Sunday 7 June 2020

தாவணி தேவதையின் கனவு

தாவணி தேவதையின் கனவு

அதிகாலையில் ஐந்து மணிக்கே காவேரியின் நாள் தொடங்கும்.

அவள் எழுந்தவுடன் தன் வீட்டு மாடு கன்றுகளை பார்த்துவிட்டு, மாட்டு தொழுவத்தை சுத்தப்படுத்தி விட்டு, கல்லூரி  செல்ல  தயாராவாள். கல்லூரி  படிப்பு  அவளது  கனவு. எந்தத்தடை  வந்தாலும்   அவள் தனது கனவான கல்லூரி படிப்பை எப்படியாவது முடித்து விடவேண்டும் என்று  லட்சியம்  கொண்டிருந்தாள். அன்று  கல்லூரி  செல்ல எல்லா வேலைகளையும் செய்துவிட்டு தயாராகிக்கொண்டிருந்தாள்.

அவள் அப்பா சுந்தரம் ஒரு விவசாயி. அம்மா ரஞ்சிதம் ஒரு இல்லத்தரசி.  அவர்களுக்கு ஒரே ஒரு சுட்டி பெண்தான் இந்த காவேரி. அப்பா காலையிலேயே வயலுக்கு வேலைக்கு போய்விடுவார். அம்மா வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு சமையல்  செய்யவேண்டும். பிறகு  அவர்களுடைய மகள்  காலேஜ் போனபிறகு ஆடு மாடுகளை மேய்க்கவேண்டும்.       

அப்படித்தான் அந்த திங்கள் கிழமை காலையில சிவப்பும் பச்சையும் கலந்த  செட் தாவணியுடன் அவள்  கல்லூரிக்கு  புறப்பட்டாள்.

"அம்மா, நான் போயிட்டு வர்றேன்",  என்று உரக்கச் சொல்லிவிட்டு,  தனது நோட்டுப்  புத்தகத்தை எடுத்து மார்போடு அனைத்துக்கொண்டு  வீட்டிலிருந்து  நடக்கத்தொடங்கினாள்.

"ஏன்டி காவேரி, என்னடி இது,  இப்படி பண்ணுறவ,  காலையிலையும் ஒன்னும் சாப்பிடல, மதியானதுக்கும் சாப்பாடு டப்பா எடுத்துக்கல", என்று சொல்லிகொண்டே அடுப்பறையிலிருந்து வட்டமான டிபன்பாக்ஸ்சுடன்  வெளியே வேகமா ஓடிவந்தாள் அம்மா ரஞ்சிதம்.      
    
"நான் என்ன செய்றது, நம்ம வீட்டு பஸ்ஸா போகுது.....நாம எப்ப வேணும்ன்னாலும் போவரத்துக்கு",  என்று சற்றே புலம்பிக்கொண்டே நின்ற நிலையிலே இரண்டு இட்லிகளை அவசர அவசரமாக  பிட்டு  விழுங்கிவிட்டு  சரக்கென்று  கிளம்பினாள்.

அம்மா "மறக்காம டிபன் பாக்ஸ் எடுத்துகோடி", என்றாள்  கொஞ்சலாக.

"சரி, சரி  எடுத்துக்கிட்டேன்", என்றவாறு தனது நோட்டு புத்தகத்தையும் வட்டமான சில்வர் டிபன் பாக்ஸ்சையும்  எடுத்து அவள் தன் மார்போடு அனைத்துக்கொண்டே  நடக்க ஆரம்பித்தாள்.

அம்மா ஓடிவந்து, "காவேரி இந்தா  இந்த பூவை வச்சிக்கோ", என்றவாறு  அவர்களது  தோட்டத்தில்  பூத்த டிசம்பர் பூவும்,  கனகாம்பரமும்  கலந்து தொடுத்த  பூச்சரத்தை கொடுத்தாள்.

"அம்மா....நேரமாச்சும்மா ....சரி ...சரி... நீயே வச்சுவிடு கையில புக்ஸ் இருக்கு", என்றவாறு காவேரி  விறைப்பாக  நின்றாள்.

இந்த  நாடகம்  என்றுமே  காலைவேளைகளில்  அவர்களுடைய  வீட்டில்  நடப்பதுதான். காவேரி  கல்லூரிக்கு  சென்றுவிட்டிருந்தாள்.







மகளை  வழிஅனுப்பிவிட்டு  வீட்டுக்குள்  நுழைய  முற்பட்டவளை  பக்கத்துவீட்டு  வரதம்மாள் கூப்பிட்டு  நிறுத்தினாள்.


"ஏன்டி ரஞ்சிதம், என்னமோ நீதான் அதிசயமா பொண்ணு வளர்க்கிற, எதாவது ஒரு பையன பார்த்து காலா காலத்துல ஒரு கல்யாணம் காட்சி பண்ணி வைப்பியா. படிக்க வைக்கறாளாம்.... அதும் ஏதோ காலேஜியாம் காலேஜி, காலம்  கெட்டுக்கிடக்கு,  என்னமோ போடி நான் சொல்லுறத சொல்லிப்புட்டேன். நாமெல்லாம் எங்க படிச்சோம், ஏதோ  கல்யாணத்த  பண்ணமா, மூணு நால பெத்துக்கிட்டு லட்சணமா குடும்பம் பண்ணலியா என்ன",  என்று அலுத்துக்கொண்டே தன்னுடைய  வீட்டினுள்  நுழைத்தாள்.

ரஞ்சிதம்,  வரதம்மாளிடன் அந்த  அறிவுரையை  கேட்பது  முதல்  முறையல்ல.
அந்த அம்மாள்  சொன்னது  ரஞ்சித்தின்  தலையில்  ஏறவே  இல்லை. மெல்லச்சிரித்துவிட்டு  வீட்டினுள் சென்றாள்.

காவேரியின்  ஊரில் பஸ் வசதியே இல்லை. ஒரு பக்கம் போனால் திருமணச்சேரி ஒன்றரை கிலோ மீட்டர் நடந்தே போகவேண்டும். இன்றொருபுரம் ஒரு கிலோமீட்டர் போனால் திருமங்கலம். ஆனால் அந்த  பஸ்ஸுக்கு டைம் கேரண்டீ கிடையாது. அதனால் அவள் எப்போதும் நம்பிக்கையாக வரும் ஐந்தாம் நம்பர் பஸ்சுக்கே போவாள். அப்படியே வேக வேகமாக  நடந்தபடியே  தன் மனதுக்குள் எண்ணிக்கொண்டாள், "இதுவே ஒரு பையனாக இருந்த்தால் போறவன் எவன் வண்டிலயாவது லிப்ட் கேட்டுக்கொண்ட போய்டலாம் என்ன செய்ரது....பொண்ணா  பொறந்தாச்சு!, அதுவும் இந்த கிராமத்துல போய் பொறந்தாச்சு, தப்பி தவறி யாராச்சும் வண்டில  லிப்ட் குடுத்து போய்ட்டா அவ்வளது தான், அதுக்கு கண் காது மூக்குன்னு வைச்சு பேசுவாங்க ...அது  ரென களமா மாறிடும் ....அப்பறம் படிப்பு அம்பேல், அப்பறம் எவன் கையிலாவது புடிச்சு கொடுத்திட்டா போதுமுன்னு ஒரு கல்யாணம் பண்ணிவச்சுடுவாங்க ...அப்புறம் ... நம்ம கனவு கந்தல் தான்". எண்ண  ஓட்டத்தில்  அவளுடைய  நடை  சிறு  ஓட்டமாகவே  மாறியிருந்தது.



பாவம் அவள் என்ன செய்யவாள்.  காலையிலே ஏழரை மணிக்கு அந்த பஸ்சை பிடித்தால்தான் மாயவரம் போய்,  பஸ் ஸ்டாண்டில் இருந்து அவளது கல்லூரிக்கு நடந்து ஒன்பதரை மணிக்குள் சென்று சேரமுடியும்.  அவள்  நடந்தே  திருமணச்சேரி நெருங்கிக்கொண்டே இருந்தாள்.

திருப்பத்தில்  அவளுடைய  தோழி கண்மணி  நிற்பது  தெரிந்தது.

