Sunday 24 May 2020

ஊர் திரும்புதல் - 4

அவன், தாத்தாவுடன் பேசிக்கொண்டே கௌசல்தார் வீட்டைக் கடந்தான். அவன் நினைத்ததுபோல  அந்த  கடை  அங்கே  இல்லை. கடை  இருந்த  இடம்  புதுப்பித்து  கட்டப்பட்டிருந்தது.

நெல் அறுவடை ஆரம்பிக் போவதால் அதை கொள்முதல் செய்யும்  தமிழ் நாடு நேரடி நெல் கொள்முதல் நிலையம், தங்களது ஆயத்த பணிகளை மேற்கொண்டு இருந்தார்கள்.


அப்படியே ஆற்றின் பாலத்தைக்  கடந்து திருமங்கலத்தை அடைந்தான்.  அந்த ஊர்தான் அவனின் கிராமத்திற்கு உள்ள கடை தெரு. திருமங்கலம் நீண்ட தெருக்களை கொண்ட அழகிய ஊர். அந்த ஊரின் சிறப்பே, ஊரின் மத்தியில் வீற்றிருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க பூலோக நாயகி சமேத  பூலோக நாதர் திருக்கோவில்  (சிவன் ஆலயம்). அந்த ஊரில் இருக்கும் சிவன்கோவில் தெரு, பள்ளிவாசல் தெரு, மெயின் ரோடு (மெத்தை வீட்டுத் தெரு), அரசு நடுநிலை பள்ளிக்கூடம் எல்லாமும்  கூட  சிறப்பாகவே  இருக்கும்.



மெயின் ரோட்டில் இருக்கும்  அண்ணா சிலையும் அதனை  சுற்றியிருக்கும் வித விதமான  கடைகளும், அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தமும், அதனருகே பூம்புகாரிலிருந்தும், சின்னங்குடியிலிருந்தும் கொண்டுவந்து  விற்கப்படும்  கடல் மீன், நண்டு,  இறால்  வகைகளும்  அவனுக்கு  நினைவுக்கு  வந்தது. அந்த  ஊரே, சுற்றியுள்ள  கிராமங்களுக்கு  வேண்டிய  வசதிகளை  தந்துகொண்டிருந்தது.

       


அவன் முன்பெல்லாம் வாடிக்கையாக செல்லும் இறுக்கி கடையை நோக்கி நடந்தான். அந்த கடையின்  உரிமையாளர் வேறு மாவட்டத்தை  சேர்ந்தவர். எந்த பொருளும் இருக்கா என்று கேட்டால், "இறுக்கி" என்றே அவர் அழகாக பதில் சொல்வார்.  அதனாலேயே மக்கள்  வழக்கில் அந்த  கடைக்கு , 'இறுக்கி பாய் கடை' என்று விளிப்பெயர்  ஏற்பட்டிருந்தது.

"பாய் எப்படி இருக்கிங்க?",  என்று அவன்  அவரை நலம் விசாரித்தான்.

அதற்கு அவர், "வா வா, எப்போ வந்த, எவ்வளவு நாள் லீவு!",  என்று கேட்டுக் கொண்டே பொட்டலம் மடித்துக் கொடுத்துவிட்டு அருகில் வந்து பேசினார்.  அவருடன்  பேசிவிட்டு  அங்கிருந்து புறப்பட்டு அருகில் இருக்கும் சிதம்பரம் மாமா டீ கடையில் டீ குடித்துக் கொண்டே  அவரிடமும் நலம் விசாரித்தான்.

அவன் சிறுவயதில் நெல் அரைக்க செல்லும் பத்தர் ரைஸ் மில்லுக்கு சென்றான். அங்கிருந்த  தாத்தா "வாடா படவா, எப்போ வந்தாய்?", என்று தனக்கென்ற தொனியில் வாய் முழுவதும் வெற்றிலையை குதப்பிக்கொண்டே  வரவேற்றார். அவருடன்  கொஞ்ச  நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு  புறப்பட்டான்.

வரும் வழியில்,  ஆற்றில்  ஒரு  இடத்தில  சிறுவயதில்  அவனும்  அவனுடைய  நண்பர்களும்  கூட்டமாய் ஆற்றில் விளையாடிய 'கவ்வை குச்சி விளையாட்டு' அவனின் ஞாபகத்துக்கு வந்தது.



இளம் மூங்கில் கவ்வையை வைத்துக்கொண்டு ஆறு ஏழு பேர் சேர்ந்து விளையாடும்  ஆட்டம்தான்  அது. ஆட்டக்காரர்கள்  எல்லோருடைய  கையிலும்  கவ்வை  குச்சிகள்  இருக்கும். அவுட்  ஆனவர்  குச்சிமட்டும் தரையில்  கிடைக்கும்.  மூங்கில் குச்சியின்  நுனியில்  வளைத்த  ஊக்கு  போல கவ்வை  இருக்கும். அதன்  துணையுடன்  அவுட் ஆனவரின் குச்சியை  மற்றவர்கள்  இழுத்துப்  போவார்கள். அவுட் ஆன பையன்  குச்சியின்  பின்னாலேயே போக வேண்டும். அவுட் ஆன பையன் யாரை  தொடுகிறானோ  அவன் அவுட். ஆனால் அவன்  தொடும்போது  துரத்தப்படுபவன்  ஏதாவது  ஒரு  கல்லில் அல்லது  அங்கே  கிடைக்கும்  பொருளில் (மண் தவிர) தன்னுடைய கவ்வை குச்சியை  தொட்டுக்கொண்டிருந்தால்  அவன்  அவுட் இல்லை. இப்படியாக  அந்த  விளையாட்டு  மிக சுவாரசியமாக  இருக்கும்.  எந்த  ஒரு  ஹாக்கி  விளையாட்டுக்கும்  குறைவானதல்ல அந்த  ஆட்டம். அந்த  விளையாட்டை  யாரும்  இப்போதெல்லாம்  விளையாடுவதாக  தெரியவில்லையே  என்று  எண்ணிக்கொண்டே லேசான  பெருமூச்சுடன்  அந்த  இடத்தை  அவன்  கடந்தான்.


தொடரும் .....            





2 comments:

  1. ஞாபகம் வருது கவ்வ குச்சி ஆட்டம்.இப்போ யாரும் விளையாடுற மாதிரி தெரியல

    ReplyDelete
  2. நிறைய விளையாட்டு மறந்து போய்விட்டது, மீண்டெடுக்க வேண்டும் - நன்றி

    ReplyDelete