Friday 12 June 2020

ஊர் திரும்புதல் - 16

வயல்களமும் - உப்பு நீரும் 



அருள்மிகு  அய்யனார்  

அவனது ஊரின் வயல்களில், காவல் தெய்வமாக இருப்பது, அய்யனாரும், முனீஸ்வரரும்தான் என்பதே  அவனது ஊரின் நம்பிக்கை. அதற்காக அவர்கள் வருசத்துக்கு ஒரு முறை காணிக்கை செய்து அறுவடை முடிந்ததும் படையல் வைப்பது வழக்கம் .

ஒவ்வொரு  வருடமும் அய்யனாருக்கு   கிடா மற்றும் சேவல்  வேண்டி விடுவது மக்களுக்கு  வழமையான ஒன்று.   அந்த வருஷம் நான்கு கிடாக்கள் நேர்ந்து  விடப்பட்டிருந்தன,   அறுவடை முடிந்ததும் படையல் செய்வதற்காக.     

அவனது ஊரின் முக்கிய நபர் பண்ணையார் அண்ணாச்சி தான்,   அண்ணாச்சி வீட்டுக்கு   கிராமத்தின்  எல்லா திசைகளிலும் நிலங்கள் இருக்கும்.  அதில் கிழக்கு திசையில் உள்ள பதினைந்து மா கட்டளையில் அந்த நிலங்களில் சாகுபடி செய்த விளைச்சலை  அறுவடை செய்து கண்டுமுதல் பார்பதற்கு ஒரு களம் தேவைப்பட்டதனால் அதன் முதல் வயலினை களமாக  மாற்றிக்கொண்டனர்.  

அதுபோல, தங்கச்சிமா கட்டளை,  நடு செராகம், ஆப்பிரிக்கா பங்கு மற்றும் மேற்கில் செண்பகச்சேரி பங்கு உள்ளது, ஒவ்வொரு தலப்புக்கும் ஒரு களம்  உண்டு. மொத்தத்தில் மிகவும் சிறப்பானது இந்த வயல் களம். இதற்கு வண்டி வாகனம் எல்லாம் போகமுடியாது, கொஞ்சம் தூரம் எல்லாம் நடந்தேதான் போக வேண்டி வரும். அப்படி வயல்களின் நடுவில் இந்த களம் அமைந்திருக்கும் .

அப்படியென்ன சிறப்பு?!. ஆமாம் இந்த களத்தில் ஓரத்தில் இருக்கும் பனை மரத்தில்தான் அய்யனார் அந்த பகுதிக்கு காவலாக இருப்பது என்றும், அதற்குதான் படையல் செய்யவேண்டும் என்ற  மக்களின் நம்பிக்கை பல தலைமுறைகளாக தொடர்கிறது. 

அவனுக்கு நன்றாக  ஞாபகம் வருகிறது, அந்த வருஷம் விழா நடக்கும் பொழுது அவனும் இருந்தான். 

அன்று மதியத்திலிருந்தே ஆட்கள் புற்களை எல்லாம் அகற்றி சுத்தம் செய்வதும் , சாயங்காலம் ஆனவுடன் அந்த களம் முழுவது விளக்குகள் வைப்பதும்,   என்று தங்களின் வேலைகளை செய்வனே செய்து கொண்டிருந்தனர்.   மறுபுறம் வானாதிராஜபுரத்தில் இருந்து சமையற்காரர் தனது ஆட்களுடன் வந்திறங்கியிருந்தார். 

அந்த நடு வயல்வெளியில்  அந்தி  வானம்  சிவந்து  மாலை  மயங்கத்தொடங்கும்  மனோகரமான வேலையில் ஒருபுறம் ஒரு  குழு அய்யனாருக்கு பலியிட  ஆடுகளைய் தயார் படுத்திக்கொண்டிருந்தது. 


ஊரில் உள்ள எல்லா ஆண்களும் பங்கு பெரும் நிகழ்வு அது.  சில வீடுகளுக்கு  விருந்தினர்களும் வருவதுண்டு. சுற்றுப்பட்டு  கிராமங்களின்  முக்கியஸ்தர்களும் கூட  வருவார்கள்.  

ஆடுகளை  பலியிடுவற்கு என்றே ஓரிரு ஆள்கள் இருப்பார்கள். எப்போதும் ஆடுகளை பலியிடுவதும் அதை வெட்டி சமையலுக்கு தயார் செய்வதும்  அவர்களின் வேலை.

சமையல்காரர் ஒரு புறம் வயலில் அடுப்பு வெட்ட ஆள் வைத்து அவர்க்கு தேவையான சரியான அளவுகளை சொல்லிக்கொண்டிருந்தார். 

