Monday 25 May 2020

ஊர் திரும்புதல் - 5



அவன் வீட்டுக்கு வந்த பின், அவன் நண்பர்களுடன்  கூடி விளையாடிய கவ்வை விளையாட்டின் போது  அவனுக்கேற்பட்ட சில நிகழ்வுகளை நினைவு கூர்ந்தான். 


கோடைக்காலங்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் நிலங்கள் தான் கண்ணுக்கு  தெரியும். தாலடிக்கு பின்னதான, பயறு, உளுந்து அறுவடையும் முடிந்து  நெற்பயிரின் வெண்மை நிற  அடித்தால்கள் வயல்களெல்லாம் படர்ந்து கிடைக்கும்.  இடையிடையே அந்த வயல்களில் கோடை புற்கள் பசுமையாக சிதறிக்கிடக்கும். அதுதான்  மாடுகளுக்கான மேய்ச்சல் பகுதி.  ஆனாலும் ஆங்காங்கே, ஒரு சில வயல்களில் எள் பயிரிட்டிருப்பார்கள். அதனாலேயே  மாடுகளை மேயவிடும்போது  கொஞ்சம்  கவனம்  தேவை.  இல்லையெனில் பச்சை பசேல் என்று இருக்கும் எள் பயிர்களுக்குள் மாடுகள் புகுந்தால் செடிகள் ஒடிந்து பயிர்கள்  சேதமாகிவிடும். 



                                          



                                    

                                     

எப்போதும்  மாடுகளை  மேய  விட்டுவிட்டு  கவ்வை  ஆடுவதுதான்  அவர்களுடைய  வழக்கம்.  அவர்களில்  ஒருவன்  மட்டும்  மாடுகளை  பார்த்துக்கொள்ள  நிறுத்திவிட்டு  மற்றவர்கள்  கவ்வை  ஆட்டம்  விளையாடுவார்கள். 


அந்த  பையன்களில்  யாரும்  செருப்பு  அணிவதில்லை. விளையாட்டின் உற்சாகத்தில் மணலின் சூடு தெரியாமலே விளையாடிக்கொண்டு இருப்பார்கள். விளையாட்டு முடிந்து வீட்டுக்கு சென்று  பார்க்கும்போதுதான் கால்கள் எல்லாம் சூட்டுக் கொப்பளங்கள் இருப்பது  தெரியும். 


பொதுவாக அங்கு  இருக்கும்  சுற்றுவட்ட கிராமங்களில்  வயல் வெளிகளில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் திருமங்கலத்தின் பள்ளி வாசலில் ஒலிக்கும் பாங்குதான் கடிகாரம். மதிய நேரத்தில்  ஒலிக்கும் பாங்கு அவர்களுக்கு  டீ  பிரேக்.  அதுபோல் சாயங்காலம் வரும்   பாங்குதான் வேலையை விட்டு கரையேறும் நேரம். கோடைகாலத்தில்  அவர்களைப்போல  மாடுகளை  மேய்ச்சலுக்கு  அழைத்து செல்பவர்களுக்கும் அதே  பாங்கு ஒலிதான் நேரம்  காட்டி. 



அப்படித்தான்  அன்று  ஒரு கோடைநாளில்  காலையிலேயே  குளிர்ந்த  பழையசாதத்தில் அவர்கள்  வீட்டு  எருமைப்பாலில் உரை ஊற்றிய  தயிரை  விட்டு  பிசைந்து  சாப்பிட்டுவிட்டு  சிறிய  ஏப்பத்துடன்  எழுந்தான். சாப்பிட்ட  கைவிரல்களில் அந்த  எருமைத்தயிர் வெள்ளை நிறத்தில்  பிசுபிசுத்தது. தவிட்டை  தேய்த்து  கைகழுவிக்கொண்டு அவர்கள்  வீட்டு  மாடுகளை  பிடித்துக்கொண்டு  அவனுடைய நண்பர்களுடன் மேய்ச்சலுக்கு  புறப்பட்டான். அவனுடைய நண்பர்கள்   அவரவர் வீட்டு  மாடுகளுடன் மேய்ச்சலுக்கு வந்தார்கள்.  அங்கே  சென்றவுடன்  அவர்களுக்கு  வழக்கமான  விளையாட்டு  மனநிலை  வந்துவிட்டது. 


ஒரு சிறுவனிடம் மாடுகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பைக்  கொடுத்துவிட்டு மற்ற எல்லோரும் விளையாடத்  தொடங்கினர். தொடக்கத்தில் சாட்....பூ....த்ரீ..... போட்டு யாருடைய கவ்வை தரையில் இருக்கவேண்டும் என்று  தீர்மானித்தனர். ஆட்டம் சூடு பிடித்தது. உற்சாகத்தில்  விளையாடிக்கொண்டே வெகு தூரத்திற்கு சென்று விட்டனர்.


