Friday, 17 September 2021

இந்திய நாத்திகமும் மார்க்க்சியத் தத்துவமும் - வாசிப்பனுபவம்

 இந்திய நாத்திகமும் மார்க்க்சீயத் தத்துவமும் 

ஆசிரியர் : நா. வானமாமலை 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 60


இந்த நூல் ஆத்திகத்தினையும் அதற்கு ஈடாக எவ்வாறு நாத்திகமும் மார்க்க சீயமும் தனது கருத்துக்களைப் பரப்புகிறது என்பது பற்றிய ஒரு  ஆய்வு நூலாகும். ஆசிரியர் நா.வானமாமலை அவர்களின் இந்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூலில் ஐந்து கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தியத் தத்துவ சிந்தனை முழுவதும் கடவுள் கொள்கையை? என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கும் முதல் கட்டுரையில் இந்தியாவில் பல்வேறுபட்ட மதகுருமார்கள் "இந்தியத் தத்துவம் ஆன்மீகமானது" அதன் உள்ளார்ந்த ஆன்மீக வலிமைதான், காலத்தை வென்று வரலாற்றில் தோன்றிய பல்வேறு ஆபத்துகளை எல்லாம் கடந்து இந்தியா இன்றளவும் நிலைத்து நிற்கிறது என்கிறார்கள். ராதாகிருஷ்ணன் அவர்கள் "இந்தியத் தத்துவங்கள் அனைத்தும் வாழ்க்கையின் மகத்தான உண்மையான கடவுளை அறிவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார் அந்த கூற்றை ஆய்வு செய்த ஆசிரியர் இவரின் கருத்துக்கள் எல்லாம் இந்தியாவில் ஒரு சிறுபான்மையினரின் கொள்கைகளே என்றும் சித்தனை உலகத்தில் மிகவும் சிறப்பான தருக்க வாதத்தில் "கடவுள் இன்மை"க் கொள்கையை இந்தியாய் தத்துவங்களில் பெரும்பாலானவை பேசுகின்றன என்கிறார்.

ஆத்திகர்களின் நோக்கமும் அதற்க்காக அவர்கள் கொண்டிருந்த  அறிவு எல்லாம் நாத்திகர்களின் கொள்கைகளைப் புரட்டுவதிலே குவிக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் இவர்கள் "கம்யூனிசத்தினையும்" ஒரு மதம் என்று மக்களிடம் சொல்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் தன்னுடைய கொள்கைக்கு எதிரான கொள்கையுடையவர் சொல்லுகிற சொற்களை தங்கள் கொள்கையிற்குச் சாதகமாகப் பொருள் மாற்றிக் கூறுவதும் இவர்களின் ஒரு விதமான புரட்டே என்கிறார்.

கடவுள் என்ற எண்ணம் மக்களிடையே தோன்றிய காலத்திலே நாத்திகமும் அதாவது கடவுள் மறுப்பு பற்றிய எண்ணமும் மக்களிடையே தோன்றியிருக்கிறது என்கிறார் ஆசிரியர்.    கண்ணாலே காணாததை நம்பாதே என்ற ஒரு புதிய குரலும் அப்போதே தோன்றியதுதான் இது அக்காலத்து நாத்திகம் என்கிறது.

இயற்கை வாதிகள் தங்கள் கூற்றுகளை, "பொருள்களின் மாற்றங்கள் அவற்றில் உள்ளார்ந்திருக்கும் தன்மைகளாலே நிகழ்கின்றன" என்றும் எவ்வாறு களிமண் சட்டியாக மாறுகிறது அதுபோலவேதான் ஒவ்வொரு உயிர் மற்றும் பொருள்களின் தன்மைகளை அதன் உள்ளிருக்கும் தன்மையே பொறுத்துத்தான் மாற்றம் கொள்கிறது என்று கூறுகின்றனர் என்கிறார்.

பண்டைய இந்திய நாத்திகம், கிரேக்க நாத்திகம்  மற்றும் தற்கால ஐரோப்பா நாத்திகம் என இவர்களின் நாத்திகத்தில்   கொண்டிருந்த  பல்வேறு  தத்துவ குறைபாடுகளை மார்க்சீயம்தான் களைந்து போட்டு  அதனை ஒரு முழுமையாக்கியிருக்கிறது என்கிறார்.    மனிதர்கள் தங்கள் தேவைகளை உணர்ந்து அவற்றைத் தானாகவே உற்பத்தி செய்யத் தொடங்கினர் அப்போது ஏற்பட்ட சில வளர்ச்சி மாற்றத்தில் சிலர் கடின வேளைகளில் செய்யாமல் தங்களை மதகுருவாகப் பாவித்து கீழ்த்தட்டு மேல்தட்டு என்ற பாகுபாட்டினை உண்டாக்கினார்கள். அதற்கு தங்களுக்குத் தேவைப்பட்ட ஒரு பலமாகவும் வழியாகவும் சிறந்த வலிமைமிக்க  சாதனமாகக் கடவுள் கொள்கையினை பின்பற்றினார்கள் அதுமட்டுமல்லாமல் சில வர்ண காரர்கள் வேலை செய்யக்கூடாது என்றும் அதற்காகச் சான்றுகளையும் உருவாக்கினார்கள் என்று குறிப்பிடுகிறார். பெரியார் ஏற்படுத்திய நாத்திகம் சிந்தனைகள் கடவுள் மறுப்பைப் பற்றி இல்லாமல் அதாவது மார்க்சியத்தினை போல அல்லாமல் வெறும் பார்ப்பன எதிர்ப்பை மட்டுமே பின்பற்றினார் அதுவே அவரின் கொள்கையின் மிகப் பெரிய குறைபாடாகத் தெரிகிறது என்று குறிப்பிடுகிறார்.        


நல்லதொரு ஆய்வுக்கட்டுரைகளை கொண்ட சிறப்பான புத்தகம். வாசித்து தெரிந்துகொள்ள வேண்டிய அதிக விவரங்கள் கொண்டிருக்கிறது இந்த புத்தகம்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

17 செப்டெம்பர் 2021  


 

Wednesday, 15 September 2021

முத்துப்பட்டன் கதை - வாசிப்பனுபவம்

முத்துப்பட்டன் கதை 

ஆசிரியர்: நா. வானமாமலை 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 56


முகத்துப்பட்டன் கதை நாட்டார் கதைகளில் ஒரு கதையாக வாசித்தது. இந்த புத்தகம் முழுவதும் இந்த ஒரு கதையினை பற்றியே பேசுகிறது. ஆசிரியர் நா.வானமாமலை அவர்களின் ஆராய்ச்சி நூலான இந்த நூல் இந்த கதையின் எல்லா கோணத்தையும் பரிசீலித்துத் தொகுத்துள்ளார்.

சாதி என்ற ஒன்று அன்று தொட்டு இன்று வரை நம்மில் புரையோடிக்கிடக்கும் ஒரு நோய்தான். இதற்காகப் பலியானவர்கள் ஏராளம் இன்னும் பலியாகப்போகிறவர்கள் ஏராளம் என்றே சொல்லத்தோன்றுகிறது. நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் தெரிந்துகொள்ளமுடிகிறது.

அப்படிப்பட்ட சாதியின் வன்மையால் வந்ததுதான் இந்த "முகத்துப்பட்டன் கதை".  ஒரு பிராமண குடும்பத்தில் ஏழு சகோதரர்கள் பிறக்கின்றனர். இவர்களில் இளையவன் தான் முகத்துப்பட்டன். தனது வாலிப வயதில் மூத்தோர்களிடம் இருந்து பிரிந்து வெளியில் வருகின்றான் அவ்வாறு வரும் அவன், ராமராஜன் என்ற சிற்றரசனிடம் பணிக்குச் சேர்கிறான். 

பிறகு வெகுநாட்கள் கழித்து அவனது சகோதரர்கள் தேடிவருகிறார்கள் அப்போது அவன் ராஜாவிடம் பணியில் இருப்பது தெரிந்து கொண்டு அவனிடம் வேண்டுகின்றனர். எங்கள் கூடவே வந்துவிடு உனக்குப் பெண்பார்த்து வைத்திருக்கிறோம் கல்யாணம் செய்துவைக்க என்று கூறி அழைக்கின்றனர்.

ராஜாவிடம் அனுமதி பெற்று அவனை அழைத்துச் செல்கின்றனர் கூடவே பொன்னும் பொருளும் வெகுமதியாக அரசனிடம் இருந்து கிடைத்ததையும் எடுத்துச் செல்கின்றனர்.

வழியில் இளைப்பாறுவதற்காக ஒரு இடத்தில் அமர்கின்றனர், பிறகு அங்கிருந்து புறப்பட்டனர் அந்த சமயம் பட்டனுக்குத் தாகம் எடுத்து தண்ணீர் குடிக்க இறங்கினான், அப்போது அவன் காதுகளில் ஒரு இனிமையான கீதம் கேட்டது அதில் லயித்துப்போனவன் அவர்களை நோக்கி என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கேட்கிறான். 

