Friday, 11 September 2020

மணிபல்லவம் - வாசிப்பு அனுபவம்

மணிபல்லவம் - வாசிப்பு அனுபவம் 


ஆசிரியர் : நா. பார்த்தசாரதி   


இது ஒரு வரலாற்று (சரித்திர) நாவல்





மணிபல்லவம் நூலினை படிக்கும் போது நான் படித்த பூம்புகார் கலை கல்லூரிதான் நினைவிற்கு வருகிறது.

ஆசிரியர், காவேரி பூம்பட்டினத்தினை மிக அழகாகவும் பல வருடங்களுக்கு முன்பே ஒரு பெரிய வாணிப நகராகவும் செல்வ செழிப்புள்ள பட்டினமாகவும்  மிக அழகாக வர்ணித்திருக்கிறார். 

இந்த நூலில் கதாநாயகன் இளம்குமாரனையம், கதையின் நாயகிகளாக சுரமஞ்சரியும் மற்றும் முல்லையும்  இவர்கள் கூடவே எட்டி பட்டம் பெற்ற வெல்வந்தராக சுரமஞ்சரியின் தந்தையும் அவரின் நண்பர் ஒற்றை கண் நகைவேழம்பரும், இளம்குமாரனை வளர்த்தெடுக்கும் அருச்செல்வ முனிவர், வீர தீரராக திகழும் நீலநாக மறவரும், முல்லையின் தந்தையாக வீரசோழியா வளநாடுடையாரும், முல்லையின் சகோதரனும் கதக்கண்ணனும் இவர்களுக்கு மத்தியில் ஓவியன் மணி மார்பனும் சுரமஞ்சரியின் சகோதரியான வானவல்லியும் மற்றும் சுரமஞ்சரியின் தோழி வசந்தமலையும் கதை முழுவதும் நம் கூடவே பயணித்துக்கொண்டே வருகின்றனர். கதையின் இறுதி பாகத்தில் மூவர்களை அறிமுகப்படுகிறார் அவர்களின் கதையின் இறுதி பாகத்தில் வந்தாலும் இந்த கதையின் ஆதி அந்தமே அவர்கள் தான் என்பது இறுதி பகுதி வாசித்த பின்னர் தான் தெரியவரும் அளவிற்கு மிக சாமர்த்திய மாகவும் அழகாகவும்  நகர்த்தி இருப்பது இந்த கதையின் பெரிய பலம்.  

கதையின் களமாக எழில் கொஞ்சும் காவேரி பூம்பட்டினம் முக்கியமாக திகழ்கிறது என்றாலும் மணிபல்லவம் தீவு தான் கதையின் முக்கிய இடமாக திகழ்கிறது. காவேரி பூம்பட்டினத்தின் இன்றளவும் நடக்கும் இந்திர விழாவில் தான் கதை ஆரம்பிக்கிறது.

பெரு வீரராகிய நீலநாக மறவர் இளங்குமரனிடம் சிரித்துப் பேசிப் பழகுவதும் வெளிப்படையாக அன்பு செலுத்துவதும் மற்றவர்களுக்கு வியப்பாயிருந்ததற்குக் காரணம் உண்டு ஆனால் இளங்குமரன் அழகே உருவானதாகவும் மட்டற்ற வீரரானாகவும் வளம் வந்த காலம் அப்போது நடந்த இந்திர விழாவில் சக்கரவாள கோட்டத்தின் அருகே நடந்த மறவர் போட்டியில் பங்குகொண்டு எதிரியினை பந்தாடிய அழகையும் அவனது அழகில் மயங்கி அவனுக்கு தனது மணிமாலையினை அன்பாக கொடுக்க முயன்றாள் சுயமஞ்சரி ஆனால் சற்றும் அவள் எதிர்பாராத வகையில் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான் இளங்குமரன்.

தனது பரிசினை ஏற்று கொள்ளாததால் கோவம் கொண்ட சுரமஞ்சரி அவனது ஓவியத்தினை எழுதிக்கொடுக்க ஓவியன் மணிமார்பனிடம் வேண்டினாள் அதற்காக ஓவியன் மணிமார்பன் இளம்குமாரினிடம் வேண்டிக்கொண்டதற்காக இளங்குமரன் பாண்டிய நாட்டில் இருந்த ஓவியனின் வருமானத்திற்காக ஒரு பேருதவியாக இருக்குமென்று இணங்கினான் இதற்காக அவன் சரமஞ்சரி வீட்டிற்கே போகவேண்டிய சூழல் உருவாகிறது அப்போதுதான் சுரமஞ்சரியின் தந்தை இளம்குமாரனை பார்க்க நேரிடுகிறது.

இளம்குமாரனை சந்தித்த சுரமஞ்சரியின் தந்தையும் அவரது நண்பனான நகைவேழம்பரும்  அவனை ஒரு ஜென்ம எதிரியாக பார்த்தது அவனுக்கு சற்றே வியப்பாக இருந்தது.

இளம்குரனுக்கு தனது பிறப்பை ரகசியம் ஏதும் தெரியாமலே  சிறுவயதிலிருந்தே அருச்செல்வ முனிவரின் தவச்சாலையில் தான் வளர்ந்து வருகிறான் ஆனால் முனிவர் அவனை ஒரு வீரனாக வேண்டும் என்று நீல நாக மறவரின் ஆலமர முற்றத்தில் இருக்கும் படைக்கல சாலைக்கு வீர தீர  பயிற்சிக்கு அனுப்பிவிடுகிறார்  அபப்டியே அவனும் ஒப்பற்ற ஒரு வீரனாக வளம் வருகிறான்.  இதற்கிடையே பெருசெல்வரும் நகைவேழம்பரும் சேர்ந்து அருள்செல்வ முனிவரையும் இளம்குமாரனையும் தீர்த்துக்கட்ட ஆட்கள் அனுப்பிறார்கள் ஆனால் அந்த சமயம் நண்பன கதக்கண்ணன் அவ்விடம் வருகவே அந்த திட்டம் அடித்து நொறுக்கப்பட்டு முனியவரையும் இளம்குமாரனையும் தனது வீட்டிற்கே அழைத்து வந்து விடுகிறான் ஆனால் மறுநாள் அவர்கள் அருள்செல்வ முனிவரின் தவ சாலைக்கு தீ வைக்க திட்டமிடுகின்றனர் இதனை அறிந்த முனிவர் அவர்களுக்கு முன்னரே தவ சாலைக்கு தீ வைத்துவிட்டு வளநாடுடையாரின் உதவியோடு மணிபல்லவம் தீவிற்கு இரவோடு இரவாக பயணித்து விடுகிறார் ஆனால் வளநாடுடையரிடம் ஒரு வாக்கு வாங்கிக்கொள்கிறார் அதாவது உலகுக்கு நான் தீயில் இறந்தாகவே இருக்கட்டும் என்றும் கண்டிப்பாக அடுத்த இளம்குமாரனை மணிபல்லவத்திற்கு அழைத்து வரவேண்டும் என்றும்.   

இரண்டாம் பாகத்தில் திருநாங்கூருக்கு அடிகளார் தமது மாணவனான நீல நாக மற்றவரிடம் இளம்குமாரனை என்னிடம் மறக்காமல் அடுத்த முறை என்னை காண வரும்போது அழைத்து வரவேண்டும் என வேண்டிக்கொள்கிறார் தனது ஆசானின் ஆணைக்கிணங்க இளம்குமாரனை அங்கு அழைத்து செல்கிறார். இதுவரையில் ஒரு முரடான திரிந்த இளம்குமார் இந்த தவச்சாலையில் அறிவு மயமாக வளர்கிறான் அவன் இங்கு ஆன்மிகத்தில் அவன் மனம் மலர்கிறது; வளர்கிறது; மணம் விரிக்கிறது. மனிதர்களுக்கு உடலின் செழுமையாலும், தோலின் மினுமினுப்பாலும், அவயவங்களின் அழகாலும் வருகின்ற கவர்ச்சி நிலையற்றது, ஆனால் அறிவினால் வருகிற அழகு நிலையானது; உயர்ந்தது; இணையற்றது. ஏற்கெனவே பேரழகனான இளங்குமரன் இப்போது அறிவின் அழியா அழகையும் எய்தப் போகிறான். அந்த அறிவழகின் மலர்ச்சியில் அவன் ஆனால் அத்தகைய முழுமையான ஆசிரியப் பெருந்தகை ஒருவரை நேற்று வரை அவன் சந்திக்க நேர்ந்ததில்லை. நீலநாகமறவர் அவனுக்குப் போர்த்துறைக் கலைகளைக் கற்பித்த ஆசிரியரானாலும் அவரிடம் நாங்கூர் அடிகளிடமிருந்ததைப் போன்ற மென்மையையும் குழந்தையுள்ளத்தையும் கண்டு இளங்குமரன் நல்லதொரு சிறந்த மாணவனாக விளங்குகிறான் அதனிடையே விசாகை என்னும் ஒரு பெண் துறவி உலகத்தார் இன்பத்திற்காக தனது ஆடம்பர வாழ்வினை துறந்து இப்போது துறவியாக இருப்பதும் இந்த பாகத்தில் சிறப்பாக இருக்கிறது.

