Monday 19 July 2021

எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை - கவிதை தொகுப்பு - வாசிப்பனுபவம்

 எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை 

கவிதை தொகுப்பு 

ஆசிரியர் : சி மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 50

பக்கங்கள் 124


"வாசிப்பை நேசிப்போம்" குழுவில் நடக்கும் மாதம் (ஜூலை 2021) ஒரு எழுத்தாளர் என்ற போட்டிக்கு இந்த மாதம் எழுத்தாளர் "சி மோகன்" அவர்களின் புத்தகங்கள் வாசித்து, வாசித்த அனுபவங்களைக் குழுவில்  பகிர வேண்டும் என்ற போட்டி. இந்த போட்டிக்காக நான் வாசித்த ஒன்பதாவது  புத்தகம் தான் "எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை". இந்த இ - புத்தகம்,  ஆசிரியர் சி. மோகன் அவர்களின் சுயசித்திர கவிதைகளின் தொகுப்பே ஆகும்.   கிண்டிலில் கடந்த மாதம் இலவசமாக அறிவித்ததில் தரவிறக்கம்  செய்தது.

கவிதைகள் என்பது ஒரு விதமான உணர்வுகளை வார்த்தைகளைக் கோர்த்து அழகான ஒரு ஆரமாகக் கொடுப்பது தான் ஒரு கவிஞனின் விந்தை. அவ்வழியில் இந்த தொகுப்பு ஆசிரியர் சி மோகனின் கவிதைகள் அனைத்தும் அவரின் வாழ்வின் அனுபவங்களைச் சார்ந்தே இருக்கிறது என்று தனது முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.

ஆசிரியரின் கூற்றுப்படி கவிதைகள் ஒரு கவிஞனின் அக உலகின் ரகசியத்தினை வெளிப்படுத்தும் சாதகமாகவே இருக்கிறது. இந்த தொகுப்பில் மொத்தம் 69  கவிதைகள் இருக்கிறது. ஒவ்வொரு கவிதையும் ஒரு உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

இந்த தொகுப்பில் நான் ரசித்து வியந்த ரசித்த சில கவிதைகளை இங்கே குறிப்பிட ஆசைப்பட்டுக் குறிப்பிடுகிறேன்.


" மரணத்திடம் ஒரு விண்ணப்பம்" 

மரணமே என்பொருட்டு நீ எவ்வித சிரமும் கொள்ள வேண்டாம் என் இறப்பின் பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன். 

இன்னுமொரு சிந்தனை மிச்சமிருக்கிறதென்றோ இன்னுமொரு சொல்லல் பாக்கியிருக்கிறதென்றோ இன்னுமொரு படைப்பு காத்திருக்கிறதென்றோ இன்னுமொரு காதல் வேண்டியிருக்கிறதென்றோ இன்னுமொரு களங்கம் அவசியமென்றோ இன்னுமொரு தண்டனை தேவையென்றோ இன்னுமொரு மூச்சு அத்தியாவசியமென்றோ என் மரணத்தின் தேர்வை தள்ளி வைக்காதிருக்க நிச்சயம் பிரயாசைப்படுவேன்.

 ஒருவேளை நான் காலம் தாழ்த்துவதாக உனக்குத் தோன்ற நேரிட்டால் உன் வழிகளிலேயே ஆகக் கொடூரமானதை தண்டனையாகப் பெற சித்தமாயிருக்கிறேன். எனினும் சொல்கிறேன் உன் முடிவுக்கு ஒரு வினாடி முந்தியாவது சுதாரித்துக்கொண்டு விடை பெற்றிருப்பேன்.

மரணத்திடம் விண்ணப்பம் கூறுவதே மிக நுட்பமாக அந்த ஆசையின் அனைத்தையும் அறிவித்து விடுக்கும் கோரிக்கை அருமையானது.  


 எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை 

என் வசிப்பிடம் வீடாக இருந்தபோதிலும் அறையென்றே அழைக்கிறார்கள் நண்பர்கள் அவ்வப்போது நான் திருத்தினாலும் அப்போதைக்கு வருத்தம் தெரிவித்து அதன் பிறகும் அவ்வாறே அழைக்கிறார்கள். 

சுபாவமான பேச்சில் நானும் அறை என்றே சொல்கிறேன் தனித்து வாழும் ஆணின் இருப்பிடம் அறைதான் போலும். கண்காணிப்புகளாலும் கட்டுப்பாடுகளாலும் கட்டமைக்கப்பட்டது வீடெனில் சேட்டைகளும் சோம்பலும் சொகுசாய் குடியிருக்குமிடம் அறை. கொஞ்சம் அலங்கோலமானது அறை எனில் சற்றே துலக்கமானது வீடு. ஓர் அறையின் சுகந்தத்தை சுவாசித்தபடியே என் வசிப்பிடத்தை வீடாகப் பாவித்து நேசத்துடன் குடியிருக்கிறேன் நான். வீட்டுக்குள் கட்டுண்டு கிடக்கும் தங்கள் போக்கிரி ஆசைகளுக்கு வசதியாக என் வசிப்பிடத்தை அறையென்றே அழைக்கிறார்கள் நண்பர்கள்.  

ஒவ்வொரு நண்பர்களும் எதார்த்தமாக விடுக்கும் சில வார்த்தைகளில் சில நேரங்களில் நம்மை அறியாமலே நமக்குள் எழும் சில கேள்விகள் அனைத்தையும் கேட்க முடியாத நிலையில் தான் நாம் இருப்போம் என்பது உண்மையே. அப்படிச் சொல்லமுடியாத  வலிகளை வரிகளாக மாற்றுவதே கவிஞனின் திறமை

மாயம் 

மூட்டமிடுகிறது மேகம் கவிகிறது இருள் பொழிகிறது மழை. 

வனமாகிறது கொல்லை நட்சத்திரங்களாகின்றன பூக்கள் 

கீதமிசைக்கின்றன இலைகள். 

சின்னஞ் சிறு சிட்டுக் குருவியாய் கூவித் திரிகிறேன் நான்.

  மனக் காடு

சின்னஞ் சிறு வயதில் என்னுள் செடி ஒன்றைப் பெரும் கனவோடு நட்டு வைத்தார் அப்பா. 

தினம் தினம் தவறாது பெரும் கனிவோடு நீரூற்றி அழகு பார்த்தார் அம்மா.

 பின்னாளில் அது ஓர் அற்புத வனமாகுமேன இறுமாந்திருந்தார் அப்பா 

அழகிய தோட்டமாகுமென ஆனந்தப்பட்டிருந்தார் அம்மா. 

கால வெக்கையில் பட்டுப் போயின 

அப்பாவின் கனவும் அம்மாவின் கனிவும். 

எனினும் தான் தோன்றியாய் வளர்ந்து செழித்து என்னுள் மண்டிக்கிடக்கிறது விஷப் பூச்சிகள் ஊர்ந்து திரியும் மாபெரும் முட்புதர்க் காடு.

மகத்துவம் 

என் வீட்டுக் கொல்லையில் கழிவறைச் சுவர் ஒட்டி 

எவ்விதக் கவனிப்புமின்றி 

எவ்விதக் கவனமுமின்றி 

காட்டுச் செடியென மண்டிக் கிடக்கின்றன 

மகத்துவமிக்க துளசிச் செடிகள்.

விடுபட்ட அழைப்பு 

‘விடுபட்ட அழைப்பு’ என்றொரு தகவலாக உன் செல்பேசியில் பதிவாகிறது 

என் பரிதவிப்பு. விடுபட்டதல்ல புறக்கணிக்கப்பட்டது 

என்பதறியா யந்திரக் குறைபாட்டோடுதான் இருக்கிறது 

என் மன அமைப்பும்.

நாம் ஒருவரை அழைத்தும் அவர் அதை ஏற்கவில்லை என்று தெரிந்தும் தெரியாததுபோல மனம் மன்றாடுமே அது ஒரு விதமான தவிப்பு அந்த தவிப்பை  கவிதையாகத் தவழ விடுவதே ஒரு ரகசியம் தான். 


நல்ல அருமையான கவிதை வரிகளை ரசித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில் மிக்க சந்தோசம்.

அன்புடன் 

தேவேந்திரன் ராமையன்  

No comments:

Post a Comment