Saturday 28 August 2021

முன்னேற மூன்று சொற்கள்

 முன்னேற மூன்று சொற்கள்  

ஆசிரியர் : டாக்டர் இல. செ. கந்தசாமி   

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 72

பக்கங்கள் 65


டாக்டர் இல. செ. கந்தசாமி அவர்களின் இந்த தன்னம்பிக்கை புத்தகமான "முன்னேற மூன்றே சொற்கள்" ஒரு அருமையான புத்தகம். இந்த புத்தகத்தின் முதல் பக்கத்திலே ஆசிரியர் வாசிக்கும் நம்மிடம் அந்த  மூன்று சொற்கள் என்னவாக இருக்கும் என்றும் அவற்றை முதல் பக்கத்திலே எழுதிவைத்துவிட்டுத் தொடங்கச் சொல்கிறார்.  

மொத்தம் 13 கட்டுரைகளாக இந்த புத்தகம் பிரித்து இருக்கிறது. ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு முக்கியமான கருத்தினை சொல்லிச்செல்கிறார் ஆசிரியர்.

ஒருவன் வாழ்வில் முன்னேற விரும்புகிறவனாக இருந்தால் அவன் எப்போது முன்னோக்கிச் செல்வதையே குறிக்கோளாக வைத்திருக்க வேண்டும் என்கிறார்.

நீங்கள் அடைய வேண்டிய இலக்கினை நிர்ணயம் செய்யுங்கள் அந்த இலக்கு ஒன்றாகவே இருக்க வேண்டும் அப்படி ஒரே இலக்கினை தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் மிகவும் கவனமாகச் செயல்படவேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்கு உங்களுக்கானது மற்றும் நீங்கள் தான் அடையப் போகிறீர்கள் அதனால் நிர்ணயிக்கும் இலக்கானது உங்களுக்கானதாக இருக்கவேண்டும் என்கிறார்.

நமது வாழ்க்கையின் குணநலன்கள் தான் நம் வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கும் அதற்காக நல்ல குணநலன்களைக் கொண்டிருக்கவேண்டும் அதாவது நம்முடைய நிழல் எப்படி இருக்கிறது அதுபோலவே தான் நமது குணங்களைப் பொறுத்து நமது வளர்ச்சியும் நிழலாகவே தொடரும் என்கிறார்.

குறைந்தது நூறு நண்பர்களாவது இருக்கவேண்டும் அதுவும் நமக்குச் சுற்றியுள்ள எல்லாவகையான பிரிவுகளையும் குறைத்து 10 பேரையாவது சம்பாதித்து வையுங்கள் என்கிறார். 

முன்னேற்றம் என்பது ஒருமுறை மரத்தில் ஏறி இறங்குவதேயல்ல அது நிரந்தரமாக உன்னிடம் இருக்க வேண்டும் அதற்காக நீங்கள் செய்யும் முயற்சியும் அந்த நிரந்தர வளர்ச்சியினை அடைவதற்காகவே  இருக்கவேண்டும் என்கிறார்.

வாழ்வில் வெற்றி தோல்வி மாறிமாறி வரும் ஒரு நிகழ்வுதான் ஆனால் அவற்றை எப்படி நிரந்தர வெற்றியாகத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதை மிக அழகாகச் சொல்கிறார்.

முக்கியமா மூன்று பண்புகள் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

தீர்மானமான முடிவு 
இடைவிடாத பெரு முயற்சி 
கடினமான உழைப்பு 

தெளிவான முடிவும் அதற்குத் தேவையான திறமையினை வளர்த்துக்கொள்வதும் கூடவே விடாது உழைக்கும் பக்குவமும் ஒருவனுக்குக் கிடைத்து விட்டால் அவன் வளர்ச்சியில் தடையேதுமில்லை என்கிறார்.

எப்படி முன்னேற மூன்று பண்புகள் வேண்டுமோ அதுபோலவே வேண்டாத மூன்று தடையாக இருக்கும் பண்புகளைப் பட்டியலிட்டுச் சொல்கிறார்.

நாவடக்கம் 
வீண் விவாதங்கள் 
வீண் அரட்டை   

எனத் தேவையில்லாத பண்புகளில் நமது நேரத்தினை விரயம் செய்வதைவிட ஆக்கப் பூர்வமான காரியங்களுக்குப் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம் என்கிறார்.

நாம் வளர வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும் அந்த குறைந்த பட்ச ஆசைதான் ஒவ்வொருவரையும் உந்தி செல்கிறது அந்த ஆசைதான் சுறுசுறுப்பாக இயங்க நம்மை ஊக்கப்படுத்துகிறது.

இறுதியாக அமெரிக்காவிலுள்ள காலப் என்ற நிறுவனம் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில் கிடைத்த சில விவரங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். 

1. நடைமுறை அறிவு,
2. தனது துறையின் மீதான அறிவு,
3. தன்னம்பிக்கை,
4. புத்திசாலித்தனம்  மற்றும்
5. நீங்கள் எடுத்த செயலினை முடிக்கும் திறன் 

என மேற்சொல்லப்பட்ட ஐந்து விதமான குணங்களும் முக்கியமாக ஒருவனின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்.

நல்லதொரு தன்னம்பிக்கை தரும் புத்தகம், இந்த புத்தகத்தில் இறுதியில் வெற்றிபெற்றவர்களின் தன்னம்பிக்கையும் அவர்களின் விடாமுயற்சியும் இடம்பெறுகிறது.

ஒரு முறை வாசித்துப் பார்க்கலாம்.

அன்புடன்,
தேவேந்திரன் ராமையன் 
28 ஆகஸ்ட் 2021

No comments:

Post a Comment