ஆனால் அக்காவும் தங்கையும் நமது திருமணம் நடக்காது ஏனெனில் நீங்கள் வேறுசாதி நாங்களோ சக்கிலியன் சாதி என்றனர். அதே வேகத்தில் அவர்கள் குடிசையில்லை நோக்கி ஓடிவிட்டனர். பின்தொடர்ந்த பட்டதன் களைப்பில் கேழே விழுந்துவிட்டான்.

தகவலறிந்த பெண்களில் தகப்பன் வாளுடன் வருகிறான் அவனை நான் வெட்டி செய்கிறேன் என்று ஆனால் அவன் வந்ததும் மயங்கிக் கிடைக்கும் பட்டனை எழுப்பிவிடுகிறான், இவன் தான் தேடிவந்தவன் என்று தெரியாமல் அவன் வந்த காரணத்தைச் சொல்கிறான். அதற்குப் பட்டன் நான் தான் அந்த பிராமணன் ஆனால் நீங்கள் என்னைக் கொள்ளவேண்டாம் உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்துவையுங்கள் தூவும் ஊரறிய என்று சொல்கிறான்.

நடக்காது என்று சொல்லும் வாலப்பகடை, இது நடக்கவேண்டும் என்றால் நீ சாதி துறந்து பூனுலினை அறுத்து எங்களைப் போல உடையணிந்து இருக்கவேண்டும் என்று சொல்கிறான் அதற்குச் சம்மதம் சொல்லி அண்ணன்களிடம் சொல்வதற்குச் செல்கிறான் ஆனால் அவர்கள் சம்மதிக்காமல் அவனை கல்லறையில் வைத்துப் பூட்டிவிடுகின்றனர் ஆனால் அங்கிருந்து தப்பிவிடுகிறான். பிறகு கல்யாணமும் நடக்கிறது.

அன்றொரு நாள் இரவு அவர்களின் கிடைகளை வன்னியர்கள் வந்து அபகரித்துச் செல்கின்றனர் என்றதும் உடனே விரைந்து சென்று கிடைகளை மீட்டெடுக்கிறான் பிறகு உடலினை கழுவச் சுனையில் வந்து குனிந்து நீரெடுக்கிறான் அப்போது பின்னனிருந்து சப்பாணி அவனைக் குத்திக் கொள்கிறான். அவன் கூடவே சென்ற நாய்கள் விரைந்து வீடு வந்து தகவலைத் தெரிவிக்கின்றது. கணவன் கொலையுண்டதைக் கேட்ட மனைவிகள் அரசனிடம் முறையிட்டு உடன்கட்டை ஏறுகின்றனர். 

அப்படியாக நடந்த இந்த கொடூரத்தின் வழியே இவர்கள் மூவரும் அவர்களின் இரண்டு நாய்களும் தெய்வமாக "சொரிமுத்து அய்யனார்" என்று இன்றளவும் வழிபடுகின்றனர்.  

ஆசிரியர் நா.வானமாமலை அவர்கள் இந்த கதையினை பற்றிய தனது ஆய்வில் கதையின் காலம் எந்த காலத்தினை சார்ந்தது என்றும் அதற்காக அவர் கொடுக்கும் காரணங்கள் என அற்புதமாக ஆராய்ச்சி செய்துள்ளார். அதாவது கி. பி. 400 ஆண்டுகளுக்கு பிறகும் 300 ஆண்டுகளுக்கும் முன்னரும் என்று சொல்கிறார். 

கதையின் உண்மைத்தன்மையினை ஆராய்ந்து இது உண்மையில் நடந்ததா அல்லது கற்பனையா என பல்வேறு சான்றுகளுடன் சொல்லியிருக்கிறார். பொதிகை மலையில் இருக்கும் பட்டவராயின் கோவில் அங்கே வீற்றிருக்கும் முகத்துப்பட்டன் மற்றும் அவனது மனைவிகள் கூடவே அவர்களின் நாய்கள் என அந்த சிற்பம் தத்ரூபமாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

இதில் வரும் கதாபாத்திரங்கள் எனவும் அவர்களின் நிலைகளை எவ்வாறு கதையில் சொல்லியிருக்கிறார்கள் எனவும் எவரையும் இழிவுபடுத்திக் குறிப்பிடாமல் கதை நகர்ந்திருப்பதாவதும் குறிப்பிடுகிறார். முத்துப்பட்டன் படித்தவனும், சாதியினால் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளைக் கண்டு சரிசெய்ய நினைத்தவன் என்றும் சொல்கிறது என்கிறார்.

அச்சுப்பிரதிக்கும் இன்றையளவில் பாடப்படும் வில்லுப்பாட்டுக்கும் சில வேறுபாடுகள் இருப்பதாகவும் அவர்கள் காலத்திற்கேற்றாப்போல மாற்றியிருக்கலாம் என்கிறார்.

மொத்தத்தில் இந்த புத்தகம், ஆசிரியரின் ஒரு விசாலமான பார்வையினை "முகத்துப்பட்டன் கதையின்" மேல் வைத்து ஆராய்ச்சி செய்ததின் விளைவாக நமக்கு ஏராளமான தகவல்கள் கிடைக்கச் செய்துள்ளது. 


ஆசிரியருக்கு நன்றி.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

15 செப்டெம்பர் 2021 

 

   

Tuesday, 14 September 2021

நாட்டார் கதைகள்

 நாட்டார் கதைகள்

ஆசிரியர் : அ. கா.  பெருமாள் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 49


இந்த தொகுப்பில் 15 நாட்டுப்புறக் கதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒரு சமூகத்தின் பண்பாட்டினையும், மூதாதையர்களையும், வணங்கும் தெய்வத்தையும் பற்றிய பழைய கால கதைகள்.

இந்த புத்தகம் என் வாழ்க்கையின் சுமார் 35 வருடங்களுக்கு முன்னாள் என்னை கொண்டுசென்றுவிட்டது என்றே சொல்லவேண்டும். எனது சிறுவயது காலத்தில் தினந்தோறும் இரவு வேளைகளில் பக்கத்துக்கு வீட்டுத் தாத்தாவின் கதைகளைக் கேட்காத நாட்கள் இல்லையென்றே சொல்லலாம் அதுவும் தொல்லை தரும் தொலைக்காட்சி இல்லாத காலம் அக்கம் பக்கத்துக்கு வீட்டுக்காரர்களே உறவு என்று வாழ்ந்த வசந்தகாலம். 

தாத்தா சொல்லும் ஒவ்வொரு கதையும் பல்வேறு பழைய காலத்துக் கதைகளைக் கொண்டிருக்கும். எங்கள் கிராமத்தின் விவசாய நிலத்தின் காவல்  தெய்வமாக வீற்றிருக்கும் முனீஸ்வரன் கோவில் பற்றிய கதைகள் அவர் விவரிக்கும் அந்த கதை பக்குவத்தினை நான் இந்த புத்தகத்தில் இருந்து மீட்டெடுத்தேன் என்றே சொல்லவேண்டும். 

ஆசிரியர் அ. கா. பெருமாள், தமிழகத்தின் முதன்மையான நாட்டார் வழக்கியல் ஆய்வாளர், வரலாற்றுப் பேரறிஞர் மற்றும் இலக்கிய ஆய்வறிஞர் என்ற பெருமைகளுக்குச் சொந்தமானவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.  ஒவ்வொரு மூலையிலும் சிதரி கிடைக்கும் நாட்டுப்புற வழக்காறுகளை மீதுள்ள  ஆர்வத்தின் மூலம் அவற்றைச் சேகரித்து ஆராய்ந்து அதனை நூலக வெளியிட்டுள்ளார்.

அப்படியாக இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும், மிகவும் சிறப்பான கதைகள் தான். பெரும்பாலான கதைகளில் அரசருக்கோ அல்லது ஒரு தம்பதிக்கோ குழந்தை பேறு இல்லாமல் இருக்கிறது அதற்காக அவர்கள் வேண்டுதல்கள் செய்கிறார்கள். இறைவன் இவர்கள் மீது அனுதாபம் கொண்டு குழந்தை வரம் கொடுக்கிறார் ஆனால் உங்களுக்குக் குழந்தை பேறு இந்த ஜென்மத்தில் இல்லை ஆனாலும் தருகிறான் ஆனால் அந்த குழந்தை ஒரு குறிப்பிட்ட வயதில் மரணித்து விடும் என்ற நிபந்தனையுடன் தான் கதைகள் இருக்கிறது. அந்த காலகட்டத்தில் அந்த குழைந்துக்கு ஏற்படும் இறப்பினை மையமாகக் கொண்டு அவர்களைத் தெய்வமாக வழிபட ஆரம்பிக்கின்றனர்.

