Tuesday 16 June 2020

ஊர் திரும்புதல் - 17


பம்பரம் விளையாட்டு


அவன் அந்த மாதத்தில்  பம்பரம் விளையாட்டுக்காக பம்பரம் வாங்குவதற்கு தினமும் சிறுக சிறுக காசு சேர்த்து வைப்பது வழக்கம். அப்படித்தான் இந்த வருஷமும் அவன் தனது செலவை குறைத்து காசு சேர்த்துவைக்க தொடங்கினான். தினமும் பள்ளி கூடம் விட்டு வரும் போது 'இருக்கி பாய்' கடையில் ஒரு பம்பரம் பார்த்துவிட்டு அதனை தனக்காக எடுத்து வைக்கவும் சொல்லிவிட்டு வந்தான். ஒரு வாரத்தில் அந்த பம்பரத்தினை சேர்த்து வைத்த காசுக்கு வாங்கிவந்தான்.    




அவன் ஆசை ஆசையாய் அந்த பம்பரம் வாங்கிய சந்தோஷத்தில், வீட்டுக்கு வந்ததும் அந்த பம்பரத்துக்கு,  வேறு ஆணி அடிப்பது  என்று  திட்டம்  போட்டான். வீட்டுக்கு  வரும்போது  இருட்டிவிட்டது. ஆணியெல்லாம்  அடித்து  பம்பரத்தை  பக்காவாக  தயார்செய்து  வைத்துவிட்டான். மறுநாள் விடுமுறை நாளென்பதால், அதிகாலையிலே  நண்பர்கள் எல்லோரும் கூடி பம்பரம் விளையாட வேண்டும் என்று ஆசையின் காரணமாக இரவெல்லாம் தூங்காமல்  பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்தான் அவன்.    










மார்கழி மாதத்தின் அதிகாலையில் விக்ரமன் ஆற்றின் சல சல எனும் மெல்லிய சத்தத்துடன் அரையடி அளவில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. சூரியன்  உதயமாக தொடங்கும் காலைவேளை, பனி மூட்டம்  வெண்மையான போர்வை போர்த்தியது போல் இருந்தது. இளம் மங்கையர்கள் தங்களின் தெருவில் பசுவின் சாணம் தெளித்து மார்கழி கோலம் இடுவதற்கு ஆற்றில் இருந்து தங்களின் இடுப்பில் பித்தளை குடத்தில் தண்ணீர் எடுத்து கொண்டு வந்தனர்.  அரச மரத்தில் குடியிருந்த பறவைகள் எழுப்பிய  கீச் கீச் கீச் ஒலி ஆட்கள்  கூட்டம்  கூடி கதைபேசிக்கொள்வதுபோல  கேட்டுக்கொண்டிருந்தது. கோழி கூண்டு வேண்டாம் என்று விரைப்பாக கொய்யா மரத்தின் மீது ஒய்யாரமா உறங்கி கொண்டிருந்த சேவல், கொக்கரக்கோ கொக்கரக்கோ  என்று  கூவி  விடியலை  அறிவித்தது. அவனும்  இதையெல்லாம்  கேட்டபடி  விடியலில்  வெளிச்சம்  வரக்காத்திருந்தான்.   

அந்த அதிகாலை வேளையில் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசுவதே காதில் கேட்காத வண்ணம் அவனது ஊரின் ராமமூர்த்தியின் ரேடியோ சர்வீஸின்  ஒலிபெருக்கியில்

'திருச்செந்தூரில்
கடலோரத்தில்
செந்தில் நாதன்
அரசாங்கம்'

என்ற தெய்வீக கானம் இசைத்து கொண்டிருந்தது.   தெருக்களில் வீடுகளின் வாசல்  விளக்குகள்  மின்ன தொடங்கியது.

