Thursday 28 May 2020

ஊர் திரும்புதல் - 8

சிட்டு குருவியின் கூடு 

இயற்கையின் அதிசயத்தில் இதுவும் ஒன்று பறவைகளை  கூடுகளையும் சேர்க்கலாம்.



                                                         



அன்றொரு  நாள் அவன் தனது தந்தையுடன் அவர்களுடைய  வயல்களைப் பார்க்கச்சென்றான்.  அப்போது அங்கும் இங்குமாய் அவர்களது நெற்பயிரில் இரைதேடி கொண்டிருந்த ஒரு சில  சிட்டு குருவிகளைப் பார்த்தான்.

அவன் தன்  அப்பாவிடம் கேட்டான்," அப்பா, முன்பெல்லாம்  இந்த குருவிங்க  கூட்டம்  கூட்டமா  வருமல்ல..... எல்லாம்  இப்ப  கொறஞ்சி  போச்சே!".

அப்பாவும்  அவன் சொன்னதை  ஆமோதித்தார்.

அவனுடைய  சிறுவயதில் அந்த வகை குருவிகள் பெருந்திரளாய் வயற்பரப்பெங்கும் எண்ணிக்கையில்  மிகுதியாகவே சூழ்ந்து இருக்கும்.  பெருங்கூட்டமாக இரைதேடி படையெடுத்து வரும்.  இப்போதெல்லாம் இவைகளின் எண்ணிக்கை குறைத்துவிட்டது.



உயர்ந்த பனை மரத்தின் இலைகளின் மேல், பச்சையாகவும் , பழுப்பு நிறமாகவும், தென்னை ஓலையினையும், நார்களையும்  தன் அலகுகளால் அழகாய் மெல்லியதாய் கிழித்து சிறிது  சிறிதாக  எடுத்துவரும். சிட்டுக்குருவிகள் அடுக்கடுக்குகளாய் தனது  கூடுகளை  பின்னிக்கொள்ளும். அது  கூடு கட்டும் விதமே ஒரு அழகுதான். இதில்  ஆண்  குருவி ஒரு விதமாகவும், பெண் குருவி ஒருவிதமாகவும் கூட்டினை  கட்டிக்கொள்ளும்.






                                     
சிறியது ஆண்குருவி, பெரியது  பெண் குருவி   

அதில் என்ன ஆச்சர்யமென்றால், குருவி ஒவ்வொருமுறையும்  வெளியே சென்றுதான் அதன் கூட்டிற்கு தேவையான தென்னை  ஓலை, நார் போன்றவற்றை  எடுத்துவர  வேண்டும். ஆனாலும் ஒவ்வொருமுறையும் தனது கூடு எது என்பதில் அது மிகவும் தெளிவாயிருக்கும்.

 அந்த அழகிய  சிறிய  குருவியின்  கூடு, பனை மரத்தில்  ஓலையின் நுனியில் அழகாக  தொங்கி கொண்டிருக்கும். 

சிட்டு குருவிகள் கூட்டமாக நெல்வயலினை நோக்கி படையெடுக்கும்.  அதன் முக்கியமான இரை நெற்பயிர்களின் மேலும், வயல்வெளிகளிலும் இருக்கும் சின்னச்சின்ன புழு பூச்சிகள்தான். சிறிய  விதைகளையும்  சிட்டுக்குருவி  இரையாக  எடுத்துக்கொள்ளும்.


நன்றாக விளைந்த நிலத்தில் அவைகள் இரைதேடும். விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்வயலின் நிறமும் சிட்டு குருவியின் நிறமும் ஒரே மாதிரி இருக்கும். ஆதலால் தூரத்தில் இருந்து கண்டுகொள்வது எளிதல்ல.  நெற்பயிர்களை சிட்டுக்குருவிகளிடம்  இருந்து  காத்துக்கொள்ள, விவசாயிகள் தகரத்தைத் தட்டி ஒலி எழுப்புவார்கள். 
     