அனந்தாயி கதையில் குழந்தை பேறு இல்லாமல் வேண்டுதலின் பேரில் ஒரு பெண் பிறக்கிறாள் அவளுக்கு "கிருஷ்ணதம்மைஎனப் பெயரிடுகிறார்கள் ஆனால் இந்த குழந்தைக்குச் சர்ப்ப தோஷம் இருக்கிறது என்கிறார்கள் அதற்காகக் கூடவே ஒரு கீரிப்பிள்ளை வளர்க்கிறார்கள். கீரிப்பிள்ளை அந்த குழந்தையினை பாதுகாத்துவருகிறது, ஒருநாள் பாம்பு குழந்தையினை கடிக்க வருகிறது கீரி பாம்பினை கொன்றுவிட்டு குழந்தையினை பாதுகாத்துவிடுகிறது பிறகு, அப்போது அனந்தாயி வீட்டின் பின்பக்கம் உள்ள  காட்டுக்குக்  கீரை பறிக்கச் சென்றாள், வாயில் ரத்தத்துடன் அவளைப் பார்க்கச் சென்ற கீரியினை பார்த்த அனந்தாயி மகளைக் கொன்றுவிட்டது என்று எண்ணி கீரியினை கொன்றுவிடுகிறாள். பிறகுதான் தெரியாமல்  தான் பாவம் செத்துவிட்டேன் என்று அதற்குத் தண்டனையாக யாத்திரை செல்லவேண்டும் என்றால் ஆனால் அதற்குக் கணவன் அரிகிருஷ்ணன் தானே போய்வருகிறேன் என்று யாத்திரை போகிறான் அங்கே அவனைக் கருநாகம் கொன்றுவிடுகிறது. பிறகு அவளின் உறவினர் செய்த வஞ்சகத்தால் அவள் எல்லாவற்றையும் இழந்து ஒன்றும் இல்லாமல் வேறு ஊருக்குப் பிழைப்பிற்காகச் சென்றாள். போகும் வழியில், தனக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய மணியக்காரனின் மகள் திருமணம் நடக்கிறது  மனதில் ஏற்பட்ட கவலையின் காரணமாக வேதனையறிந்த கடவுளிடம் எங்களை எடுத்துக்கொள் என்று வேண்டுகிறாள் மழை பொழிகிறது சுனை நீர் பெருக்கெடுத்து வெள்ளமாக அந்த ஊரை நோக்கிச் சென்று மணியக்காரன் வீட்டில் புகுந்து அவனின் மகள் மற்றும் மருமகனை இழுத்துச் சென்றது அப்போது அனந்தாயி சடலமாக வந்ததாதல் அங்கு அவளுக்கு "வெள்ளமாரி அம்மன்" என்று வைத்து தெய்வமாக வழிபடுகின்றனர்.

ஆத்திரமுடையார் என்ற கதையில் வரும் தலைவரின் பெயர் தான் இது. நீண்ட நாட்களுக்கு பிறகு திருமணமானவர் ஒரு நாள் அவர் வெளியிலிருந்து வீட்டிற்கு வரும்போது தன்னை கவனிக்காமல் தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்  என்பதற்காகக் கொன்றுவிடுகிறான். மனைவியைக் கொன்ற பாவத்திற்காக எல்லாத்தையும் விட்டுவிட்டு வேறொரு ஊருக்குச் சென்றான்.  பிறகு அந்த ஊரில் ஒரு பண்டாரம் வீட்டில் தண்ணீர் குடிக்கச் சென்றான் அப்போது பண்டாரத்தின் மகளைப் பார்த்து அவளுக்கு ஒரு மாப்பிள்ளை இருக்கிறது என்று சொல்லிவிட்டு மறுநாள் அவனே மாப்பிள்ளையாக வந்தது கோபப்பட்ட கிழவி ஏசுகிறாள். கல்யாணமும் முடிகிறது அந்த நேரத்தில் அந்த ஊருக்குத் திருடர்கள் வருகின்றனர் அவர்களை எல்லாரையும் வென்று ஊரையும் மக்களையும் காப்பாற்றியதற்காக அந்த ஊரே அவரை கொண்டாட ஆரம்பித்தது. நீண்ட நாள் வாழ்ந்து மறைத்த அவரை தெய்வமாக வழிப்பட்டனர்.       

உச்சினி கோவிலின் பூசாரியாக இருந்தவருக்கு ஏழு பெண் குழந்தைகள் அவர்கள் திருமண வயது தாண்டியும் கல்யாணமா செய்யப் பொருளாதாரம் இல்லை இறைவனிடம் வேண்டினான், இறைவன் கனவில் வந்து தங்கம் இருக்கிற இடத்தை சொல்லி எடுத்துக்கொள் என்கிறார். அந்த தங்கத்தை விற்கச் சென்ற போது வெள்ளையர்களின் சோதனையில் அவரை சந்தேகப்பட்டு அவரை கோவிலுக்கே அழைத்துச் சென்றனர். காளி அவர்களை விரட்டி அடித்தது. பிறகு பூசாரி காளி கோவிலினை புதுப்பித்து பூசை செய்தார் கூடவே பெண்களுக்குத் திருமணமும் செய்துவைத்தார்.

கட்டிலாவதானம் கதையில், காட்டிலிருந்த ஒரு மரத்தில் மலையிசைக்கியம்மை   வாசம் இருந்தாள். அந்த மரத்தினை வெட்டி கட்டில் செய்தனர். கோவைக்கொண்ட அவள் அந்த கட்டிலில் உறங்குபவர்களை எல்லாம் கொன்று தீர்த்துவிட்டாள். விவரம் தெரிந்தவுடன் எல்லோரும் சேர்ந்து கட்டிலைச் சுடுகாட்டில் வைத்து எரித்தனர் ஆனால் அதில் ஒரு கால் மட்டும் தெறித்து வந்த வெளியில் மாட்டிக்கொண்டது, மறுநாள் அந்த வழியே வந்தால் நாடாத்தி அந்த கட்டையினை விறகு என்று எடுத்து வந்து வீட்டில் அடுப்பெரித்தாள் அவளையும் கொன்றது. இறுதியில் இசக்கியம்மாளுக்குக் கோயில் கட்டி வழிபட்டனர்.

சிதம்பர நாடார் கதையில் வரும், நாடாச்சிக்கு குழந்தைப் பேறு இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை. எல்லா தலங்களுக்குச் சென்று பலன் இல்லாமல் திரும்பி வரும் வழியில் ஒரு குறத்தியினை பார்க்கிறாள் அவள் குறி சொல்கிறாள், உன் குலதெய்வம் கோவில் சிதிலமடைந்து இருக்கிறது அதனைச் சீர் செய்தால் பேறு உண்டு என்றாள். அப்படியே ஒரு ஆண் குழந்தை பெறுவாய் அவனுக்குச் சிதம்பரம் என்று பெயர் வை, ஆனால் அவன் 28 வயதில் ரூ பிராமண பெண்ணால் இறப்பான் என்றும் சொன்னாள். அதுபோலவே குறிப்பிட்ட காலத்தில் அந்த பிராமண பெண் பாம்புக்கடித்து இறந்துவிடுகிறாள், மயானத்தில் எரிகிற வேளையில் அங்கே வரும் சிதம்பரம் செய்தி கேட்டு அவளைப் பிழைக்க வைக்கிறான் அவள் அவன் கூடவே வருகிறாள். மனம் செய்துகொள்கின்றனர், கற்பகமாகிறாள் பிறகு பிறந்த வீட்டிற்குச் செல்கின்றாள் அங்கே பிராமண உறவினர்கள் சிதம்பர நாடாரைக் கொன்றுவிடுகின்றனர் செய்தியை அறிந்த மனைவியும் நாக்கினை பிடுங்கிக்கொண்டு இறந்துவிடுகிறாள். ஆவியாக பழிவாங்கினார்கள் பிறகு கோவில் எடுத்து வழிபட்டனர்.

தடிவீரசாமி கதை, இந்த கதையில் வரம்பெற்ற வந்த மகனுக்குக் கண்டம் இருக்கிறது. அதுபோலவே ஊர் பெரியவரின்மகளைக் காதல் திருமணம் செய்ததில் ஏற்பட்ட கொலை. கொலையுண்ட மந்திரமூர்த்தி ஆவியாக வந்து பழிவாங்கினான் பிறகு அவனுக்கு கோவில் எடுத்து வழிபட்டனர்.

தோட்டுக்காரி அம்மன், இந்த கதையில் தோட்டுக்காரி என்ற பெண்ணை சிறைபிடித்த காரணத்தினால் ஏற்பட்ட சண்டையில் இழந்தது ஒரு வம்சம். தோட்டுக்காரி தன்னைச் சார்ந்தவர்கள் உள்ளவரும் இறந்துவிட்டார்கள் என்று இறைவனை வேண்டி நெருப்புக்குழி வேண்டினாள் அதில் பாய்ந்து உயிர்நீத்தாள் அப்போது அங்கு வந்த குமரப்பனும் கூடவே விழுந்தாள். தோட்டுக்காரி தெய்வமானாள்.

