பின்பற்றுகின்றனர். 

மேலும்  பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இவரது பண்ணைகளைப் பார்வையிடவும், ஆய்வு செய்யவும்  வரும் ஆராய்ச்சி மாணவர்கள் , ஆசிரியர்கள் , கல்லூரிப் பேராசிரியர்கள் என பல அனுபவங்களை ஃபுகோகா நம்முடன் தனது இந்த புத்தகத்தின் வழியே பகிர்ந்துகொள்கிறார்.

மொத்தத்தில்  உழவு உழுவது தான்  விவசாயத்தின் முதல் மற்றும் அடிப்படை என எண்ணி அதற்க்காக டிராக்டர் வாங்கி வைத்திருக்கும்  நமக்கெல்லாம் உழவு என்பதே வீணற்ற வேலை அல்லாமல் ஏன் இயற்கை மண்ணை புண்ணாக்க வேண்டும் என்று கேள்வியினையும் நிலத்தினை புண்படுத்ததே என்றும் சொல்லிச்செல்கிறார் ஃபுகோகா.

இந்த நூலை வாசித்து முடிக்கும்  நாம் முடிவாக ஒன்றை தெரிந்து கொள்ளலாம். நமக்கு கண்முன்னே தோன்றுவது "மாடு கட்டி ஏறு பூட்டி உழவு செய்வதும் இப்போது டிராக்டர் வைத்து ஆழ உழவு செய்வதும்" எந்த விதத்தில் நன்மை பயக்கும் என்பதை உணர்ந்து கொள்ளமுடிகிறது.

ஒற்றை வைக்கோல் வைத்து  இந்த உலகுக்கு ஃபுகோகா விட்ட சவாலை நாம் எல்லோரும் நம் கையில் எடுத்துக்கொண்டால் அவரின் இலக்கான "இயற்கை வேளாண்மை" செய்தால் மீண்டும் ஒரு  "வைக்கோல் புரட்சியையினை" செய்யலாம்.

முடிவாக நாம்  தெரிந்து கொள்ளவேண்டியது, நாம் இன்று செய்யும் விவசாயம் வெறும் ரசாயனம் கலந்த உணவு உற்பத்தியே தவிர வேறென்ன என்று சொல்ல தோன்றுகிறது.  இதுதான் நிதர்சனமான உண்மையும் கூட.


அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

 20 ஆகஸ்ட் 2020

Saturday, 13 August 2022

குருதி ஆட்டம் - வாசிப்பனுபவம்

குருதி ஆட்டம் - வாசிப்பனுபவம்  

ஆசிரியர் : வேல ராமமூர்த்தி 

டிஸ்கவரி புக் பேலஸ் 

பக்கங்கள் 88

விலை ரூபாய் 100


அய்யா வேலராமமூர்த்தி அவர்களின் எழுத்து எப்போதும் குருதியினை மையாகக் கொண்டு எழுதியதாகத்தான் இருக்கும். அப்படித்தான் இந்த குருதி ஆட்டமும் அருமையாகவே அமைந்திருக்கிறது.

ஒரு கதையினை சொல்லும் போது, வாசிப்பவர்களுக்கு தாங்கள் வாசிக்கும் பொழுது எந்த ஒரு தொய்வும் வராமல் வாசிக்க வைக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியருக்கு இருக்கிறது. அந்த வகையில் அய்யாவின் எழுத்து நடை கொஞ்சம் கூட குறைவே இல்லாமல் இருக்கிறது விறுவிறுப்புடன் இருக்கிறது.

ஆப்பநாடும், பெருநாழியும் கொண்டுள்ள மண்ணின் வாசனையும்  கூடவே அரியநாச்சியும்  இல்லாமல் இருக்காது இவரின் கதைகள்.

ஒரு பக்கம் பதினேழு வருடமாக நின்றுபோன இருளப்பசாமி கோவிலின் திருவிழா ஏற்பாடுகள் நடக்கிறது.

மற்றொரு பக்கம், வெள்ளையர்களின் வெறியால் நாடுகடத்தப்பட்டு மலேயா காட்டுக்குள்  வந்து சேர்ந்த  அரியநாச்சி. தனது  வனவாசத்தில் ஒவ்வொரு நாழியினையும் தனது குடும்பத்திற்கு நேர்ந்த அநீதிக்குப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது சகோதரரின் மகனை வளர்த்துக்கொண்டு கூடவே அவனுக்குப் பழிவாங்கும் வன்மத்தினையும் ஊட்டி வளர்கிறாள்.

மற்றொரு பக்கம், தனது நண்பனைக் கொன்றவர்களைப் பழிவாங்கத் தக்க சமயத்திற்கு எதிர்பார்த்துக்கொண்டு காட்டுக்குள் தனது மகளுடன் வனவாசம் செய்யும் இருளப்பசாமி கோவிலின் பூசாரி தவசிப்பாண்டி.

வெள்ளையம்மா கிழவி தனது மகளைப் பறிகொடுத்துவிட்ட பிறகு மகளின் கொலைக்குக் காரணமாக இருந்த இந்த மண்ணிலே அவளின் குழந்தை இருக்கக்கூடாதென்ற வைராக்கியத்துடன் சென்னைக்கு வந்தவள் தான் ஊர்ப்பக்கம் திரும்பவேயில்லை.

அந்நிய காற்று உள்ளே புகாமல் அரண்போல இருக்கும் அரண்மனையின் உள்ளே இத்தனைக்கும் காரணமான  உடையப்பன் உல்லாசமாக வளம் வருகிறான்.

அத்தனை பேரையும் காவுவாங்கிய உடையப்பனின் தலையை  காவுவாங்க பதுங்கியிருக்கும் புலிகள் எல்லாம் ஒன்றுகூடி ஒரே இடத்திற்கு வந்துசேரும் ஒரு நிகழ்வாக அமைந்துவிடுகிறது இருளப்பசாமி கோவிலின் திருவிழா.

ஆப்ப நாட்டின் மண் வாசனையும் அதனிலே உறங்கிக்கொண்டும் இறுக்கிக்கொண்டு இருக்கும் குருதியின் வாசனையும் கொஞ்சம் குறையாமல் அய்யாவின் எழுத்து விரிந்து செல்கிறது.

மலேயாவில் இருந்து கப்பல் வழியாக ஆப்ப நாட்டுக்கு வரும் அரியநாச்சி வரும் வழியிலே தந்து சகோதரனைக் கொலைசெய்த வெள்ளைக்கார ஸ்காட்டை கொலை செய்து தனது பழியினை தீர்த்துக்கொள்ளும் விதம் அரியநாச்சியின் வீரத்தினை அருமையாகச் சொல்லிச்செல்கிறது.

திருவிழா என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்து விடலை பசங்களுக்கும் இளவட்ட குமாரிகளுக்கும் புதிதாக நடைபெறுகிற திருவிழா கொடுக்கும் கொண்டாட்டம், கூடவே குழந்தைகள் பெரும் குதுகுலம் என ஆப்ப நாட்டின் தெருக்களில் அரங்கேறும் திருவிழா தோரணைகள் அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இருளப்பசாமிக்கு நேர்ந்துகொண்ட நேர்த்திக்கடனை இதைவிட வேறெப்படி சொல்லுவது. "சாதாரண தலைவலி, காய்ச்சலுக்கு 'ஒத்த பொங்கல்'. கனத்த நோவுக்கு 'ரெட்டை பொங்கல்'. வெட்டுக்குத்து கேஸு விடுதலைக்கு ஒன்று கொலை வழக்கு ரெட்டை கிடாய் என நீண்டுகொண்டே செல்லும் நேர்த்திக்கடன்களைக் கொடுக்கவே இந்த திருவிழா நடைபெறுகிறது.

வீதியெங்கும் வண்ணக் கோலங்களால் அலங்கரித்த குமரிப்பெண்கள் ஒருபக்கம் நீண்டநாட்களுக்குப் பிறகு நடக்கும் திருவிழாவின் வைக்கோல் பிரி விளையாட்டு தயாராகிக்கொண்டிருக்கும் இளவட்ட பசங்கள் ஒருபக்கம் என ஆப்ப நாடே திருவிழா கோலமிட்டு குதுகுலமாய் இருக்கிறது ஒருபக்கம்.

இருளப்பசாமிக்கு பலியாக போவும் 21 கிடாய்கள் மாலையும் கழுத்துமாகத் தேவரின் அருவாளைப் பார்த்துக்கொண்டிருக்கிறது கூடவே உடையப்பனும் அவனின் கூட்டாளி பெருநாழியின் முதலாளியும் தங்கள் தலையும் ஆடுதலைகளுடன் உருளப்போவது தெரியாமல் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

அனைவரையும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கொண்டுவந்துவிடுகிறார் ஆசிரியர்.  அனைத்து நிகழ்வுகளையும் ஒருசேர ஒரே நேர்கோட்டில் கொண்டுவருவது மட்டுமல்லாமல் இறுதியில் நடக்கும் திருவிழாவில் இவர்களையெல்லாம் கொண்டுவந்துவிடுகிறார் அய்யா. 

          

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

13 ஆகஸ்ட் 2022