மூன்றாம் பாகத்தில்  இளங்குமரன் ஞான அறிவுபெற்று பூம்புகார் நகரில் நடைபெறும் இந்திர விழாவில் கலந்து கொண்டு அறிவு போரில் கலந்து கொண்டு எதிராளிகள் எல்லோரையும் அறிவினால் வீழ்த்தி பெருமையடைந்தான் ஆனாலும் அறிவின் முதிர்ச்சியில் இளம்குமாரன் எந்த வித செருக்கும் இல்லாமல் இருந்தது எல்லோரிடமும் ஒரு வியப்பாக இருந்தது. இந்த  இந்திர விழா நேரத்தில் சொற்போரில் கலந்து கொண்டிருந்த இளம்குமாரனை பார்த்த சுரமஞ்சரியின் தந்தையும் அவரது நண்பர் நகை வேழம்பரும் இந்த முறை ஒரு புதிய யுத்தியை கொண்டு சுரமஞ்சரிக்கே தெரியாமல் அவளிடம் பூ கூடைகளை கொடுத்து அதனுள் பாம்புகளை மறைத்து விட்டு இளம்குமாரனை அழிக்க திட்டம் தீட்டினர் ஆனால் இதிலும் அவன் தப்பித்து விடுகிறான்.

நான்காம் பருவத்தில், இளம்குமாரனை எப்படியோ சமாதன படுத்தி மணிபல்லவத்திற்கு அழைத்து கொண்டு செல்கிறார் ஆனால் அருச்செல்வ முனிவர் உயிருடன் இருக்கிறார் என்பது வளநாடுடையரை தவிர வேறு யாருக்கும் தெரியாத ஒரு விஷயமாக தான் இருக்கிறது.   இளங்குமரன் மற்றும் வளநாடுடையார், மணிமார்பன் அவனது துணைவி பதுமை எல்லோரும் கப்பல் ஏறி மணிபல்லவத்திற்கு செல்வதை கண்ட நகைவேழம்பர் அந்த கப்பலினை தொடர்ந்து சென்று எப்படியாவது இளம்குமாரனை அழிக்க வேண்டும் என்று பின்தொடர்கிறார் ஆனால் இந்த முறையும் தோல்வியுடனே திருப்புகிறார். இந்த தோல்வியின் எதிரொலியாக நகைவேழம்பருக்கும் பெருநிதி செல்வருக்கும் அவ்வப்போது வந்த போகும் கருத்து வேறுபாடும்   சண்டையும் உச்சத்திற்கு சென்று இறுதியில் நகைவேழம்பரையும் தீர்த்து கட்டிவிடுகிறார்.

இறுதி பருவத்தில் அமுதசாகரன் தன் தலைவராகிய பெருவணிகருக்கு வாய்க்கப் போகும் மங்கல மனையாளைக் காண்பதற்கு ஆவல் கொண்டான். கையில் மாலையேந்திக் குனிந்த தலை நிமிராமல் தோழிகளோடு அந்தக் கூடத்துக்குள் நுழைந்த பெண்ணைப் பார்த்தபோது அமுதசாகரனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. 'சற்று முன் பூம்பொழிலில் பந்தாடிக் கொண்டிருந்த அந்தப் பெண்தானா மருதி?' என்று மாலையை ஏந்திக்கொண்டு வரும் மற்றொரு பூமாலையாக அவள் வந்து கொண்டிருக்கும் கோலத்தை நோக்கி அமுதசாகரன் வியந்தான். அவன் வியப்பை அதிர்ச்சியாகவே மாற்றும் எதிர்பாராத காரியத்தைச் செய்தாள் அந்தப் பெண். அருகில் வந்ததும் தைரியமாக நிமிர்ந்து எல்லாரையும் ஏறிட்டுப் பார்த்த பின்பு, அந்த ஏழைக்கவி அமுதசாகரனின் கழுத்தில் மாலையிட்டுவிட்டுச் சிரித்துக்கொண்டே சென்றாள். இப்படியாக இந்த தம்பதிகளின் ஒரே மகன் தான் இந்த இளங்குமரன், தன்னை புறம்தள்ளி விட்டு தனது கவியை மணந்ததால் சினம் கொண்ட பெருநிதி செல்வர் அவர்கள் இருவரையும் கொன்று விட்டு பின்னர் மருதியின் சகோதரனான காலாந்தகரையும் கொன்று தனது பகைமையை தீர்த்துக்கொண்ட பெருநிதி செல்வரைதான் இளங்குமரன் தனது ஞானத்தால் வென்று இறுதியில் சுரமஞ்சரியிடம் தோற்று ஞானரம் விட்டு இல்லறம் தொடங்கினான். 

சோழ நாட்டு நகரங்களில் எல்லாம் பெருநகரமான பூம்புகாரின் செல்வச் செழிப்புமிக்க வாழ்க்கையில் இன்னும் எத்தனையோ இந்திர விழாக்களை அறிவித்து வள்ளுவ முதுமகன் நகருக்கு முரசறைவான்! இன்னும் எத்தனையோ ஆடிப்பெருக்குகளுக்குக் காவிரியில் வெள்ளம் வரும்; தணியும். மழை பெய்யும். வெயில் காயும். பருவ காலங்களால் விளையும் புதுப்புது மாறுதல்கள் காவிரிக்கரை வாழ்க்கையில் எத்துணை எத்துணையோ நிகழ்ச்சிகளைப் படைக்கும். சமயவாதிகளும் ஞானிகளும் சந்திப்பார்கள், அளவளாவுவார்கள், பிரிவார்கள். அறிவும் செல்வமும் ஓங்கி வளரும். அந்தக் கோநகரத்துக் கவிகளின் நாவில் புதுப்புதுக் கவிதைகள் பிறக்கும். இளம் பிள்ளைகள் பலர் தோன்று வார்கள். மூத்துத் தளர்ந்தவர்கள். பலர் இறப்பார்கள். அரசர்கள் மாறுவார்கள். அரசாட்சி மாறும், ஏறும், தாழும். வாணிகருடைய வாழ்க்கை வளரும், தளரும், மாபெரும் துறைமுகத்தில் கப்பல்கள் வரும், போகும், நிற்கும், மிதக்கும்.  ஆசிரியரின் இந்த மன ஆசைகள் எல்லாம் இப்போது இல்லாமல் போனதே உண்மை அப்படி சிறப்பாக இருந்த பூம்புகார் பெரு வணிக துறைமுகம் இப்போது வெறும் பூம்புகார் என்றே இருக்கிறது. இப்படி எல்லாம் நடந்ததின் ஒரு சுவடு கூட இல்லையே .......

நன்றி 
வாசிப்பு அனுபவங்களுடன் 
தேவேந்திரன் ராமையன்  








 
       

Saturday, 5 September 2020

ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் !

 ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் ! 


ஒவ்வொரு தனி மனிதனும் எதாவது ஒரு விதத்தில் பல ஆசிரியர்களை கொண்டுதான் முன்னேறி இருப்பான் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது. 

வாழ்வின் முதல் நாள் தொடங்கி இன்றுவரை கற்றுக்  கொடுத்து கொண்டிருக்கும் அம்மா அப்பாவிற்கு முதல் நன்றி. 

அப்படி நான் கடந்து வந்த பாதையில் என்னை மெருகூட்டிய ஆசிரியர்களை நினைவுகூரவே  இந்த பதிவினை இடுகிறேன்.

நான் எனது தொடக்க பள்ளி படிப்பினை செண்பகச்சேரி கிராமத்தில் இருக்கும் அரசினர் ஆரம்ப தொடக்க பள்ளியில்தான் ஆரம்பித்தேன். இந்த பள்ளியில் என்ன ஒரு மாணவனாக செதுக்கியது  இரண்டு ஆசிரியர்கள். அவர்கள்தான்  திரு. வ. கலியமூர்த்தி மற்றும் திரு. கணேசன் அவர்கள்.