இதுபோலவே இடம்பெற்ற அதிக கதைகளில் பெண்ணுக்காகவும், சாதிக்காகவும் அழிந்த வம்சங்கள் ஏராளம் அவ்வாறு ஏற்பட்ட கொலைகள் அழிவுகள் என இறுதியில் எல்லாருக்கும் ஒரு விதத்தில் தெய்வமாக இருந்து அருள்பாலிக்கின்றனர்.

முகத்துப்பட்டன் கதையில், ஒரு பிராமணன் சக்கிலியப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியில் ஏற்பட்ட கொலை அதற்காக உடன்கட்டை ஏறின மனைவிகள் இன்று "சொரிமுத்து அய்யனார்" என அருள்பாலிக்கிறார்.

வன்னியடி மறவன் கதையிலும் மனைவிக்குக் குழந்தை இல்லாமல் வெளியேறுகிறாள் அவளுக்கு வேறொருவரிடம் வாழ்ந்து  குழந்தைகள்  பிறக்கிறது. அந்த குழந்தைகள் வளர்ந்து பிறகு திருமண வேண்டி வரும் நேரத்தில் சாதியின் பெயரில் இவர்கள் கள்ளர் வேலை செய்யவேண்டி நிர்ப்பந்தம் வருகிறது அப்போது அவர்களைக் கொலைசெய்யப்படுகிறார்கள். இவர்களுக்குக் கோயில் கட்டி வழிபட்டனர்.

வெங்கல ராசன் கதையிலும் இரண்டு பெண்களால் ஏற்பட்ட காரணத்தால் வம்சம் அழிந்து போகிறது அதற்குக் காரணமாக இருந்தவர்களை இவர்கள் பழிவாங்குகின்றனர். இதை அறிந்துகொண்ட மன்னர் கோவில் கட்டி வழிபட்டார்.


அன்புடன்.

தேவேந்திரன் ராமையன் 

14 செப்டெம்பர் 2021         

Saturday, 11 September 2021

திருவிளையாடல் புராணம்

திருவிளையாடல் புராணம் 

சிவபெருமான் திருவிளையாடல் கதைகள்  

ஆசிரியர் : ரா. சீனிவாசன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 208


 
திருவிளையாடல் என்ற இந்த புராணம் மொத்தம் 64 படலமாக பிரித்து ஒரு பெரிய கதைகளை சொல்கிறது. 1. இந்திரன் பழி தீர்த்த படலம் 2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் 3. திருநகரம் கண்ட படலம் 5. திருமணப்படலம் உலகம் 6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் 7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் 8. அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம். 9. எழுகடல் அழைத்த படலம் 10. மலையத்துவசனை அழைத்த படலம் 11. உக்கிரகுமாரன் திரு அவதாரப்படலம் 12. உக்கிரகுமாரனுக்கு வேல் வளை செண்டு கொடுத்த படலம் 13. கடல் சுவற வேல் விட்ட படலம். 14. இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம் 15. மேருவைச் செண்டால் அடித்த படலம் 16. வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம் 17. மாணிக்கம் விற்ற படலம் 18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் 19. நான் மாடக் கூடல் ஆன படலம் 20. எல்லாம் வல்ல சித்தர் ஆன படலம் 21. கல்லானைக்குக் கரும்பு அருத்திய படலம் 22. யானை எய்த படலம் 23. விருத்த குமார பாலரான படலம் 24. மாறி யாடின படலம் 25. பழியஞ்சின படலம் 26. மாபாதகம் தீர்த்த படலம் 27. அங்கம் வெட்டின படலம் 28. நாகம் எய்த படலம் 29. மாயப் பசுவை வதைத்த படலம் 30. மெய்க் காட்டிட்ட படலம் 31 உலவாக்கிழி அருளிய படலம் 32. வளையல் விற்ற படலம் 33. அட்டமாசித்தி உபதேசித்த படலம் 34. விடை இலச்சினை இட்ட படலம் 35. தண்ணீர்ப்பந்தல் வைத்த படலம் 36. இரசவாதம் செய்த படலம் 37. சோழனை மடுவில் வீட்டிய படலம் 38. உலவாக் கோட்டை அருளிய படலம் 39. மாமனாக வந்து வழக்குரைத்த படலம் 40. வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய படலம் 41. விறகு விற்ற படலம் 42. திருமுகங் கொடுத்த படலம் 43. பலகையிட்ட படலம் 44. இசைவாது வென்ற படலம் 45. பன்றிக் குட்டிக்குப் பால் கொடுத்தபடலம் 46. பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம் 47. கரிக்குருவிக்கு உபதேசஞ் செய்த படலம் 48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம் 49. திருவாலவாயான படலம் 50. சுந்தரப் பேரம்பு எய்த படலம் 51. சங்கப் பலகை தந்த படலம் 52. தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் 53. கீரனைக் கரை ஏற்றிய படலம் 54. கீரனுக்கு உபதேசித்த படலம் 55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் 56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் 57. வலை வீசின படலம் 58. திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் 59. நரி பரியாக்கிய படலம் 60 பரி நரியாகிய படலம் 61. மண் சுமந்த படலம் 62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம் 63. சமணரைக் கழுவேற்றிய படலம் 64. வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்.

இந்த 64 படலங்களும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பான கருத்தினை சிவன் காட்சியளித்து நன்னெறியினை சொல்கிற வழியாகக் கதைகள் அமைந்திருக்கின்றது.  மொத்தம் 64 படலத்தினையும் இங்கே பகிர்ந்தால் அது இன்னொரு புராணமாகவே இருக்கும் அதனால் ஒரு சில படங்களை மற்றும் இங்கே பதிவிடுகிறேன்.

இந்திரன், தேவர்களிடம் அவமதிப்பாக நடந்துகொண்டதும், இந்திரனுக்குத் தண்டனை கிடைக்கிறது கூடவே அணிவது யானையும் மண்ணுலகில் சென்று காட்டு யானையாக மாறிவாழவேண்டும்  என்றும் அவ்வாறானா வேளையில் யானை மூன்று கோயில்களை ஏற்படுத்தியிருந்தது அந்த கோயில்கள் பக்தர்கள் வழிபடத் தொடங்கினார்கள்.

பாண்டிய மன்னர்கள் ஒவ்வொருவரும் ஒரு விதமான வகையில் ஈசனின் திருவிளையாடலில் பங்கெடுத்துள்ளார்கள் என்று சொல்கிறது கதை. காஞ்சன மாலை - மங்கையர்க்கரசியாக்கத் தடாதகைப் பிராட்டிக்குச் செய்யும் உபாயம்.    பல்வேறு தலங்களில் பல்வேறு பெயர்களுடன் வீற்றிருக்கும் சிவபெருமான் அங்கெங்கும் ஒவ்வொரு திருவிளையாடல் செய்திருக்கிறார். 

மங்கையர்கரசியாகியா பாண்டியர் மகள் அன்னதானம் செய்ய அதற்காக ஏற்பாடுகள் செய்கிறாள் ஆனால் இறைவன் அதற்கு உம்மால் முடியாது என்று சொல்கிறார் அதைக் கேட்காத மங்கையர்க்கரசி என்னால் முடியும் என்கிறாள் அதனைக் கேட்ட சிவபெருமான் சோதிப்பதற்காகக் குண்டோதரனுக்கு அன்னமிடச் சொல்கிறார். தாகத்தைத் தீர்க்க தண்ணீர் இல்லாமல் செய்கிறார் இறுதியில் தனது சடையிலிருந்த கங்கை  இறங்கி வந்ததால் இதற்குச் சிவகங்கை எனப் பெயரானதும் ஒரு கதை அதுபோலவே இந்த அன்னத்திடம் படலத்தில் இருக்கிறது.  சுந்தரபாண்டியனாகிய சோமசுந்தர ஏழு கடலையும் மதுரைக்குக் கொண்டுவந்து காஞ்சனமாக்கு இனபகடலில் நீந்தச்செய்கிறார். முருகனை உக்கிர குமாரனாக அவதரிக்கவைத்து ஆட்சி செய்யத் தேவையான அணைத்து பயிற்சிகளையும் கற்றுக்கொடுத்து அந்நாட்டின் ஆட்சியினை நடத்தச் செய்கிறார் சிவபெருமான். 

சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர்கள் ஆட்சி புரிந்த தமிழ்நாட்டில் மழை இல்லாமல் வறண்டுபோனது இதற்குக் காரணமான தண்டித்து இறுதியில் மழை பொழிந்தது அதுமுதல் மாதம் மும்மாரி பெய்து நாடு வளம் பெற்றது.