அவனது ஊரின் மாணிக்கம் டீ கடையில் அடுப்புவெளிச்சம்  தெரியத்தொடங்கியது. அந்த அதிகாலையிலே அவன் மாணிக்கம் டீ கடையில் டீ குடிப்பது வாடிக்கை. அப்படித்தான் அவன் அன்று டீ குடிப்பதற்க்காக மாணிக்கம் கடைக்கு சென்றான். அறுவடைக்கு  ஆட்கள்  தேவைப்படும்  வயல்  உரிமையாளர்கள்  மாணிக்கம்  டீக்கடை  வாசலிலிருந்து  கூட்டிபோகலாம்  என்பதே  அந்த  ஊரின்  வழக்கம்.    அன்றும் வெளியூரில் இருந்து நெல் அறுவடை வேலைக்காக கும்பல் கும்பலாக வந்து அந்த டீ கடையின் ஆட்கள்  காத்திருந்தார்கள். இது ஒவ்வொரு மார்கழியிலும் கடைசி வாரத்தில் வழக்கமாக நடக்கும் நிகழ்வுதான். மாணிக்கம்  கடை  டீயுடன்  அவனின் அந்த நாள் இனிதே தொடங்கியது.

அந்த  மார்கழி  மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் இருந்து காலையில் பிள்ளையார் கோவிலுக்கும்  மாரியம்மன் கோவிலுக்கும்  பூஜை  நடக்கும். அந்த  பூஜைக்கு  பிறகு  வெண் பொங்கல் பிரசாதம் கொடுக்கப்படும்.  அந்த பொங்கலுக்காகவும் மார்கழி மாதத்தின் இளங்காலை வெயிலை  ரசிக்கவும் காலையிலேயே காலையில் ஊரின் சின்ன சிறுசுகளெல்லாம் கோலி குண்டு மற்றும் பம்பரம் விளையாடுவது வழக்கம். அதில்  அவனும்  உண்டு.





அவன் தனது பம்பரத்தில் கயிற்றை விரைவாக சுற்றி வீசி  தரையில்  பட்டுவிடாமல்  நின்ற  நிலையிலேயே கையில்  பிடித்து  சுழல விடுவான்.  அந்த  தனித்திறமை  எல்லோருக்கும்  வருவதில்லை. அதுவும் அந்த சாட்டை கயிறினை நுனி நாக்கில் நனைத்து, பம்பரத்தின் மேல் வேகமாக சுற்றுவதும் உடனே வீசுவதும், லாவகமாக கையில் ஏந்துவதும், ஏந்திய பம்பரம் கையில் சுற்றுவதும் தனி அழகானது. 




அந்த  காலைநேரத்தில்  பம்பரம்  விளையாட  அவனையும்  சேர்த்து  ஆறெழுபேர்  கூடியபோது  கோவில்  ஸ்பீக்கர் செட்டில்,

'செல்லாத்தா செல்ல  மாரியாத்தா'

பாடத்தொடங்கியிருந்தது.

அப்போதே  பம்பர விளையாட்டு  தொடங்கியது. அந்த  விளையாட்டுக்கு  திட்டமாக  ஒரு  வட்டம்  வரைந்துகொள்ளவேண்டும். எல்லோரும்  அவரவர்  பம்பரங்களை வைத்து  அபிட் எடுக்கவேண்டும். சாட்டைகயிற்றை  பம்பரத்தில்  சுற்றி, வீசி  சுழலவிட்டு கையில்  எடுக்கவேண்டும். அதுதான்  அபிட். கடைசியாக யார் அபிட் எடுக்கிறானோ அவனுடைய பம்பரம்  வட்டத்துக்குள் வைக்கப்படும். அதன் படியே கடைசியாக அபிட் எடுத்த ஒருவனது பம்பரம் வட்டத்துக்குள் வைக்கப்பட்டது. அடுத்த  கட்ட  அபிட் எடுக்கும்போது  வட்டத்தின்  நடுவில் இருக்கும்  பம்பரத்தை  குத்தி வெளியில்  கொண்டு  வந்துவிடவேண்டும். கில்லாடியான பையன்கள் பம்பரத்தை  வீசும்போதே  ஒரே  குத்தில்  மையத்திலிருந்து  மாட்டிக்கொண்ட  பம்பரத்தை  வெளியில்  எடுத்துவிடுவார்கள். இல்லையென்றால்  பம்பரத்தை  சுழலவிட்டு  கையில்  எடுத்து, நடுவில்  மாட்டிக்கொண்ட  பம்பரத்தை நோக்கி  அதை வீசி  இரண்டு பம்பரங்களும்  வெளியில்  வரும்படி  செய்யவேண்டும். சிலநேரம்  நடுவில்  இருக்கும்  பம்பரம்  வெளியில்  வந்து, காப்பாற்றப்போன  பம்பரம்  உள்ளே  மாட்டிக்கொள்வதும்  நடக்கும்.