பின்னர் திருமங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் எனது படிப்பினை ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்தேன். இங்கு எனக்கு அறிவு புகட்டிய ஆசிரியர்கள்  திரு. ஆறுமுகம் (ஆங்கிலம்), திரு . வே. சம்பந்தம் (கணக்கு), திரு. நடராசர் (தமிழ்) திரு  பி.சௌந்தரராஜன் (அறிவியல்), திரு. பூலோகம் (வரலாறு-புவியியல்) , திரு ஜி.முருகேசன் (GM)  மற்றும்   TR கலியமூர்த்தி (TRK), ஆகியோர்களை  இந்த  நாளில்  நினைவுகூர்வதில்  மகிழ்ச்சி.

தொடர்ந்து குத்தாலம் அரசினர் மேல்நிலை பள்ளியில் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தேன். அங்கே எனது வகுப்பாசிரியர் பி.கருணாகரன் - அரசியல் பாடம், தலைமை ஆசிரியர் சம்பந்தம், கணக்கு ஆசிரியர் வி. சண்முகசுந்தரம் (VSS). கணக்கு பதிவியல் மற்றும் வணிகவியல் ஆசிரியர் அமரேசன் ஆகியோர்களையும்  இந்த  நாளில்  வணங்குகிறேன்.  

பூம்புகார் கலை கல்லூரியிலே, வணிகவியல்  இளங்கலை பயின்ற போது வேறொரு விதமாக என்னை உருவாக்கிய  ஆசிரியர்கள் திரு. சக்கரைவேல் (கல்லூரி முதல்வர்), வணிகவியல் துறை தலைவர், திரு எ.பழனிவேல், விரிவுரையாளர்கள் திரு. கணேசன், திரு. பன்னிர்செல்வம், திரு. கிருஷ்ணமூர்த்தி ,    திரு. ராஜாராம், திரு. செல்வராஜ், திரு. ராஜராஜன் மற்றும் அலமேலு அக்கா ஆகியோர்களுக்கு  வணக்கம்.

தினோராம் வகுப்பு தொட்டு கல்லூரி காலம் எனக்கு  பயிற்றுவித்த  ஒவ்வொரு  ஆசிரியரும் ஒரு விதத்தில்  இன்று  என்னை  இன்று  இருக்கும் நானாக  செதுக்கி  இருக்கிறார்கள்.  என்னுள்   ஒரு ஆடிட்டர் ஆக வேண்டும் என்று விதையினை விதைத்த ஆசிரியர் குத்தாலம் சீனிவாசன் அவர்களுக்கும் என்றென்றும்  என்னுடைய  நன்றிகளும்  வணக்கங்களும்.

ஆடிட்டர் படிப்பினை கற்று கொடுத்த திரு. ஜி. சூரியநாராயணன் அவர்களுக்கும் நன்றிகளும்  வணக்கங்களும்.  

எல்லாவற்றுக்கும்  மேலாக வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் எனக்கு க்கு எதாவது ஒன்றை கற்று கொடுக்கும் காலத்திற்கும் ஆசிரியர்  தின  வணக்கங்கள்.  

 

நன்றியுடன் ராம. தேவேந்திரன்         



   

Thursday, 3 September 2020

சாயாவனம் - வாசிப்பு அனுபவம்

நூல் : சாயாவனம் 

ஆசிரியர் : அமரர் சா. கந்தசாமி  



இந்த நூலினை வாசிக்கும் போது நான் பிறந்து வளர்ந்த மண்ணில் மீண்டும்  ஒரு நடை பயணம் போனது போல ஒரு உணர்வு வந்தது என்றால் அது மிகையாகாது!

கதையின் களமாக இருக்கும் மாங்குடி, மல்லிகை கொல்லை, சீர்காழி , வைத்தீஸ்வரன் கோவில், குத்தாலம், கூறைநாடு,  மாதானம், மாயவரம் மற்றும் கும்மோணம் என சுற்றி உள்ள அனைத்து ஊர்களும் நான் சுற்றி திரிந்த ஊர்களே என்பதால் இந்த கதையின் மீது ஒரு அதீத ஆர்வம்.  ஆனால் கதையில் வரும் முக்கியமான இடம் சாயாவனம் (சீர்காழி - பூம்புகார் சாலையில் இருக்கும் ஒரு சிவன் ஆலயத்தின் ஊர் பெயர் - மயிலாடுதுறையிலிருந்து 20 கிலோ மீட்டர்).

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பான காலத்தில் இந்த கதை தொடங்கிறது, கதையின் நாயகன் சிதம்பரம் தனது சிறுவயதில் தாயுடன் பிழைப்பதற்காக இலங்கை சென்று வெகுநாட்களுக்கு பிறகு  இப்போது ஒற்றை ஆளாய் திரும்பி தனது தாய் மாமன் சிவனாண்டி தேவர் ஊரான சாயாவனத்துக்கு வருகிறான்.  வந்தபின்னர் அந்த ஊரின் பெரிய நிலக்கிழாரான சாம்பமூர்த்தி  ஐயரிடமிருந்து ஒரு பெரிய வனத்தினை வாங்கி அதில் ஒரு சர்க்கரை ஆலை அமைக்கவேண்டி அந்த காட்டினை அழிக்கிறான் அதற்க்கு அவனது மாமா சிவனாண்டி தேவர் பெரும் உதவியாக இருக்கிறார்.

காலம் காலமாக நடப்பது தான்  அப்போதெல்லம் காட்டினை அழித்து விவசாயத்திற்க்காக வயல் வெளிகளை உண்டாக்கினார்கள்  ஆனால் நாமோ இப்போது அந்த வயல்வெளிகளை அழித்து வீடுகளை உண்டாகிறோம்.

ஆசிரியர், இந்த கதையில் பயன்படுத்தியிருக்கும் வட்டார வழக்கு மிக அருமை. ஒரு கிராமத்து திருமணம் நடைபெரும் விதமும் அதற்க்கு வருகை தரும் உறவினர்கள் எவ்வாறு அப்போதெல்லாம் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னேரே வருவதும் வந்து திருமண வேலைகளை கூட நின்று செய்வதும் என நமக்கெல்லாம் கிடைக்காத அந்த தருணத்தினையும் மற்றும் அந்த ஊரின் எல்லாத்திசையிலும் அந்த விழாவின் வீட்டு உறவினர்கள் காணப்படுவதையும் இந்த கதையின் வாயிலாக பல விதமாக சொல்லியிருப்பது வாசிக்கும் நாம் அந்த திருமண விழாவிறக்கு சென்று வந்த ஒரு உணர்வு வருகறது.

குறிப்பாக சிவனாண்டி தேவர் தனது மருமகள் குஞ்சம்மாளையும் மற்றும் தனது பேத்தியையும் பாப்பா என்று செல்லமாக அழைக்கும் விதம் அந்த நிலத்தில் எவ்வாறு பெண்களை பாப்பா என்று வெகுவாக அழைக்கும் குறிப்பினை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

ஒரு வனத்தை அழித்து ஆலை கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை மிக அழகாக விளக்கியிருக்கிறார். ஒரு வனம் அழியும் பொது அந்த வானத்தையே தனது வாழ்விடமாக எத்தனை பிற உயிரனங்கள் இருந்திருக்கும் அவையெல்லாம் எப்படி அழியும் என்பதையும் மற்றும்  நமக்கு கிடைக்கும் காற்று முதல் என பல வழிகளில் நாம் என்னவெல்லாம் இழப்போம் எல்லாம் ஏராளம் என்பதும் ஆனால் உணவு உற்பத்தி தேவையின் காரணமாக ஆலை கட்டுவதும் தேவை என்பதையும் மறைக்க முடியாது என்பன சில உண்மைகளையும் மிக அழகாக சொல்லியிருக்கிறார்.

ஆசிரியர் ஒரு வனத்தில் இருக்கும் பலவிதமான செடி கொடிகள் முதல் நெடு மரங்கள் வரை ஒவ்வொன்றாய் பெயருடன் கொண்டு சென்ற விதம் அருமை. நாயுருவி செடி நமது உடல்களில் ஒற்றிகொள்ளும் என்றும்,  தேனீக்கள் முதல் எலி, காக்கை மற்ற பறவைகள், சுற்றி திரியும் மாடுகள், நரிகள் என பல்வேறுபட்ட உயிரனங்கள் அந்த வனத்தில் வாழ்வதாகவும் இந்த வனம் அழிந்தால் இவையெல்லாம் எங்கே போகுமே என்று ஒரு கேள்வியுடன் கதையினை நகர்த்தி செல்கிறார்.       

