Wednesday 3 June 2020

ஊர் திரும்புதல் - 13


பக்கத்து வீட்டு திண்ணையும் தாத்தாவும்  


அவன் விடுமுறைக்கு  ஊருக்கு  வந்து  சில  நாட்கள்  ஆகிவிடிருந்தது. அவன் தெருவிவில் ஒருநாள் சாயங்காலம் யாருமில்லாமல் வெறிச்சோடிக்  கிடந்ததை பார்த்து அவன் அம்மாவிடம் மிகவும் கவலையுடன், "என்னம்மா  நம்ம தெருவில் நிறைய  புள்ளைங்க  இருந்தும் ஒண்ணுகூட  வெளியில வந்து  விளையாடக்காணோம்?!", என்று கேட்டான்.

என்று அதற்கு அம்மா, "இப்போதேல்லாம் எங்கே புள்ளைங்க வெளியில  விளையாடுது. எல்லாம் டி.வி முன்னாடி உற்கார்த்திருக்கும்,   இல்லன்னா  மொபைலை வச்சிக்கிட்டு விளையாடிகிட்டு இருக்கும். எதாவது கரே  மொரேன்னு   பொம்ம படம் பார்த்திட்டு இருக்கும்", என்று சற்றே அலுத்துக்கொண்டு சொன்னார்கள்.

அவன் தனது பக்கத்து வீட்டு தாத்தாவிடம் போய் அமர்ந்து கொண்டு அவன் அந்த தாத்தாவிடம்  அவனது அனுபவங்கள் நினைவுகூர்ந்து பேச ஆரம்பித்தான்.   அதற்கு தாத்தா இப்போதெல்லாம் எங்கப்பா குழந்தைகள்  நம்மிடம் நேரம் செலவழிக்கிறார்கள் என்று முகத்தில் ஒரு விதமான வருத்தத்துடன் கூறினார்.

அந்த தாத்தாவின்  வீடு நல்ல உயர்ந்த இரண்டு திண்ணைகள் கொண்டது. நல்ல  நாட்டு ஓடு வேய்ந்த  வீடு.  அந்த வீட்டின் வாசலில் ஆறு அடி நீளமும் பத்து அடி அகலமும் கொண்ட ஒரு மேல் திண்ணையும், மறுபுறம்  இரண்டு அடி  அகலமும்  ஆறடி  நீளமும் கொண்ட  கீழ்திண்ணையுமாக, இரண்டு திண்ணைகள் இருந்தது.

அவனும் அவனது நண்பர்களும் அந்த  வீட்டு திண்ணைக்கு கோடைநாட்களில் தினமும் மாலை நேரம் தண்ணீர் ஊற்றி குளிரவிடுவார்கள்.  இரவுநேரங்களில் குளுமையாக இருக்க  இது  மிகவும்  அவசியம்.





அவன் பள்ளிக்கூடம் முடித்து தனது வீட்டு வேலைகளையெல்லாம் செய்து முடித்துவிட்டு வெளியில்  விளையாட  வருவான். தெருவில் பெண் பிள்ளைகள் கட்டம் போட்டு சில்லு கோடு விளையாட்டும், பையன்கள் பேய் பந்து விளையாட்டு, கிட்டி புல்,  திருடன் போலீஸ் போன்ற விளையாட்டுகளை விதவிதமாக விளையாடுவார்கள்.


அவனும் மற்றொரு நண்பனும் எப்போதும் மாட்டு வண்டி அவ்வழியே சென்றால் அதன் வண்டிக்காரர் பார்க்காதவண்ணம் பின்னாலேயே தொங்கிக்கொண்டே போவதும், வண்டிக்காரருக்கு தெரிந்தால் உடனே இறங்கி கீழே விழாமல் இருக்க வண்டி ஓடும் திசையிலே ஓடுவதுமாக இருப்பான்.

     

அவனுக்கு அந்த தெருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நடை வண்டி ஓட்டி கற்றுக் கொடுப்பது மிகவும்  பிடிக்கும்.




