Tuesday 7 July 2020

ஊர் திரும்புதல் - 19



பொங்கல் - 1


அவன் தவறாமல் ஒவ்வொரு பொங்கலுக்கும்   தனது ஊருக்கு வருவதை வழக்கமாக  வைத்திருந்தான்.  எத்தனை தூரத்தில் இருந்தாலும் அந்த நான்கு  ஐந்து நாட்கள் ஊருக்கு வந்து பொங்கல் கொண்டாடுவது என்பதை  அவனின் தலையாய கடமையாக  கொண்டிருந்தான்.  அப்படித்தான் அவன் அந்த முறை ஊருக்கு வந்திருக்கும்  போது போகி பண்டிகை அடுத்தநாள் வரவிருந்தது. ஆனால் அவன் ஊரின் வழமையான நிகழ்வுகள் காண கிடைக்கவில்லை.



அவன் தனது இளமைக்காலத்தில் பொங்கலின் பொழுது அவன் செய்த  வேலைகள் மற்றும்  விளையாட்டுகள் என பலவற்றை அவன் நினைவிலிருந்து மீட்டு, அசை போட ஆரம்பித்தான். அன்று ஒருநாள்  காலையில் மாரியம்மன் கோவில் வெளிப்புறத்தில் அவனும் மற்ற நண்பர்களும் சேர்ந்து பம்பரம் விளையாடிக்கொண்டிருந்தனர்.



விளையாட்டின் இடையே அவன் அம்மாவின் அழைப்பு வந்தது. "தோ வர்றேன்", என்று கூவிக்கொண்டே  அரை மனதுடன் அங்கிருந்து சென்றான்.



"என்னம்மா எல்லோரும் விளையாடுறாங்க , எனக்கு மட்டும் எப்ப பாரு எதாவது  வேலை கொடுத்துகிட்டே இருக்க......என்ன வேலை சொல்லுமா!",  என்று சற்றே  அழுதுகொண்டே அம்மாவிடம் கேட்டான்.



அம்மா, "ஒண்ணுமில்லை பொங்கல் வருது ...ஒரு  நாளும்  கிழமையுமா.....கொஞ்சம் கூட மாட இருந்து உதவி செய்யேன்", என்றார்கள்.


 "சரி சரி சொல்லு என்ன செய்யணும்!", என்று  சற்றே  அலுத்துக்கொண்டே  கேட்டான். 


"நாளைக்கு நம்ம வீட்டு தரை போடுரத்துக்கு   சிவகாமியும்  செகதாம்பாளும் வரேன்னு  சொல்லியிருக்காங்க....அதனால .. நீ  ஆத்து மறுகரையில  இருந்து மண் எடுத்து வந்து  மிதிச்சி  வைக்கணும்", என்றார்கள்.




பொதுவாக மார்கழி மாதம் முழுவதும் அந்த கிராமமே எதாவது புதிய புதிய வேலைகள் செய்துகொண்டே இருப்பார்கள். அப்போது அவனின் கிராமத்தில் இருந்த நாற்பது வீடுகளில் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள்  கூரை வீடுகள். சில ஓட்டு வீடுகள், ஒரு சில மாடி வீடுகள் என இருந்தன.  கூரை வீடுகள் முற்றிலும் மண் தரைதான் இருக்கும்.  ஒரு சில ஓட்டு வீடுகளிலும் மண் தரைதான்.  அவ்வாறு மண் தரை இருக்கும் வீடுகளில் ஒவ்வொரு பொங்கலின் போதும்  புதிய மண் தரை இடுவது வழக்கமான ஒன்று.



பொங்கல் வேலையென்றால் முதலில் வருவது வீடெல்லாம் ஒட்டடை அடித்து சுத்தம் செய்வதுதான்.  பிறகு மரச் சாமான்கள் எல்லாம் ஆற்றில் கொண்டு சென்று  கழுவி எடுக்க வேண்டும். சாமான்களை  வெளியேற்றிய  நேரத்தில்  சுவற்றிக்கு வெள்ளை அடித்தல் போன்ற பல வேலைகள் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கும்.  தை பொங்கலினை வரவேற்க அவனது கிராமம் முழுவதும்  முழு  மூச்சில் வேலைகள் நடந்துகொண்டிருக்கும்.



பொதுவாக அவனின் ஊரில் வீட்டுக்கு மண் தரை போடுவதற்கு கொஞ்சம் பேருக்குத்தான் தெரியும். அப்படி அந்த வேலையில் கைதேர்ந்தவர்களுக்கு அதிகமான டிமாண்ட் இருக்கும்.                              அப்படித்தான் அன்று அவன் வீட்டுக்கு சிவகாமி பாட்டியும் செகதாம்பாளும் வந்தனர்.

இன்னும் இரண்டு நாள் கழித்து நம்ம வீட்டுக்கு தரை  போடலாம். அதனால இன்றே மண் எடுத்து வந்து நன்றாக குழைத்து வைத்தால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லிவிட்டு சென்றனர்.

அதற்காக தான் அவன் அம்மா அவனை அழைத்தார்கள்.  அன்று அவன் ஆற்றின்  மறுகரையிலிருந்து மண் சுமந்து வந்து வீட்டின் பின்பக்கத்தில் கொட்டி  வைத்து அதனை தேவைக்கேற்ப பதப்படுத்த வேண்டியிருந்தது.  அதற்காக மண்வெட்டியும் ஒரு கூடையும் எடுத்துக்கொண்டு தோளில் ஒரு துண்டும் போட்டுகொண்டு ஆற்றின் மறுகரைக்கு சென்றான்.   அப்போது ஆற்றில் தண்ணீர் ஒரு இரண்டு அடி  அளவிற்கு போய்க்கொண்டிருந்தது. அவன் வீட்டுக்கு நேராகதான் மறுகரையில் மண் எடுப்பது வழக்கம். 

அந்த இடத்தில்தான் பதமான மண் கிடைக்கும்.  ஆற்றின் குறுக்கே இறங்கி மறுகரைக்கு நடக்க தொடங்கினான். நடக்கும் போது   அவன் சட்டையெல்லாம் நனைந்து போய்விட்டது.  பொதுவாக அவன் வீட்டுக்கு எப்படியும் ஒரு இருபது கூடை மண் தேவைப்படும். அதை அவனால் ஒரே நேரத்தில் எடுத்துவரமுடியாது. அன்று காலையில் அவன் மண் சுமக்க மறுகரைக்கு போகும் பொது சீராக ஓடிய ஆற்று தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது. தலையில் சுமையுடன் ஆற்றில் தண்ணீருக்குள் நடந்து வருவது அவனுக்கு மிகவும் சிரமமான வேலையாகத்தான் இருந்தது. நடுத்தெருவுக்கு நேராக ஒரு மரபாலம் இருந்தது. அதுவழியாக போனால் ரொம்ப தூரம் சுற்றிவரவேண்டும், என்பதால் அவன் ஆற்றின் குறுக்கே நடந்து போவதையே விரும்பினான். ஆனால் அவன் நேரம் ஆற்றின் நீர் அதிகரித்த வண்ணம் இருந்ததால்  மீதமுள்ள மண்ணை அந்த  பாலம் வழியாகதான் எடுத்து வரவேண்டியிருந்தது. அதிலும் அவனுக்கு சிக்கல் வந்தது.  ஆமாம் அந்த மரபாலம் கொஞ்சம்  பழைய பாலம். தனியாக ஆள் நடந்து போய்விடலாம். ஆனால் மண் சுமையுடன் வருவது என்றால் கொஞ்சம் சிரமம்.  இல்லை முற்றிலும் சிரமம்தான். அவனுக்கு ஒன்னும் புரியவில்லை, என்ன செய்வதென்று.  கொஞ்சம் நேரம் காத்திருப்போம், தண்ணீர் குறைந்துவிட்டால் நமக்கு வேலை சுலபம் என்று எண்ணிக்கொண்டு அம்மாவிடம் கேட்டான். அம்மாவும் அதையே சொல்லியதால் அவன் கொஞ்சம் இளைப்பாறினானான்.  ஒருவழியாக தண்ணீர் அளவு குறைந்தது அவன் மொத்தம் தேவையான மண்ணும் எடுத்துவந்துவிட்டான். எடுத்து வந்த மண்ணை நடுவில் குழி பறித்து அதில் தண்ணீர்  ஊற்றி நன்றாக கலந்து மிதித்து மண்ணை பதப்படுத்தி வைத்தான். 


