Tuesday 9 June 2020

ஊர் திரும்புதல் - 15

அவனுடைய  ஊர் 


நம்முடைய  விக்கிரமனாறு ஆறு காவிரியிலிருந்து பிரிந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் பாசனம் கொடுத்து, வைத்தீஸ்வரன் கோவிலுக்கு முன் மெயின் ரோடு கடந்து சீர்காழி அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.  அந்த பாதையில் ஏகப்பட்ட தடுப்பணைகள், சிறிய நீர் தேக்க நிலைகள் உண்டு. ஏராளமான கிளை வாய்க்கால்களும் பிரிந்து செல்லும்.







குத்தாலத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆற்றின் கரையிலே அழகாய் பசுமை சுமந்து இருக்கும் ஊர்தான் அவனுடய ஊர்.

அந்த ஊரின் முகப்பிலே அரசு  தொடக்க பள்ளியிருக்கும்.  அடுத்து அவ்வூரின் காவல் தெய்வமான மகா மாரியம்மன் கோவில்.  அதனைத்  தொடர்ந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யா திரு கி. சத்தியசீலன் வீடும், அருகிலேயே நூறாண்டுகளுக்கு மேல் ஊருக்கே ஆக்சிஜன் கொடுக்கும் அரச மரமும், அதனடியில் வீற்றிக்கும் செல்வகணபதியும் காணக்கிடைப்பார்.  அவரின்  பார்வையில் பிள்ளையார் கோவில் வீதி, அருகே பிரியும் பிச்சன் வாய்க்காலும்  அதன்  மதகும் இருக்கும்.



கொஞ்சம்  போனால் மன்மதர் கோவிலும் நடுத்தெருவும் வரும்.  அப்படியே போனால் அந்த ஊரின் குளமும் அதற்கு காவலாக புளியமரத்தின் அடியில் ஒரு முனீஸ்வரரும் இருக்க அதையும் கடந்து போனால் நம்ம மாணிக்கம் டீ கடை.

அவனும் அவனது நண்பகர்களும்  அந்த ஊரின் மாணிக்கம் டீ கடையில் தான் தங்களது காலை பொழுதையே தொடங்குவார்கள். அதுவும் அவனது நண்பன் கரிகாலன் அவனுக்கு ஸ்பெஷல் டீ போட்டு கொடுப்பது வழக்கம். அந்த கடையில் ஒரு டீ குடித்தால்தான் அந்த நாளே நன்றாயிருக்கும் என்று ஒரு நம்பிக்கை அவர்களிடம்  இருந்தது. கூடவே தினகரன், முரசொலி, ஹிந்து பேப்பர் படிப்பதும் அவர்களது வழக்கம். என்னடா ஹிந்து பேப்பர் என்று உங்களின் உள்மனதில் உள்ள சந்தேகம் என் காதில் கேட்டுவிட்டது.




அந்த டீ கடையின் உரிமையாளர்,  தி மு க வின் முக்கிய தொண்டர் மட்டுல்ல அவர், அந்த ஊரின் ஆங்கிலம் பேசத் தெரிந்தவரும் கூட. ஆங்கில பேப்பர் வாசிப்பதிலும் கிரிக்கெட் மேலும் அவருக்கு அளவுமிகுந்த ஆர்வம்.  இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் போட்டி என்றால் அங்கு இருக்கிறவர்கள் எல்லாருக்குமே ஆபத்துதான். இந்திய அணி நன்றாக  விளையாடினால் பிழைத்தோம்.  இல்லையேல் தொலைந்தோம் . அந்தக்  கோபமெல்லாம்  கடையில் உற்கார்த்திருப்பவர்களுக்கு போய்ச்   சேரும்.

அவனது ஊரின் பிள்ளைகளையெல்லாம் ஆங்கில நாளேடு வாசிக்க சொல்வதிலும், அரசியல், விளையாட்டு மற்றும் பொது அறிவு என்று எல்லாவற்றையும் ஊர் பிள்ளைகளோடு பகிர்ந்து கொள்வதிலும் அவருக்கு நிகர் அவரே என்று சொல்லலாம்.  அவர் என்ன சொன்னாலும் அவன் மட்டும் பொறுமையாகவே இருப்பான்.

அதற்கு அவர் ஒரு முறை, "எல்லோரையும் நம்பலாம் ஆனா உன்ன மாதிரி அம்முகுல்லியை நம்பவே கூடாது !", என்று சொன்னார்.