ஒரு பக்கம் ஆறேழு ஆட்கள் யூரியா சாக்கில் தைத்த படுதாவில்  அமர்ந்துகொண்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி உரித்துக்கொண்டிருந்தனர். இங்கே முழுவதும் ஆண்கள்தான் என்பதால் எல்லாவற்றையும் அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். உரித்த பூண்டும் இஞ்சியும் மிளகாயும்  அருகிலேயே  இருந்த  மோட்டார்  கொட்டாயின் வைத்து  வீட்டில்  இருந்து  எடுத்து வரப்பட்ட அம்மியில்  அரைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.  உப்பு  நீருக்கு  தேவையான  கொஞ்ச  நேரத்தில் தயாராகிவிட்டது.  சமையற்காரர் பூஜை போட்டு அடுப்பை பற்ற வைத்தார்.

சற்று  தள்ளி  படையல்  போடும்  இடத்தில, பூசாரி மூன்று புது செங்கற்களை வைத்து அய்யனாரை தயார் செய்துகொண்டிருந்தார்.



அவன் எப்போதும் வழக்கமாக சாப்பிடும் நேரத்தில் மட்டும்தான் வருவான். ஆனால் அவனுக்கு அந்த உப்பு நீர் செய்வதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமுண்டு, அதனால் அவனின்  ஆசையினால் அப்பாவின் அனுமதி வாங்கி இந்த முறை முன் நேரத்திலேயே அவன் அங்கே  வந்து சேர்ந்தான்.     
              
அவன் அங்கு வந்த  நேரத்தில்தான் கொப்பரையில் சாதம் வெந்து கொண்டிருந்ததையும், மற்றொரு கொப்பரையிலிருந்து வெந்த சாதத்தை புதிய மூங்கில் கூடையில் வடிகட்டி அங்கே விரித்திருந்த பாயின் மீது போட்டிருந்த வெள்ளை காட்டன் வேட்டியில் கொட்டிக்கொண்டிருந்தனர். அதை இன்னொரு வேட்டியால் மூடிவைத்தனர். அந்த காட்சி அவனுக்கு பருத்தி வயலில் இருந்து எடுத்து பஞ்சினை கொட்டி வைத்தது போல தோன்றியது.  மற்றொரு பக்கம் சிலபேர் வாழை இலையினை நறுக்கிக்  கொண்டிருந்தனர். மேலும் பந்தி போட்டு சாப்பிட ஏதுவாக சின்ன சின்ன குழிகள் செய்யப்பட்டது.

உப்பு நீர் சமைக்கும் இடத்திற்கு சென்று அவன் செய்யும் முறையினை பார்க்க தொடங்கினான். அவர்கள் சமைக்கும் முறையை பார்ப்பதற்க்கே  சுவாரசியமாக  இருந்தது. அந்த வாசனையும், செய்முறையும் வித்தியாசமானது. அந்த  முறையில்  வீட்டில் எல்லாம் செய்யமாட்டார்கள். அது  அய்யனாருக்கு படையல் செய்யும் உப்பு நீருக்கு மட்டும்தான்.

பெரிய கொப்பரையில் தண்ணீர் கொதிக்க வைத்து  வெங்காயம், தக்காளி ,கத்திரிக்காய், உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் நேரடியாக  போட்டு மூடிபோட்டு  கொதிக்கவிட்டார்கள். வீட்டில்  செய்வதுபோல  எண்ணெய் ஊற்றி  வதக்குவது எல்லாம்  இல்லை.  காய்கள்  இருந்த  நீரில்  அடுத்த  கொதி வந்ததும்,  அரைத்து வைத்திருந்த மசாலா சேர்த்தனர். கொஞ்ச  நேரத்தில்  அதிலேயே  வெட்டி துண்டுகளாக்கப்பட்ட   ஆட்டு இறைச்சியினை போட்டனர். கறி  நன்றாக வேகத்தொடங்கியதும்,  கொஞ்சம் எண்ணெய் ஊற்றினார்கள்.    அது நன்றாக கொதிக்க ஆரம்பித்து விட்டது.  நன்றாக வாசனை வர ஆரம்பித்தபோது,   கடைசியாக கறிவேப்பிலையும் மல்லி தழையும் சேர்த்தனர். இதுமாதிரி மூன்று கொப்பரைகள் தாயாகி கொண்டிருந்தது.

எல்லாம், தயாராகி விட்டது பூசைக்கு தயாராக வேண்டும் என்று ஒரு புர த்தில் ஒரு சத்தம் கேட்டது. பூசாரி, அய்யனார்  படையலுக்கு  ஆயத்த வேலைகளை கவனித்து கொண்டிருந்தார். மூன்று நீண்ட தலை வாழையிலைகளை  அய்யனார்  முன்  பரப்பப்பட்டிருந்த வைக்கோல்  மீது  விரிக்க பட்டது. அதில் ஒரு இலையின் சர்க்கரை கலந்த அவலும், பொட்டு கடலையும், வெற்றிலை பாக்கும், ஒரு கட்டு சுருட்டும், ஒரு பாட்டில் சரக்கும், கொஞ்சம் பச்சையும் மஞ்சளும் கலந்த வண்ணமாக ஒரு  சீப்பு வாழைப்  பழமும் வைக்கப்பட்டது.