இதற்க்காக இவர்கள் இந்த வனத்தினை அழிக்கும் வேலையினை ஆரம்பித்த விதம் நன்றாக இருந்தது ஆனால் போக போக வனத்தை அழிக்க எடுத்துக்கொண்ட வழியே தவறானதாக ஆகிவிட்டது  அதனால் சிவனாண்டி தேவரின் புளிய  மரங்கள் அழிந்து போனதும், சிதம்பரம் கட்டிய புது வீடு எரிந்து போனதும், பல உயினர்கள் நெருப்போடு சாம்பலாகி போனதும்  அரும்பாடுபட்டு சீர்செய்த மூங்கில் மரங்களும் சாம்பலாகி போனதும் என நினைத்து பார்க்காத அளவுக்கு தீ அவர்களின் கனவை புரட்டி போட்டுவிட்டது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் முடிவில் வனம் அழிந்து சிதம்பரம் தனது இலக்கான சர்க்கரை ஆலையினை கட்டி முடிக்கிறான்.

காலப்போக்கில் அவனது ஆலையின் வெல்லத்திற்கு நல்ல சந்தையும் மதிப்பும் கிடைத்து வியாபாரத்தில் வெற்றி கொள்கிறான் ஆனால் சிவனாண்டி தேவரின் புளியமரங்கள் எரிந்து போனதால் இப்போது அவர் கையிருப்பு புளி தீர்ந்து போனதால் வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, திருவென்காடு மற்றும் காவேரிப்பட்டினம் போய் புளி கொள்முதல் செய்து வாணிபம் செய்யவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார் என்பதும் ஆனால் அவரால் முன்பு போல தரமான சுவையான புளி கொடுக்க முடியவில்லை என்பதே வனத்தினை அழித்ததற்கு வினையாகி போனது......   

  அவரின்  வியாபாரம் சீர்கெட்டு போனதே ஒரு எதிர் வினை.


நாமும் மரம் வளர்ப்போம் - இயற்கை அன்னையினை பாதுகாப்போம்!!

நன்றியுடன் 

ராம. தேவேந்திரன்  

     

யானை டாக்டர் - ஜெயமோகன்

நூல்  :   யானை டாக்டர்

ஆசிரியர்  - ஜெயமோகன்  


இது ஒரு குறு நாவல். தாங்கியிருக்கும் கரு ஒரு மாமனிதனின் வாழ்வினை படம் பிடித்து காட்டுகிறது.  டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களை     பற்றிய கதைதான் இந்த நாவல். 

ஆசிரியர் இந்தநூலில் யானைகளையும், அதன் இயற்கையான வாழ்விடமான காடுகளையும் மனிதன் தன் சுயநலத்திற்காக எப்படியெல்லாம் மாற்றிக் கொள்கிறான் என்றும் மிக தெளிவாக விவரித்துள்ளார். மனிதர்கள் உண்டாக்கும் சின்ன சின்ன இயற்கை மாசுபடுத்தலினாலும் எவ்வாறு இயற்கை சார் உயிரினங்கள் பாதிக்கபடுகிறது எனபதை யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நோக்கில் ஆசிரியர் விவரித்துச்செல்கிறார்.

யானை டாக்டர் நூலில் ஆசிரியர் உணர்வுபூர்வமான உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். யானைகளின் டாக்டர்  கிருஷ்ணமூர்த்தி அவர்களின்  வாழ்க்கை, அவரது அர்ப்பணிப்பு  விவரிக்கப்படுகிறது. அர்பணிப்பு பையும் மிக அழகா விவரித்திருக்கிறார். சாதாரணமாக ஒரு படித்த உயர் அதிகாரிக்கு அவருடன் பணி புரியும் சக ஊழியர்களுடன் ஒரு பிணக்கு இருக்கும். இந்த கதையினை ஆசிரியர், நாங்குநேரியில் இருந்து உயர்படிப்பு படித்து டாப்ஸ்லிப்க்கு வன அதிகாரியாக பணிக்கு செல்லும் ஒருவரிடமிருந்து ஆரம்பிக்கிறார். அப்படியாக வந்து சேரும் அதிகாரி கேட்கும் மற்றும் பார்க்கும்  ஒவ்வொருவரும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பற்றி குறைவாக நான்கு ஐந்து வார்த்தைகளாவது  பேசாதோர் இல்லவே இல்லை என்று  அறிகிறார்.  அந்த அதிகாரிக்கு ஒரு பக்கம் அந்த  டாக்டரை பார்க்கவேண்டும் என்றும் ஒரு எண்ணம் வருகிறது. ஆனாலும் இன்னொரு பக்கம் அதை  நிறைவேற்றாமல்  தள்ளிவைக்கும் போக்கும் இருந்துகொண்டிருக்கிறது. 

அந்த அதிகாரிக்கு டாக்டர் கிருஷ்ணமூர்த்தியினை சந்திக்க இரண்டு மூன்று சந்தர்ப்பங்கள் கிடைக்கிறது. இருந்தாலும் என்னமோ ஒரு தயக்கம். அதிலும் ஒரு சமயம் காரில்  செல்லும்போது எதிரே  நெருக்கத்தில் டாக்டரை   பார்க்க  நேரிடுகிறது. ஆனாலும் அதிகாரிக்கு டாக்டரிடம் பேச  ஒரு  தயக்கம்.  டாக்டர் அதிகாரியின் உதவியாளர் மாரிமுத்துவிடம் நலம் விசாரித்து விட்டுச் செல்கிறார்.  

ஒரு சமயம் அதிகாரிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரை  உதவியாளர் மாரிமுத்து யானை டாக்டரிடம் அழைத்து செல்கிறார். வேண்டாம் என்று நினைத்தாலும், போனால் அவரை சந்திக்கலாம் என்று தன் உள்மனம் சொல்வதை கேட்டு மாரிமுத்துவுடன் அதிகாரி யானை டாக்டர் வீட்டிற்கு செல்கிறார். முதலில் தயங்கிய அவர் பின்னர் அந்த சந்திப்பு மிக அழகாக ஆரம்பிக்கிறது. கூடவே டாக்டர் உடனான நட்பு மிக அழகாக பூக்கிறது.

இதிலிருந்து ஒவ்வொரு நிகழ்வும் மிக அழகாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் விரிந்து செல்கிறது. வாசிக்கும் நம்மையே அந்த அதிகாரியாக என்னும் அளவிற்கு எழுத்து நடை போடுகிறது.

டாக்டரின்  யானைகளுடனான அனுபவங்கள், அவர்  யானைகளுடன் உறவாடும்  விதம், இறந்த  யானைகளின்  உடல்களை  டாக்டர்  பிரேத பரிசோதனை செய்வது என்று அனைத்தையும் அதிகாரி கூடவே  இருந்து  பார்க்கிறார். நாளடைவில்  அந்த அதிகாரி டாக்டரை  சந்திக்காமல் ஒரு நாள் கூட இருக்கவே முடியவில்லை என்ற  அளவில்  ஆகிவிடுகிறது. 

இந்த  நூலில்  டாக்டரின் நோக்கில் ஆசிரியர்  யானைகளை எப்படி பராமரிப்பது என்றும் அவைகளுக்கு என்ன தேவை என்றும் மிக தெளிவாக எழுதி இருக்கிறார்.    

இறுதியில் அதிகாரிக்கும் டாக்டருக்கும் ஏற்பட்ட நட்பு பெரிதாக வளர்ந்து அவருக்கு பத்மஸ்ரீ விருதுக்கு முயற்சி  செய்வதுவரை போகிறது. 

இயற்கையினை போற்றி பாதுகாப்போம்.

வாசிப்பு அனுபவங்களுடன்

ராம. தேவேந்திரன்


     

   

Sunday, 23 August 2020

ஊர் திரும்புதல் - 23

அறுவடை 


தை பொங்கலின் கடைசி நாள் அன்று இரவு கோவிலில் இருந்து புறப்பட்ட அவனுடைய கிராமத்து மக்கள் தங்களின் வயல்களில் அறுவடை செய்வதைப்பற்றி  பேசிக்கொண்டே சென்றனர்.


