Saturday 30 May 2020

ஊர் திரும்புதல் - 10


கிடை  ஆடுகள் 


இது எனது முந்தய பதிவின் தொடர்ச்சி.......

கிடைமாடு காலங்களில், தெற்கிலிருந்து  இருந்து குறிப்பாக ராமநாதபுரம், தேவகோட்டை போன்ற  ஊர்பக்கங்களில் இருந்து  கீதாரிகள், தங்கள்  ஆட்டுக்கூட்டங்களுடன் வருவார்கள். பொதுவாக எப்போதும் வெள்ளாடுகள், கொடியாடுகள் என்று  ஒரு குழுவிலும், செம்மறியாடுகள் வேறொரு குழுவாகவும் வரும்.






இந்த கீதாரிகள் தங்கள் குடும்பத்துடனே வருவார்கள். இவர்கள் எப்போதும் ஊர்  விட்டு  ஊர்  போய்க்கொண்டே  இருப்பார்கள். கூடவே ஆங்காங்கே தங்கிச்செல்ல தேவையான பொருள்கள் முதல்  சமையல்  பாத்திரங்கள்  வரை  தங்களுடன் வைத்திருப்பார்கள். கிடைபோடுவதிலும், தேவைக்கு  ஆடுகளை  விற்பதிலும்  கிடைக்கும்  வருமானமே  கீதாரிகளின்  வாழ்வாதாரம்.


மாடுகள்  போலவே ஆடுகளுக்கும்  மேய்ச்சல் நிலம்,  கிராமங்களைச்  சுற்றியிருக்கும் நிலங்கள்தான். கோடையில் இரண்டு போகங்கள் முடித்து  உளுந்து, பயறு அறுவடைக்கு பின்னர் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் கோடை புற்களும், வயலின் வரப்புகளில் வளர்ந்திருக்கும்  புற்களும்தான்  ஆடுகளுக்கு  உணவு. அது  மட்டும்  அல்லாது நாட்டு கருவை மரத்தின் காய்கள் என்றால் ஆடுகளுக்கு கொள்ளப்  பிரியம். அதுவும்  வயல்வெளிகளை ஒட்டிய  பகுதிகளில் ஆங்காங்கே பசுமையாகவே இருக்கும்.




அவனுடைய  ஊரில்  கோடையில் ஆற்றின் இரண்டு கரையோரங்களிலும் புற்கள்   அடர்ந்து கிடக்கும். சிறிய  செடிகள் கொடிகள், ஆற்று படுகையில்  பசுமையாக இருக்கும் புற்கள் என ஏராளமான மேய்ச்சல் பகுதி நிறைந்த ஊர்  அவனுடையது. அதனாலேயே  அந்த  கீதாரிகளின் வருகை வருடம் தோறும் தொடர்ந்து கொண்டேயிருந்தது. கீதாரிகள்  நிலங்களில்  கிடைபோடுவதால் அந்த நிலத்துக்கு  ஆடுகளின்  கழிவுகளில்  இருந்து    இயற்கை உரம்  கிடைக்கிறது.







ஆடுகள்  சாகசம்  செய்யும்  ஒரு  உயிரினம்.  இவைகள் சிலநேரம் மரங்களின் மீதும், மூங்கில் முற்களால் பின்னி செய்யத படல் போட்டு இருக்கும் வேளியில் அடர்ந்த்து படர்ந்து இருக்கும் பசுமையான செடி கொடிகளையும், தொற்றியும், இறுக்கப்பிடித்துக்கொண்டும்,      தாவித்  தாவியும்  இரண்டு கால்களை தூக்கிக்  கொண்டு  மேயும்  சாமர்த்தியமே  ஒரு தனி அழகுதான்.






அதில் செம்மறியாடுகள் தலையினை ஆட்டி ஆட்டி கொண்டும் கத்திக்கொண்டே போகும்போது ஒரு  புழுதிக்காற்றே வீசுவது போலவே இருக்கும்.

கீதாரிகளுக்கு ஓய்வென்பதே கிடையாது. நாள் முழுவதும் ஆடுகளை மேய்த்துவிட்டு , மாலை இருள்வதற்குள் ஆடுகளை கொண்டு வந்து பட்டியில் அடைக்க வேண்டும், பின்னர் அந்த பட்டியினை காவல்காக்க வேண்டும். எப்போதுமே அவர்கள் விழிப்புடனே இருப்பார்கள் ஏனெனில் ஆடு திருட்டு என்பது எல்லா ஊர்களிலும் சாதாரணமான நிகழ்வு.  இதில் ஆச்சர்ய படவேண்டியது ஏதுமில்லை!.


அப்படித்தான் ஒரு வருடம்,  அந்த கீதாரியின் ஆட்டு மந்தை அவனது ஊருக்கு வந்திருந்தது.   அந்த முறை ஆடுகள் அவனது வீட்டின் கொல்லைப் பக்கமாக இருக்கும் நிலப்பரப்பில் மேய்ந்துகொண்டிருந்தது. அவர்கள் குடிசையையும்,  அந்த பகுதியிலே அமைத்து இருந்தனர்.




