Saturday 20 June 2020

ஊர் திரும்புதல் -18

மன்மதரும் ரதியும் 

அவன் ஒரு  முறை ஊருக்கு வந்திருந்த போது அது   மாசி மாதம். மாசி மாதம் என்றாலே மன்மதர் கோவிலின் விழாதான் அவனுக்கு  நினைவு வந்தது.  அவன் மிகவும் ஆவலுடன் காத்திருந்தான், அவனது விடுமுறை முடிவதற்குள் விழா பார்த்துவிட்டு செல்ல வேண்டுமென்று.



திருவிழாவும்  வந்தது. ஒரே நாளில்  மன்மதர் கோவில் காப்பு கட்டி மறுநாளே விசேஷம் முடிந்து விட்டது. ஆச்சரியத்துடன் அம்மாவிடம் கேட்டான் ஏன் ஒரே நாளில் முடிந்துவிட்டது என்று.

அம்மா, "ஆமா, இப்பல்லாம்  எங்கப்பா.... இப்ப  ஊரு இருக்கிற நிலைமையில் எடுத்து கட்டி செய்ய முன்னைப்போல  ஆளு கெடையாது. எல்லாம்  டக்கு டக்குன்னுதான் செய்வேண்டியிருக்கு",   என்று  சற்று  வருத்தத்துடன் சொன்னார்கள்.

அவன் தனது சிறு வயதில் நடந்த திருவிழாவினை மெல்ல அசைபோட தொடங்கினான்.

அவனுக்கு நன்றாக அந்த  நாட்கள்  நினைவில்  இருந்தது. இந்த திருவிழா முன்பெல்லாம் பதினைந்து நாட்கள் நடக்கும். நிறைவாக பதினெட்டாம்  நாள்தான் குழியை மூடி மன்மதர் உருவம் ரதிக்கு மட்டும் தெரியும் என்று பரமேஸ்வரன் வரம் கொடுப்பார்.

ஆம், பொதுவாக மன்மதர் கோவில் எல்லா ஊர்களிலும் இருக்காது.  அவனுடைய  ஊரில்  மன்மதருக்கு  கோவில்  உண்டு. அப்படி பெருமைக்குரிய  ஊர்தான் அவன் ஊர்.  அந்த ஊரின் நடுத்தெருவின்  முகப்பில் நுழையும்போதே சாலையோரமாக  சிறியதாய், அந்தக்கோவில்   அமைத்திருக்கும். 

மாசி மாதம் வந்ததும், ஊர் பெரியவர்கள், அதிலும்  முக்கியமான நான்கு   பெரியவர்கள்,  இந்த திருவிழாவில் முக்கிய பங்கு வகிப்பார்கள். அதில் ஒருவர் மன்மதன் ரதி கதையினை சொல்லி ஒவ்வொரு நாளும் பூஜை செய்பவர். இரண்டாமவர் மன்மதரும் ரதியும் ஊருக்கே காட்சி கொடுக்க சப்பரம் அழகாக வடிவமைத்து அதற்கு உருக்கொடுத்து அலங்காரம் செய்பவர். மூன்றாமவர்  இவைகள் எல்லாம் சீரும் சிறப்பாக நடக்க எல்லா வழிகளையும் முன்னின்று வழிகாட்டுபவர். நான்காவது  பெரியவர்தான் அந்த  ஊரின்  பண்ணையார், மொத்த  கிராமத்திற்கும்  முதன்மையாய்  நின்று  வழிகாட்டுபவர்.      ஆனால் அவன் ஊர் அந்த நான்கு முக்கியமான  பெரியவர்களையும்   இழந்து நிற்கிறது இன்று.  



மாசிமாதம் பிறை  கண்டவுடன் மன்மதர்  கோவிலுக்கு   காப்பு
கட்டுவார்கள்.  பின்னர் பதினைந்து நாட்கள் மண்டகப்படி  நடக்கும்.  ஊரில் உள்ள எல்லோரும் ஒரு நாளைக்கு ரெண்டு மூன்று குடும்பங்களாகவும் சேர்ந்தும், சில நாட்கள் பெரிய வீட்டில் தனியாகவும் மண்டகப்படி நடக்கும்.  அந்த பதினைந்து நாட்கள்  இரவெல்லாம் சின்ன சிறுசுகளுக்கெல்லாம்   ஒரே கொண்டாட்டம்தான்.  பதினைந்து  நாட்கள்   கழித்து பௌர்ணமி அன்று மன்மதர் எரிக்கப்படுவார். சிவபெருமான்  கோபத்திற்கு  ஆளான  மன்மதனை  அவர்  நெற்றிக்கண்   திறந்து எரித்ததை  உணர்த்துவதுதான்  இந்த  நிகழ்வு.   தேவர்களின்  வேண்டுகோளினாலும்  உலகமக்கள்  வேண்டுகோளின்படியும்  மூன்றாம்நாள்  சிவபெருமான்  மன்மதரை  உயிர்த்தெழச்செய்து   ரதிதேவிக்கு கொடுப்பார். இப்படியாக  அந்த 
விழா  முடியும். 