அப்போதெல்லாம், அந்தத்ததெருவின் பிள்ளைகள் சாயங்காலத்தில் அவனின் பக்கத்து விட்டு தாத்தாவின்  திண்ணையில் அமர்ந்து, தங்களின் பாட புத்தகங்களை படிப்பதும், வீட்டுப்  பாடங்களையெல்லாம்  செய்வதும் வழக்கமான  ஒரு நிகழ்வு. வேலியில் பூத்திருக்கும் அச்சுப்  பூக்களைப்  பறித்து, புத்தகத்தின் உள்ளே தங்களின் பெயர்களை அச்சிடுவதும், மறுநாள் காலையில் யாருடைய  புத்தகத்தில்  அச்சு  அழகாகச்  சிவந்து, பெயர் நன்றாக வந்திருக்கிறது  என்று பார்த்து ரசிப்பதும் அவர்களது வழக்கமான வேலைகளில்  ஒன்று.



இருட்டியபிறகு அவனும் மற்ற நண்பர்களும்  அந்த தாத்தா வீட்டுத் திண்ணையில் உற்கார்ந்து ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி விளையாடுவதும், அந்த தாத்தாவிடம் கதை கேட்பதுமாக அவர்களின் மாலை  நேரங்களைக் கழித்தனர். அந்த தாத்தா அவருடைய அனுபவங்களையெல்லாம் அழகாக கோர்த்து அவர்களுக்கு கதை  கதையாக  சொல்வார்.

அவன் அந்த தாத்தாவிடம், அவர்  திருவண்ணாமலை பக்கம் கிடை மாடுகள் வைத்திருந்ததும், அந்த நாட்களை அவர்கள் எப்படி கழித்தார்கள் என்று கேட்டு தெரிந்து கொள்வதிலும்  ஆவலாக இருப்பான். அந்த தாத்தாவும் அவரின்  மலை பயணம், மலையில் மலை பாம்புகளை கண்டது, சில பல விலங்குகளை பார்த்தது, அங்கே சமைத்துச்  சாப்பிட்ட அனுபவங்கள், அவர் மாடுகளுக்கு  வைத்தியம்  பார்த்த  அனுபவங்கள், குழந்தைகளுக்கு  சுளுக்கு  வலித்துவிட்டது, குடலேற்றத்தை  சரிசெய்துவிட்டது என்று  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் அனுபவங்களை அவர்களுக்கே  புரியும்  வகையில் கதைகளாய்  சொல்லி அசத்துவார்.





அவனும்  அவனது  நண்பர்களும் கோடை இரவு நேரத்தில் அந்த வெளித் திண்ணையிலும், தாத்தாவின் கயிற்று கட்டிலிலும்    தூங்குவது வழக்கம்.  அப்படித்  தூங்கிக்கொண்டிருந்த ஒருநாள் அந்த  ஊரிலேயே சுற்றிக்கொண்டிருந்த மனநலம்  பாதிக்கப்பட்ட ஒரு பெண்  அந்த  வழியே  வந்ததைக்  கண்டு மிரண்டு போனான்.



பழைய  நினைவுகளுடன்  தாத்தாவுடன்  பேசிக்கொண்டிருந்தவன்  அந்த  வழியே  கடந்துபோன இளைஞன்  ஒருவனை  பார்த்தான். அவனும்  வணக்கம்  சொன்னான். அந்த  இளைஞன் வேறு  யாரும்  அல்ல, அவன் நடைவண்டி  பழக்கிய  குழந்தைகளில்  அந்த  இளைஞனும்  ஒருவன்தான்.

தாத்தா திண்ணையில் அமர்ந்துகொண்டு சுவாரசியமாக  வர்ணித்த கதைகள் இன்றளவும் அவனது நினைவில்  நின்றது. நடப்பு  நாட்களில்  நாகரீக  வளர்ச்சியில்  வீடுகட்டும்  முறையினில் வெளித்திண்ணைகளும்  இல்லை. இன்று தாத்தாபாட்டிகளும் பேரன்  பேத்திகளும்  இருந்தாலும், தாத்தாபாட்டிகளின்  கதைகளை  ஆர்வமுடன் கேட்பதற்கு  பேரன்  பேத்திகள்   தயாராக  இல்லை.


தொடரும்


ஊர் திரும்புதல் - 1





ஊர் திரும்புதல் - 7

ஊர் திரும்புதல் - 8

ஊர் திரும்புதல் - 9

ஊர் திரும்புதல் - 10

ஊர் திரும்புதல் - 11
   
ஊர் திரும்புதல் - 12


  

1 comment: