Friday 24 July 2020

ஊர் திரும்புதல் - 22


பொங்கல் 4



அவன் மறுநாள் காலையில், மாட்டு பொங்கல் நாளன்று,  அவனுடைய  வீட்டு ஆடு, மாடுகளை ஆற்றில் குளிப்பாட்டி கொண்டுவர புறப்பட்டான்.

அன்று ஊரில்  கால்நடைகளில் மாடுகளுக்கு  கொண்டாட்டம். அதிகாலையிலே, ஊரின் ஒதுக்கு புறத்தில் கசாப்புக்கடையில்  கூடுதல்  எண்ணிக்கையில்  ஆடுகள்  வெட்டப்பட்டு  தயாராகிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு கிராமத்திலும் மாட்டு பொங்கல் அன்று ஆட்டுக்கறி இல்லா மல் கொண்டாட்டம் கிடையாது.




அவனது அப்பா அன்று காலையிலே மாட்டு பொங்கலுக்கு தேவையான மாலையினை வேப்பக்கொத்து, நெல்லிக்கொத்து, மாங்கொத்து கொண்டு அழகாக மாலைகளை தயார் செய்து கொண்டிருந்தார். வேப்பங் குச்சிகளை  சீவி,  வீட்டை சுற்றியும், மாட்டு கொட்டகையிலும் அடிப்பதற்கு முளைக் குச்சிகளும் தயார் செய்து வைத்திருந்தார்.

மற்றொரு பக்கம், பக்கத்து வீட்டு மாமா வந்து,  புதிதாக வாங்கி வந்த தலை கயிறு, மூக்குக்  கயிறு, கழுத்துக்கட்டிகள், வெண்கலம்  மற்றும் இரும்பினால் செய்த மணிகளையும் கொண்டு அவன் வீட்டு  மாடுகளுக்கு அலங்காரம் செய்தார். 

வண்ண வண்ண நெட்டி தக்கைகளால் கோர்த்த நெட்டி மாலைகள், வீட்டின் தாழ்வாரத்தில் ஒரு புறம் மாடுகளின் கழுத்தினை அலங்கரிக்க தவமாய் காத்துக்  கொண்டிருந்த.  எத்தனை அழகாக இருந்தாலும் வாழ்வில் ஒவ்வொரு வருடமும் அந்த ஒரு நாள்தான் அந்த நெட்டி மாலைகளுக்கு வாழ்வு. அதனால்தான் அவைகள் தனது பிறப்பு பயனுக்காக தவமிருந்து என்று சொன்னால் அது மிகையாகாது.





அவனது ஊரெங்கும் காலையிலேயே ஆட்டுக்கறி குழம்பு  வாசம் வீடுகளிலிருந்து வந்துகொண்டிருந்தது.

அவனது அம்மா மாட்டு பொங்கல் படைப்பதற்காக பொங்கல் செய்ய தொடங்கினார்கள்.  ஊரே மாட்டு பொங்கலினை விமர்சையாக கொண்டாட கோலாகலமாக நல்ல நேரத்துக்காக காத்துகொண்டிருந்தனர். ராமசாமி அய்யர் கொடுத்த அட்டையில் இருந்த நேரத்தின் படி மாட்டு பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பமானது.




ஒவ்வொரு வீட்டிலும் தெருவின் சிறுவர்கள் ஒன்று கூடி கையில் ஒரு தாம்பாளமும், ஒரு குச்சியும் எடுத்துக்கொண்டு, குச்சியை தாம்பாளத்தில்  தட்டித்தட்டி ஆனந்தமாக ஓசைகளை எழுப்பிக்கொண்டு பொங்கலோ பொங்கல் என்று பாடிக்கொண்டே மாடுகளை சுற்றி வருவார்கள். பெரியவர்கள் ஒவ்வொரு மாட்டுக்கும் பொங்கல்  ஊட்டி விடுவதும், கொஞ்சம் மஞ்சளும் குங்குமமும் கலந்து மாட்டின் நெற்றியிலும் மற்றும் முதிகிலிம் தடவி விடுவதும், நெட்டி மாலையும் இலைகளினால் செய்த மாலையும் மாட்டு அணிவித்து விடுவதும், மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த நீரினை மாடுகளின் மீது தெளிப்பதும் என ஒரே கொண்டாட்டமாக இருந்தனர்.