மறுநாள் விடியற்காலை நான்கு மணிக்கே அவன் வீட்டிலிருந்து அறுவடைக்கு அரப்பு  அரிவாளுடன் கிளம்பினான். தை மாதம் அதிகாலை குளிரும்  இருளும்   விலகாத   நேரம், விக்ரமனாற்றில்  சலசலவென்ற  சத்தத்துடன் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. பொங்கல் முடிந்தவுடன் தாளடி அறுவடை தொடங்கும் என்பதால்,  அறுவடைக்கு அவனது ஊர் ஆட்கள் போதாதென்று சுற்றியுள்ள பத்து பதினைந்து கிராமங்களில் இருந்து அறுவடைக்கு வருவார்கள். மாணிக்கம் டீ கடையின் வாசலில், வாட்ட சாட்டமான வாலிபர்கள் தலையில் முண்டாசுடன் நீண்டு  வளைந்த   அரப்பு   அரிவாட்களுடன் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்களில்  சிலர்  குளிருக்கு  இதமாக  மாணிக்கம்  கடை  டீயுடன்  பீடியும் குடித்து  புகைவிட்டுக் கொண்டிருந்தனர். அவனது ஊரின் ஆட்களும் அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.  அதில் அவனும் ஒரு ஆளாக அன்று அவர்களுடன்  சேர்ந்துகொண்டான். 


அப்போதெல்லாம்  தாளடி அறுவடை காலத்தில்  முதல் நாள் அறுவடை செய்து வயலிலே விட்டுவிடுவார்கள். அதிகாலையிலேயே அறுப்பு  வேலை  நடக்க  வேண்டும். ஏனென்றால் நெற்கதிர்கள் பனியில் நனைந்து இருக்கும். அதனால்  அறுப்பின்போது  நெல் உதிராமல் வரும்.  மறுநாள் வேறொரு வயலினில் அறுவடை செய்துவிட்டு, பின்னர்  காலை உணவிற்கு பிறகு முதல் நாள் அறுத்த வயலின் நெற்பயிர்களை கண்டுமுதல் செய்வார்கள்.  நெற்கதிர்கள் வெயில்  ஏறிய பிறகுதான்  காயத்தொடங்கும்.  அது  காய்த்த  பிறகு கதிரடித்தால்தான்  வேலை  சுலபமாக  இருக்கும். மதியம் இரண்டு மணிக்கு  மேல்தான்  நெல்லைத்தூற்றுவதற்கு  ஏதுவாக  காற்று  வீசும்.  இந்தக்காரணங்களை  மனதில்  நிறுத்திதான்  வேலை  அட்டவணைகள்  இருக்கும். இயற்கையுடன்  இணைந்து வாழ்த்த  வாழ்க்கையில்,  நம்மவர்கள்  பட்டறிவுடன்  செய்யும்  வேலை  ஒவ்வொன்றுக்கும்  நேரம்  வகுத்து  வந்திருக்கிறார்கள். 




அன்றும் வெள்ளி  முளைக்கும் பொழுதிற்கு  முன்னதாகவே  அவர்கள்   ஒரு வயலில்  இறங்கி  அறுப்பு வேலையைத் தொடங்கினார்கள்.  அருகில் இருப்பவர்களே தெரியாத பனிக்காலைப்பொழுது. ஆட்கள் ஒரு முனையிலிருந்து, மறு முனைக்கு குனிந்த தலை நிமிராமல் சரக்  சரக்கென்று  கதிர்களை அறுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள்.  பல  அரப்பரிவாள்கள் பயிர்களை  கூடி  எழுப்பும்  ஒலி  கேட்பதற்கே இனிமை.  அவனுக்கு அந்த நாட்களில் முதல் ஓரிரெண்டு நாட்கள் மிகவும்  கடினமாகவும் இருக்கும்.  குனிந்தே  அறுப்பு செய்வதால்,  முதுகுவலி தாங்க முடியாத அளவுக்கு  இருக்கும். ஆனாலும்  எப்போதும் வேலை செய்பவர்களுக்கு இது  சாதாரணம்.  



அந்த நாட்களில்  ஊரே புது  நெல்  வாசனையால்  நிரம்பி  இருக்கும்.  அவன் அவனது ஊர்ப் பண்ணை வயல்களுக்கு மட்டும்தான் அறுப்புக்கு  போவது  வழக்கம். அவனது படிப்பு காலத்தில் அந்த ஓரிரெண்டு வாரங்கள் மட்டும் எப்போதும் அவன் விடுமுறை எடுப்பான்.  அவன் மட்டுமல்ல அவன் வயதில்  இருக்கும் ஐந்தாறு நண்பர்களும் எப்போதும் இதைச்  செய்வார்கள்.  ஏனென்றால், அவன் அறுவடைக்கு ஒருநாள் போனால் குறைந்தது ஒரு  கலம் நெல் கூலியாகக் கிடைக்கும். அப்படியே அந்த பதினைந்து நாட்களில் சுமாராக ஒரு பத்து மூட்டை நெல் சேர்ந்துவிடும்.   அதனால் மூன்று  நான்கு மாதங்களுக்கு  சாப்பாடுக்கு தேவையான நெல் கிடைத்துவிடும்.  அவன் ஊரில் இருக்கும் மற்ற வேலைக்கு செல்லும்  வாலிபர்களும்,  அந்த அறுவடை நாட்களில் வேறெந்த வேலைக்கும் போகாமல்,  அறுவடைக்கு மட்டும் போவது வழக்கம்.

தாளடி வயலில் அறுவடைக்கு  முன்னரே  உளுந்து பயறு தூவப்பட்டு  விதைக்கப்பட்டிருக்கும். அறுவடை  நேரத்தில் இருக்கும். உளுந்துப்  பயிறு அறுவடை  நேரத்தில்  ஒரு சான் உயரம் வளர்ந்து இருக்கும்.  தவறுதலாக  அதை அறுத்துவிடாமல், லாவகமாக நெற்பயிரினை மட்டும் அறுக்க வேண்டும். நெற்கதிர்களை அறுவடை செய்வது என்பது சாதாரண வேலை இல்லை.  அதுவும்  கதிர்களை அறுத்து தாள்களின் மீது போடவேண்டும். அதற்கும் ஒரு அளவு உண்டு.  ஏனெனில் மறுநாள் அதனை கட்டி களத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக அந்தக்  கதிர்கள் காய்ந்து இருக்க வேண்டும். இதையெல்லாம் மனதில்  வைத்து  கதிர்  அறுக்க  வேண்டும்.  இல்லையெனில் வேலை தெரிந்தவர்கள் கோபப்படுவார்கள்.  

அறுவடைக்கு பயன்படுத்தும் கதிர் அரிவாள்  பெரிதாக வளைந்து கூர்மையாக இருக்கும். அதனைக்  கொண்டு அறுவடை செய்வது சிலருக்கு நிரம்பவே  கடினமான வேலைதான். அப்படித்தான் அவனுக்கும் முதல்நாள் கொஞ்சம் கடினமாக இருந்தது.  ஆனால் அவன் மற்ற ஆட்களுக்கு சமமாகவும் அவனது பங்கினை சரியாக அறுவடை செய்துவிடுவான்.     நெல் அறுவடை எப்போதும் ஒரு குழுவாக செய்யும்  வேலை.  சிலர் வேகமாக அறுத்து விட்டு பின்னால் இருப்பவர்களின் கதிர்களையும் அறுத்துக்  கொடுப்பார்கள்.  

காலையிலேயே பயிர்களை  அறுத்து  முடிந்த பின்னர் வீட்டுக்கு சென்று காலை உணவு  உண்ட  பிறகு  எல்லோரும் வயலில் கூடுவார்கள்.  முதல்நாள் காலையில் அறுவடை செய்த வயலிலிருந்து, அறுத்த கதிர்களை கட்டுகளாக கட்டி களத்திற்கு தூக்கி செல்லவேண்டும். இதுவும் ஒரு குழுவாக எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்யும் வேலை. இதில் கட்டுகளை கட்டுவதற்கு ஆக்கைகள் பயன்படுத்தப்படும். இந்த ஆக்கையினை வைக்கோலினால் திரிப்பதும்கூட ஒரு விதமான திறமைதான்.  இதனை எல்லோரும் செய்துவிட  முடியாது.  இந்த ஆக்கை மிகவும் வலிமையானது. ஒருமுறை கைதேர்த்தவர்களால் திரிக்கப்பட்ட ஆக்கையானது பத்து பதினைந்து நாட்கள் அறுபடாமல்  இருக்கும். அதனால் ஆக்கைகளை  வேலை  முடிந்தபின்  எடுத்து பத்திரமாக வைத்துக்  கொள்ளவேண்டும். 

