Sunday 12 July 2020

ஊர்திரும்புதல் - 20


பொங்கல் - 2


அடுத்தது பொங்கலுக்காக வீட்டுக்கு வெள்ளை அடிப்பது ஒரு வழக்கம். அதிலும் ஊரில்  ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். வெள்ளைசுண்ணாம்பில்  இரண்டு வகை  உண்டு. கல்  சுண்ணாம்பு ஒன்று. மற்றது  கிளிஞ்சல்  சுண்ணாம்பு. அவனுடைய  ஊரில் பொதுவாக சுண்ணாம்புக்  கிளிஞ்சல் புழக்கத்தில்  இருந்தது.   நல்ல பெரிய மண்பானையில் நன்றாக கொதிக்கவைத்த நீரில், அந்த கிளிஞ்சல்களை கொட்டுவார்கள். கொதித்த நீரில் கொட்டிய சுண்ணாம்பு வேதியல் மாற்றம் அடைந்து வீறிட்டு பொங்கிவரும். சிலநேரங்களில் அருகில் இருப்பவர்களின் கை கால்களில் தெறிக்கும். தயாரான சுண்ணாம்பில் தங்கள் எண்ணங்களுக்கேற்ப வண்ணங்களை வீட்டின் சுவர்களில் தீட்டுவது அடுத்தவேலை. அப்போதெல்லாம்  தேங்காய்  மட்டையை  எடுத்து  கொஞ்சம்  ஊறவைத்து  நுனியை  மெல்லத்தட்டி  நார்  நாராக  பிரித்து கைப்பிடிக்கும்  இடத்துக்கு  கொஞ்சம் கீழே  சணல் வைத்துக்கட்டிவிட்டால்,  நீங்கள்  சுண்ணாம்பு   அடிக்கத்தேவையான  நாட்டு  ப்ரஷ்  ரெடி. அந்த ஆர்கானிக்  தென்னமட்டை பிரஷ் வைத்து அவரவர்  வீடுகளில்  எண்ணிய   வண்ணம் தீட்டுவார்கள். 

அந்த சுண்ணாம்பில் இருந்து வரும் ஒரு விதமான வாசனை இன்றளவும் அவனின் நினைவில் இருக்கிறது. கொஞ்சம் நாட்கள் அந்த தெருவே அந்த வாசனையில் மிதக்கும்.  வீட்டு கதவிற்கும் ஜன்னல்களுக்கும் ஆயில் பெயிண்ட் அடிப்பதும் வழக்கம். அவனின் ஊர் மார்கழி மாதத்தில் அடுத்து வரும்  தை பொங்கலை வரவேற்க  அவரவரும் தங்கள் வீட்டினை அலங்கரித்து கொண்டிருந்தனர்.






இடை இடையே கிடைக்கும் நேரத்தில் அவன் விளையாட்டையும் விடாமல் விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது  அம்மா, " டேய்  தம்பி... இன்னும் பொங்கலுக்கு ஆறு நாள்தான் இருக்கு. அதனால நாளைக்கு ஐந்தாம் நாள் பொங்கல் பானை எடுக்க போலான்னு  தெருல எல்லோரும் சொல்றாங்க...அதனால நாம  நாளைக்கு காளிக்கு  பொங்கல் பானை எடுக்க  போலாமா?  ... நீயும்  கொஞ்சம் கூட  வா",  என்றார்கள்.


ஆம் , பொங்கலுக்கு மண் பானைதான் முக்கியம். ஆனால் இன்றோ ஒரு கிராமத்து வீட்டில் கூட இந்த பழக்கம்  இல்லாமல் போய்விட்டது. எல்லோரும் பித்தளை பானைக்கு மாறிவிட்டார்கள் என்பது மனதில் ஒரு நெருடலாகத்தான் இருக்கிறது.






அப்படியாக மறுநாள் அவன் அவனது அம்மாவுடன் காளிக்கு விடியற்காலையிலே கிளம்ம்பிச்சென்றான். காளி அவனது ஊரில் இருந்து மூன்றரை கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. காளியில், காளியம்மன் கோவில் தெருவில்தான் அந்த இரண்டு சகோதர்கள் குடும்பம் மண் பானை செய்துவந்தார்கள். அதுமட்டுமில்லாமல் பொய்கைகுடியிலும் ஒரு குடும்பம் மண் பானை செய்து வந்தனர்.  இந்த இரண்டு வீட்டு பையன்களும் அவனுடைய  பள்ளிக்கூடதில், அவனுடைய  வகுப்பில்தான் படித்தார்கள்.  அதனால் அவனுக்கு அங்கு கொஞ்சம் தனி சலுகை. அதாவது அவன் போன உடனே வாங்கிவந்துவிடலாம். ஆமாம், சுத்துப் பட்டு இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இங்கு வந்துதான் மண் பானை வாங்கி செல்வார்கள்.  அதனால் கூட்டம் அதிகமாக இருக்கும்.        






