Friday 2 July 2021

ஜி. நாகராஜன் எழுத்தும் வாழ்வும் -வாசிப்பனுவம்

ஜி. நாகராஜன் எழுத்தும் வாழ்வும் 

(வாசிப்பனுவம்) 

சி. மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய்   50

பக்கங்கள் 117



எழுத்தாளர் சி. மோகன் அவர்கள், தனது ஆரம்பகாலத்தில் முதலில் சந்தித்த  ஒரு ஆசிரியர், பின்னர் நெருக்கமான  நண்பர், மற்றும்   குரு என பல்வேறு பரிணாமங்களில் தொடர்ந்த நட்பிற்கு பாத்திரமான  எழுத்தாளர் ஜி.  நாகராஜன் அவர்களுடைய  நினைவலைகளை ஒரு தொகுப்பாகக் கொடுத்திருக்கிறார்.

சமீபத்தில் எழுத்தாளர் சி மோகன் அவர்கள் தனது 25 மின்னூல்களை இலவசமாக வழங்கினார். அவற்றில் முதலாவதாக வந்த இந்த புத்தகம் வாசிக்க ஆரம்பித்தேன், தொடக்கம் முதல் அடுத்து அடுத்து என்ன என்று ஆவலைத் தூண்டும் விதமாக இந்த புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது.   ஜி. நாகராஜன் அவர்களைப் பற்றிய முழு விவரங்களும் அடங்கிய அருமையான ஒரு தொகுப்பு தான் இந்த புத்தகம்.

ஜி நாகராஜன் அவர்கள் ஆரம்பத்தில் பணியாற்றிய ஆசிரியர் பணியாகட்டும், ராணுவத்தில் செய்த பணியாகட்டும், தனியாக நடத்திய டியூஷன் வகுப்பாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் தனது பங்கினை சிறப்பாகவே செய்து இருக்கிறார். கொள்கை ரீதியாக ஒரு கட்சியிலும் தனது பங்கினை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார்.

இவரின் ஆரம்பக்கால எழுத்துகள்  பிரபலமாகாமலிருந்திருக்கிறது. இவரது ஒரு சில எழுத்துக்களை மட்டும் முதலில் பித்தன் பட்டறை என்ற பதிப்பகத்தின் மூலம் அவரே வெளியிட்டார். குறிப்பாகக் குறத்தி முடுக்கு, நாளை மற்றுமொரு நாளே மற்றும் அதிக சிறுகதைகள் என இவரின் படைப்புகள் ஏராளம். இவரின் படைப்புகள்  எல்லாம் வாழ்வின் விளிம்பில் இருக்கும் மனிதர்களைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய எழுத்துக்கள். இந்த நூல்களே இவரின் மனோநிலையினை தெளிவாக எடுத்துக்காட்டும். பின்னர் இவரின் நூல்கள் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இவரின் நூல்கள் அவரின் வாழ்நாளில் பிரபலமாகாமல் அவர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகே பெருமளவு மக்களிடம் சென்று சேர்ந்தது அதுமட்டுமல்லாமல் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் இவரின் படைப்புகள் மொழிபெயர்க்கவும் பட்டது.

எனக்கு சமீபத்தில் இவரின் "நாளை மற்றுமொரு நாளே" நூலினை வாசிக்க நேர்ந்தது. மிக அழகாகக் கொண்டு சென்றிருப்பார் அந்த கதையினை. மற்ற நூல்களை வாசிக்க ஆவலாக இருக்கிறது.

ஒரு பெரிய ஆளுமை தனது வாழ்நாளில் எப்படிச் சறுக்கிப் போனார் என்பதை மிகத் தெளிவாக எழுத்தாளர் சி மோகன் அவர்கள் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அவர் தடம் மாறாமல் இருந்திருந்தால் நமக்கு எண்ணற்ற பொக்கிஷங்களைத் தனது எழுத்துக்கள்  வழியே கொடுத்திருப்பாரோ என்னவோ. 

எழுத்தாளர் சி மோகன் குறிப்பிடும் அவரின் மரணச் செய்தியும் அந்த நிகழ்வு நடந்த விதமும் அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட வெகு சிலரே என்பதும் மனதை நெருடுகிறது.

ஆரம்பக் காலத்தில் அவர், கம்பீர தோற்றமும், முறுக்கு மீசையும் மிடுக்கான உடையும் என வசீகரமான ஒரு தோற்றம் கொண்டவராக வலம் வந்திருக்கிறார். 

சி. மோகன் அவர்கள், முதலில் ஜி நாகராஜன் அவர்களை  தனது 17 வயதில், கற்பிக்கும் ஒரு ஆசிரியராகத்தான் சந்திருக்கிறார். போகப் போக ஒரு நண்ப ராகவும் இறுதிக்காலத்தில் அவரின் மரண படுக்கை வரை கூடவே இருந்திருக்கிறார். எல்லா பரிணாமங்களிலும் அவரை நன்கு தெரிந்தவர் என்ற முறையில் இவரது தொகுப்பு மிகத் தெளிவாகவும் விவரமாகவும் இருக்கிறது.

ஜி.நாகராஜன் அவர்களைப் பற்றி தெரிந்தது கொள்ளவேண்டுமெனில் இந்த புத்தகத்தை ஒரு முறை வாசித்துப்பாருங்கள். எண்ணற்ற தகவல்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது இந்த புத்தகம்.

இந்த விவரமான தொகுப்பினை கொடுத்த எழுத்தாளர் சி மோகன் அவர்களுக்கு எனது நன்றி. 

அன்புடன்,

தேவேந்திரன்  ராமையன்

03 ஜூலை 2021                                     


No comments:

Post a Comment