எல்லாம் முடிந்த பிறகு வீட்டிற்கு வரும் பிள்ளைகளை வீட்டில் ஆரத்தி எடுத்து அழைப்பதும் ஒரு வழக்கம். முந்தய  காலங்களில் வீர தீர காரியங்களை செய்து வருபவர்களை  வரவேற்கும்  வழக்கம்  இருந்திருக்கும்  போல. அதுவே  இன்றளவும் தொடர்த்துக்கொண்டு  இருக்கிறது போலும்.  பிறகு வீட்டில் அசைவ சமையலினை படையல் செய்து விருந்தோம்பல் நடைபெறும். அதன் பிறகு ஒரு உண்ட மயக்கம் அனைவரையும்  ஆட்கொள்ளும்.  

அன்று மாலை வேளையில் எல்லா சிறியவர்களுக்கு, கலைஞர்களும் ஊரின் பெரியவர்களிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கிக்கொள்வதும் ஒரு வழக்கம். அதற்காக அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஊரின் பெரியவர்களின் வீடுகளுக்கு போய் வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.  பெரும்பாலான வீடுகளில் தங்களின் தாளடி வயலில் உளுந்து பயறு விதைக்க தொடங்கினார்கள். பொதுவாக மாட்டு பொங்கல் நாளன்று உளுந்து பயறு விதைப்பது வழக்கம்.  


அவரவர் வீட்டின் மாடுகளையும், கன்று குட்டிகளையும், மாட்டு வண்டிகளையும் அலங்கரித்து கொண்டு அம்மன் கோவில் வரை ஊர்வலமாக போய் வருவதும் ஒரு வழக்கமாக இருக்கும். திரும்பி வீட்டுக்கு வந்தவுடன் தொழுவத்தில் கட்டும் மாடுகளை மறுநாள் நல்ல நேரம் பாத்து உலக்கை வைத்து தொழுவதிலிருந்து வெளியே அழைத்து வருவதும் ஒரு வழக்கம். 

மறுநாள் காணும் பொங்கல். ஆனால் கிராமத்தில் இதற்கு கன்னி பொங்கல் என்றும் சொல்லுவோம். கன்னி பொங்கலன்று மதியம் ஊரின் எல்லையிலுள்ள மந்தகரையில் காளையர்கள் எல்லாம் ஒன்று கூடி பொங்கல்  வந்துகொண்டாடும்  நாள். இளைஞர்கள்  ஒன்று  கூடி ஊரின் எல்லா வீடுகளிலும் அரிசி, வெல்லம், கரும்பு வாழைப்பழம் வாங்கி  சேர்த்துக்கொண்டு  வருவார்கள். அதனுடன்  பொங்கலுக்கு தேவையான  நெய்  முதலிய  மளிகைப்பொருட்களை வாங்க கொஞ்சம்  காசும்  வாங்கிவருவார்கள். விக்ரமன் ஆற்றின் கரையில் இருக்கும் மந்தகரையில் கன்னி மேடை கட்டி, அதற்கு மாலை போட்டு அருகிலேயே  அடுப்பு வெட்டி பொங்கல் பொங்கி வழிபடுவதும் ஒரு வழக்கம். அது  இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது.





அன்று எல்லோரும் அவர்கள் வீட்டு மாடுகளை மந்தகரைக்கு ஓட்டிவருவார்கள். அந்த மாடுகளை பார்த்துக்கொள்ள அவர்களில்  சிலர் பொறுப்பெடுத்துக்கொள்ள, மற்றவர் எல்லாம் பொங்கல் வேலையினை தொடர்ந்து செய்தனர். அவர்களில் ஒரு சிலர் கடைவீதிக்கு போய் தேவையான மற்ற பொருள்கள் வாங்கி வருவதற்கு சென்றனர்.   அந்த காளையர்கள் பொங்கும் பொங்கலும் அந்த பொங்கலினை அவர்கள்  பரிமாறும் விதமும் இன்றளவும் பார்பதற்க்கே ஒரு இனிமை. அவ்வழியே போகும் சிலருக்கும் அவர்களின் பொங்கலினை கொடுப்பது மகிழ்வார்கள்.