கொஞ்சம் வயது முதிர்ந்தவர்கள் வயலில் இருந்து கட்டு கட்டிவிடுவார்கள். அப்படியாக கட்டிய கட்டுகளை தலைச்சுமையாக  ஒருவர் மாற்றி தூக்கி நெல்லடிக்கும்  களத்திற்கு கொண்டு  சேர்க்கவேண்டும். அதில் கட்டுகளைத் தூக்கி வருவதற்கு முக்கியமாக இள வட்டங்களிடம்தான் சொல்வார்கள். கரடு முரடான வரப்புகள், வாய்க்கால்கள், வரப்புகளில் இருக்கும் நீர்முள்  என்று பல இடையூறுகளை கடந்து வரவேண்டும். 
 
கட்டு கட்டுவதில் ஒரு சிலர் கைதேர்ந்தவர்களாக  இருப்பார்கள். அவர்கள் இறுக்கி இறுக்கி இருமடங்கு கதிர்களை கட்டிவைத்துவிடுவார்கள்.  அப்படி கட்டியிருக்கும் கட்டுகளை தூக்கிக்கொண்டு போகும்போது,  ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றி கொடுக்கும் பொது, கொடுப்பவர் லாவகமாக தள்ளிவிடவேண்டும். அதுபோலவே வாங்குபவரும் லாவகமாக இழுத்து தலையில் வைத்துக்கொள்ளவேண்டும். இதில் யாரேனும் ஒருவர் தவறு  செய்தாலும் இருவருக்கும் பாதிப்பு. அப்படி சரியாக மாற்றிக்கொள்ளாவிட்டால் கழுத்து வலி உண்டாகும். சிலநேரங்களில் கழுத்து சுளுக்கு விழுவதுமுண்டு.

கட்டுக்  கட்டி முடிந்த வயல்களில், பெண்கள் சிதறிய கதிர்கள் ஒவ்வொன்றாய் அங்கும் இங்குமாய் பொறுக்கிக் கொண்டிருப்பார்கள். அதனைப்  பார்த்த தலையாரி திட்டுவதும், அதை காதிலேயே வாங்காமல், சிலர் தொடர்ந்து செய்வதும், சிலர் வெட்கி வேண்டாமென்று வெளியேறுவதும் உண்டு.  இவர்கள் கதிர் பொறுக்குகிறோம் என்று வளரும் உளுந்து செடிகளை மிதித்து விடுவார்கள்.  அதனால்தான் தலையாரி கொஞ்சம்  கடினமாக  நடந்து கொள்வார்.   

அவன் சிறுவனாக இருந்த காலத்தில் ஆட்களே அறுத்த கதிர்களை  களத்தில் ஒரு கல்லில் அடிப்பார்கள். ஆனால் இப்போது அந்த காலம் மாறி டிராக்டர் வைத்தோ அல்லது மாடுகளை வைத்தோ கதிரடிப்பது வழக்கமாகிவிட்டது. அப்படி களம் வந்து சேரும் நெற்கதிர்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பரப்பி விடுவதும், பரப்பிய நெற்கதிர்களை நேர்த்தியாக கிண்டி விடுவதும் இதெற்கென சிலர் களத்தில் இருந்து பார்த்துக்கொள்வார்கள். 

அந்த  நாட்களில் இதுபோல அவன் ஊரில் இருக்கும் அத்தனை களங்களும், களை  கட்டியிருக்கும். எங்கு பார்த்தாலும் ஆட்கள் தலையில் ஒரு முண்டாசுடனும், அழுக்கு வேட்டி, கிழிந்த பனியன்களுடனும் சற்றும் ஓய்வின்றி அங்கும் இங்கும் ஓடி ஆடி வேலை செய்யத்தவண்ணம் இருப்பார்கள்.            

எப்படியும் அறுவடை செய்த கதிர்கள் களம் வந்து சேருவதற்கு மதியம் ஒரு மணி ஆகிவிடும்.  அதற்குள் டிராக்டர் ஒருமுறை முழுவதுமாக சுற்றியிருக்கும். சற்றும் நிதானிக்க கூட நேரமில்லாமல் எல்லோரும் வண்டுகள் மொய்ப்பதுபோல அந்த நெற்கதிர்களை திரும்ப கிளறிவிட வேண்டும். மீண்டும் ஒரு முறை டிராக்டர் சுற்றி வருவதற்கு இலகுவாக செய்யவேண்டும்.

பிறகு டிராக்டர் அடித்து விட்ட அந்த நெற்கதிர்களை நெல் தனியாக வைக்கோல் தனியாக உதரவேண்டும். அதாவது பிரித்து எடுக்க வேண்டும். வைக்கோலினை தனியாக எடுத்து அருகில் போர் போடவேண்டும்.

ஒருபுறம் நெல்லினை காற்றில் தூற்றி சுத்தம் செய்யவேண்டும்.  அப்படி நெல்லினை தூற்றும்போது,  இரண்டு பக்கமும் இருவர் நின்று கொண்டு ஒரு கூடையில் களத்தில் இருக்கும் நெல்லை அள்ளி மெல்லவும்  சீராகவும் வீசுவார்கள். அதில் பதர்கள் எல்லாம் எடை இல்லாததால் காற்றில் பறந்து தூரத்தில் போய்விழும். சுத்தமான புதிய நெல் மட்டும்  தங்கத்தினை உருக்கி உதிர்த்தது போல பிரமாண்டமாக குவிந்து கிடக்கும். 




அந்த நெற்குவியல்களை  அளந்து மூட்டைகளாகக் கட்டி பண்ணையில் கொண்டு சேர்க்கவேண்டும். 12 மரக்கால் ஒரு கலம். இரண்டு கலம் சேர்ந்தது  ஒரு  மூட்டை, அதாவது இருபத்து நான்கு மரக்கால்கள் அல்லது நான்கு பறவைகள்.  

கடைசியில் ஒரு மூட்டை நெல் கண்டுமுதல்  செய்தால் இரண்டு  மரக்கால் அறுப்புவேலைகள் செய்தவர்களுக்கு கூலியாக கிடைக்கும். அதாவது பன்னிரெண்டு மூட்டை கண்டுமுதல் செய்தால் கூலி ஒரு மூட்டை.  அதனை வேலைசெய்தவர்கள் எல்லோரும் சரி சமமாக பிரித்து எடுத்துக்கொள்வார்கள்.         

வெளியூரிலிருந்து அறுவடைக்கு வந்தவர்கள் தங்களின் கூலியில் இருந்து, காலையில் இட்லியும் பொங்கலும் மதியம்   சாப்பாடும் கொடுத்த பாட்டிக்கு நெல் கொடுத்துவிட்டு செல்வது வழக்கம். மற்ற எல்லோரும் போனபிறகு பண்ணையில் வேலை செய்யும் ஆட்கள் மிஞ்சியிருக்கும் கருக்காய் முட்டில் இருந்து பொழுது சாயும் வரை தூற்றுவார்கள். அதிலிருந்து எப்படியும் ஆறேழு மரக்கால் நெல்  கிடைக்கும்.




ஊர் திரும்புதல் - 1



Tuesday, 11 August 2020

கரை தொடா அலைகள் - சிறுகதை தொகுப்பு

கரை தொடா அலைகள்  - சிறுகதை தொகுப்பு 

 ஆசிரியர் : மனிதரில் புனிதர் பா. அய்யாசாமி 


சமீபத்தில் கிண்டிலில்,  ஆசிரியர் மனிதரில் புனிதர் பா. அய்யாசாமி அவர்களின் இரண்டாவது சிறுகதை தொகுப்பான கரை தொடா அலைகள் வாசிக்க வாய்ப்புக்கிடைத்தது. 

எழுத்தாளர் எமது  மயிலாடுதுறை  மண்ணின்  மைந்தர். அவர்  எழுதிய மற்றைய  நூல்கள்: உயிரோவியம், சுட்ட தோண்டிகள், அழமட்டுமா விழிகள். இந்த தொகுப்பில், 'முன்னாள் காதலி' தொடங்கி, 'பிரியா வரம்', என பதிமூன்று சிறுகதைகளை பெரிதும்  பாச உணர்ச்சியின் போக்கிலே எழுதியிருக்கிறார்.

