Wednesday 22 July 2020

ஊர்திரும்புதல் - 21

பொங்கல் - 3







அவன் மறுநாள் காலையில் அவனது சகோதரி வீட்டுக்கு பொங்கல் வரிசைகளை கொடுக்கப்புறப்பட்டான். சைக்கிளின்  நீளவாக்கில் கரும்புக்கட்டுகளும், பக்கவாட்டில் ஒருபக்கம்  வாழைத்தாரும் மறுபக்கத்தில் புதிய பச்சரிசி, வெல்லம், மஞ்சள், இஞ்சி கொத்து,  தேங்காய் மற்றும் பொங்கலுக்கு  தேவையான அனைத்து பொருட்களும் எடுத்துக் கட்டியிருந்தான். அவனது அக்கா ஊர் அவன் ஊரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரம். அவன் வழக்கமாக போகும் அதே குறுக்கு வழியில்தான் அன்றும்  பயணிக்க தொடங்கினான். அவனுக்கு அந்த வழியில் வெகு பேர்கள் பழக்கம் என்பதால், அவன் அன்று பெரும் உற்சாகத்துடன் அக்கா வீட்டுக்கு பொங்கல் வரிசையினை எடுத்து சென்றான்.

அப்படியாக போகி பண்டிகையும் வந்தது. அன்று அவன் மற்றும் நண்பர்கள் எல்லோரும் சேர்த்து பழைய துணிகள், பழைய பொருள்களை குப்பை குழியில் கொண்டு சென்று கொட்டினார்கள்.  கிராமங்களில் துணிமணிகளை எல்லாம் எரிப்பது வழக்கம் இல்லை. அதற்கு பதிலாக உரமாக உர குழியில் போடுவார்கள். பொதுவாக கிராமங்களில் எல்லா வீடுகளிலும் குப்பை குழி ஒன்று இருக்கும் அதில் நித்தமும் வரும் வீட்டு குப்பைகள் மற்றும் மாட்டு சாணம், வைக்கோல் கூளங்கள் என எல்லாவகையானவற்றையும் அக்குழியிலே போடுவார்கள். வருடத்திற்கு ஒரு முறை மக்கிப்போன அந்த குப்பைகள் எல்லாம் தங்களின் வயல்களுக்கு உரமாக போடுவார்கள்.

போகி பண்டிகை அவ்வளவாக விமர்சையாக இருக்காது. இரவில் வெண்பொங்கல் வைத்து,  ஒரு சிறிய குடத்தில் ஆற்றில் இருந்து புது தண்ணீரும் எடுத்து, வேப்பிலைக்கொத்துகளை இட்டு,  மஞ்சள்  தடவிய  தேங்காய் வைத்து,  கதம்பம் பூவினை குடத்திற்கு சுற்றி, ஒரு சின்ன பூஜை செய்வதுடன் போகிப்பண்டிகை முடிந்துவிடும்.

அவன் தெரு பொங்கலினை, அழகாக  வண்ண கோலங்களினால் வரவேற்க தொடங்கியது.  வண்ண கோலங்களுக்கு மத்தியில் பசுச்சாணத்தில் செய்த பிள்ளையார் உர்கார்த்திருக்கும்.  அந்த பிள்ளையாருக்கு, பரங்கி பூவினாலும் அருகம்புல்லாலும் அலங்காரம்  செய்யப்பட்டிருக்கும்.

அவன் ஊரில் பொதுவாக அந்த மாதங்களில் தெருவில் பெரும்பான்மையான இடங்களிலும்,  சில வீடுகளில் கூரைகளின் மீதும்,  வேலிகளில் மேலும் செழுமையான பசுமையான இலைகளுடன் பரங்கிக்கொடிகள் பரவி படர்ந்து கிடக்கும்.  அந்தக்கொடிகளில் மஞ்சள் வண்ணத்தில் குழல் போல மலர்ந்த பரங்கிபூக்கள் எல்லோரையும் மகிழ்விக்கும். ஆங்காங்கே  பரங்கி பிஞ்சுகள் வளர்ந்து கொண்டிருக்கும். 

அவன் அன்று காலையில் பொங்கல் வேலைகளினை மும்முரமாக செய்யத்தொடங்கினான்.  காலையில் அருகம்புல், தும்பை பூக்கள் எல்லாம் எடுத்துவந்து கொடுப்பான்.

அவன் ஊரில் சில வீடுகளில் தெருவில் அடுப்பு வெட்டி பொங்கல் வைப்பார்கள். சில வீடுகளில் கல் வைத்து அடுப்பு கட்டி பொங்கல் வைப்பார்கள். அப்படித்தான் அவன் வீட்டில் எப்போது அடுப்பு கல் வைத்துதான் பொங்கல் செய்வது வழக்கம். அந்த அடுப்பு கற்கள் பொங்கலுக்கு மட்டுமே பயன்படும். மற்ற நாட்களில்   அந்த கல்லை பயன்படுத்த மாட்டார்கள்.





அவன் அன்று காலையில் தெருவில் அடுப்பு கட்டுவதற்காக ஆயத்த வேலைகளினை செய்தான். அடுப்புக்கு மறைவாக படுதா வைத்து ஒரு பக்கம் அடைக்கத்  தொடங்கினான். வாங்கி வந்த கரும்பு கட்டுகளில் நீண்ட கரும்புகளை எடுத்து இரெண்டு பக்கங்களிலும் வைத்து சோலையினால் முடிச்சு போட்டு தோரணம் போல ஒரு பந்தல் போட்டான்.  அவனது அம்மா அவன் கட்டிய பந்தலில் இரண்டு குத்து விளக்குகளை  ஏற்றி, பிள்ளையார் கல்லில்  பசுசாணத்தினால் பிள்ளையார் செய்து அதற்கு அவன் எடுத்து வந்த அருகம்புல் மற்றும் தும்பை பூவினால் அலங்கரித்தார்.

அடுப்பு கல் வைப்பதற்கு தரையில் ஆற்று மணல் பரப்பினான். அதன் மேல் தவிடு கொஞ்சம், ஒரு ரெண்டு அங்குலம் அளவிற்கு தூவினான். அடுப்பு கற்களை  நன்றாக சரியான இடங்களில் அமர்த்தினான்.

பொங்கல் பானைகளை அவனது அம்மா நன்றாக கழுவி பானைக்கு நாமம் போட்டு, அதன் நடுவே குங்குமம் வைத்து தயார்  செய்தார்.  வெண்பொங்கல் பானையின்  கழுத்தில் புது மஞ்சள் கொத்தும், சர்க்கரை பொங்கல் பானையின் கழுத்தில் இஞ்சி கொத்தும் கட்டி வைத்தார்.

இதற்கிடையில் அவன் அடுப்பு எரிக்க தேவையான விறகுகள், காய்ந்த தென்னை ஓலைகள், தென்னை கூராஞ்சிகள், சின்ன குச்சிகள் எல்லாம்  தோட்டத்திலிருந்து எடுத்து வந்தான். அவன் அம்மாவுக்கு கூட மாட இருந்து உதவி செய்தான். பொங்கலுக்கு தேவையான உருண்டை வெல்லம் உடைத்து கொடுத்தான். மற்ற பொருட்களெல்லாம் எடுத்து வந்து கொடுத்தான் இதெல்லாம் அவன் அக்கா திருமணம் ஆவதற்கு முன்பெல்லாம் அவன் அக்காவே எல்லாம் வேலைகளையும் செய்துவிடுவார்கள். அவனது தெருவில் எல்லோர் வீட்டிலும் அனைத்து ஆயத்த வேலைகளும் செய்துவிட்டு, அடுப்பு பற்ற வைப்பதற்காக  ராமசாமி அய்யர் சொன்ன நேரத்துக்காக காத்திருந்தனர்.

பொதுவாக கிராமங்களில் எல்லோரும் ஒரே சமயத்தில் பொங்கல் பானை வைப்பது வழக்கம். அதுபோலவேதான் அன்றும் அவனது தெருவில் எல்லோரும் ஒரே நேரத்தில் சூடம் கொளுத்தி அடுப்பில் பொங்கல் பானைகளை வைத்தனர். முதலில் இரண்டு பானைகளிலும் பசும் பால் கொஞ்சம் விடுவது வழக்கம்.  அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பினை நன்றாக எரியவிடுவார்கள். பொங்கல் வைக்கும்  இடத்தில் குடும்பத்தினர்  அனைவரும்  கூடி  இருப்பார்கள்.


பொங்கல்  வைக்கும்போதே  நினைத்தாலே  நாவில்  நீர்  சுரக்கவைக்கும்  வாசக்கறி பக்கத்தில்  தயாராகிக்கொண்டிருக்கும். அவரைக்காய், மாங்காய், கத்தரிக்காய், பரங்கிக்காய், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, முருங்கைக்காய், வாழைக்காய் என்று  கிடைக்கும்  எல்லாக்காய்களையும்  நறுக்கி வேகவைத்து, அதற்கென்று  மிளகாய், மல்லி , மஞ்சள், மிளகு வைத்து  அரைத்து தயாரித்த  கலவையை  அதனுடன்  சேர்த்து, துவரம்  பருப்பை  வேகவைத்து  கலந்து, புளிக்கரைசலையும் சேர்த்து  கொதிக்க  வைக்கும்போதே  எழும்  மணம், பொங்கல்  எப்போது  தயாராகும்  என்று  ஆவலைக்கூட்டும். கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம்  எல்லாவற்றையும்  சூடான  எண்ணெயில்  போட்டு, கடுகு  வெடித்து  வரும்போது  ஆய்ந்துவைத்த  கருவேப்பிலையை  போட்டு  தாளித்து  அதை  அந்த  குழம்பின்மீது  கொட்டிக்கிளறினால் அதுதான்  பொங்கல் வாசக்கறி.