"வேகமா வாடி, பஸ் வந்துருச்சு", என்று  கண்மணி அவளை  சைகையில்  கூப்பிட்டாள்.    ஒரு வழியாக பஸ் ஏறி அவர்கள் இருவரும்    முன் படியின் அருகே  வழக்கமாக  அவர்கள் உற்காரும் அதே  சீட்டில்  அமர்ந்தார்கள்.   அந்த பஸ் அங்கிருந்து புறப்படுவதால் சீட் எல்லாம் பிரீயாக தான் இருக்கும். அது ஒரு நகர பேருந்து என்பதால் மயிலாடுதுறை போய் சேர ஒரு மணி நேரமாகும். அதுவும் இந்த பஸ் காலை உச்ச  நேரத்தில்  போவதால் குத்தாலம்-மயிலாடுதுறை மெயின் ரோட்டில் உள்ள எல்லா நிறுத்தத்திலும் நின்று நின்றுதான் போகும்.  கலையிலில பள்ளிக்கூடம் போற பசங்களும் , வேலைக்கு போற சில இளவட்டமும் கூடவே, புளி அடைப்பது போல் ஒரே கூட்டமாக  இருக்கும்  அந்த  பஸ்ஸில்.



"இந்த பஸ்ல....வர, வர பசங்க தொல்லை தாங்கமுடியலடி," என்று கண்மணியிடம் காவேரி  சொல்லிக்கொண்டே இருக்கும் போது, "ப்ளீஸ், இந்த புக்ஸ் வைச்சிக்குங்க",  என்று மல்லியம் பஸ் ஸ்டாப்பில் பையன்  குரல்  கேட்டது.  அவள், அது யாரென்று கூட பார்க்கவில்லை, அதற்குள் அவர்களின் மடியில் அந்த புத்தகங்கள்  வந்து விழுந்தது.  அது எவனோ புட் போர்டில் தொங்குகிறவனாக  இருப்பான், இறங்கும் போது அவனே வாங்கிக்கொள்ளுவான் என்று கண்மணி சொன்னாள்.




ஒரு வழியாக அந்த பஸ் ஒரு பக்கம் சாய்ந்தவாறே பஸ் ஸ்டாப் வந்த பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள் இருவரும். அதில் கண்மணி மாயவரத்தில்  மகாதான தெருவில் உள்ள ஒரு மெடிக்கலில் வேலை செய்பவள்.  அவளுடை காலேஜ் போகிற வழியும் அதே வழியென்பதால் இருவரும் சேர்ந்தே போவார்கள்.        

கல்லூரி முடிந்ததும் காவேரி வேகமாக பஸ்ஸ்டாண்டுக்கு ஓடி வரவேண்டும்.  ஐந்து மணிக்கு ஒரு பஸ், அதை விட்டாடால் பிறகு இரண்டு மணி நேரம் அங்கேயே இருக்கவேண்டும்.  வேறு வழியே இல்லை.  அடுத்த  பஸ்சில்  போனால் திருமணஞ்சேரியில் இருந்து நடந்து போகமுடியாது. இருட்டிப்  போயிருக்கும். அதனால் அவள் வீடு விட்டால் கல்லூரி, கல்லூரி விட்டால் வீடு  இருப்பாள். அதையே  அவளுடைய  தோழிகள் எல்லோரும் சொல்லி  அவளைப்  பரிகாசம்  செய்வார்கள்.


அவள், தன் மனதுக்குள், "இது எனக்கு  மட்டுமல்ல இன்னும் எத்தனையோ தாவணி தேவதைகள்....என்னை போன்றே இருக்கிறார்கள்",  என்று களுக்கென்று சிரித்தவாறு வண்டிக்காரத்  தெரு மாரியம்மன் கோவிலை அவசரமாக ஒரு சுற்று சுற்றிவிட்டு,  நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டுக்கொண்டே திரும்பினாள். எதிர்முனையில் ஐந்தாம் நம்பர் பஸ், அந்த   பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்தது.

வேகமாகவே ஓடி, அவளது  புத்தகங்களை பஸ்ஸின் ஜன்னல் வழியாக நுழைத்து  தனக்கே உரிய சீட்டில் போட்டு  ரிசர்வ்  செய்தாள்.

அவள்  அப்படியே, நடை போட்டு கொண்டிருந்தாள் தனது கனவை நோக்கி........          

No comments:

Post a Comment