 


இரண்டு  நாட்கள் கழித்து காலையிலே சிவகாமி பாட்டியும் செகதாம்பாளும் சொன்னபடியே வந்தார்கள். அவர்கள் தயாராக பிசைந்து வைத்த மண்ணை  எடுத்து ஒருபுறத்தில் இருந்து இரண்டு அங்குலம் அளவிற்கு சமமாக வீடு முழுவதும் பரப்பத்தொடங்கினார்கள். பின்னர் மேடு பள்ளம் இல்லாமலும் சரியான அளவில் அந்த தரையினை சமன் செய்ய வேண்டும்.   இதை செய்வதெற்கெல்லாம் எந்த கருவியும் கிடையாது. அவர்களின்  அனுபவமும் திறமையும்தான் ஆதாரம். புதிதாக மண் போட்ட தரையினை, கோழிகள், ஆட்டுக்குட்டிகள், நாய்கள்  மற்றும் சின்ன குழந்தைகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். அதுவே ஒரு சவாலான விஷயம். அந்த தரையினை மறுநாள் இன்னும் கொஞ்சம்  மெருகேற்றுவார்கள். அதற்கு  வைக்கோல் எரித்த கரியும் பசுவின் சாணமும் சேர்த்து நன்றாக கரைத்து, அந்த தண்ணீரினை ஊற்றி கையளவு உள்ள ஒரு கருங்கல் (தீத்துக்கல் ) கொண்டு தரையினை தீத்துவார்கள்.  இந்த வேலைகள் எல்லாம் செய்த பிறகு அந்த தரை சிமெண்ட் தரையினை விட அழகாக ஆகிவிடும். அந்த மெழுகிய தரை   முக்கியமாக மனிதர்களின் உடல் சூட்டை தணிக்கும். அதனால்தானோ என்னமோ அப்போதெல்லாம் நோய் நொடிகள் இல்லாமல் இருந்தார்கள் போல.      




மார்கழி மாதத்தில் ஆற்றின் தண்ணீர் குறைவாகதான் போகும், அதில் அவர்கள் வீட்டு மரச்சாமான்கள் எல்லாம் கழுவி எடுத்துவருவார்கள். இந்த வேலையும் கட்டாயமாக எல்லா வீடுகளிலும் நடக்கும். அந்த வருடம் அவன், அவன் வீட்டு பத்தாயத்தினை கழுவதற்கு ஆற்றுக்கு  எடுத்து சென்றான். பத்தாயம் என்றால் என்னவென்றே இந்த தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை. அந்த குற்றம் செய்தவர்கள் நாம்தான் என்றே நினைக்க தோன்றுகிறது.

மரத்தினால் செவ்வக வடிவில் ஐந்து அல்லது ஆறு அடுக்கு செய்து அதில் ஒரு வருடத்திற்கு,  வீட்டுக்கு தேவையான நெல்லினை சேமித்து வைப்பார்கள். அதில் கீழே முதல் அறையில் ஒரு சிறிய திறப்பு இருக்கும். அதன் வழியே தேவையான நெல்லினை வேண்டும்போது  எடுத்துக்கொள்வார்கள்.  சில வீடுகளில் இதற்காக மண் குதிர் கூட பயன்படுத்துவார்கள். குதிர் என்பது  மண்னும் தேங்காய் நாறும் ஒன்றாக பிசைந்து, அழகாக செவ்வக வடிவிலும், வட்ட வடிவிலும் செய்வார்கள். அதனை நன்றாக வெயிலில் காயவைத்து எடுத்து  அடுக்கினால்  குதிர்  தயார். பொதுவாக குதிர் கொஞ்சம் பெரிய சைஸில் இருக்கும். சிலர் சால் என்று ஒன்றும் பயன்படுத்துவார்கள். சால் மண்ணால் செய்து   காளவாயில் சுட்டு  எடுக்கப்படுவது.   