அந்த நாட்களில் காளியம்மன் கோவில் தெருவே ஒரு திருவிழா போல் உற்சாகமாகவும் மக்கள் நடமாட்டத்துடனும் இருக்கும். அந்த கூட்ட நெரிசலில் ஒருவழியாக போய் சேர்ந்தான். அங்கு அவனது நண்பன்  சண்முகத்தை கண்டான்.  அந்த வீட்டு பையன் அவன் பேருதான் சண்முகம். அப்போதெல்லாம் பண்டமாற்று முறையில் தான் அவர்கள் பானையினை வியாபாரம் செய்வார்கள்.  பானைக்கு பணம் ஒன்றும் கொடுக்கவேண்டாம். பொங்கல் முடிந்ததும் அவர்கள் கொடுத்த பானைக்கு நெல் வாங்கிச்செல்வது வழக்கம். அவனும் அவன் அம்மாவும் அன்று ஒரு பெரிய பானை வெண்பொங்கலுக்கும் அதைவிட ஒரு சுற்று சிறிய பானை சர்க்கரைப்  பொங்கலுக்கும்,  அதைவிட  ஒரு சிறிய பானை மாட்டு பொங்கலுக்கும், இரண்டு மண் சட்டிகளும் வாங்கிக்கொண்டார்கள்.  ஒன்று வாசகரி செய்வதற்கும் மற்றொன்று மாட்டு பொங்கலுக்கு கறி செய்வதற்கு.


 
பானையில் ஓட்டை இருக்கிறதா இல்லையா என்று தட்டி பார்த்தால் வரும் சத்தத்திலேயே தெரியும். ஆனால் அதற்கென சிலர் இருப்பார்கள். அதனால்தான் எல்லோரும் சேர்ந்து போய் பானை வாங்கிவருவார்கள்.   ஒரு தெருவே ஒன்றாக கூடி போய் மண் பானைகள் வாங்கிக்கொண்டு தலையில் ஒன்றும் கையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றும் என்று ஒரு கூட்டம் வருவதை பார்த்தால் ஏதோ  மண் பானைகள்தான்  கால் முளைத்து, ஒரு கூட்டமாக நடந்து வருகிறதோ  என்று  தோன்றும். 

ஆனால் இப்போதெல்லாம் அதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதாகவே தென்படவில்லையே  என்று கொஞ்சம் ஏக்கமாக அம்மாவிடம் கேட்டான்.

"ஆமாம்பா இப்போ எல்லோரும் பித்தளை பானைக்கு மாறியாச்சு....அந்த மண் உடையார் குடும்பம்  அந்த தொழிலை விட்டுட்டாங்க", என்று கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னார்கள்.

அவன் பானைகளுடன் நடந்து வந்துகொண்டிருக்கும் போது அந்த சாலையில் இரண்டு பக்கமும் கரும்பு கட்டுகளுடனும், பச்சையிலிருந்து மஞ்சள் வண்ணத்துக்கு மாறலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் தொங்கிக்கொண்டிருக்கும் வாழைதார்களுடனும், மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துகளுடனும் வெல்லமும்  வாங்கிக்கட்டிக்கொண்டு சிலர் சைக்கிள்களிலும்,  தங்கள் தலையிலும் சுமந்து தனது சகோதரிகளுக்கோ அல்லது மகளுக்கோ பொங்கல் வரிசை எடுத்து செல்வதுமாய் அந்த சாலையே களை கட்ட தொடங்கியது.

அப்படித்தான் ரெண்டுநாட்கள் கழித்து  சமீபத்தில் திருமணமாகி வந்த அந்த மாடி வீட்டு மருமகளுக்கு மாட்டு வண்டியில் அரிசி முதல் பானை வரை பொங்கலுக்கு தேவையான அத்தனையும் அவரது அப்பா தலைப் பொங்கல் சீராக எடுத்துவந்தார்கள்.