வீர பாண்டியனின் பல்வேறு புதல்வர்களில் எவருமே சரியாக வளர்க்கப்படாத நிலையில் இளைய மகன் மட்டுமே தந்தையின் கடமையினை செய்தான் அதனால் அவனை மன்னராக முடி சூட நினைத்தனர். ஆனால் அந்த அரணையில் அறைகளிலிருந்த செல்வங்கள் எல்லாம் இல்லாமல் போனது அந்த நேரத்தில் இறைவன் தானாக வந்து மாணிக்கம் வியாபாரி போல வந்து உதவினார் 

சித்தரை அவமதித்த பாண்டியனுக்குப் பாடம் புகட்டி கல்லானைக்குக் கரும்பு கொடுத்தது மற்றும் விக்கிரமன் ஆட்சியில் வேதியன் என்றவனுக்குக் குழந்தை இல்லாமல் இருந்தது இறைவன் அருளாலே கவுரி என்ற ஒரு மகள் பிறந்தால், அவளுக்குத் திருமணம் முடிந்து சென்ற வீட்டில் அவளுக்கு ஏற்பட்ட அநீதிகளை அகற்றிய  எனவும் இதுபோல பல்வேறு வகையில் சிவனின் திருவிளையாடல் பாண்டிய மன்னர்கள் சார்ந்தே இருந்தது.           
    

தேவதாரு என்னும் வனத்திலிருந்த ரிஷிகளின் பத்தினியர்களுக்கு பாடம் புகட்ட அவர்களைத் தண்டிக்கவும் மேலும் அவர்களுக்கு புத்துயிர் கொடுக்கவேண்டி வளையற்காரனாகி அவர்களின் பாவம் போக்கினார்.

காடு வெட்டிய சோழனோடு பாண்டிய நாட்டின் அரசின் நட்புறவில் வளர இருந்த ஒரு திருமண நிகழ்வினை வஞ்சகத்துடன் தம்பி முந்திக்கொண்டதனால் ஏற்பட்ட ஒரு நிகழ்வால் வளர்ந்த பெரிய பகையின் பாடம் புகட்டத் தண்ணீர் வற்றியது அப்போது பாண்டியனுக்கு உதவி செய்ய தண்ணீர்ப்பந்தல் அமைத்துக் கொடுத்தார்.

தனது தங்கை மகனைத் தத்தெடுத்த வாணிகன் தேசாந்திரம்  போனபிறகு அவரின் தங்கைக்கு ஏற்பட்ட அநீதிக்கு  அந்த குழந்தையின் தாய் மாமனாக வந்து சாட்சி சொல்லி நீதி கிடைக்க செய்தர்.

பாணபத்திரனுக்கு உதவ விறகு வெட்டியாக வந்து பாடல் பாடி ஏமநாதன் என்ற இசைக்கலைஞனின் மனச்செருக்கினை போக்கி பாணபத்திரர் தான் சிறந்தவர் என்று சொன்னதும் ஒரு விளையாடலே. இதன் பிறகு பாணபத்திரர் அரசவையில் பாடக்கூடாது என்று சொல்லி இறைவனுக்கே பட வேண்டும் என்று அரசன் கட்டளையிடுகிறார் அதன்படி இறைவனுக்கே பாடி காலம் கழிக்கிறார் அப்படி இருக்கும்போது உணவுக்கு என்ன செய்வது எல்லாம் தீர்ந்த போது மலைநாட்டுக்குப் போகச் சொல்லி உதவிசெய்தார் இறைவன்.

ஒரு வேளாளனின் மகன்கள் தேவ குருவாகிய பிரகஸ்பதிக்கு பெரும் தொல்லைகள் கொடுத்ததால் கிடைத்த சாபத்தால் பன்றிக் குட்டிகளைப் பிறக்க வேண்டும் என்றார். பிறகு இதிலிருந்து விடுதலை பெறச் சிவபெருமான் தாயாக வந்து பால் கொடுத்தால் மனிதர்களாக மாறுவார்கள் என்றதும் அதுபோல செய்து அவர்களை அரசவையில் அமைச்சர்களாக அமர்த்தச்சொன்னார் என்பது ஒரு விளையாடல்.

பாண்டிய மன்னனின் சந்தேகத்திற்குக் கவிதை பாட வேண்டிய நிலையில் தருமி என்றவனுக்குச் சிவபெருமான் கொடுத்த பாடலில் பிழை இருப்பதாகச் சொன்ன நக்கீரனை நெற்றிக்கண்ணால் தண்டித்ததும் பிறகு நக்கீரனை மன்னித்தார் என்கிறது இந்த படலம்.

மாணிக்கவாசகரைக் காப்பாற்ற, நரிகளைப் பரிகளாக மாற்றி பாண்டியனிடம் கொடுத்ததும் அல்லாமல் மறுநாளே பரிகளை எல்லாம் நரிகளாக மாற்றியதும் அதற்காக மாணிக்க வாசகரைத் தண்டித்த மன்னனின் நிலையினை கண்டு வகையினை வெள்ளப்பெருக்கெடுக்கச் செய்து கரை உடைந்தது அதற்காகக் கரையினை மூட வீட்டிற்கு ஒரு ஆள் என்ற கூற்றுக்குப் பாட்டி வந்திக்காக மண்சுமந்ததும் அதற்காக பிட்டு கூலியாக வாங்கியது என ஒரு படலம்.

பாண்டிய மன்னன் சமண மதத்தினை பின்பற்றியதும் அதற்காக அவரை சைவ மதத்திற்கு மாற்ற வேண்டி நிகழ்த்திய திருவிளையாடல்கள் சமணர்களை அழித்ததும், பாண்டியனுக்குத் தீராத வலியினை கொடுத்து அதற்காகச் சிவனடியாரான திருஞான சம்பந்தரை வரவழைத்து சில நிகழ்வுகளை நடத்தி யார் சைவத்தை நிலை நாட்டியது என ஒரு திருவிளையாடல்.

என இந்த திருவிளையாடல் புராணத்தின் வழியே நாம் சிவபெருமானின் பல்வேறு திருவிளையாடல்களை எளிய முறையில் எளிய மொழிநடையில் சிறு சிறு கதைகளாக  அறிந்துகொள்ள முடிகிறது.

அன்புடன்,
தேவேந்திரன் ராமையன் 
11 செப்டெம்பர் 2021 

Thursday, 9 September 2021

சிலப்பதிகாரக் காட்சிகள் - வாசிப்பனுபவம்

சிலப்பதிகாரக் காட்சிகள்

ஆசிரியர் : டாக்டர் மா. இராசமாணிக்கனார் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 74   


சிலப்பதிகாரத்தினை, கலைஞரின் வசனத்தில் "பூம்புகார்" என்ற திரைப்படமாகத்   திரையில் பார்த்தது. இப்போது இந்த புத்தகம் வழியே மிகவும் எளிமையான முறையில் சிறப்பாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

எளிய நடையில், இருக்கும் மிகவும் தேவையான அளவிற்கு மிகவும் சுருக்கமாகவும், அதே வேளையில்  முழுக்கதையும் புரிந்துகொள்ள முடிகிற அளவிற்குச்  சொல்லப்பட்டிருக்கிறது. 

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. புகார் காண்டம் 

2. மதுரை காண்டம் 

3. வஞ்சிக்காண்டம் 

 

புகார் காண்டம்

காவிரிப்பூம்பட்டினம்:

சோழ தேசத்தின் தலை நகராக விளங்கியது.  இந்த நகரம் 1800 வருடங்களுக்கு முன்னர் மிகவும்  அழகானதாகவும்  மற்றும் புகழ்பெற்ற பெரிய வாணிப நகரமாகத் திகழ்ந்ததற்கான எல்லா வரலாற்றுச் சான்றுகளும் இருக்கிறது. ஆனால் இன்றைய நிலை முற்றிலும் மாறாகத்தான் இருக்கிறது என்பது ஒரு பக்கம் கவலை கொள்ளவைக்கிறது. 

காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு கல்லணை வழியாக ஒரு சாலை இருக்கிறது இந்த சாலை முழுவதும் காவிரியாற்றின் கரையிலே செல்லும் இந்த சாலையில் வெகுவான இடங்களில் இரண்டு பக்கங்களும் காலங்கள் தாண்டி நிற்கும் புளியமரங்களால் சூழ்ந்து இருக்கும்.

இந்த நகரத்திற்கு இரண்டு பெயர்கள் இருந்தன ஒன்று "புகார்" மற்றும் "பூம்புகார்" என்றும் அழைத்தனர் ஆனால் இன்று பூம்புகார் என்று அழைக்கப்படுகிறது.