பத்தாயத்தில் அல்லது குதிரில்   சேமித்து வைத்த நெல்லினை மாதந்தோறும் தேவையான அளவு வெளியில் எடுத்து பெரிய கொப்பறைகளில் ஊறவைத்து, மறுநாள் விடியற்காலையில் செங்கல் அடுப்பு கட்டி, கூளங்களை கொண்டு அடுப்பு எரித்து, அந்த நெல்லினை அவித்து, பிறகு இரண்டு மூன்று நாட்கள் நல்ல பதாமாக காய வைத்து, எடுத்தால் அதுதான்  புழுங்கிய  நெல். அதனை  திருமங்கலம் பத்தர் ரைஸ் மில்லில் கொண்டு போய் அரைத்து எடுத்துவருவார்கள். அதுதான்  புழுங்கல்  அரிசி.    

இதன் மூலம் வீட்டுக்கு தேவையான அரிசியும், தவிடும் கிடைக்கும்.  அப்போதெல்லாம் மாட்டுக்கும் இந்த தவிடுதான் ஒரு முக்கிய உணவு. காலம் காலமாக இப்படித்தான்  நம்  வாழ்க்கை  முறை  இருந்தது. சொந்த  வயலில்  விளைந்ததை உண்டு, கால்நடைகளுக்கும்  கொடுத்துவந்தோம்.

இன்றைய  வாழ்க்கையில்  முக்கியமான நாம் தொலைத்த ஒரு  பழக்கம், சொந்த  வயலில்  விளைத்த  உணவை உண்பது. நிலத்தில் அருமையாக  விளைந்ததை வியாபாரிகளிடம்,  கிடைத்த விலைக்கே கொடுத்துவிட்டு, பல மடங்கு விலை கொடுத்து அரிசி வாங்கி உண்கிறோம்.   இதனால்தான் இன்றைக்கு கிராமத்தில் இல்லாமல் இருந்த பல நோய்களை நாமே வீட்டுக்குள் அழைத்து வந்துள்ளோம் என நினைக்க தோன்றுகிறது.   

மறுபடியும்  பொங்கல்  வேலைக்கு  வருவோம். இப்படியாக  பொங்கல்  சமயத்தில்  அடிக்கடி  வேலைகள்  வரும். அவன் அதையும்  செய்துகொண்டு  ஓய்வு  கிடைக்கும்  நேரத்தில்  மற்ற  பையன்களோடு  பம்பரம்  விளையாடுவான்.  சின்னசிறுகள் முதல் கன்னி பெண்கள்வரைக்கும் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்புவதற்காக கடை வீதிக்கு செல்பவர்களிடம் பொங்கல்  வாழ்த்து  அட்டை வாங்கிவரச் சொல்வார்கள். வாழ்த்து அட்டைகள் அவர்களின் ஆசைக்கேற்ப வண்ணங்கள் இருக்க வேண்டும். அதாவது இயற்கை காட்சிகள்   முதல் மனசுக்கு பிடித்த நட்சத்திரங்கள் வரை வண்ணம் தீட்டிய வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும்,  அனுப்பியவர்களுக்கு நன்றி வாழ்த்து அனுப்புவதும் அந்த பத்து பதினைந்து நாட்கள் ஒரே கொண்டாட்டம் தான். அதற்காக அவனும், அன்று சாயங்காலம் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பொங்கல் வாழ்த்து அட்டை வாங்குவதற்காக திருமங்கலம் கடைதெருவுக்கு தனது சைக்கிள் எடுத்து கொண்டு ஒரு  பாட்டை  மூணு முணுத்தவாறு  காற்றில்  மெல்ல மெல்ல மிதந்து  செல்வதுபோல உற்சாகமாக  சென்றான்.    


தொடரும் ...

ஊர் திரும்புதல் - 1


2 comments:

  1. Saga sollave ella enga ninga yelutharathu

    Congrats

    Porumaiya yellam vasikkaren

    ReplyDelete