Wednesday 27 May 2020

ஊர் திரும்புதல் - 7

பனை  மரம்

பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து கற்பகதருவுக்கு ஒப்பிடுவர். பனை  என்னதான்  கொடுக்கவில்லை. பாளையில் இருந்து  கள்ளும் பதநீரும். பதநீரை  காய்ச்சினால் கருப்பட்டியும் பனங்கற்கண்டும். இளங்காய்களில்  இருந்து  நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு. அதனுடைய  ஓலையை  வைத்து  வீடுகட்டுவது  முதல்  கூடை  முடைவதுவரை பலவிதமான  பயன்பாடுகள். பனைமரத்தின்  உச்சிமுதல்  வேர் வரை  வீணாய்  போகும்  பொருள்  என்று  எதுவும்  இல்லை. 


                                    


கோடை காலத்தில் பொதுவாக பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு, பதனீர், கள் ஆகியவை அந்த நாட்களில் பனை  விவசாயிக்கு  முக்கிய வருவாய்  ஊற்று.  

                                          


பனைமரத்தில்  இருந்து  கிடைக்கும்  பொருட்களுக்கு  நாட்டு மருத்துவத்தில் முக்கிய  இடம்  உண்டு. வீட்டிலேயே  செய்யப்படும்  பாட்டி  வைத்தியத்தில் கருப்பட்டியும்,  பனங்கற்கண்டும் இல்லாமல்  இருக்காது. பனை  நுங்கு நீரை  தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால்  கோடை காலத்தில் வரும்  வேர்குரு கூட  நீங்கும்.
                                     

வெட்டாமல் விட்டு போகும் பனங்காய்க்கள் முதிர்ந்து பழுத்து தானாகவே    கீழே விழும், பழம் உள்ள மரத்தினை தாண்டி செல்லும்போதே  அந்த வாசனை சுண்டி இழுக்கும். அந்தப்  பழம் கரும்சிவப்பு நிறமாகவும், அருமையான மணமும்  கொண்டிருக்கும்.  அதை சாப்பிட ஒரு விதமான திறமை வேண்டும். பழத்தை எடுத்து பற்களால் வெளித்  தோலை கடித்து இலகுவாக்கி  பின்னர் உள்ளே நார்கள் நிறைந்த அந்த சிவந்த நிறம் கொண்ட சதைப்பகுதிக்கு வரவேண்டும்.  பனம்பழத்தின்  சுவையோ மிக அதிகம். ஆனாலும் இதில் பித்தம் வரும் என்பதாலோ  என்னவோ, எல்லோரும் விரும்பி  உண்ணமாட்டார்கள்.    ஒரு  பனம்பழத்தை கடித்து  இழுத்து  சுவைத்தவரை  அவருடைய  பற்களில்  சிக்கியிருக்கும்  நார்களை  வைத்தே  கண்டுகொள்ளலாம். பனம்பழத்தை  சுட்டும்  சாப்பிடலாம்.






அவனுடைய  ஊரில் எல்லாத்திக்கிலும்   ஆங்காங்கே  பனை 
மரங்கள் வளர்ந்து ஊருக்கே அரனாய் இருந்தது.  கோடை காலங்களின் அமிர்தமாய் இளவயதில்  சாப்பிட்ட  இளம் நொங்கு  அவன்  நினைவில்  வந்து  இனித்தது.


                                   


பனங்காய்களை எடுத்து  துளையிட்டு  நுங்கு வண்டி  ஒட்டியதும். அதில்  சிகரட் அட்டையை  ஒட்டி புல்லெட் வண்டி வருது என்றே ஊரே  சுற்றித்  திரிந்த காலங்கள் அவனுக்கு  நினைவில் வந்தது.   அவனும்  பனைமரம்  ஏற முயற்சி  செய்திருக்கிறான். 

                                    

                                                                                                    
எல்லோராலும் பனை மரமேறி பனங்காய் பறிப்பது இயலாது. ஒருவருக்கு மரமேற தெரியுமென்றால் அவரை சுற்றி ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். அவனுடைய  ஊரில் இளசுகள்  எப்போதும் ஒரு பெருசை நம்பியே இருப்பார்கள். 