பொதுவாக ஒரு ஆசிரியர் எப்போதும் அவர்களின் மண்ணின் வாசனையுடனே ஒரு கதையினை எழுத முற்படுவார்கள் என்பது உண்மையே. நமது தொகுப்பின் ஆசிரியரும் விதிவிலக்கு இல்லை. ஒவ்வொரு கதையிலும் மயிலாடுதுறையையும், அதனைச் சுற்றி உள்ள ஊர்களையும் கதைகளில் பதிவு செய்திருக்கிறார்.

முன்னாள் காதலி:

ஓரே தெருவில் வசித்தும், ஓரே பள்ளியில் பயின்றும்,  இரண்டு மனங்களும் நேசித்து ஓன்று சேர்ந்து வாழ்வதென்பது சில அல்ல பல நேரங்களில் ஒரு பெரிய போராட்டம்தான். அப்படித்தான், அவர் தனது முன்னாள் காதலி சாந்தியினை, நிகழ்காலத்தில் கணவனை இழந்த ஒரு விதவையாக இரண்டு குழந்தைகளுடன் வெகு நாட்களுக்கு பின்னர் அதே தெருவில் சந்திக்கிறார். மன வேதனையினால் அவரே மறுமணம் செய்துகொள்கிறேன் என்றும் சொல்கிறார். அதற்கு அப்பாவின் முட்டுக்கட்டை அவரை சாதாரண மனிதராகவே திருப்பி விட்டது. சாந்தியும் இட்லிக்கடை போட்டு தனக்கென ஒரு வாழ்க்கை அமைத்துக்கொள்கிறார்.  போராடி பிள்ளைகளை வளர்க்கிறார். வளர்ந்த மகனும் இறந்துவிட,  மீண்டும் அதே இட்லிக்கடை, கடைசியில் இட்லிக்கடை பணம் கொடுத்ததோ இல்லையோ அந்த  பெண்மணிக்கு காச நோய் வந்துவிடுகிறது. அருகில் கூட வந்து பேசாத அவருடைய மகளிடம் இருந்து விலக்கி, கதாநாயகன் தன்னுடைய  முன்னாள் காதலியை ஒரு அன்பு இல்லத்தில் சென்று சேர்த்துவிடுகிறார். சேர்கிறார். அந்தப்பெண்மணி கடைசி  மூச்சினை அன்பு இல்லத்தில் விடுகிறார். அந்த  முன்னால்காதலியின் இறுதிச்சடங்குகளை கதாநாயகனே செய்கிறார்.   

ஆணைக் கால் குவளை:  

இந்த கதை ஒரு நடுத்தர குடும்பத்தின் எதார்த்த வாழ்வியலை மிக அழகாக விவரிக்கிறது. நம்மில் பலரும் இன்றளவும் சில பொருள்களின் மீது உயிரினும் மேலான சில பற்றுகளை  வைத்திருப்போம். அதையே இந்த கதை சொல்கிறது. கிராமத்தில் வறுமையில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும்   ஆணைக் கால் குவளையில் சுண்ணாம்பினால் சேட்டு அடகுக்கடையில் எழுதிய எழுத்து மறையாமலே இருக்கும் என்பது தெரிந்த உண்மையே.

இனிய தோழா :

இந்த கதை ஒரு தெருவில் வசிக்கும் ஒரு ஆணும் பெண்ணும் எவ்வளவு நட்புடன் வளர்க்கிறார்கள் என்பதையும் அவர்களுக்கு இடையே இருக்கும் நட்பின் மீதான நம்பிக்கையும் அழகாக எழுதியிருக்கிறார்.

ஈதலிசை:    

காதல் திருமணம் செய்து கொண்ட மகனிடம் சேராமல் இருந்த பெற்றோர், தனது மகளின் வாழ்வுக்காக மகனிடம் வருகிறார்கள். தனது சகோதரிக்கு உதவி கேட்டு மகன் கொடுக்க மறுக்கும் போது, அவர்கள் ஒதுக்கிவைத்த  மருமகள், தனது நகைகளை கொடுத்து உதவ சொல்வதில் தெரிகிறது அவளின் ஈதல் குணம்.

ஆபீஸ் பாய்: 

ஒன்றாக படித்து வளர்கிறார்கள் சங்கரும், பிரியாவும். சங்கர் மேல்படிப்பு படிக்காமல் ஒரு அலுவகத்தில் ஆபிஸ் பாய் வேலை செய்வதும், அதே ஆபிசில் பிரியா வேலைக்கு சேர்வதும், இவர்களுக்கு  இடையே இருக்கும் நடிப்பினை அழகாக  சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

ஓய்வு ஊழியம் :

இந்த கதையில் ஒரு மருமகன் தனது மாமனாரை ஒரு மகனாக இருந்து,  ஓய்வு காலத்தில் பாசத்துடன் பார்த்துக்கொள்வதை  சொல்லியிருக்கிறார் ஆசிரியர். 

 கரை தொடா அலைகள்:    

சுனாமியில் இழந்த தனது ஒரே மகனை கண்டுபிடிக்க முடியாதலால் ஒவ்வொரு வருடமும்,  சுனாமி தினத்தன்று,  வேளாங்கண்ணி சென்று நினைவுகூர்தலை வழக்கமாக வைத்திருந்த அந்த பெற்றோர்,  நடப்பு   வருடம் தங்களது வளர்ப்பு நாயினை கூடவே அழைத்து செல்கின்றனர். இந்த முறை அங்கே வந்திருந்த ஒரு இளைஞனை கண்டு அவர்களின் நாய் போய் தழுவிக்கொள்கிறது. இதை அறிந்த அவர்கள் அவனை விசாரித்தனர். அதில் அவன் தான் அவர்களின் தொலைந்துபோன மகன் என்பது தெரிந்தும் அவர்களால் அவனை சொந்தம் கொண்டாடமுடியாமல் தவிக்கின்றனர்.  அவன்  தொலைத்த தினத்திலிருந்து  வேறு ஒரு  பெண்  அவனை  வளர்த்து  வந்திருக்கிறாள். அவளுடன்தான்  அவர்களுடைய  மகன்  அங்கே  வந்திருந்தான். கடைசியில் வளர்த்த தாயிடம் அதை சொல்லி அவன்தான் தங்கள் மகன் என்று தெரிந்தும், ஒரு பிள்ளையினை இழந்து துடிப்பது எவ்வளவு துயரம் என்பதை உணர்ந்த அவர்கள், அவனை வளர்த்த தாயிடமே விட்டு விட்டு மனிதாபிமானத்துடன் திரும்புகின்றனர்.

காதல் ஓய்வதில்லை:      

நாச்சியார் கோவிலில் நடந்த ஒரு அழகிய காதல் கதை இது.  கடைசி வரைக்கும் நிறைவேறாத காதலானது அது. பல ஆண்டுகளுக்கு பின்னர் தங்கள் பூர்விக ஊருக்கு திரும்ப வந்த காதலன் கலையிழந்த தனது காதலியை சந்திக்க நேரிடுகிறது. அவன்  நினைவாகவே இருந்து திருமணமே செய்யாமல் இருந்த அவனுடைய காதலி  காயத்ரிக்கு ஆறுதலாக பேசியவனிடம், அவனுடைய குடும்பம்  எப்படி  இருக்கிறது  என்று  கேட்டுவிட்டு  அவள் தனக்கே  உரித்தான  தனிமையில்  மீண்டும் ஆழ்ந்துவிடுகிறாள்.    

காவல்காரன்:

இந்த கதையில்  காவல் காக்க வேண்டிய காவல்காரனை விட ஒரு நாய் ரொம்ப நன்றியுள்ளது என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார்.

சுமைத்  தாங்கி:  

பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும் ஒரே பகுதியில் வசிப்பதும் அவர்கள் பணி புரிவதையும் அழகாக மண் வாசனையுடன் சொல்லியிருப்பதும் இறுதியில் ஓட்டுனர் தன் உயிரை கொடுத்து பயணிகளின் உயிர்களை காப்பாற்றுவதும் பின்னர் ஓட்டுனரின் மகளையே தனது மருமகளாக்கி கொள்வதும் என மணி ஒரு சுமை தாங்கியாகவே வாழ்கிறார்.