ஒருநாள், கீதாரி வீட்டு பெண்மணி அவனது வீட்டுக்கு வந்து அவன் அம்மாவிடம்,  "அம்மா, நான் உங்கள் கொல்லையில் இருக்கும் அம்மிக்கல்லில் சாயங்காலங்களில் மட்டும் வந்து எனக்குத்  தேவையான மசாலா அரைத்துக்  கொள்ளலாமா ?", என்று கேட்டார்.

அதற்கு அவனது அம்மா, "அதற்கு என்ன தாயே, தாராளமாக அரைத்து கொள்!", என்று சொன்னார்கள். அதன்படி அந்த பெண்மணி தினமும் அவனது வீட்டுக்கு வந்து மசாலா அரைத்து போவது மட்டுமல்லாமல், நீண்ட நேரம் அவனுடைய  அம்மாவிடம்  பேசிக்கொண்டிருப்பார்கள்.


அப்படித்தான், ஒரு நாள் நிறைய மசாலா அரைக்க வேண்டும் என்று  அம்மாவிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே அவர் சொன்னது அவன் காதில் விழுந்தது. அன்று  ஒரு  ஆடு  அடிபட்டு இறந்து விடும்போல் இருந்ததாம். அது  இறப்பதற்கு  முன்பே அதனை  அடித்து  உப்பு கண்டம் போட்டுவைக்கவேண்டும். அதற்குத்தான் அதிகப்படியான  மசாலா  அரைக்கவேண்டும்  என்று  அந்த  பெண்மணி  சொல்லியிருக்கிறார்.

அவனுக்கு ஆட்டுக்குட்டிகள் என்றால் கொள்ள ஆசை.  அதுவும் அந்த கீதாரி ஆட்டுக்குட்டியினை தனது தோளில் போட்டு கொண்டு மற்ற ஆடுகளை ஓட்டி போகும் போதே எழுப்பும் ஒலி வித்தியாசமாக  வேடிக்கையாக  இருக்கும். பொதுவாக ஆட்டு குட்டிகளை மேய்ச்சலுக்கு கூட்டி செல்ல முடியாது அதனால்  அந்த கீதாரியின் வீட்டு பெண்மணி அந்த குடிசையில் அந்த ஆட்டு குட்டிகளை பார்த்துக்கொள்வார்.



அவன் சாயங்காலம் அந்த ஆட்டு கிடையினை பார்த்துவர தன்  நண்பர்களுடன் சென்று வருவது வழக்கமாகவே இருந்தது.

அவனுக்கு இன்றளவும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு அன்று  ஒரு  நாள்  நடந்தது. அது  கோடைமழை  கொட்டிக்கொண்டிருந்த  இரவு  வேளை.   அங்கு போடப்பட்டிருந்த ஆட்டு கிடையிலிருந்த ஆடுகளிடமிருந்து இருந்து ஒரே சத்தம். மழையில் நனைந்த ஆடுகள் கத்திக்கொண்டிருந்தன. அது அவனது வீட்டின் பின்புறம் என்பதால் அவனுக்கு மிகவும்  வருத்தமாக  இருந்தது.

ஆனால் இன்றெல்லாம் இந்நிகழ்வுகள் கதையில் மட்டுமே தெரிந்துகொள்ள வேண்டியிருகிறது.

நகரங்களின் விரிவாக்கத்தினால் கீதாரிகள் நீண்ட தூரம் இடம்பெயர்ந்து போகமுடியவில்லை. கிராமங்களின் நாகரிக வளர்ச்சியும் இந்த தொழில்களை நசுக்கி விட்டன. அதிலும் கிராமங்களில் இருக்கும் ஆயர் குலத்தினர் ஆடு மாடுகள் இல்லாமல் இருந்தே இல்லை. ஆனால் இன்று அவர்களுடைய வாரிசுகள் படித்து வேறு  வேலைகளுக்கு நகரங்களுக்கு புலம்பெயர்ந்து போனதாலும், கிராமங்களில் கூட எல்லா வீடுகளிலும் ஆடு மாடுகள் இல்லாமல் போயிற்று.


அப்போதெல்லாம்  ஆட்டிறைச்சிதான் பொதுவான  உணவாக  இருந்தது. பின்னர்தான்  ஆட்டுக்கறியின் இடத்தை  பிராய்லர் கோழிகள்  பிடித்துக்கொண்டன. ஆட்டிறைச்சியின்  விலையேற்றத்துக்கு  கீதாரிகள்  போன்ற  எளிய  மக்களின்  வாழ்வாதாரம்  அழிந்ததும்  ஒரு  காரணம். இத்தனை  பாதிப்புகளும்  இருக்கும்  நிலையிலும்  ஒரு  சில  கீதாரிகள்  விடாமல்  அவர்களுடைய  பாரம்பரியமான  தொழிலினை   செய்துகொண்டுதான்  இருக்கிறார்கள்.

இன்னும் கீதாரிகள், அவர்களாகவே  வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற மனதுடன் அவனும் நகர்ந்து சென்றான் .


No comments:

Post a Comment