அந்த நகரம் , மையத்தில் மன்னவனின் மாளிகையாலும் அதனைச் சுற்றி தேர்ப்பாகர், யானைப்பாகர், குதிரைப்பாகர், படைத்தலைவர், வீரர்கள் விடுதிகள் என கம்பீரமாகத் தோற்றமளித்தது. பல்வேறு வணிகர்களும்,  முத்து வணிகமும், பல்வேறு ஆலயங்களும், நாட்டிய கூடமும் நாடக அரங்கும் என அந்த நகரம் பரபரப்பாகவே இருந்தன.  .                        

அக நகர் மற்றும் புற நகரினை இணைக்கும் இடத்தில் அமைத்திருந்த நாளங்காடியும் (நாளங்காடி என்றால் தினம் தினம் கூடும் வணிக சந்தை) இந்த பெரிய சந்தையாக விளங்கியது. 

இந்திர விழா, சித்திரை மாதம் இந்திரனுக்காக எடுக்கப்படும் ஒரு பெரிய விழா, அப்போதெல்லாம் காவிரியாறு கடலில் போய் கலக்கும் காட்சி அவ்வளவு அருமையாக இருந்தது ஆனால் இன்றோ அந்த இட்டதில் கடல் நீர் தான் உள்வாங்குகிறது.

இவ்வளவு அழகான இந்த நகரின் துறைமுகம் வணிகத்திற்கு  பெயர்பெற்றிருந்தது, அரேபிய, கிரீஸ், இத்தாலி முதலிய மேற்கு நாடுகளும்  சீனம், பர்மா முதலிய கிழக்கு நாடுகளும் கப்பலில் வந்து வாணிபம் செய்த பெரிய துறைமுகம் இருந்தது.     ஆனால் இன்று அத்தகைய பெரிய துறைமுகம் இருந்த சுவடே இல்லாமல் செய்துவிட்டனர். நாம் காக்கத் தவறிய ஒரு பெரிய வரலாற்று இடம் என்றால் அதுவும் தமிழகத்தில் என்றால் அது இந்த பூம்புகார் தான். இந்த நகர் ஒரு தாலுக்கா என்ற நிலையினை கூட எந்த ஒரு அரசும் எடுக்காதது வேதனைக்குரியது.

கோவலன் - கண்ணகி. இந்த காவியத்தின் கதை நாயகரும் நாயகியும் இந்த இருவரும் தான். பெரும் வணிகன் மாசத்துவானுக்கு மகனாகப் பிறந்த கோவலன் மற்றும் மாநாயகனுக்கு மகளாகப் பிறந்த கண்ணகி ஆகிய இருவரும் நெருக்கிய குடும்ப உறவினர்கள் எனவே இவர்கள் இளைமை பருவத்தில் ஒன்றாகப் பழகியவர்கள். இவர்கள் தங்கள் திருமண வயதினை அடைந்ததும் இரு குடும்பமும் சேர்ந்து இவர்களுக்குத் திருமணம் முடித்து வைக்கின்றனர். தமிழ் மரபுப்படி அந்த காலகட்டத்தில்,  பண்டைய காலவழக்கப்படி திருமணம் ஆனவுடன் தனிக் குடித்தனம் வைப்பது ஒரு வழக்கமாக இருந்தது. அவ்வாறே இவர்களுக்கும் தனிக்குடித்தனம் அமையப்பெற்றது.  இருவரும் இசையும் நடனமும் தெரிந்தவர்கள் என்பதால் இவர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாகச் சென்றது.

மாதவி:

இந்த நகரம் கலைக்குப் பெயரான நகரமாதலால், நடனமும் நாட்டியமும் அரங்கேறிக்கொண்டே இருக்கும் அப்படிப் பெயர்பெற்றவர் தான் "சித்திரா பதிஇவரின் மகள் மாதவியின் நாட்டிய அரங்கேற்றம் முதல் முதலாக  நிகழ்ந்தது.  அதற்காக அரசர்கள்பெருவணிகர்கள் என பெரும்பாலான மக்கள் திரள் கூடியிருந்தது. மாதவியின் முதல் அரங்கேற்றம் சிறப்பாக நடந்தது அதன் வழியே நிறையப் பரிசுகளும் பட்டமும் கிடைத்தது. இந்த மாதவியின் நடனத்தில் மயங்கிய கோவலன் அவள் மீது ஆசைகொண்டு கண்ணகியை விட்டு மாதவியுடன் வாழத் தொடங்கினான். இவர்களின் உல்லாச வாழ்வின் ஒரு நாள் ஏற்பட்ட   கருத்து வேறுபாட்டில் கோபங்கொண்ட கோவலன் கண்ணகியிடம் திரும்பினான். இதற்கிடையில் இருந்த எல்லா செல்வத்தையும் மாதவியிடம் இழந்தான்.

மதுரை காண்டம்: 

மாதவியிடம் இருந்த சோர்ந்து போன முகத்துடன் வந்த தனது கணவனை நோக்கி கண்ணகி சொல்கிறாள், என்னிடம் கொடுப்பதற்கு வேறொன்றும் இல்லை எல்லாவற்றையும் அவளிடம் கொடுத்துவிட்டீர்கள், இப்போது உள்ளது காற்சிலம்பு மட்டுமே அவற்றை எடுத்துச்செல்லுங்கள் தங்கள் மனம் நிறைவாக இருப்பதற்கு என்று சொல்கிறாள். மாதவியிடம் பிணக்கு ஏற்பட்டு மனம் திருந்தி வந்த கோவலன் நான் முற்றிலும் திருந்தி உனக்காகவே என வந்துள்ளேன். அதனால் நீ சொன்ன அந்த சிலம்பினை விற்று நாம் ஒரு புதிய வணிகம் தொடங்குவோம். ஆனால் அந்த புதிய வாழ்க்கை ஆரம்பிக்க  நாம் மதுரைக்குச் செல்வோம் என்கிறான்.                         

மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையினை தொடங்க வேண்டி மதுரைக்கு இருவரும் புறப்படுகின்றனர். இந்த பகுதியினை மதுரை காண்டம் என்று சொல்கிறது. 

இதற்கு முன்னர் கண்ணகி ஒரு கனவு காக்கிறாள் அவற்றைத் தனது தோழி தேவந்தியிடம் கூறுகிறாள், இது ஒரு கெட்ட கனவுதான். அவற்றில் இருந்து விடுபட வேண்டி,  காவிரியாறு  கடலில் கலக்கும் இடத்தில் இருக்கும் சோமா குண்டம் சூரிய குண்டம் ஆகிய இரண்டிலும் நீராடி வாருங்கள். அப்போது எலலாமே நல்லதாகவே நடக்கும் என்று சொல்கிறாள் ஆனால் அதற்குள் கோவலன் வரவே கண்ணகி தோழி சொன்னதை மறந்து கணவனுடன் மதுரைக்குப் புறப்படுகிறாள்.  மதுரைக்கு நடையாகப் பயணம் சென்றனர்.  வழியே நடக்கும் எண்ணற்ற நிகழ்வுகளை அழகாகச் சொல்லிச்செல்கிறது காப்பியம். முதலில் கவுந்தி அடிகளைச் சந்திக்கின்றனர் பிறகு அவரின் துணையுடன் நடக்கின்றனர், மூன்று வழிகளில் நடு வழியினை தேர்ந்தெடுத்துச் செல்கின்றனர். இடை இடையே வந்து மாயம் செய்யும் தேவதையின் விளையாட்டு பிறகு கெளசிகன் வழியே வரும் தூது என்று ஒருவழியாக மதுரையின் புறஞ்சேரியில் தங்குகின்றனர்.

மதுரையின் அழகினை, மதுரை தென்றல் வாசத்தின் வழியாக வர்ணிக்கிறார். எண்ணற்ற வாசனைகள், பல்வேறு வகையான ஆலய ஓசைகள், வகை வகையான மரங்களால்  சூழ்ந்திருக்கும் வைகை ஆறு, பரபரக்கும் கடை வீதி என நம் கண் முன்னே அழகிய மதுரையினை கொண்டுவருகிறது.

கவுந்தி அடிகள், கோவலனுக்குக் கொடுக்கும் அறிவுரையில் நீ முற்பிறவியில் செய்த பொல்லாத செயலினால் இப்பிறவியில் பழிவாங்கப்படுவாய் அந்த நிகழ்வு முற்பிறவியில் பாதிக்கப்பட்டவனால் நடக்கும் என்று கூறுகிறார். கோவலனும் அதுபோலவே ஒரு கனவினை காண்கிறான்.  ஆயர்குல முதியவளின் வீட்டில் தங்கியிருக்கும்  இவர்கள் மறுநாள் காலையில் கண்ணகியின் ஒரு காற்சிலம்பினை மட்டும் எடுத்துக்கொண்டு கோவலன் மட்டும் தனியாக நகருக்குள் செல்கிறான் விற்பதற்காக.

நகரின் எதிர்கொண்ட அரண்மனை பொற்கொல்லன் லாவகமாக இவனிடம் இருக்கும் சிலம்பு தான் பணிபுரியும்  அரண்மனையின் மகாராணியுடையது என்று சொல்லி மன்னரிடம் தான் செய்த திருட்டில் இருந்து தப்பிக்க தவறான செய்தியினை  சொல்லி  கோவலனின்    உயிரினை பறிக்கிறான்.

இந்த செய்தியினை அறிந்த கண்ணகி, கவலை கொண்டு  புலம்பலுடன் மயங்கி விழுந்துவிடுகிறாள். பிறகு வீறிட்டு எழுந்த கண்ணகி சிவந்த கண்களுடனும், தலைவிரிகோலத்துடனும் தனது மற்றொரு சிலம்புடன்    அரண்மனை நோக்கிப் பொங்கி எழுந்து ஆவேசத்துடன் வீர நடையுடன் செல்கிறாள்.

அரண்மனையினை அடைந்த கண்ணகி, மன்னனிடம் முறையிடுகிறாள், தனது கணவன் கள்வன் அல்ல தவறான தீர்ப்பு வழங்கிய நீரோ கள்வன் என்று உரைத்து தனது கையிலிருந்த மற்றொரு சிலம்பினை உடைத்து அதில் பதித்திருப்பது மாணிக்கக் கற்கள் என்று நிரூபித்து ஆவேசம் கொள்கிறாள்.

தான் தவறிழைத்ததை  அறிந்த பாண்டிய மன்னன் அக்கணமே உயிர்நீத்து தனது செங்கோலினை நிலைநாட்டுகிறான் கணவன் உயிர்நீத்ததை அறிந்த அரசியார்  அவன் கூடவே  கோப்பெருந்தேவியும் உயிர்விடுகிறாள். ஆவேசம் குறையாத கண்ணகி மதுரையினை எரிக்கிறாள், பிறகு அங்கிருந்து வைகை நதியோரம்  நடந்து வஞ்சி மாநகரத்திற்குச் செல்கிறாள்.

வஞ்சிக்காண்டம்:  

கோவலன் கொல்லப்பட்ட பதினான்காம் நாள் அவளை அழைத்து செல்ல கோவலன் வருவான் என்று  சொன்னதை கேட்டுகொண்ட  கண்ணகி, தனது கணவனை சந்திக்க  சேர நாட்டின் மலை பிரதேசத்தில் பிரவேசித்து  ஒரு பகுதியில் நிக்கிறாள். அவள் வருகையினை அறிந்து அங்கே ஒரு விமானம் வருகிறது அதில் அவள் ஏறி கோவலனுடன் விண்ணுலகம் செல்கிறாள்.

இந்த செய்தி கேட்ட, சேர மன்னன் செங்குட்டுவன், தன் அரசன் அநீதி விதித்தான் என்று அறிந்த கோப்பெருந்தேவியிம் உயிர்நீத்தாள். இவர்களில்  கோப்பெருந்தேவி சிறந்தவாளா அலல்து தன கணவன் கள்வன் அல்ல என்று நிரூபித்து மதுரையினை தீயிட்டாளே அவள் சிறந்தவாளா என்று கேள்வியினை தனது அரசியிடம் கேட்கிறான். 

மன்னனின் கேள்விக்கு பதில் சொல்லும் அரசி, இவர்கள் இருவருமே பாராட்டத்தக்கவர்களே என்று தனது தரப்பு கருத்தினை சொல்கிறாள்.   பிறகு சேர மன்னன் செங்குட்டுவன், பத்தினி தெய்வமான கண்ணகிக்கு ஒரு சிலை   வைக்கவேண்டும் என்று எண்ணி அதற்காக  பொதிகை மலையில் இருந்து கல் எடுத்துவரலாமா அலல்து இமயமலையில் இருந்து எடுத்துவரலாம் என்று கேட்கிறார். அமைச்சர்கள் அனைவரும்  இமய மலையில் இருந்து எடுத்துவருவதே உகந்தது என்றதும் , மன்னன் இமய மலையில் இருந்து கல் எடுத்துவர செல்கிறான் வழியில் ஏற்படும் போர்களை எல்லாம் வென்று இமயமலையின் கல்லுடன் திரும்பி வருகிறான். பத்தினிக்கு கோவில் இமயமலையில் இருந்து எடுத்துவந்த கல்லில் செய்த சிலையினை வைத்து, கண்ணகியின் தோழியான தேவந்தியிடம் பூஜை செய்ய பணிக்கப்பட்டது.

இந்த காப்பியம், சோழ நாட்டின் புகார் என்ற நகரில் பிறந்து, பாண்டிய நாட்டின்  மதுரையில் கணவனை இழந்து சேரநாட்டின் தலைநகருக்கு அருகாமையில் துறக்கம் அடைந்த பத்தினி தேவியின் வரலாற்றை மிகச்  சிறப்பாக சொல்லுகிறது. 

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

10 செப்டம்பர் 2021 

கி.மு.கி.பி

கி.மு.கி.பி   

ஆசிரியர் : மதன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 131

பக்கங்கள் 160


கி.மு.கி.பி, பல்வேறு காலகட்டங்களின் வரலாற்றினை ஒரு புத்தகத்தில் கொடுப்பது என்பது கொஞ்சம் கடுமையான காரியம் தான். ஆனால் மதன் இதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார். கி.மு. பலநூற்றாண்டு வருடங்களிலிருந்து கி.பி 2000 வரையினால் பல்வேறு சுவாரஸ்யமான வரலாற்றுச் சுவடுகளை இங்கே கொடுத்திருக்கிறார்.

சங்க காலத்திற்கும், சரித்திர காலத்திற்கு முன்னரும், மனித உயிர் தோன்றிய காலத்தினையும் கூடவே வளர்ந்த மனித நாகரீகத்தினையும் சிறப்பாகச் சொல்லிச்செல்கிறார்.

உலகம் தோன்றியதிலிருந்து, ஒவ்வொரு உயிரினமும் தோன்றியதை ஆரம்பித்துக் கூடவே செடி கொடிகள் பரிணாம வளர்ச்சிகளையும் பற்றிப் பேசுகிறது.

உலகின் முதல் மனிதன் ஒரு பெண் என்றும், அவர்கள் தோன்றிய இடம் ஆப்பிரிக்கா கண்டம் எனவும் அவ்வாறு தோன்றிய மனித இனம் உலகின் எல்லா முலைகளுக்கு நடந்தே சென்றது, அப்படி நடந்து சென்றது ஒரு நாளே அல்ல ஒரு வருடமோ இல்லை பல்லாயிரம் வருடங்களாக நிகழ்த்து கொண்டிருந்தது என்கிறது வரலாற்றுத் தரவுகள்.

அப்படி நடந்த சென்ற மனித இனம், சில இடங்களில் தங்க முன்வந்தது அவ்வாறு தங்கிய நேரத்தில் அங்கே ஒரு குழுவாக இருந்தது. தங்கள் தேவைகளை அங்கே தேடத்தொடங்கினார்கள். இதன் வழியே நாகரிகம் தோன்ற ஆரம்பித்தது என்கிறார். அவ்வாறு வாழ்ந்த ஆதி மனிதர்கள் சராசரியாக வாழ்ந்தது வெறும் முப்பது வயதுதான் என்கிறது.  

உலகின் எல்லா பகுதிக்கும் தரைவழியாகச் செல்வதற்கான பாதைகள் இருந்ததும் அதைக் கண்டறிந்து மக்கள் பயணப்பட்டனர் ஆனால் இதற்கு ஒரு காலத்தில் ஒரு தடை வந்தது அதாவது உலகம் வெப்பமானது அதன் காரணமாகப் பனிக்கட்டிகள் உருகி தண்ணீர் அதிகமானதால் கடலும், ஆறுகளும் அதிகமாகத் தோன்ற ஆரம்பித்தது இதன் காரணமாக உலகின் பல பகுதிகள் பிரிந்துபோனது. கண்டங்கள் ஒவ்வொன்றும் தனித் தனியானது .

முதலில் தோன்றிய தீயினை பார்த்து வியந்த மனிதன் பிறகு அதனால் கிடைத்த பயன்களிலிருந்த முக்கியத்தினை தெரிந்துகொண்டதனால் தீ செயற்கையாகக் கண்டுபிடித்தான். இதுவும் நாகரீகத்தின் வளர்ச்சியேயாகும்.

நாகரிகங்கள் தோன்றியது அவர்களுக்கென வழிபாடுகள் மற்றும் தெய்வங்கள் தோன்றின அவருக்காக ஆலயங்களை மலையின் உச்சியில் ஆலயம் கட்டினார்கள்.  இவ்வாறாக வளர்ந்த இந்த நாகரீகம் டைக்ரீஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளின் இடையேதான் தோன்றியது என்கிறார்கள். மெசபடோமியாவில், ஊர் என்கிற ஊரைத் தொடர்ந்து பதினெட்டு நகரங்கள் தோன்றின மற்றும் நாகரிகமும் கூடவே வளர்ந்தது. 