இடையே மாரியம்மன் கோவில் வாசலில் உள்ள மைதானத்தில்,  மங்கையர்கள் வண்ண கோல போட்டிகளுக்காக வண்ண வண்ண கோலங்களை  தங்களின் திறமையால் வரைந்து கொண்டிருந்தனர். மறுபுறம் சிறுவர்களுக்கு விதவிதமான, ஏராளமான விளையாட்டுகள் நடைபெற்றன. இவையெல்லாம் முடிந்து அதற்கு ஊர் பெரியவர் தலைமை தாங்கி பரிசுகளை கொடுப்பதும் நடக்கும்.  மறுபுறம் முனீஸ்வரன் கோவில் முன், குளத்து கரையில் இளசுகள் கபடி விளையாடுவதும் அதில் ஒருசிலர் கை  கால் அடிபட்டு ஒதுங்கி வருவதும், மற்றவர்கள் எல்லாம் கொண்டாட்டமாக  விளையாட்டினை தொடர்வதும் என்று  ஒரே அமர்களம்தான்.     

மாலை நேரம் ஊரில் கன்னிப்  பெண்கள் அவரவர் தெருவில் உள்ள கன்னியம்மன் கோவிலில் இரவு பொங்கல் வைத்து கும்மி அடித்து கொண்டாடுவதும்    வழக்கம். அதற்காக  தெருவில் எல்லா வீடுகளிலும் அரிசி, வெல்லம், நெய்,  கரும்பு மற்றும் வாழைபழம் எல்லாம் சேகரித்து  கொண்டுவந்து  வந்து பொங்கல் வைத்துக்  கொண்டாடுவார்கள்.   
  
அவனது வீட்டின் தோட்டத்தில் கன்னியம்மன் மேடை செய்ய அவன் ஒவ்வொரு வருடமும் சுத்தம் செய்து கொடுப்பது வழக்கம். அதற்காக அவன் அன்று வீட்டின் தோட்டத்தினை சுத்தம் செய்து, மேடை கட்ட தேவையான மண் கொண்டுவந்து குவித்தான். பின்னர் வெளிச்சதிற்கு மின் விளக்குகள் பொருத்திக்  கொடுத்தான். மேடையின் மீது கரும்பினால் பந்தல் போட்டு கொடுத்தான். 





அன்று இரவு பெண்கள் எல்லோரும் அவனது வீட்டில் உள்ள கன்னியம்மன் கோவிலில் வந்து பொங்கல் பொங்கி, கன்னி மேடைக்கு கோலமிட்டு விளக்கேற்றி பொங்கல் வழிபாடு செய்தனர். அப்பொழுது எல்லா பெண்களும் சேர்ந்து கன்னி அம்மன் சுற்றி சுற்றி கும்மி அடித்து பாடல் பாடி அந்த இரவினை மிக சிறப்பாக கொண்டாடினர்கள்.



அன்று இரவு ஊரின் மகா மாரியம்மன் வீதி உலா வருவதும் தொன்று தொட்டு வரும் ஒரு வழக்கம். அதற்காக மாலை முதல் அம்மன் சிலை  வண்ண பூக்களினால் தொடுத்த மாலைகளினால் அலங்கரிப்பட்டு கொண்டிருக்கும். வீதியெங்கும் அம்மன் வருகையினை முன்னிட்டு இரவு தண்ணீர் தெளித்து வண்ண கோலங்கள் இட்டு ஆவலுடன்  அம்மனின் வருகைக்காக ஒவ்வொரு வீட்டிலும் காத்துக்  கொண்டிருப்பார்கள்.






   
இரவில் அழகாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் தன் கிராமத்தின் பிள்ளைகளையெல்லாம் அவரவர் வீட்டின் வாசலில் போய் ஆசீர்வாதம் கொடுக்க புறப்பட்டது. அம்மன் அவன் ஊரின் ஒவ்வொரு வீதியும் சுற்றியபின்,  நள்ளிரவு திரும்ப கோவில் வந்து சேரும். அப்படி வந்தவுடன் அம்மனுக்கு அலங்கரிப்பட்ட மாலைகள்  ஒவ்வொரு  ஊரில்  ஒவ்வொரு  வீட்டுக்கும்  ஒவ்வொன்றாய்  பிரித்துக்  கொடுக்கப்படும்.

அந்த  மாலைகளை  பெற்றுக்கொண்டு  அம்மன் கோவிலில்  இருந்து  ஊர்க்காரர்கள் அறுவடை செய்வதை பற்றி பேசிக்கொண்டே  பொங்கல்  கொண்டாட்டங்களின்  இனிய  நினைவுகளோடு  கலையத்தொடங்குவார்கள்.  



ஊர் திரும்புதல் - 1


    

No comments:

Post a Comment