ஒரு தாய் சிட்டுக்  குருவி அவைகள்  தேடிய  இரையை அலகில் எடுத்துக்கொண்டு  கூட்டில்  இருக்கும் அதன்  குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும், எல்லா  உயிர்களிலும்  தாய்  என்றாலே  பாசம்தான் அந்தக்காட்சி  கவிதையாய்  சொல்லும்.





அந்த குருவிகள் அழகான குரல் கொண்டிருக்கும்.  கீச்  கீச்சென்று அவை  எழுப்பும்   ஓசையே  இசைதான். வட்டமான தலை, வட்டமான இறக்கைகளும், ஆண்குருவியின் முதுகில் சிவப்பு நிற இறகுகளும், பெண் குருவியின் முதுகில்  பழுப்பு நிற  இறகுகளும்  அதில் சில கோடுகளும் இருக்கும்.


சிட்டு குருவிகள் தங்களது துணையினை விட்டு பெரும்பாலும் பிரியாது.
இவைகள் பெரும்பாலும், பயிர்களுக்கு  தீங்கு  செய்யும்  புழு பூச்சிகளை இரையாக எடுத்துக்கொள்வதால் அவைகளை  விவசாயிகளின்  தோழன் என்று கூட சொல்லலாம்.


ஏன் இப்போது இந்த வகை குருவிகள் குறைந்து போனது ?

இதற்கு, நாம் தான் காரணம்.  அவைகள் விரட்ட மறைமுகமாக நாம்  எத்தனை அநீதி செய்துள்ளோம்.  வித விதமாக பூச்சிக்கொல்லிகளை வயல்களில் தெளிப்பது முதல் , வயல்களுக்கு  ரசாயன உரமிடுவதுவரை எத்தனையோ.  

இவைகளெல்லாம், மற்ற சின்னச் சின்ன புழுப்  பூச்சிகளை அழித்துவிட்டன. அதனால் அவைகளுக்கு  விதைகளில்லாத மற்ற இயற்கை உணவு தட்டுப்பாடாகிவிட்டது. மேலும் மரங்களும் குறைந்துவிட்டன. உலகத்தில்  சுற்றுச்சூழலில்  வாகனங்கள், ஆலைகள்  என்று  பெருகியதால்  சத்தம் மற்றும் மாசுகள்  பெருகி  இதுபோன்ற சிறிய  உயிரினங்கள்  வாழ  இயலாமல் செய்துவிட்டோம். அதுமட்டும் அல்ல, இந்தவகை  பறவைகளின்  அழிவால் பயிர்களுக்கு  தீங்கு  செய்யும்  பூச்சி இனங்கள்  பெருகிவிட்டன. இயற்க்கை சூழலில் உயிரியல்  அடுக்கு  சமநிலை  குலைகிறது. எளிதாக  சொல்வதென்றால், சிட்டுக்குருவியின்  இனப்பெருக்க காலமும்  மற்ற பூச்சிகளின்  இனப்பெருக்க கால  அளவும்  வேறு  வேறானவை. இந்த பூச்சிகள் சிறிய புழுக்களாக இருக்கும் போதே   அதை தின்று  தீர்க்கும்  அளவுக்கு  சிட்டுக்குருவிகளும் மற்ற குருவி இனங்களும் இல்லை என்பதே  அந்த புழுக்கள்  பெரும் பூச்சிகளாக மாறி  படையெடுப்பதற்கு  காரணம்.

இந்த சின்ன குருவியின், கடினமான உழைப்பும், புத்திசாலித்தனமும், அதன்  மகிழ்ச்சியும்  நம்மை வியக்க வைக்கும்.

ஒரு  சிட்டுக்குருவியைப்போல  சேமிப்பும், சுறுசுறுப்பும்,  விடா முயற்சியும்  இருந்துவிட்டால் நமது  வெற்றியை  யாராலும்  தடுக்கமுடியாது  என்று  எண்ணிக்கொண்டே அவன்  அருகில்  ஒரு  கதிர்  கற்றைமேல் வந்தமர்ந்த சிட்டுக்குருவியை  தொந்தரவு  செய்யாமல்  மெல்ல  அந்த  இடத்தைவிட்டு  அகன்றான்.








ஊர் திரும்புதல் - 7



No comments:

Post a Comment