பாபிலோனியாவின்ஹமுராபி, மனித இனத்தின் நாகரிகத்தின் சமுதாயம் முன்னேற்றத்திற்காகக் கனவு கண்ட ஒரு தலைவனாக ஹமுராபி உருப்பெற்றான். இவரின் ஆட்சிக்குக் கீழ் மொத்த மெசபொடேமியா பிரதேசமும் வந்தது இவ்வாறாக ஹிராமுபியின் உலகின் பாபிலோனியச் சாம்ராஜ்யமும் உலக வரலாற்றில் ஆச்சரியமான ஒரு காலம் என்கிறது வரலாறு. இவர் தான் முதலில் சட்டங்களை வகுத்திருக்கிறார், மேலும் பழிக்குப் பழி மற்றும் குற்றங்களுக்கான தண்டனைகள் என பல்வேறு சட்டங்களை வகுத்துக்கொடுத்திருக்கிறார்.

"கில்கிமெஷ்" - இது பாபிலோனியர்கள் இயற்றிய உலகின் மிகச் சிறந்த காப்பியம் என்ற முக்கியத்துவம் வாய்ந்தது. கில்கிமெஷ், என்ற ஒரு மன்னரின் உண்மை கதையின்  தழுவி இந்த காப்பியம் உருவாக்கியிருக்கிறார்கள். கில்கெஷும்எங்கிடுவும் என இவர்களின் வரலாறும் அவர்கள் முதலில் ஆரம்பித்த பகைகளும் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்தது என பல்வேறு சுவரஸ்ய்மான தகவல்கள். நள்ளிரவு தேவதையின் கதைகள், பாபிலோனியர்கள் மரணத்தைப் புனிதமாகக் கருதியதும், அவ்வாறு இறந்தவர்களை வீட்டின் உட்புறத்தில் புதைத்தனர் இதனால் அவர்களின் உதவி கிடைக்கும் என்று நம்பினார்கள்.

உலகின் பாபிலோனியாவில் நாகரிகம் தோன்றிய காலத்திலே இந்தியாவில் சிந்து சமவெளி நாகரீகம் தோன்றியுள்ளது என்பதும் பற்றிய ஆராய்ச்சிகள் சொல்கிறது. மொஹஞ்சதாரோ நாகரிகம், இங்கே தோண்டிய நாகரிகம்தான் இன்றைய நாகரிகத்தின் முன்னோடி என்கின்றனர். இவர்கள் மிகவும் சுத்தமாகவும் நாகரிகமாக வாழ்ந்தனர். இவர்கள் குளிப்பதற்க்க்காக குளங்கள் கட்டியிருந்தனர் மற்றும் தானியங்களைச் சேமிக்க உயரத்தில் களஞ்சியம் கட்டினார்கள் என்றும் குறிப்பிடுகிறது. கரும்பு மற்றும்  பருத்தி ஆகிய இவையிரண்டையும் கண்டுபிடித்து விவசாயம் செய்தார்கள்.

இன்றளவும் இந்தியாவில் தோன்றிய சிந்துசமவெளி நாகரீகத்தின் மக்கள் பயன்படுத்திய மொழி என்ன என்ற தரவுகள் கிடைத்தாலும், தமிழ் என்பதற்கு அதிக அளவு வாயாயிருந்தாலும் உலகம் ஏன் மறைக்கிறது என்று தெரியவில்லை.

நைல் நதியின் கரையில் தோன்றிய எகிப்து நாகரிகம் உலகின் மிக முக்கியமான நாகரிகம் எனப்படுகிறது. எகிப்தியர் ஆயிரக்கணக்கான தெய்வங்களை வழிபட்டதாகவும் குறிப்பிடுகிறது. ஒரு பெண், செயற்கை தாடியுடன்  ஆண் வேடமிட்டுக் கொண்டு ஆட்சி நடத்தியதுஆமன் ஹோடப் என்கிற எகிப்து மன்னன், சூரியன் தான் முக்கியம் என்று சொன்னதும் மட்டுமல்லாமல் பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் பல்வேறு தெய்வங்களை அழித்ததும் என பல்வேறு காரணங்களால் மதபோதகர்கள் எவ்வாறு ஆட்சியினை தங்கள் வசம் வைத்துக்கொள்ளத் திட்டம் தீட்டினார்கள் என்பதும் முக்கியமான தகவல்கள். மேலும் கல்லறைகளில் வைத்திருந்த பல்வேறு விதமான பொருள்களையெல்லாம் குறிப்பிடுகிறது. எகிப்தியர்கள் மம்மி செய்வதில் கைதேர்ந்தவர்கள் ஆதலால் அவர்கள் பல்வேறு மருத்துவ குறிப்புகளை எழுதிவைத்திருந்தார்கள் எனவும் குறிப்பிடுகிறது.

ஏதென்ஸ். கிரேக்க நாடுகளில் ஒரு சிறிய நாடன் ஏதென்ஸ் உலகின் முதலில் மக்களாட்சி போன்ற ஒரு ஆதியினையும் மக்களுக்குச் சுதந்திரமும் கொடுத்தாகவும், பல்வேறு விதமான நாகரிகங்கள் மற்றும் அறிஞர்கள் தத்துவங்கள் பிறந்த மண் எனக் குறிப்பிடுகிறது. ஏதென்ஸுக்கும்   ஸ்பார்ட்டாவுக்கும் இடையேயான போர் இன்றளவும் வரலாற்றுப் பிரசித்தி பெற்றது என்கிறார்கள். பாரசீகம் ஒவ்வொருமுறையும் கிரகத்தின் மீது போர்தொடுத்தது அதன் காரணமாக ஒட்டுமொத்த கிரேக்கமும் பாரசீகத்தின் பிடியிலிருந்தது ஆனால் பிற்காலத்தில் கிரேக்கத்தின் ஏதென்ஸ் மட்டும் எதிர்த்துப் போரிட்டு வெற்றிபெறவைத்தது.

சாக்ரட்டீஸ் என்ற மகா தத்துவமேதையின் கடைசி நாட்களின் வரலாறு மிகவும் குறிப்பிடத்தக்கது, கிடைத்த எல்லா வழியினையும் தவிர்த்து நேர்மையானவன் என்று வாதாடி இறுதியில் தண்டனைக்கு உட்பட்டு விஷம் அருந்தி மரணித்தார். பிறகு பிளாட்டோஅரிஸ்டாட்டில் என அவரின் சீடர்கள் எல்லோருடைய வரலாறும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 


அலெக்சாண்டர் அவர்களின் ஆட்சியையும், வெற்றியையும் அவரின் குருவான அரிஸ்டாட்டிலும் என வரலாறு மிகவும் முக்கிய தகவல்களைக் குறிப்பிடுகிறது. இந்தியாவிலிருந்து திரும்பிப் போகும் வழியில் அவர் மரணமடைந்தார் என்பதும், இந்தியாவில் சந்திரகுப்தரின் ஆட்சியையும், சாணக்கியன் தான் செய்த தவற்றுக்காகத் தண்டனை வழங்கிய நந்தர் வம்சத்தினை  எவ்வாறு பழிவாங்குவது என்ற யோசிக்கும் வேளையில் வழியே கிடைத்த ஒரு சிறுவனை வாங்கிவருகிறார் அவர் தான் சந்திரகுப்தர்இவரைக் கொண்டு நந்தர் வம்சத்தினையே அழித்துவிடுகிறார் பிறகு இவரின் ஆட்சி கோலோச்சியது. பிறகு இவரின் மகன் அதன் பிறகு இவரின் பேரன் அசோகர் என வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிச் செல்கிறது இந்த புத்தகம்.

அசோகரின் ஆரம்ப காலா ஆட்சியில் இருக்கும் செய்திகள் பெரும்பாலும் முழுமையாக வரவில்லை இருந்தாலும் அவர் அரசனான பிறகு செய்த கலிங்கா போரில் செத்து மடிந்த வீரர்களைப் பார்த்து மனம் உடைந்து இனிமேல் இது போலதொரு பயங்கரமான காரியம் செய்யக் கூடாது என்று கட்டளையிட்டார் அது மட்டுமல்லாமல் இந்த போருக்கு பிறகு ஒரு புதிய  தொடக்கமாக புத்த மதத்தினை பின்பற்ற ஆரம்பித்தார் என்கிறது வரலாற்றுச் சான்றுகள்.

இப்படியா ஒரு பல்லாயிரம் வருடங்களின் நடந்த பெரும்பாலான வரலாற்று நிகழ்வுகளைத் தெரிந்துகொண்ட மன நிறைவுடன் பகிர்கிறேன். 


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

09 செப்டம்பர் 2021