மற்றோரு இலையில் வெள்ளை சாதம்பரப்பப்பட்டு, அதன்  மீது  சமைக்கப்பட்ட  உப்பு நீரும் ஊற்றப்பட்டிருந்தது. அதன்  பக்கத்திலேயே  உப்பு நீரில் இருந்து தனியாக அரித்து  எடுக்கப்பட்ட ஆட்டிறைச்சி துண்டுகள், கறியும் எலும்புமாக  கலந்து வைக்கப்பட்டிருந்தது.
மூன்றாவது இலையில் சாதமும்  அதன்  மீது  ஊற்றப்பட்ட சேவல் கறியில் சமைத்த குழம்பும் பரிமாறப்பட்டிருந்தது.

பூசாரி, ஒரு பாக்கெட் ஊதுவதியை முழுவதுமாக கொளுத்தி வைத்தார். பின்னர்  சத்தமாக அய்யனாருக்கு, தீப ஆராதனையும், சாம்புராணி புகையும் காட்டி   பூஜை செய்தார். பின்னர்  வேகமாக எல்லோரையும் அய்யனாரிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என்று  பணித்தார்.  எல்லோருக்கும்  சூடம்  கொளுத்திய  தட்டுடன்  வந்து  விபூதி கொடுத்தார். எரியும்  சூடத்தில் அங்கே  இருந்த  ஒவ்வொருவரும் பயபக்தியுடன்  கைகளை  காட்டி  கண்களில்  ஒற்றிக்கொண்டு  விபூதிக்கு  பூசாரியிடம்  வலது  உள்ளங்கையை  நீட்டினர்.

அப்போது அங்கே ஒரு தாத்தா ஒரே சத்தத்துடன் எனக்கு ஏன் குறைவைத்தீர்கள் என்று சொல்லிக்கொண்டே ஆட ஆரம்பித்தார். அவருக்கு  சன்னதம்  வந்து  அய்யனார்  அவர்மீது  இறங்கியிருந்தார். உடனே பூசாரி அங்கே சென்று அவரிடம் என்ன குறைகள் என்று கேட்டுக்கொண்டார். அதற்குபின்  அய்யனார் மலையேறினார்.

இப்படியாக பூஜை இனிதே  நிறைவடைந்த பின்னர்,  பரிமாறும் குழுவினர்கள் தங்களின் பொறுப்பை எடுத்துக்கொண்டனர். இங்கே தான் முக்கியமான வேலை தொடங்குகிறது.  வந்திருக்கும் மொத்த நபர்களை கணக்கில் கொண்டு எல்லோருக்கும் கொடுக்கவேண்டும், அதே நேரத்தில் விருந்தினர்களையும் பக்கத்துக்கு ஊர் முக்கியஸ்தர்களையும் நன்றாக கவனிக்க வேண்டும்.

களத்தில்  முக்கால் பகுதிக்கு பந்தி விரிந்திருந்தது.  உட்காருவதற்கு தார்பாயும் உண்ணுவதற்கு லாவகமாக தோண்டி வைத்திருந்த குழியில் வாழை இலையும் போடப்பட்டது.   பந்தி  பரிமாறிய  ஆட்களில்  ஒருவர்  இலைகளில்  முதலில்  சாமிக்கு  படைத்த  சாதத்தை  வைத்துக்கொண்டே  போனார். அவரைத்தொடர்ந்த  அடுத்த ஆள்  சாதத்தை  அள்ளியள்ளி  வைத்தபடி சென்றார். அவருக்கும்  பின்  வந்த  ஆள்  உப்புநீர்  இருந்த  வாளிகளில்   அகப்பையைவிட்டு  உப்புநீரை திட்டமாக  கறியினையும்  வைத்துக்கொண்டே  போனார். பந்தியில்  உற்கார்ந்திருந்த  பெரியவர்கள்  சிலர்  அய்யனார் பெயரை  விளித்துவிட்டு சாப்பிடத் தொடங்கினர்.  இலையினை சரி செய்து கொண்டே எல்லோரும் உப்புநீரின் காரத்தின் விளைவாக கண்ணில் ஓரமாக  கண்ணீர் வர வர பரிமாறப்பட்ட  பிரசாதங்களை ருசிக்கத்  தொடங்கினர்.

சாப்பிட்டு முடிந்து, கும்பலாக வீடு திரும்பும் போது சின்ன பிள்ளைகளையெல்லாம் பயமுறுத்தி அழைத்து வருவதே அங்குள்ள பெருசுகளுக்கும் வழக்கம், வீட்டுக்கு வந்தவுடன் வீட்டுக்குள்ளே உடனே அனுமதி கிடையாது.  கெட்டது எதாவது வந்து வீட்டில் உள்ள பெண்களை பற்றி கொள்ளும் என்ற பயத்தோடு,   அவனும் அவன் பக்கத்து வீட்டு நண்பனும் வீட்டின் வெளியே காத்திருந்தார்கள்.  அவர்கள்  வீட்டில் நுழைய  அரை மணிநேரமாவது  காத்திருக்க  வேண்டும்.



           

             
     

No comments:

Post a Comment