நண்பர்களில் ஒருவனின் பம்பரம் வட்டத்துக்குள் வைக்கப்பட்டது, அதை தொடர்ந்து ஒவ்வொருவராக தங்களின் பம்பரத்தினால் வட்டத்தினுள் இருக்கும் பம்பரத்தினை வெளியில் எடுக்காமல் உக்கு வைக்க முயல்வார்கள்.  உக்கு  வைப்பதென்றால், பம்பரம்  கொடுக்கப்படும்  வேகத்தில்  நடுவில்  இருக்கும்  பம்பரத்தில்  அதனுடைய  ஆணி  இறங்கி சேதப்படுத்தும். அப்படி  குத்தும்போது நடுவில்  இருக்கும்  பம்பரம்  வெளியில் வந்துவிட்டால் அவனும் ஆடலாம். பம்பரம் உள்ளே இருந்தால் உக்கு வைப்பார்கள். வட்டத்தினுள் இருக்கும் பம்பரத்தின் மீது ஒவ்வொருமுறையும் உக்கு விழும் பொது பம்பரக்காரனின் முகம் வாடுவதை கண்டு எல்லோரும் பார்த்து சந்தோசப்  படுவார்கள்.

அவனுக்கு மட்டுமல்ல அவனின் நண்பர்கள் அனைவருக்கும் தனது பம்பரத்தில் உக்கு விழாமல் பார்த்து கொள்ளுவது பெருமையாக இருக்கும்.

அப்படியே கடைசி வரைக்கும் ஒருவனின் பம்பரம் வட்டத்துக்குள்ளே இருந்தால் ஆட்டத்தின் இறுதியில் எல்லோரும் சேர்ந்து அந்த பம்பரத்தை உக்கு வைத்தே உடைப்பது வழக்கம். அதுபோல ஆக கூடாது என்று ஒவ்வொருவரும் கவனமாக இருப்பார்கள். அந்த ஆட்டம் ரொம்பவும் சூடாகவே இருக்கும்.  அவர்களின் காலை நேரமும், மாலை நேரமும் இந்த விளையாட்டுதான் எல்லாருக்கும். அதுவும் சில பையன்களுக்கு , எப்போதும் இரண்டு பம்பரங்கள் கால் சட்டையின் பாக்கெட்டில் இருந்து கொண்டே இருக்கும்.

விளையாட்டின் இடையே அவன் அம்மாவின் அழைப்பு வந்தது. பொங்கல் வேலை செய்வதற்காக வீட்டுக்கு மண் போடுவதற்கு ஆற்றின் மறுகரையில் இருந்து களிமண் எடுத்து வரவேண்டும். "தோ வர்றேன்", என்று கூவிக்கொண்டே  அரை மனதுடன் அங்கிருந்து தனது புத்தம்  புதிய  ஆசை  பம்பரத்துக்கு எந்த சேதமும் இல்லாமல் சென்றான்.

அந்த  நேரத்தில்  கோவில்  செட்டில்,

'மாரியம்மா  எங்கள்  மாரியம்மா'

ஒலித்துக்கொண்டிருந்தது.



No comments:

Post a Comment