                                                         

அந்த ஊரில் பனை மரம் உள்ளவர்கள், ஒவ்வொரு வருடமும் இரண்டு  மாதங்களுக்கு கள், பதனீர்  எடுக்க ஏலம் விடுவார்கள்.  அப்படி எல்லா  மரங்களும்  ஏலத்துக்கு  வராது. ஆற்றோரமாக இருக்கும் பொதுவான மரத்தில் கள் எடுக்க கூடாது  என்று  கட்டுப்பாடு  இருந்தது. அது போன்ற மரங்கள் தான் எல்லோருக்கும் பனங்காய் கொடுக்கும்.


அந்த இரண்டு மாதங்களில், வெளியூரிலிந்து கள் எடுக்க வாடிக்கையாக ஒருவர் வருவார.  அவரின் பெயர் விளிம்பி  மைனர்.


முன்பெல்லாம் பக்கது ஊரில் உள்ளவர்களே அந்த  வேலையைப்  பார்த்து வந்தனர். கள் எடுக்க அரசாங்கம் தடை விதித்ததால் அவர்கள் வேறு  தொழில்  தேடி கொண்டனர்.


அதனால் எப்போதெல்லாம் அனுமதி கிடைக்குமோ அப்பொழுதெல்லாம் அந்த மைனர் குடும்பம் குத்தகை எடுத்துக்கொள்ளும். அப்போதெல்லாம் கள்ளு கடை ஊருக்கு ஒதுக்குபுறமாகதான் இருக்கும்.  அதனருகே மலையாளத்தார்  என்று ஒருவர் பட்சணக்கடை வைத்திருப்பார்.


கள் விஷத்தை  முறிக்கும்.  அதில் எந்த வகையான பூச்சிகள் விழுந்தாலும் அப்படியே  வடிகட்டி விடுவார்கள். கள்ளின் சுவை  புளிப்பு. சிறிய  மயக்கமும்  உண்டு.  கள் வடிக்கும் கலயத்தில் சுண்ணாம்பினை நன்கு தடவி வைத்துவிட்டால்  கிடைப்பது  தெளிந்த நீர். அதுதான்  இனிப்புச்சுவையுடைய  பதனீர். 

அந்தநாட்களில்,  அவனுடைய  ஊரின்  வயற்பரப்புகளில் எங்கு பார்த்தாலும் கள் குடித்துவிடுட்டு வீசியெறிந்த பனை மட்டையால் செய்த கோப்பைகளைப்  பார்க்கமுடியும். அப்படிதான்  ஒரு  வருடம்  அவர்களுடைய  வயலில்  பயிர்  செய்திருந்த நிலக்கடலைகளில்  பாதிக்குமேல்  கள் குடிப்பிரியர்களால் காலிசெய்யப்பட்டுவிட்டது. 




ஒருநாள் கள் ஏலம்  எடுத்த  மைனருக்கு  ஓரிரெண்டு மரங்களில் கள் மிகவும் குறைவாக வடிகிறதே என்ன  காரணம்  என்று  சந்தேகம் வந்தது.  அவருடைய ஆட்கள் ஊமத்தங்காயினை அரைத்து கலயத்தில்  கலந்து  வைத்து விட்டார்கள்.  அவர்கள்  எதிர்பார்த்ததுபோல, பல நாள் திருடர்கள் மறுநாள்  மாட்டிக்கொண்டனர்.  திருடர்கள்  மூன்றுபேர். எப்போதும்போல அவர்கள் கள்  இரவில் கள் இறக்கி குடித்திருக்கின்றனர்.   அந்த மூவருக்கும், மறுநாளில் ஊமத்தங்காய்  கலந்த  கள்ளைக் குடித்துவிட்டு  நாக்குகள் தடித்துவிட்டது.  அவர்கள்தான்  கள் திருடர்கள்  என்பது  இப்படியாக  வெளியாகிவிட்டது.


அவனுடைய  ஊரில்  அவனுக்குத்தெரிந்து  தண்ணீர்  பஞ்சமே  வந்ததில்லை. அதற்கு காரணம்  அவனுடை  ஊரில் எங்கெங்கும்  இருக்கும்  பனை மரங்கள்தான்  என்று  அவனுக்குத்தெரியும். 










No comments:

Post a Comment