அங்கே இளசுகள் எல்லாம் அரட்டை அடிக்கும் பொன்னூர் வாய்க்கால் மதகு கடக்கும் சந்திப்பில் அவனது ஊரின் எல்லோரின் மனதை விட்டு நீங்காத தெய்வம், அண்ணாச்சியின் (துரைசாமி வாண்டையார்) வீட்டுக்கும் போகும் மாணிக்க வாண்டையார் நினைவு நுழைவு வாயில் அந்த ஊரின் கீழத்தெருவுக்கு வரவேற்கும்.  




அப்படியே நுழைவாயில் வழியே உள்ளே சென்றால்,  குளத்தின் அடுத்த பக்கம் வரும்.  அந்த குளம் ஊரின் நல்லவரது பட்டாவில் உள்ளது.  ஆனால் ஊர் பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. அதில் வருஷத்தில் ஒரு முறை மீன் பிடிப்பதும் வழக்கம்.    குளத்தின் படியருகே ஒரு பெரிய வாதா மரம் இருந்தது. இரவில் அந்த மரத்தை கடக்கும் போது மனதுக்குள் ஒரு மரண பயம் இல்லாமல் இருக்காது அவனுக்கு.

அப்போது எல்லாம் அண்ணாச்சி வீட்டில் மட்டும்தான் டிவி இருந்தது. நித்தமும் எல்லா பொடிசுகளும் அண்ணாச்சி வீட்டில் போய் படம் பார்ப்பது ஒரு த்ரில். பார்த்துவிட்டு இரவு வரும்போது அந்த வாதா மரத்தை தாண்டித்தான் வரவேண்டும். அதனால் அவன் எப்பவுமே கூட்டமாக வருவதையே விரும்புவான்.

அன்று, அவன் ஊருக்கு வந்த நேரம் கோடைகாலமென்பதால் அந்த ஊரின் குளத்தில் மீன் பிடிப்பு நடந்தது.  அதில் கெண்டை மீனும், விரால் மீனும் கூடவே சேல் கெண்டைகளும் கொஞ்சம் இதர வகை மீன்களும் கிடைத்திருந்தது.

அவனுக்கு அவனது அம்மா  விறகு அடுப்பில் சமைக்கும் விரால் மீன் குழம்பும், அம்மாவின் ஸ்பெஷல் மீன் மசாலாவில் செய்த விரால் மீன் வறுவலும், பொன்னி அரிசி சாதத்துடன்  வாழையிலையில்  சாப்பிடப்பிடிக்கும்.  வாழை இலையில் குறைய குறைய அருகிலேயிருந்து இலையை அம்மா நிரப்பிக்கொண்டே இருப்பார்கள். அத்தனையும் அவன் வெளியூரில் இருக்கும் போது  கிடைக்காதது.

அவனும் அவன் நண்பர்களும் சாயங்காலத்தில், வயல்வெளிகளில் உலாவப்போவது வழக்கம்.  அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் வயல்  வெளிகளில் விளைந்து கிடைக்கும் பயறு செடியில் குலை குலையாக இருக்கும் பச்சை பயறு பறித்துச்  சாப்பிடுவதும், சில இடங்களிலில் இருக்கும் தட்டை பயிரையும் ருசிப்பதிலும்  ஆர்வம் அதிகம்.



கரும்பு வயலில் திருட்டு தனமாக கரும்பு வெட்டி சாப்பிடுவதும், அப்படியே ஊர் குளத்தில் கும்மாளம் போடுவதும், ஒருகரையில் இருந்து மறு கரைக்கு நீரில் மூழ்கி போவதும் அதில் யார் முந்தி வருகிறார்கள் என்று  போட்டிவைப்பதும், அதிக நேரம் யார் நீரில் மூழ்கியிருக்கிறார்கள் என்ற விளையாட்டும் இன்றளவும் நினைவில் இருந்துது அகல மறுக்கிறது.



கரும்பு ஏற்றிப் போகும் டிராக்டரில் தொத்திக்  கொண்டே கரும்பு உடைத்து ருசிப்பதும்,  ஓடும் வண்டியில் ஒடித்துவிட்டு இறங்கி கீழே விழாமல் லாவகமா வண்டி கூடவே  சிறிது  ஓடுவது எல்லாமே பசுமையான நினைவாக மனதில் அவனுக்கு  பதிந்துவிட்டது.





2 comments: