Sunday 31 May 2020

ஊர் திரும்புதல் - 11


தொடக்கப்  பள்ளி 


அவன் ஊரில்  இருந்து  வந்த  மறுநாள்  காலை  நேரம். அவனது வீடு தெருவின் முதல் வீடென்பதால்,  அந்த தெருவில் இருந்து பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள்  அவர்களுடைய  பள்ளிப்பேருந்துக்காக அவன் வீட்டின்  முன்னே  காத்திருந்தனர். குழந்தைகளின்  அம்மாக்கள் அவர்களுடைய  குழந்தைகளின்  மேல் ஒரு கண்  வைத்துக்கொண்டு  மற்றவர்களிடம்  பேசிக்கொண்டிருந்தனர்.  





அந்த குழந்தைகள் அவனது வீட்டு தாழ்வாரத்தில், அவனது வீட்டு நாய்குட்டியிடமும், மேய்ந்து கொண்டிருந்த கோழி குஞ்சுகளிடமும், ஆட்டு குட்டியிடமும், கன்று குட்டியிடமும் கொஞ்சிக்கொண்டும் வம்பு செய்துகொண்டும் மழலையற்கே உரித்தான விதத்தில் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.   

அப்போது எழுந்து வந்த அவன், அந்த குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேசினான். அந்த குழந்தைகளும் அவனுடன் ஆங்கிலத்தில் பேசத்தொடங்கினார்கள்.

அப்போது அவனது அம்மாவிடம் அவன் சொன்னான், "நாங்கல்லாம் படிக்கும் போது சரியா பேசவே வராது. இந்த புள்ளைங்கல்லாம் எவ்வளவு சாமர்த்தியமா பேசுது!", என்று  வியந்துகொண்டிருந்தான்.

அவனுக்கு  அவனுடை  பள்ளிநாட்கள்  நினைவுக்கு  வந்தது. அது பற்றி  அவனுடைய  அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தான்.

ஒரு பள்ளிக்கூடம் அந்த சிறிய கிராமத்திற்கு வரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில்  தனது பட்டா  நிலத்தையும் வழங்கியவர் அந்த கிராமத்தின் ஒரு பெரும் பெருமைக்குரிய நிலக்கிழார்.

அவன் அவனது ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில்தான்  ஐந்தாம் வகுப்பு வரை படித்தான். மூன்று புறமும் வயல்வெளிகளால் சூழப்பட்டு தார் சாலையை ஒட்டிய ஒரு  காங்கிரீட் கட்டிடத்தில்தான் அவன் படித்த பள்ளிக்கூடம் இருந்தது. பள்ளிக்கட்டிடத்துக்கு  பின்புறம் வயலில்  இருந்து  பார்த்தால்  பள்ளிக்கட்டிடம்  எட்டடி  உயரத்தில் இருக்கும்.  கட்டிடத்தில்  நுழைவாயில் தார்சாலை மட்டத்துக்கு  சமமாக  இருக்கும். அவன்  பள்ளியில் மின்சார வசதியில்லை. நான்கு புறமும் இருந்த  ஜன்னல்கள்தான் அந்த பள்ளியில் மின் விளக்குகளும், மின்விசிறிகளும் இல்லாத  குறையை  தீர்த்துக்கொண்டிருந்தன. தூய்மையான காற்றுக்கும், வெளிச்சத்துக்கும்  பஞ்சமே இல்லை. தினமும் பள்ளிநாட்களில், கட்டிடத்தை  திறந்தவுடன் உடன் முதல் வேலையாக எல்லா ஜன்னல்களையும் திறந்து வைப்பதையே வேலையாக வைத்திருந்தான்.

அப்போது அந்த  பள்ளியில்   மொத்தமாகவே  30 மாணவ மாணவியர்கள்  தான் படித்துக்கொண்டிருந்தனர். அந்த  பள்ளிக்கட்டிடத்தில், நடுவில் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு மறைப்புதான்  இரண்டு வகுப்பறைகளை  பிரிக்கும்  சுவர்.   ஒரு பக்கம் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலும்  மற்றொரு புறம் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளும்  இருக்கும்.  நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளை  தலைமை ஆசிரியர் பார்த்துக்கொள்வார். ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை மற்றொரு ஆசிரியரான திரு. கணேசன் பார்த்துக் கொள்வார்.





அவனது பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. வ. கலியமூர்த்தி அவர்கள் குத்தாலத்தில் இருந்து சைக்கிளில் வருவார். அவர் ஐந்து அடி உயரம் இருப்பார். முகத்தில்  சின்ன சின்ன அம்மை தழும்புகள் இருக்கும். அவர் எப்போதும் வெள்ளை வேட்டி சட்டையில்தான் இருப்பார். அவனை அவர் 'வெள்ளை', என்று செல்லமாக கூப்பிடுவது  இன்றளவும் அவனது மனதில் நின்றது. மற்றொரு ஆசிரியர் திரு. கணேசன் அவர்கள் பக்கத்துக்கு ஊரான  செஞ்சியில் இருந்து  சைக்கிளில் வருவார்.

அந்தப்பள்ளியின் இரண்டு கரும்பலகைகளும், ஒரு இந்தியா மேப்பும், ஒரு பெரிய மர பெட்டியும் அதனுள் வைக்கப்படும் பள்ளிக்கூடத்தின்  பொருட்களும் அவன்  மனதில்  இன்றும்  நீங்காமல்  பசுமையாக  நினைவில்  இருக்கின்றன. மாணவர்கள் அமர தரையில் போடும் தரைப்  பலகைகளை  தினமும்  காலையில்  எடுத்துப்போடுவதும், மாலையில்  ஓரத்தில்  அடுக்கிவைப்பதும்  அவனுடைய  வேளைகளில்  ஒன்று.





அந்த பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு இடம் என்று தனியாக எதுவும் இருந்ததில்லை.  பள்ளியை சுற்றியுள்ள இடம் தான் அவர்களின் விளையாட்டு மைதானம். அங்கேதான் பள்ளியின்  மதிய உணவு  இடைவேளையில் விளையாடுவார்கள்.

பள்ளிக்கூடம் ரோட்டோரமாய் இருப்பதால், வாகனங்கள் போகும்  வரும்  என்பதாலும் ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள்.  பள்ளியின் சுற்றுச் சுவரை விட்டு வெளியே போகக் கூடாதென்று சொல்லிக்கொண்டே  இருப்பார்கள்.

அவன்  பள்ளிக்கூடத்தின் எதிரே இருந்த விக்ரமன் ஆற்றங்கரையில் தினமும் அவனும்  அவனுடைய  நண்பர்களும் சறுக்குமர  விளையாட்டும், ஒளிந்து பிடிக்கும் விளையாட்டும் விளையாடுவார்கள். பெண் பிள்ளைகள் இச்சா இனியா, காயா பழமா என்று  கூவிக்கொண்டே  சில்லு கோடு விளையாடுவார்கள்.  எதிர் எதிரே அமர்ந்து மணலை நீளமாக  குவித்து  ஒரு  குச்சியை அதனுள்  மறைத்துவைத்து கிச்சுகிச்சு  தாம்பாளம்  விளையாட்டும் விளையாடுவார்கள்.

அந்த  பள்ளியில்தான்  அவன் ஐந்து வருடம் படித்தான்.  அந்த பள்ளி அவன் வீட்டுக்கு  அருகிலேயே  இருந்தது. பள்ளிப்பிள்ளைகளுக்கு  மதிய உணவாக கோதுமை  உப்புமாவும், வெல்லமும் கொடுப்பார்கள். உணவிற்கு பிறகு எல்லா குழந்தைகள் தங்கள் வீடுகளுக்கு போய் வருவது வழக்கம்.  வீட்டுக்கு திரும்பிப்  போகும் பொது சாலையோரமாக இருந்த முள் வேலியில் படர்ந்திருந்த கோவைச்  செடியில் இருந்து சிவந்த கோவைப்  பழத்தினையும், கருப்பாக இருக்கும் நொனப்பழதினையும் பறித்துச்   சாப்பிட்டுக்கொண்டே  போவான்.

மதிய நேரத்தில் தலைமை ஆசிரியர் திரு. வ. கலியமூர்த்தி ஓய்வெடுத்துக்கொண்டிருப்பார். அன்று ஒரு  நாள் அவனும்  நண்பர்களும்  பள்ளிக்கு  வெளியே  விளையாடிக்கொண்டிருந்தார்கள். தலைமை ஆசிரியர் மதிய வழக்கம்போல  இடைவேளையில் ஒய்வெடுத்து கொண்டிருந்தார்.

அவன் முதல்நாள் இரவு தன் தந்தையுடன்  குத்தாலம் ஶ்ரீராம் தியேட்டரில் 'சந்திப்பு', என்ற படம்  பார்த்துவிட்டு  வந்திருந்தான். அந்த  படத்தின் ஒரு  பாடலை  அவன்  உரத்தக்குரலில்  பாடத்தொடங்கினான்.

   “பறவைகள் பலவிதம்
   ஒவ்வொன்றும் ஒருவிதம்”

அந்த  சத்தத்தில் தலைமைஆசிரியர் எழுந்தே  வந்துவிட்டார்.

வந்தவர், "வெள்ளை..... இங்கே வா......!", என்று  செல்லமாக கூப்பிட்டார். அவனும் அருகில் சென்றான்.

"ஏன் சத்தம் போட்டாய்?", என்று சொல்லிக்கொண்டே அவன்  வயிற்றினை  பிடித்து  திருகினார்.  அந்த  வலியில் அவன்  தனது சட்டையை நனைத்துக்கொண்டான்.  


No comments:

Post a Comment