Sunday 13 June 2021

வாடிவாசல் (குறுநாவல்) - வாசிப்பு அனுபவம்

 வாடிவாசல் (குறுநாவல்)
ஆசிரியர் : சி.சு.செல்லப்பா
வெளியீடு: காலச்சுவடு
விலை: 100
பக்கங்கள்: 100




"வாடிவாசல்" இந்த குறுநாவல் நமது பாரம்பரியத்தின் அடையாளமாகவும் நம் பண்டைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றியும் ஆசிரியர் "சி. சு. செல்லப்பா" அவர்களால் 1959 ல் எழுதப்பட்டது. இந்த "வாடிவாசல்" நமது தமிழ் பாரம்பரியத்தைப் பற்றி பதிவு செய்த ஒரு முக்கியமான படைப்பு. இதன் முதல் பதிப்பு விலை ரூ 1 ஆக வெளியிடப்பட்டது.

100 பக்கங்களைக் கொண்ட இந்த குறுநாவலினை, நான் வாசிக்கத் தொடங்கியதும் எங்குமே இடையில் நிறுத்த முடியாத அளவு கதையின் வேகம் கூடவே அழைத்து சென்றது. ஆம், உண்மைதான் வாசிக்கும் போது அந்த ஜல்லிக்கட்டு களத்திலே , எண்ணற்ற பார்வையாளர்கள் நிறைந்த அந்த கூட்டத்தில் ஒருவனாகவும், பிச்சி, மருதன் மற்றும் பாட்டையா வுடன் அருகில் அமர்ந்து கொண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டுக்களத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வைக் கொடுக்கிறது என்றால் அதில் தவேறேது இல்லை என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு நம்மை வசீகரித்து கொண்டு நம்மை அந்த ஓட்டத்துடனே அழைத்து செல்கிறது ஒவ்வொரு வரிகளும்.

முக்கிய கதாபாத்திரங்களான பாட்டையாவுடனான பிச்சியின் மற்றும் மருதனின் உரையாடல்கள் பெரும்பாலும் இடம் பெறுகிற முக்கியமாக 50 பக்கங்களுக்கு மேலாக வருகிறது. இவர்களின் அந்த உணர்ச்சிபூர்வமான உரையாடல்களினை வாசிக்கும் போது நம்மை ஒவ்வோர் பாத்திரத்தின் பிரதியாகவே உணர வைக்கிறது ஆசிரியரின் எழுத்து.

ஆசிரியர் "சி.சு. செல்லப்பா" அவர்கள் பயன்படுத்தியிருக்கும் வட்டார வழக்குகள் அந்த கதையின் களத்திற்கும், கதையின் காலத்திற்க்கும் மேலும் கதையினை வாசிக்க தூண்டுவதற்கும் ஒரு மிக பெரிய பலமாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

ஆசிரியர் "சி.சு.செல்லப்பா" அவர்கள் ஆரம்பத்தில் பத்திரிக்கையில் பணி புரியும்போது ஜல்லிக்கட்டு புகைப்படம் எடுத்துகொண்டிருந்தார். அவருக்கு இந்த ஜல்லிக்கட்டு மேல் ஏற்பட்ட தீராத தாகத்தினால் பின்னர் அந்த கள நிலவரத்தையும், அதை தங்கள் கையில் வைத்துக்கொண்டிருந்த ஜமீன்கள் மற்றும் நிலப்பிரபுத்துவம் கொண்ட நிலப்பிரபுக்கள், ஆதிக்க சாதிகள், மற்றும் ஒரு ஆண்மகனுக்கே உரிய ஆண்மை மற்றும் வீரத்தின் மறு உருவாக இருக்கும் மனிதன் தனது வீரத்தை வெளிப்படுத்த இருக்கும் ஒரு களமாகவும் இருக்கும் இந்த ஜல்லிக்கட்டு பற்றி எழுத ஆரம்பித்தார் அதன் விளைவு தான் இந்த "வாடி வாசல்".

மனிதனும் மிருகமும் எனப் பிரிக்கமுடியாத வகையில் நாம் நமது பாரம்பரியத்தில் பிணைந்திருந்தாலும் கூட அதனை எந்தவகையிலும் பாதிக்காமல் நமது கிராமப்புற வாழ்க்கையில் இடம்பெற்றுள்ள "ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின்" முக்கியத்துவத்தை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

"மிருக-மனித போராட்டம்" என இருவருக்கும் ஜல்லிக்கட்டு ஒரு மிருகம் போன்ற உணர்வை காட்டிக்கொள்ளும் போது, தன தகப்பனை கிழித்து போட்ட “காளை காரி” யை தனது பலமும் வியூகமும் கொண்ட திறமையால் அடக்கும் "வீரன் பிச்சி" என விறுவிறுப்பாக நடக்கும் அந்த நிகழ்வினை நாம் வாசிக்கும் போது "அங்கே அந்த களத்தில் ஜமீன்தார் எப்படி தனது இருக்கையின் நுனியில் பரப்பரப்போடு" அமர்ந்து இருந்தாரோ அதைவிட பன்மடங்கு ஆவலுடன் அதே பரபரப்புடனும் வாசிக்கும் நாமும் இருக்கையின் முன்பகுதியில் ஒரு வகையான படபடப்புடன் வாசிக்கிறோம் என்றால் அது இந்த அற்புத எழுத்துகள் நம்முன் ஒரு வண்ணத்திரையில் காணொளி போலப் படமாக காட்டிச் செல்கிறது.

ஜமீன் தனது காளை தோற்றுவிட்டதால் அதனை கொடூரமாகக் கொலை செய்வதை வாசிக்கும் போது கண்களில் ஒரு ஓரம் கசிந்துகொண்டுதான் வாசிக்கமுடிந்தது.
தன் தகப்பனைக் கொன்ற “காரியை” வீழ்த்த வேண்டும் என்றே வீரத்துடன் வரும் “பிச்சி” அதில் வெற்றி கொள்ள வகுக்கும் யூகங்கள் ஏராளமானதுமட்டுமல்லாமல் மதி நுட்பம் மிகுந்தது.
இந்த உணர்ச்சி மிகுந்த இந்த காவியத்திற்கு மேலும் மெருகு சேர்ப்பது போல் “பெருமாள் முருகன்” அவர்களின் முன்னுரையே சொல்லிவிடுகிறது மொத்த கதையின் சாரத்தையும்.
இந்த கதை அரை நூற்றாண்டிற்கு முன் எழுதப்பட்டிருந்தாலும், அதே விறுவிறுப்புடன் இன்றும் வாசிப்பவர்களை இந்த இரண்டரை மணி நேரம் “வாடிவாசலில்” கைகளைக் கால்களில் கட்டிக்கொண்டு பரவசமாக வேடிக்கை பார்க்க வைக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.

"உணர்ச்சி மிகுந்த ஒரு ஜல்லிக்கட்டு களத்திற்கு ஒரு சக பார்வையாளனாக நம்மை அழைத்து செல்வது உறுதியானதே!!!

தவறாமல் வாசித்து பாருங்கள் நீங்களும் அந்த உணர்வினை பெறுவீர்கள் என்பது உறுதி.

அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
13 ஜூன் 2021

No comments:

Post a Comment