பொங்கல் நெருங்கும் நேரத்தில் கிடாத்தலைமேடு ராமசாமி அய்யர், பொங்கல் வைக்கும் நேரம் முதல் சூரியபகவானுக்கு படையல் செய்யும் நேரம் வரை தெள்ள தெளிவாக மஞ்சள் கலரில் நோட்டீஸ் அச்சடித்து    எல்லோருக்கும் விநியோகம்  செய்ய சொல்லியிருந்தார்.

அன்று மாலை அவனும் மற்றும் சில நண்பர்களும் திட்டம் போட்டார்கள். மறுநாள் விடியற்காலையில் குறுக்கே  வயல்வழியாக வாணாதி ராஜபுரம் போய் கரும்பு கட்டுகள் வாங்கிவரவேண்டும், என்பதுதான்  அது. அவனும் அவனது நண்பர்களும் ஒவ்வொரு வருடமும்  பொங்கலின் போது நேரடியாக கரும்பு விவசாயிகளிடமே, கரும்பு வாங்கிவருவ்து வழக்கம். மறுநாள் விடியற் காலை ஐந்து மணிக்கே  அவர்களின் திட்டத்தின் படி ஆளுக்கொரு துண்டு எடுத்துக்கொண்டு கையில் தேவையான காசுடன் நடக்க தொடங்கினார்கள்.

வாணாதிராஜபுரம் அவன் ஊருக்கு நேர் பின்புறம் இருக்கிறது. வயல்கள் வழியாகவே சென்று விடலாம், போகும் வழியில் இன்னும் பத்து நாட்களில் அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருந்த தாளடி நெற்பயிர்கள், மார்கழி பனியில் நனைந்து நிலம் பார்த்து பூமாதேவியை பூஜித்துக்கொண்டிருந்தது. அவ்வழியே அவர்கள் நடந்து இரண்டு ஊர்களுக்கும் இடையே இருக்கும் பெரிய சாவடி குளத்தில் கொஞ்சம் இளைப்பாறிவிட்டு,    மீண்டும் நடக்க தொடங்கினர். இரண்டு ஊர்களுக்கும் ஒரு ரெண்டு கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கும். ஒருவழியாக அவர்கள் வழக்கமாக கரும்பு வாங்கும் வயலினை அடைந்தார்கள்.
 
நல்ல கரும்புகளை தேர்ந்தெடுத்து ஒதுக்கி வைத்தனர். நேரடியாக வயல்காரரிடமே வாங்குவதால் விலை குறைவாகவும், உடனே வெட்டிக்கொடுப்பதால் புதுக்  கரும்பாகவும் இருக்கும். அவர் அவர் தங்கள் சுமை தூக்கும் சக்திக்கு ஏற்றாற்போல் கரும்புகளை வாங்கி கொள்வார்கள். வாங்கிய கரும்பினை நன்றாக வெட்டிய கரும்பு சோலையினை (தோகை)  கொண்டு நல்ல இறுக்கமாக கட்டி, எடுத்துவந்த துண்டினால் சும்மாடு செய்து தலையில் வைத்து, மேலே கரும்பு கட்டை வைத்துக்கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பிப்பார்கள். எப்படியும் குறைவாக ஒரு மணி நேரமாகும் வீடு வந்து சேருவதற்கு.




ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தவுடன், பசி உச்சத்தில்  இருக்கும். வீட்டுக்கு  வந்த  உடனே  பழைய சோறும்,  எருமை தயிரும் சின்ன வெங்காயமும், முதல்நாள்  வைத்த மீன் குழம்பும் சேர்த்து சாப்பிட்டுவிட்டுதான்  அடுத்த வேலை.

அவன் முதல்நாள் வாங்கிவந்த பொங்கல் வாழ்த்து அட்டைகளை எல்லாம் முகவரி எழுதி கொண்டிருந்தான். கூடவே சின்னசிறுகள் மற்றும் எழுத தெரியாத சிலரும் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பொங்கல் வாழ்த்து முகவரி எழுத சொல்லி கொடுப்பார்கள். அப்படியே  எல்லாவற்றையும் கடை வீதிக்கு செல்லும் போது அனுப்பிவிடுகிறேன் என்று உத்தரவாதம் கொடுத்து, அட்டைகளை  வாங்கி வைத்துக்கொள்வான்.



அவனும், தனது சகோதரி வீட்டுக்கு பொங்கல் வரிசையினை எடுத்து செல்ல தயாராகிக் கொண்டிருந்தான்.
 

தொடரும்.....

ஊர் திரும்புதல் - 1






No comments:

Post a Comment