விழாவுக்கு  காப்பு கட்டிய நாளிலிருந்து யாரும் வெளியூரில் சென்று தங்கக்கூடாது. அது அவனது ஊரின் வழக்ககமான  சம்பிரதாயம்.


அந்த பதினைந்து நாட்களில், ஒவ்வொரு நாளும், மன்மதரின் கதையினையும் அவரின் சிறப்புகளையும் மிக அழகாக விவரித்து சொல்லிக்கொண்டே பூஜை செய்வார் பெரியவர் அந்த  முதல் பெரியவர். அவர்கள் அந்த மண்டகப்படிக்கு கொண்ட கடலை சுண்டல், பருப்பு வடை, சில நீருருண்டை போல நெய்வேத்தியங்கள் செய்வது வழக்கம்.     

அப்படியாகவே, பௌர்ணமியும் வந்தது, அன்று இரவு பெரிய விமர்சையாக அந்த வைபவம் நடந்தது.

மன்மதர் கோவிலின் அருகில் புங்கை மரத்தின் ஒரு பெரிய கிளை வெட்டி எடுத்துவரப்பட்டு, நட்டு வைக்கப்படும். அதன்  அடியில் மரத்தினால் செய்த உரல் ஒன்று  போடப்படும். அதுதான் பரமசிவன் அமரும் இடம்.  அவரின் பார்வையில் அந்த கோவிலின் முழுப்பகுதியும் தெரியும். 

உடல் முழுவதும் வெண்மையான விபூதி பூசி, வெள்ளை நிறத்தில் கோவணம் மட்டும்  அணிந்த  சிவன், தட்சணை அழித்து விட்டு அதே  உக்கிரத்துடன், அந்த உரலின் மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்க  அமைக்கப்படும்  ஆசனம்தான்  அந்த  உரல்.       

பௌர்ணமியின் நடு ராத்திரி நிலவின் ஒளி பரவியிருக்கும் நேரத்தில்,  அந்த ஊரின் நடுவே அமைந்திருக்கும் குளத்தில், சிவனாகவும், ரதி  மன்மதர்களாகவும் வேஷம் கட்டுபவர்களை நீராடச்செய்து,  பின்னரே  வேஷங்கள் கட்டிவிடுவார்கள்.  பரமசிவனுக்கு இடுப்பில்  ஒரு  கோவணம்  மட்டும்  உடுத்திவிட்டு, நெற்றியிலும்  உடலெங்கும்  விபூதி  பூசிவிடுவார்கள். சிவன் வேஷம்  போட்டவரை  பார்த்தாலே  கோரமாக  இருக்கும். மன்மதருக்கு உடலில்  நீல நிற வண்ணம் பூசப்படும்.  இடுப்பில்  வேட்டி கட்டிவிடுவார்கள். கூடவே ரதி வேடமிடும் ஆணுக்கு பச்சை நிறம் பூசி பாவாடை சட்டை அணிவித்து  விடுவார்கள் இருவருக்கும் அரளிச்செடியினால் செய்த வில் அம்பும் கொடுக்கப்படும்.  



குளத்தின் கரையில் வான வேடிக்கைகளும், வேட்டுகளும்  வெடிக்க, உறுமி  மேளம்  ஒலிக்க, குறவன் குறத்தி ஆட்டத்துடன் ரதி  மன்மதன்  வீதி உலா இனிதே ஆரம்பமாகும். அந்த  வீதியுலா நேரத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமென,  அந்த ஊரே திருவிழாக்  கோலத்தில் களைகட்டும். 

பொதுவாக இந்த ஊர்வலத்தில் எல்லா வீட்டு ஆண்களும். சின்னச்  சின்ன பெண் பிள்ளைகளும் கலந்து கொள்வார்கள். அப்படியே ஒவ்வொரு வீட்டுக்கும் தரிசனம் கொடுத்து,  தீப ஆராதனைகள் எடுத்து முடித்துவிட்டு   விட்டு வருவதற்குள் பொழுது விடிந்து விடும்.

ஊர்வலம் முடிந்து வந்ததும், அங்கேயிருக்கும் பரமசிவனின் தவத்தை மன்மதன்  கலைத்து விட்டபடியால் கடும் கோபம் கொண்ட சிவன், அவனை தனது நெற்றிக்கண் திறந்து  எரித்துவிடுகிறார். தனது கணவனை சிவபெருமான் எரித்ததை கண்டு அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள் ரதிதேவி. 




மூன்று நாட்கள் கழித்து  பரமசிவன், ரதி  அழுது புலம்புவதை காணசகியாமல் மனமிரங்கி , ஒரு வரம் கொடுக்கிறார்.  அதில் மன்மதர் ரதியின் கண்ணுக்கு மட்டும் தெரிவார். இந்த  வரம்  கொடுத்துவிட்டு  "நீ தீர்க்க சுமங்கலியாக இருப்பாய்",  என்று வாழ்த்தி மங்களத் தாம்பூலம் கொடுப்பார்.

இப்படியாக  அந்த  விழா  இனிதே  முடியும்.





ஊர் திரும்புதல் - 1

No comments:

Post a Comment