   
                                     


அன்று விளையாட்டின் பொது, மதியம் பாங்கு ஒலி கேட்டவுடன் விளையாட்டை முடித்துக்கொண்டு மாடுகளை வீட்டுக்கு கூட்டி செல்ல சென்றனர். அப்போதுதான்  மேய்ச்சலுக்காக ஓட்டி சென்ற மாடுகளில் ஒன்று இல்லாததை  கண்டுபிடித்தனர்.  அது அவனுடைய  வீட்டு எருமை  மாடுதான்.


பொதுவாக எருமை மாடுகள் கோடை காலத்தில் காற்றின் திசையிலே போய்விடும். அதுபோலவே அன்று,  காற்று  அடிக்கும்  திசையைவைத்து  ஒருவேளை அந்த  மாடு அடுத்த  கிராமமான மாங்குடி நோக்கி போயிருக்குமோ  என்று  அவனுக்கு  தோன்றியது. மற்ற  மாடுகளை  பையன்களுடன்  அனுப்பிவிட்டு  காணாமல்  போன  மாட்டைத்தேடிக்கொண்டு அவ்வழியே இருந்த  நாட்டு கன்னி வாய்க்கால் வழியாக அவன் கிளம்பினான். இந்த வாய்க்கால் விக்ரமனாற்றில் இருந்து பிரிந்து சுமார் 500 ஏக்கர் பயிர்களுக்கு நீர் பாசனம் கொடுத்துக்கொண்டிருந்தது. 


கிராமங்கள்  ஒரு  நாட்டின்  முதுகெலும்பு.  ஏனென்றால் கிராமங்களில்  விளையும்  உணவுப்பொருட்களைத்தான்  நகரங்களில்  இருக்கும்  மக்கள்  நுகர்கிறார்கள். அந்த  கிராமங்களில்  ஒரு  வீட்டின்  பொருளாதாரம்  அரைக்காணி  நிலமும்,  ஐந்தாறு ஆடு, மாடுகளும்தான். ஆடுமாடுகள்  ஒரு  விவசாயிக்கு  அவனுடைய  குடும்பத்து  உறுப்பினர்கள்  போல. அவன்  இந்த  நாட்டில்  இருக்கும்  கோடானுகோடி  விவசாயிகளில்  ஒருவரின்  மகன். அவனுக்கு  அந்த  மாட்டின்  மதிப்பு  தெரியும். 



மதியம் கறவைக்கு மாட்டைத் தேடுவார்கள்.  அவன் கவலையெல்லாம் கன்று குட்டி பாலுக்கு என்ன செய்யும்  என்றுதான்  இருந்தது.  அவனுக்கு   பயத்தில் முகம்  சிவந்து  அழுகையே  வந்தது. எப்படி வீட்டுக்கு போவதென்று தெரியாமல் அங்கும் இங்குமாய் மாட்டைத் தேடி ஓடினான். தேடிக்கொண்டே ஒன்று  இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றுவிட்டான். எங்கும்  மாடு  தென்படவில்லை. மாங்குடிக்கு  அருகில்  ஒரு  குளம்  இருந்தது. அங்கே  கொஞ்சம்  நின்றுவிட்டு  தேடலாம்  என்று  சோர்வுடன்  குளத்தங்கரையில் உற்கார்ந்தான். மனதுமட்டும்  பதைபதைத்தது. அப்போதுதான்  அவன்  அதைக்கண்டான். கலங்கி  தேங்கியிருந்த குளத்து நீரின்  நடுவே  ஒரு  மெல்லிய  அசைவு. அதை  சுற்றி  வட்ட  வட்டமாக  மெல்லிய  அலைகள்  குளத்து நீரில்  விரிந்தவண்ணம்  இருந்தது. உற்றுப்பார்த்தான்.  ஒரு  கல்லை  எடுத்து  எறிந்தான். மேலும்  அசைவு. அது அவனுடைய மாடுதான். அது   வெயிலுக்கு பயந்து,  குளத்து நீர் இருக்கக்கண்டு அதில்  இரங்கி  இதமாக தண்ணீரில் ஊறிக்கொண்டிருந்தது.



                                  




அப்போதுதான்  அவனுக்கு  மூச்சுவந்தது போலிருந்தது. அவன் முகத்தில் ஒரு தெம்பு ஏற்பட்டது. குளத்தின்  உள்ளே இறங்கி அந்த மாட்டை அழைத்து கொண்டு வீட்டுக்கு விரைந்தான். 


அத்தனை மாடுகள் இருந்த அந்த  ஊரில்  காலப்போக்கில்  இப்போதெல்லாம் ஊரில் பேருக்குக்கூட ஒரு எருமை மாடு இல்லையே  வருந்தினான்.   

No comments:

Post a Comment