நட்பதிகாரம்:  

இந்த கதையில் கூடவே படிக்கும் நண்பனின் கடினமான சூழ்நிலையினை தெரிந்து அவனுக்கு நேரடியாக பணம் கொடுத்து உதவினால் நன்றாக வாழ்ந்த அவர்களுக்கு அது ஒரு இழிவாக இருக்கும் என்பதினை குறிப்பறிந்து, தனது தந்தை வழியாக அவர்களின் கட்டுமான நிறுவனத்திற்கு தேவையான  எல்லா மூலபொருள்களையும் அந்த நண்பனின் தந்தை நடத்தும்  நிறுவனத்திடம் வாங்க சொல்லி கேட்டுக்கொள்கிறான். இப்படியாக தனது நண்பனுக்கு ஒரு பெரிய உதவியினை அவனுக்கு தெரியாமலே செய்து தனது நட்புக்கு பெருமை சேர்த்தான்.

பச்சை துண்டு:    

கதிராமங்கலத்தில் பிறந்து வளர்ந்து இளைஞன் புவனேஷ் பெங்களூரில் பணி புரிய சென்றதால், அங்கு அவனது நண்பனின் பெற்றோர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி சோதிடம் பார்ப்பதற்காக வந்தார்கள். அவர்களை கிராமத்தின் வாசனையுடன் வரவேற்று உபசரித்து வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார் மற்றும் சுற்றுப்புறத்தில் இருக்கும் பல கோவில்களுக்கு சென்று வந்தனர். குளிப்பதற்கு மோட்டார் போட்டவுடன் மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வந்ததால் அதிர்ச்சியடைந்த நண்பனின் அப்பா ஏன் இப்படி வருகிறது என்று கேட்கிறார். அதற்கு காரணம் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம். ஆசிரியர்  கதையில் மேற்படி  திட்டங்களை  பற்றி  விளக்குகிறார். அது  ஆசிரியரின் ஊர் மீதான அக்கரையினை காட்டுகிறது.

பிரியாத வரம் :    

திருமணமாகி 32 வருடங்கள் ஆன ஒரு தம்பதியின் பிள்ளைகள், அவர்களுடைய திருமணம்  முடிந்தவுடன், தனியே குடித்தனம் போய்விடுகிறார்கள். வாழ்வில் பல ஏற்ற இறங்களினால் கிடைக்கும் எல்லா அனுபவங்களும் இறுதிக்காலத்தில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழும்போதும் காலம் விட்டுவைப்பதில்லை என்பதே உண்மை. இருவரும் கரங்கள் கோர்த்தபடி ஓய்ந்து போவது அன்பின் எல்லை.


நல்லதொரு சிறுகதை தொகுப்பினை வாசித்த இனிய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.


ராம.தேவேந்திரன்  

  

     


  

   



   

Saturday, 8 August 2020

தாலிபன் புத்தகம் வாசிப்பு அனுபவம்

நூல்    :  தாலிபன்
 
ஆசிரியர் : பா. ராகவன் 



நான் சமீபத்தில் தாலிபன் புத்தகம் வாசித்தேன். எனக்கு திரும்பவும் ஒரு முறை ஆப்கானிஸ்தான் பயணித்த போல ஒரு உணர்வு வந்தது என்றால் அது மிகையாகாது. 

என்னுடைய நண்பர் ஆசிரியர் பா. ராகவன் அவர்களின்  வலைப்பக்கத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதில் முதலில் நான், 'ஆதியிலே நகரமும் நானும்',  என்ற தொடரின் சில பாகங்களை வாசித்தேன். அதன் பிறகு ஆசிரியரின் எழுத்துக்கள் மீது ஒரு ஆர்வம் தானாகவே வந்தது.

அந்த ஆர்வத்தின் காரணமாக நான், கிண்டிலில் வாங்கிய சில புத்தகங்கள்:  தாலிபன், நிலமெல்லாம் ரத்தம், டாலர் தேசம் மற்றும் யதி. இதில் எனக்கு முதலாவதாக  தாலிபன் புத்தகத்தை படித்தற்கு ஒரு ஆசை எழுந்தது. அதற்கு முழு முக்கிய காரணம்,  நான் பல முறை ஆப்கானிஸ்தான் பயணித்திருக்கிறேன் என்பதுதான். அதுவும் குறிப்பாக 2004 முதல் 2007 ம் ஆண்டு வரை பலமுறை அங்கு சென்றுவந்திருக்கிறேன். அங்கு எனக்கு கிடைத்த  அந்த அனுபவங்களில், நான் ஒவ்வொரு நாளும்  சந்தித்த மக்களிடமும் கேட்டு தெரிந்து கொண்ட பல விஷயங்களில், எனக்கு விடை தெரியாத பல வினாக்கள் இருந்தன.
 

அந்த  விடைகளை  தேடியே  நான்  ஆசிரியரின்  'தாலிபன்', நூலை  வாசிக்கத் தொடங்கினேன். எனது நம்பிக்கை வீண்போகவில்லை!. நான் தேடிக்கொண்டிருந்த பதில்கள் ஒவ்வொன்றுக்கும், ஆசிரியர் மிக மிக அழகாக, ஒவ்வொரு அத்தியாயமாக, இந்த புத்தகத்தில் பூச்சரம் போல தொடுத்து கொடுத்துள்ளார்.    

தலைநகரான காபூல், அழகிய நகரான கந்தகார், ஈரானின் பக்கமுள்ள ஹெராத், பாக்கிஸ்தான் பக்கமுள்ள ஜலாலாபாத் மற்றும்   பழைய சோவியத் ரஷியாவின் பக்கமுள்ள நீலநிற பள்ளிவாசலை கொண்ட நகரான மஸார் போன்ற பெருநகரங்களையெல்லாம் சுற்றிவந்ததுபோல ஒரு  உணர்வை  ஆசிரியரின் இந்த புத்தகம் ஏற்படுத்துகிறது. ஆப்கானிஸ்தானின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த தலிபான்கள் முதலில்,  ஒரு சிறிய கிராமத்தில் தோன்றியத்தில் தொடங்குகிறது. அதன்  தலைவர் முல்லா ஒமர் பொறுப்பேற்று கொஞ்ச கொஞ்சமாக வளர்ச்சியடைந்ததும், பின்னாளில் பாக்கிஸ்தான் தங்களது சுயநலத்திற்காக தாலிபான்களை வளர்த்து விட்டதுவரை, மிக தெளிவாக விவரித்துள்ளார்.

நான் இந்த புத்தகத்தை வாசிக்கும்  பொழுது, மீண்டும் அந்த ஆப்கான் பயண நாட்கள் என் கண் முன்னே திரையில் ஓடிகொண்டிருப்பது போல உணர்ந்தேன். நாம்   பயணித்த ஒரு நாட்டின் வரலாற்றை நமது தாய் மொழியில் ஒரு நூலின் வாயிலாக வாசித்து கிடைக்கும்  விபரங்களும், அனுபவங்களும் ஒருவகையான சுகம். 


ஆசிரியர் இந்த புத்தகத்தில் தாலிபன்களின் முழு வரலாற்றையும்  மிக ஆழமாக ஆராய்ந்து எழுதியிக்கிறார். இந்த நூல்  தாலிபன்களின் ஆரம்பகால பின்னடைவுகள், ஆட்சி அதிகாரத்தை நோக்கிய முன்னேற்றங்கள்,  அவர்களுடைய  வாழ்வியல்,  அவர்கள்  தங்களுக்கு ஆதரவு திரட்டிய முறைகள், அவர்களின்  ஆட்சிமுறை, அவர்களுடைய  ஆட்சியில்  மக்கள்  பட்ட  அல்லல்கள் என்பன  போன்ற  விஷயங்கள்  நுட்பமான  விவரணைகளுடன் தரப்பட்டிருக்கிறது.

போராடிப்  பெற்ற ஆட்சி அதிகாரத்தை, தேச நன்மைக்கு  எதுவும்  செய்யாமல், அடிப்படைவாதம்  பேசி, மக்களையும் நாட்டையும்  வெகு தூரத்திற்கு பின்னோக்கி இட்டுச்சென்றதையும், அவர்களே அவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்ததையும் ஆசிரியர் மிகத் தெளிவாக விவரித்துள்ளார்.


ஆசிரியரின்  மற்ற  புத்தகங்களை போலவே,    நிறைய செய்திகளை உள்ளடக்கிய ஒரு நூல் இது. தாலிபன்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பும் எவரும் இந்த நூலினை வாசிக்கலாம்.



இனிய  வாசிப்பு அனுபவங்களுடன் 


நன்றி
ராம. தேவேந்திரன்