ஊரில் இருக்கும் சின்ன சிறுசுகள் எல்லா வீடுகளுக்கும் பார்வையிட போவதுமுண்டு. அப்போது ஒவ்வொரு வீட்டிலும் நடப்பதினை நேரடி வர்ணனையாக சொல்லிக்கொண்டே தெருவில் அங்கும் இங்குமாய் ஓடித்  திரிவார்கள். அந்த சின்ன சிறுகள் புதிய ஆடைகளில் அங்கும் இங்குமாய் அலைவது அவனுக்கு, வண்ணத்துப்  பூச்சிகள் தோட்டத்தில் அங்கும் இங்குமாய் பறப்பது போல இருக்கும்.

அப்படியே விளையாடி சிறுவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பொங்கல் பானை பொங்கி வரும் பொது "பொங்கலோ.... பொங்கல்.....பொங்கலோ...... பொங்கல்.......பொங்கலோ.........பொங்கல்" என்று ஆர்ப்பரித்து கொண்டாடுவார்கள். அந்த தருணம் சின்னச்சிறுகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் கூடவே பொங்கலோ பொங்கல் என்று உரக்கச்  சொல்லி சந்தோசப்படுவார்கள். பொங்கல் பானையில் நன்றாக பொங்கி வரவேண்டும். இல்லையென்றால் எதோ குறை இருக்கிறது என்று வீட்டு பெருசுகள் ஏளனம் பேசும். அதற்க்காகவே இந்த பொங்கல் பானை கொஞ்சம் நன்றாக பொங்கி வரவேண்டும் ஆசை எல்லோருக்கும் இருக்கும்.



பொங்கல்  பொங்கியதும், பொங்கல் பானைகளை, தரையில் தவிட்டை கொட்டி அதன் மேல் கலவடை வைத்து அந்த கலவடையில் பொங்கல் பானையை வைப்பார்கள்.  பிறகு ஊரே ஒரே நேரத்தில் படையல் செய்வதுதான் வழக்கம். அப்படியே அன்றும் அவனது வீட்டிலும் பொங்கல் படையல் செய்தார்கள்.

பொதுவாக பொங்கல் என்பது அறுவடை பண்டிகை என்பதால், பெரும் பொங்கல் பண்டிகையினை புது அரிசியில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படையல் செய்வது வழக்கம். அதற்காக அன்று முறத்தில் பயறு உளுந்து பரப்பி, அதன் மீது நல்ல விளக்கு தீபம் ஏற்றி, வீட்டின் வாசலில் வைத்து, சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாய் படையல் செய்வார்கள்.



படையல் செய்த பிறகு பொங்கல் எல்லோருக்கும் பரிமாறப்படும். அதிலும் பரிமாறுவதற்கு பயன்படுத்து ஆப்பை தேங்காய் கொட்டாஞ்சியினை நன்றாக சுத்தம் செய்து அதனை நீண்ட மூங்கில் பிளாச்சியில் சேர்த்து செய்து இருக்கும் ஆப்பை பொங்கலின் பொது மண் பானையினை உடையாமல் கையாள இதமாக இருக்கும்.


வெண்பொங்கல் குறைந்தது பத்து நாட்களாவது இருக்கும், காலையில் தயிரும் வெண்பொங்கலும் தான் எல்லோருக்கும் உணவாக அந்த பத்து நாட்களுக்கு இருக்கும். அதன் சுவையே இப்போதெல்லாம் கிடைப்பது இல்லை என்ற மனவருத்தம் அவனுக்கு உண்டு.


அப்போதெல்லாம் ஒவ்வொரு வருடமும் பொங்கும் பொங்கல் பானைகளை கலவடை வைத்து, ஒன்றின் மீதுஒன்றாக சுவரோரமாக அடுக்கி வைத்திருப்பார்கள். அதற்கு அடுக்கு பானை என்று பெயர். அந்த அடுக்கு பானைகள்தான் அவர்களின் உணவு தானிய சேமிப்பு கிடங்கு. பெரிய பானைகளில் அரிசியும், உளுந்தும், பயறு, மாங்காய் வத்தல், கத்தரி காய் வத்தல், நார்த்தங்காய், எலுமிச்சை ஊறுகாய் என வீட்டின் சகல உணவு பொருளும் வழக்கமாக அடுக்கு பானைகளில் தான் சேமித்து வைப்பார்கள். அந்த அடுக்கு பானைகளில்  ஒவ்வொரு பானைக்கும் ஒரு கதை இருக்கும். இந்த பானை நாலாம் வருட பொங்க பானை, அது போனவருட பொங்க பானை என ஒவ்வொரு பானையும் ஒரு கதை சொல்லிக்கொண்டே அவர்கள் வீட்டின் ஓரமாக இருந்து மொத்த வீட்டினையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே இருக்கும்.
 

ஊர் திரும்புதல் - 1


    

No comments:

Post a Comment